World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Thousands of Airbus workers strike and demonstrate in defence of jobs

பிரான்ஸ்: ஆயிரக்கணக்கான எயர்பஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் வேலைப்பாதுகாப்பிற்காக ஆர்ப்பாட்டம்

By Antoine Lerougetel
8 March 2007

Back to screen version

மார்ச் 6, செவ்வாயன்று, பிரெஞ்சு எயர்பஸ்ஸின் 20,000 தொழிலாளர்கள், ஐரோப்பா முழுவதும் நிறுவனத்தின் மொத்த தொழிலாளர் தொகுப்பில் 11.5 சதவிகிதமான 10,000 வேலைகளை அழிக்க கோரும் "Power8" சிக்கன நடவடிக்கை என்னும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு அரை-நாள் வேலை நிறுத்தத்தை நடத்தினர். பிரான்சில் உள்ள முக்கிய உற்பத்தி மையங்களில் காலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்; இவர்களுக்கு உள்ளூர் சமூகங்களின் ஆதரவும் கிடைத்தது; இந்த ஆலைகளை நம்பித்தான் அவர்களின் வாழ்வும் உள்ளன. பணியாளர்களின் தொகுப்பில் கிட்டத்தட்ட 85ல் இருந்து 90 சதவிகிதம் வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பிரான்சில் மொத்தம் 4,300 வேலை இழப்புக்கள் எதிர்கொள்ளப்படும்; ஜேர்மனியில் 3,700, பிரிட்டனில் 1,600 மற்றும் ஸ்பெயினில் 400 என்று எண்ணிக்கை உள்ளது. எயர்பஸ் தற்பொழுது ஜேர்மனியில் 23,000 தொழிலாளர்களையும், பிரான்சில் 19,000, பிரித்தானியாவில் 10,000, ஸ்பெயினில் 3,000 தொழிலாளர்களையும் வேலையில் கொண்டுள்ளது.

பிரெஞ்சு பொருளாதாரத்தின் அடிப்படை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பெரும் வேலை வெட்டுக்களை கொண்டுள்ள தொடர்ச்சியான திட்டங்களில் ஒன்றுதான் Power 8 ஆகும். வேலை வெட்டுக்கள், மறுசீரமைப்புக்களினால் பாதிக்கப்பட இருக்கும் ஏனைய முக்கிய நிறுவனங்கள் Alcatel-Lucent, Michelin, Renault மற்றும் PSA Peugeot-Citroen ஆகியவையாகும்.

எயர்பஸ்ஸின் முக்கிய உற்பத்தி மையமான துலூசில் கிட்டத்தட்ட 15,000 பேர் -- சுற்றியிருக்கும் பகுதியில் இருந்து 120 வாகனங்களில் பெரும் மழையை பொருட்படுத்தாமல் வந்து, தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். துலூசிற்கு அடுத்தபடியாக பிரான்சில் பெரும் ஆலைகள் நிறுவப்பட்டுள்ள Saint-Nazaire-ல் தெருக்களில் 3,000 பேரும், Nantesல் 500 பேரும் திரண்டனர். இந்த எதிர்ப்புக்களுக்கு அரசாங்க தொழிலாளர்கள் மற்றும் பிரெஞ்சு அமெரிக்க தொலைத்தொடர்பு பெரும் நிறுவனமான Alcatel-Lucent தொழிலாளர்களுடைய ஆதரவும் இருந்தது (கடைசி நிறுவனத்தில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் தொகுப்பில் பிரான்சில் 1,800 உட்பட 12,500 பேரை, பணி நீக்கம் செய்ய உள்ளனர்). இதைத்தவிர மோட்டார் வாகன துணை ஒப்பந்த நிறுவனமான Walor ல் இருந்தும் தொழிலாளர்கள் ஆதரவு கொடுத்திருந்தனர்.

கிராமப்புறத்தில் உள்ள, 1,300 தொழிலாளர்களை கொண்ட பிக்கார்டியில் இருக்கும் Meaulte ஆலையில் இருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணி ஒன்று அருகில் இருந்த அல்பேர்ட் நகரத்திற்கு வந்திருந்தது. இந்த அணியை இரண்டு டிராக்டர்கள் தலைமை ஏற்று நடத்தின; இதற்கு விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் துணை ஒப்பந்த நிறுவனங்கள், அப்பகுதியில் உள்ள பொறியியல் துறை தொழிலாளர்கள் மற்றும் பல சிறுநகரங்களின் மேயர்கள் தங்கள் சீருடை அணிந்து வந்து கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்தனர்.

துலூஸ் அணிவகுப்பில் இருந்த முழக்க அட்டைகள் "விமானத் தொழில் துறையை காத்திடு", "எயர்பஸ் மற்றும் அதன் துணை ஒப்பந்தக்காரர்களுக்கு வேலைகொடு", "விமானத்தில் விமான ஓட்டி உள்ளாரா?" என்ற வாசகங்கள் இருந்தன; ஜேர்மனியிலுள்ள ஹாம்பர்க்கில் A320 உற்பத்தி அமைக்கப்படலாம் என்ற குறிப்பிற்காக "Airbus A320 in Toulouse" என்ற அட்டையும் இருந்தது.

இக்கடைசி முழக்கம் தொழிற்சங்கங்கள் நிறுவனம் முழுவதும் Power 8 திட்டத்தின் கீழ் கொண்டு வரும் வேலைக் குறைப்பை திசைதிருப்பும் வகையில், வேலை வெட்டுக்கள், மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் "சமத்துவ பங்கு உடையதாக" இருக்க வேண்டும் என்று ஒரு தேசிய பிரச்சினையாக, காட்டுவதை பிரதிபலிக்கிறது.

FO வின் (சோசலிஸ்ட் கட்சி தொடர்புடைய, தொழிலாளர் சக்தி (Force Ouvrière) தொழிற்சங்கம்) எயர்பஸ் ஐரோப்பிய குழுவின் பிரதிநிதியான Jean-François Knepper, அணிதிரளல் பற்றி கருத்துத் தெரிவித்து தொழிற்சங்கங்களுக்காக தேசியவாத தொனியை அமைத்துக் கொடுத்தார்: "இந்தப் பெரும் ஆர்ப்பாட்டம் A-320 ஜேர்மனிக்கு மாற்றப்படக் கூடாது என்று கூறுவதற்காகவும், Meaulte யில் உள்ள ஆலை மூடப்படக்கூடாது என்பதற்காகவும் நடத்தப்படுகிறது. எயர்பஸ்ஸின் தரம் குறைந்த பகுதியாக இருக்க நாங்கள் விரும்பவில்லை மாறாக புதிய நடவடிக்கைகளை திறமையாலும் அனுபவத்தாலும் பெறுவோம்."

FO இன் தேசிய செயலாளரான Jean-Claude Maily, பிரான்சின் முக்கிய வணிக தொழிற்சங்க கூட்டமைப்புக்களின் தலைவர்களுடன் பக்கமாக நடையிட்டு, கூட்டுத் தொழிற் சங்க பதாகையின் பின்னே துலூஸ் ஆர்ப்பாட்டத்தில் தலைமையில் அணிநடையிட்டு, இயக்கம் எவ்விதத்திலும் அரசியலாக்கப்படுவதை தவிர்க்க முற்பட்டதுடன், அரசு தலையிட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "புதிய மூலதனம் ஈர்க்கப்பட உள்ளது. 15 சதவிகித மூலதனத்தை கொடுக்கும் அரசாங்கம் குறிப்பிடத்தக்க பொறுப்பைக் கொள்ள வேண்டும்." அவர் மேலும் கூறினார்: "இதைத்தவிர, அரசாங்கம் மாறிக் கொண்டிருக்கிறது என்ற உணர்வும் என்னிடத்தில் உள்ளது."

100 மில்லியன் யூரோக்கள் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்னும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடைய திட்டத்தை பற்றி அவர் குறிப்பிட்டார்; மேலும் UMP இன் ஜனாதிபதி வேட்பாளர், மற்றும் உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசியின் மாறிய நிலைப்பாடு பற்றியும் அவர் குறிப்பிட்டார். குறிப்பிடத்தகுந்த தாராளவாத பொருளாதார தாராண்மைவாதி, சார்க்கோசி முதலில் தன்னுடைய சொந்த வணிக முடிவுகளை எடுப்பதற்கு எயர்பஸ் தனித்து விடப்பட வேண்டும் என்று கூறினார்; பின் வெளிப்படையான தேர்தல் நோக்கங்களுக்கான "பொருளாதார தேசியவாதம்" என்ற கருத்திற்கு திடீரென்று திருப்பி, 2004ல் நலிவுற்றுக் கொண்டிருந்த Alstrom பொறியியல் நிறுவனத்தில் தான் நிதிமந்திரி என்ற வகையில் செய்திருந்தது போல், இப்பொழுதும் அரசானது நன்கு தலையிட முடியும் என்று கூறினார். "எயர்பஸ் தோற்றுவிடக் கூடாது என்ற முடிவை நான் கொண்டுள்ளேன்" என்று சார்க்கோசி அறிவித்தார். "எயர்பஸ்ஸில் அரசாங்கப் பொறுப்பு அதிகரிக்க வேண்டும் என்றால், நாம் ஏன் அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டும்?" மேலாண்மை முறை ஒற்றைக் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்றும் பிரெஞ்சு மற்றும் ஜேர்மனிய பிரிவுகளை பிரதிபலிக்கும் இப்பொழுதுள்ள இரட்டை தலைமை கூடாது என்றும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

வேலைகளை காப்பாற்றுவதற்கு சிறிதளவேனும் உறுதி கொடுக்கும் வகையில் வில்ப்பனோ சார்க்கோசியோ பேசவில்லை. திங்களன்று தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சார்க்கோசி வேலை நீக்கம் இராது என்று தெளிவாகக் கூறினார்; இதன் உட்குறிப்பு வேலைக்குறைப்புக்கள் விடுப்பு, முன்கூட்டி ஓய்வு போன்ற திட்டங்களின் மூலம் அடையப்பட்டுவிடலாம் என்பதாகும். ஆனால் அத்தகைய உறுதிமொழிகள் முற்றிலும் நடைமுறைக்கு ஒவ்வாதவை; ஏனெனில் குறைந்தது ஆறு உற்பத்தி தளங்களாவது ஐரோப்பாவில் மூடப்பட உள்ளன என்பது மனதிற்கொள்ளப்பட வேண்டும். இத்திட்டத்தின்படி பிரான்சில் உள்ள இரண்டு ஆலைகள் மூடப்படும்; ஒன்று Méaulte ல் உள்ளது.

சார்கோசிக்கு எதிரான சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான செகோலென் ரோயால் இதேபோன்ற திட்டங்களையே கொண்டுள்ளார்; இவர் வட்டாரக் குழுக்கள் புது மூலதனத்தை கொண்டுவரும் திட்டங்களில் தொடர்புபடுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார். வட்டாரக் குழுக்களில் பெரும்பாலானவை சோசலிஸ்ட் கட்சி, அதன் தோழமைக் கட்சிகளால் நடத்தப்படுகின்றன; அவை "விமானத் தொழில்துறையை காப்பாற்றுக" என்ற அமைப்பை நடத்துகின்றன; இதில் வட்டாரங்களில் இருந்தும் தொழிற்சங்கங்களில் இருந்தும் பிரதிநிதிகள் உள்ளனர்.

செவ்வாய் காலையில் WSWS நிருபர்கள் 2,000 பேர் கொண்ட Méaulte பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தை கண்ணுற்றனர்; இதில் அல்பேர்ட் நகர சபைக்கு முன்பு நடந்த அணி வகுப்பும் அடங்கும். ஆலையின் முக்கிய தொழிற்சங்க அலுவலர், FO வில் இருப்பவரான Claude Cliquet மற்ற தொழிற்சங்கங்களுக்காகவும் (குறிப்பாக CGT, மரபார்ந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு உடையது) மற்றும் CFDT என்னும் French Democratic Confederation of Labour ஆகியவற்றின் சார்பாகவும் பொருட் செறிவற்ற முறையில் நிகழ்த்திய உரையை கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டனர்.

மறுசீரமைக்கும் திட்டத்தை உட்குறிப்பாக ஏற்ற வகையில், நிறுவனத்தின் பிரெஞ்சு மற்றும் ஜேர்மனிய பிரிவுகள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்; அதே நேரத்தில் இருமுறை ஜேர்மனிய, டைல்மர் பங்குதாரர்களை "Bulimia" ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். பங்குதாரர்கள் தங்கள் மூலதனத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிய அவர் நாட்டுத் தீவிர உணர்வு வகையில் ஐரோப்பிய மத்திய வங்கியையும் தாக்கினார்; இதன் தலைவரான Jean Claude Trichet ä, ஒரு "பிரெஞ்சுக்காரர் என்றாலும்" டாலருக்கு எதிராக யூரோவின் மதிப்புக் கூடுவதை சரிசெய்வதற்கு ஏதும் செய்யவில்லை என்றும் தாக்கினார். போட்டிமுறையில் யூரோ குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டு எயர்பஸ்ஸின் இலாபம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுதான் இவருடைய உட்குறிப்பின் வலியுறுத்தலாகும்.

Power 8 க்கு எதிராக பிரஸ்ஸல்ஸில் நடந்த மார்ச் 16 ஆர்ப்பாட்டம் பற்றி Cliquet ஏதும் குறிப்பிடவில்லை; அதேபோல் போராட்டம் தொடரப்படும் அல்லது விரிவாக்கப்படும் என்றோ எதுவும் கூறவும் இல்லை. அவருடைய கருத்துக்களுக்கு பின்னர் அதிக ஊக்கமற்ற கைதட்டல்தான் இருந்தது. சதுக்கத்தில் கூடியிருந்த மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் தங்களுடைய கைகளை பைகளில்தான் வைத்திருந்தனர்.

ஓய்வு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் எயர்பஸ் தொழிலாளியான Bernard Deas செய்தியாளர்களிடம் கூறினார்: "ஆலைமுடலுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். [Meaulte ஆலை] இப்பொழுது காப்பாற்றப்பட்டுவிடலாம் என்று தோன்றினாலும், அடுத்த மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் நிலைமை எப்படி இருக்கும்? இளைஞர்கள், கடைக்காரர்கள், துணை ஒப்பந்தக்காரர்கள் ஆகியோருக்கு வேலை கொடுப்பதற்காக எயர்பஸ்ஸை காப்பாற்றுவது முக்கியமாகும்... இளைஞர்களை பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்."

ஒரு பணி பயிலுநரான Christophe, WSWS இடம் கூறினார்: "என்னுடைய எதிர்காலம் ஆபத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மண் எண்ணெய்க்கான தொட்டியிலிட்டு கழுவும் அடிப்படையை செய்து கொடுப்பதில் பயன்படுத்தப்படும் அதிவேக டிஜிடல் இயந்திரத்தில் ஒரு பொறிஇயக்குநராக நான் பயிற்சி பெற்று வருகிறேன். வேலை உறுதி என்ற நிச்சயம் இல்லை. எனவே அனைவருக்கும் ஆதரவு கொடுக்கிறேன். இந்த இடத்தில் என்னைப் போல் 30 பணி பயிலுநர்கள் உள்ளனர். மற்றவர்களும் பயிற்சி பெறுகின்றனர்; இதைத்தவிர தற்காலிக தொழிலாளர்களும் உள்ளனர்."

எயர்பஸ் ஆலைகளை கொண்டுள்ள நான்கு நாடுகளின் தொழிலாளர்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டுமா என்று கேட்கப்பட்டதற்கு கிறிஸ்டோப் கூறினார்; "சிறிய ஆர்ப்பாட்டங்கள் என்பதை விட அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவது சிறந்தது". ஜேர்மனியை விட அதிக இழப்பை பிரான்ஸ் கொண்டுள்ளது என்று அவர் கருதுகிறார்; மேலும் உற்பத்தியில் தேக்கம் ஏற்பட்டதற்கு ஜேர்மனிய பிரிவுதான் காரணம் என்றும் அவர் கூறினார்; ஆனால் எயர்பஸ்ஸின் நெருக்கடிக்கு தொழிலாளர்கள் காரணம் இல்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். "எயர்பஸ் சென்றுவிட்டால், இங்குள்ள உள்ளூர் பொருளாதாரம் முழுவதும் சரிந்துவிடும் -- தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் சிறு கடைகள், வணிகங்கள் ஆகியவையும்" என்று அவர் கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved