World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Setback for Sarkozy in second round of French legislative elections

பிரெஞ்சு தேசிய சட்டமன்ற தேர்தல்களின் இரண்டாம் சுற்றில் சார்கோசிக்கு பின்னடைவு

By Antoine Lerougetel
19 June 2007

Back to screen version

புதிய பாராளுமன்றத்தில் ஒரு தெளிவான பெரும்பான்மையை ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் கோலிச UMP பெற்றுவிட்டாலும், மிகப் பரந்த அளவில் கூறப்பட்ட "நீலப் பெரும் அலை" (UMP இன் நிறம் நீலம்) என்பது ஏற்படவில்லை.

ஞாயிறன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் இறுதிச் சுற்றுக்கு பின்னர், UMP மொத்தம் 577 இடங்களில் 323 இடங்களையும், பிரான்சுவா பேய்ரூவின் மைய வலது UDF ல் இருந்து பிரிந்த குழுவான New Centre ல் உள்ள அதன் கூட்டாளிகளுக்கானதில் 20 இடங்களையும் பெற்றுள்ளன.

400 இடங்களுக்கும் மேலாக வெற்றி கிடைக்கும் என்று UMP எதிர்பார்த்திருந்தது. வெளியேறிய பாராளுமன்றத்தில் உள்ளதைவிட 36 இடங்கள் அதற்கு குறைவாகவே கிடைத்துள்ளன. மாறாக, சோசலிஸ்ட் கட்சி எதிர்பார்த்ததைவிட அதிகமாகப் பெற்றுள்ளது. முந்தைய பாராளுமன்றத்தில் இருந்ததை விட 56 அதிக இடங்களை கொண்டு அது இப்பொழுது 205 பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது.

மரபார்ந்த தொழிலாள வர்க்க கோட்டைகளில் கம்யூனிஸ்ட் கட்சி அதன் வாக்குகளை தக்கவைத்துக் கொண்டுள்ளது; முன்கணிப்பாளர் கூறியதுபோல், தேர்தலில் அது உருகிப் போதல் நடக்கவில்லை. முந்தைய பாராளுமன்றத்தைவிட 4 குறைவாக 18 பிரதிநிதிகளை கொண்டுள்ள இது உத்தியோகபூர்வ பாராளுமன்றக்குழு என்ற தகுதியையும் அதற்குரிய சலுகைகளையும் அடையமுடியவில்லை. ஆனால் வெளிநாட்டு எல்லைப்பகுதிகளில் இருந்து வரும் பிரதிநிதிகள் அல்லது அணுசக்தி பற்றியதில் அடிப்படை வேறுபாடுகள் இருந்தபோதிலும், நான்கு பசுமைக் கட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து கொண்டு ஒரு குழு அமைக்க முற்பட்டுள்ளது.

இரண்டாம் சுற்றின் முடிவு UMP க்கு ஓர் அதிர்ச்சியாக வந்தது; சோசலிஸ்ட் கட்சிக்கு அதிக மகிழ்ச்சி இல்லாத வியப்பையும் கொடுத்தது; இதன் தலைவர் பிரான்சுவா ஹொலாந்த் 140 இடங்கள் கிடைத்தாலே அதை வெற்றியாக கருதுவதாக அறிவித்திருந்தார். சார்க்கோசிக்கு இது உறுதியான பின்னடைவு ஆகும்; அவர் தன்னுடைய "சீர்திருத்தங்களை" மகத்தான பெரும்பான்மையுடன் விரைவில் செயல்படுத்திவிடலாம் என்று கணக்கிட்டிருந்தார்.

இந்த அடி சார்க்கோசியின் பெரும் முண்டுகோலில் ஒருவரான துணை பிரதம மந்திரி அலன் யூப்பே Bourdeaux ல் இருந்து வெற்றிபெற முடியாமல் போனது என்ற உண்மையால் இன்னும் மோசம் அடையச் செய்தது. அவர் தன்னுடைய இராஜிநாமாவை கொடுத்துவிட்டார்; சார்க்கோசியும் பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோனும் இப்பொழுது தங்கள் மந்திரிசபைக் குழுவை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.

இழிந்த கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதியான ஜோன் லூயி புருகியேர் (Jean-Louis Bruguière) மற்றும் சட்டத்திற்கு புறம்பான வகையில் புலம்பெயர்வோரை துரத்தி அடிப்பதிலும், இளங்குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான அடக்குமுறைக் கொள்கைகளை இயற்றுவதில் ஒத்துழைப்பவருமான Arno Klarsfeld இருவரும் சார்க்கோசி முகாமில் தேர்தல் தோல்வியை அடந்த உயர்மட்டத்தினர்கள் ஆவர்.

வாக்குப்பதிவு மிகவும் குறைவாக 60 சதவிகிதத்தில் இருந்தது; கிட்டத்தட்ட ஜூன் 10 அன்று நடந்த முதல் சுற்றுப்போல்தான் இதுவும் இருந்தது. ஆனால் முதல் சுற்றில் வாக்குச் சாவடிகளில் இருந்து பெரும்பாலும் மரபார்ந்த இடது வாக்காளர்கள் ஒதுங்கியிருந்த நிலையில், இம்முறை வலதுசாரி வாக்குகள் திரளத் தவறியது.

ஒரு வாரத்திற்குள் இத்தகைய மகத்தான மாறுதல் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் பொருளாதாரத்துறை மந்திரி Jean-Louis Borloo அரசாங்கம் கூடுதல் மதிப்பு விற்பனை வரியை (TVA - Taxe sur la Valeur Ajoutée) 5 சதவிகிதம் உயர்த்தி 24.5 எனச் செய்வதாக, முதலாளிகளுக்கு சமூக செலவினங்களை குறைப்பதற்கு நிதி அளிக்கும் வகையில் ஈடுபடப்போவதாக அறிவித்ததாகும்.

செய்தி ஊடகம் "நீலப் பெரும் அலை" என்று பறை சாற்றியதை கருத்திற்கொண்டு அனைத்து எச்சரிக்கைகளையும் ஒதுக்கிவிட்டு, போர்லூ அந்த அறிவிப்பைச் செய்திருந்தார். தொழிலாளர் செலவினங்கள் குறைப்பிற்காக TVA ஐ அதிகரிப்பது என்பதன் அர்த்தம் முதலாளிகளுக்கு பெரும் கைப்பிடி போவதற்காக தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், நலன்புரி செலவில் வாழ்பவர்கள், சராசரி வருமானம் இருக்கும் குடும்பங்கள் ஆகியோர் அதிக விலை கொடுக்க வேண்டும் என்பதாகும். இது செல்வம் கொழிப்பவர்களுக்கு ஆதரவாக வருமானத்தில் மிகப் பெரிய மறுபங்கீட்டை பிரதிநிதித்துவம் செய்கிறது.

ஒன்றரை ஆண்டுகளுக்கும் முன்பு இதே போன்ற திட்டம் (TVA ல் 3 சதவிகித உயர்வு) அங்கேலா மேர்க்கெலால் அறிவிக்கப்பட்டபோது அவருடைய கன்சர்வேட்டிவ் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனுக்கு தேர்தலில் இழப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி அவர் சமூக ஜனநாயகவாதிகளுடன் கூட்டணி அமைக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டார்.

பிரான்சில், சோசலிஸ்ட் கட்சி போர்லூவின் அறிவிப்பை பயன்படுத்தி அதை தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக ஆக்கி, "TVA 24.6 சதவிகிதம் என்பதற்கு எதிராக வாக்களிக்கவும்" என்று ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளை அச்சிட்டது. இது அனைத்து வர்ணனையாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளபடி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

Le Figaro எழுதியது: "இந்த எதிர்பாராத சமூக TVA விவகாரம் மக்களுடைய கருத்தில் பேரழிவு விளைவை ஏற்படுத்தியது ...இல்லாவிடில் போக்கில் இத்தகைய மாற்றத்தை வேறு எப்படி விளக்க முடியும்?"

வியாழன்று மாலை, இரண்டாம் சுற்றுக்கு மூன்று நாட்கள் முன்பு, சார்க்கோசி தலையிட்டு கணிசமான பின்வாங்குதலுக்கு உட்படும் கட்டாயம் ஏற்பட்டது. "TVA விவகாரம் ஒரு தேர்தல் குண்டுபோல் என்பதை உணர்ந்து, எலிசே விளையாட்டை முடிக்கும் இறுதி விசிலை ஊதியது" என்று லிபரேஷன் எழுதியது. "பிரெஞ்சு மக்களின் வாங்கும் திறனைக் குறைக்கும் விளைவை உடைய TVA அதிகரிக்கப்படுவதில்லை" என்பதை தான் ஏற்பதாக அறிவித்தார். ஆனால் அப்பொழுதே அது தாமதாகிவிட்டிருந்தது.

இந்த முழு விவகாரமும் அரசியலில் நல்ல படிப்பினையாகும். சார்க்கோசி மற்றும் UMP இன் ஜனாதிபதி தேர்தல் வெற்றி மற்றும் பாராளுமன்ற தேர்தலின் முதல் சுற்று வெற்றி, தீவிர அரசியல் எதிர்ப்பு முற்றிலும் இல்லாத நிலையின் விளைவு ஆகும். தன்னுடைய வர்க்கத்தின் நலன்களை ஆற்றலுடன் சார்க்கோசி பாதுகாத்தாலும், தானே முதலாளித்துவ கட்சியாக இருக்கும் சோசலிஸ்ட் கட்சி, தொழிலாள வர்க்கத்தை காப்பதற்கு கொள்கைகளை வழங்க முடியவில்லை; மாறாக UMP வேட்பாளரது கொள்கையை ஏற்றுக் கொண்டது. உண்மையில் இரண்டு முகாம்களுக்கும் இடையே இருந்த கொள்கை வேறுபாடுகள் மிகக் குறைவானதாகும்.

ஆனால் ஒரே ஒரு சமூகப் பிரச்சினை வெளிவந்தது --சார்க்கோசியின் திட்டத்தின் தொழிலாளர் எதிர்ப்பை ஆழ்ந்து அம்பலப்படுத்தியது-- அவருக்கு எதிராக பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. சார்க்கோசியின் வெற்றி பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் வலதிற்கு மாறிவிட்டது என்பதை பிரதிபலிக்கவில்லை; அதேபோல் அவருடைய வலதுசாரிக் கொள்கைகளுக்கு இணக்கம் என்றும் காட்டவில்லை. மாறாக அது, உத்தியோகபூர்வ "இடது" மற்றும் வெளியேறும் கோலிச அரசாங்கத்தின் தலைவர்கள், ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் பிரதமர் டொமினிக் டு வில்ப்பன் ஆகிய இரு புறத்தார் மீதும் காட்டப்பட்ட பெரும் வெறுப்பு மற்றும் மயக்கத் தெளிவு ஆகியவற்றின் வெளிப்பாடுதான்.

தன்னுடைய பிரச்சாரத்தில் தன்னை "மக்களுடையவர்", "தானாக உழைந்து உயர்ந்தவர்", பழைய அமைப்பை அதிர்விற்கு உட்படுத்தி அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளக்கூடியவர் என்று சார்க்கோசி காட்டிக் கொண்டார். உள்துறை மந்திரி என்ற முறையில் முன்பு மக்களுக்கு பிடிக்காத தன்னுடைய சொந்த கட்சித் தலைமையின் சில கொள்கையில் இருந்தே தன்னை ஒதுக்கி வைத்துக் கொண்டதுடன், மக்களுக்கு திருப்தி கொடுப்பவராக காட்டிக் கொண்டு, மக்களுடைய அதிருப்தியை தேசியவாத, புலம்பெயர்வோர் எதிர்ப்பு, "சட்டம்-ஒழுங்கு" வகைகள் மூலம் திசைதிருப்பவும் முற்பட்டிருந்தார்.

செய்தி ஊடகங்களும், "இடது" கட்சிகளும், "தீவிர இடது" என்று அழைக்கப்பட்டவையும் சார்க்கோசியிடம் இருப்பதாகக் கூறப்பட்ட வலிமையில் மயங்கியபோதும், அவருடைய ஜனாதிபதிக் காலம் மிகக் குறுகிய, உறுதியற்ற அஸ்திவாரங்களில்தான் உள்ளது. பாராளுமன்றத் தேர்தல்களில் அவர் பெற்றுள்ள பின்னடைவு மகத்தான சமூக, அரசியல் போராட்டங்களுக்கு முன் அறிகுறியாகும்.

சோசலிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும். சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் செகோலென் ரோயாலின் பிரச்சாரக் குழுவில் உறுப்பினாராக இருந்த Eric Besson ஆல் இது உறுதி செய்யப்படுகிறது; அவர் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு சார்க்கோசியின் முகாமிற்கு மாறிவிட்டார். ஒரு தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு சோசலிஸ்ட் கட்சி, சமூகப் பாதுகாப்பிற்கு நிதியூட்ட TVA ஐ பயன்படுத்த அதே போன்று எண்ணியிருந்ததாக கூறினார்.

எதிர்பாராத வகையில் சோசலிஸ்ட் கட்சிக்கு பாராளுமன்றத்தில் கிடைத்துள்ள முக்கியத்துவத்தை அரசாங்கத்திற்கு எதிரான தீவிர போராட்டத்திற்கு பயன்படுத்தும் விருப்பத்தை அது கொண்டிருக்கவில்லை. இதற்கு மாறாக, வாக்கின் உட்குறிப்பாக இருக்கும் சமூக எதிர்ப்பினால் பயந்துவிட்ட இக்கட்சி, சார்க்கோசி ஆட்சிக்கு ஏற்ப கூடுதலாக தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது.

கட்சியின் முதல் செயலாளர் பதவிக்கு ரோயால் தன்னுடைய வேட்புமனுவை கொடுத்துள்ளார். வலதுசாரி UDF ன் முன்னாள் தலைவர் பிரான்சுவா பேய்ரூவின் Democratic Movement (MoDem) உடன் மறு இணைப்பிற்கு அவர் விழைகிறார். MoDem தேர்தலில் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றாலும், கட்சி அது தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து அதன் உறுப்பினர் தகுதிக்கு 78,000 மனுக்களை பெற்றுள்ளதாகவும், பழைய UDF ஐ விட ஏற்கனவே அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளதாகவும் கூறுகிறது.

ஜனாதிபதி பிரச்சாரம் முழுவதும், ரோயால் தன்னை கட்சிக் கட்டுப்பாட்டு வரம்புகளுக்கு அப்பாற்பட்ட சுதந்திரமானவர் என்று காட்டிக் கொண்டு தீவிர வலது நடவடிக்கைகளுக்கு மாறினார். சோசலிஸ்ட் கட்சியின் தலைவரும் மற்றும் அதன் முதல் செயலாளரும், இவருடைய பங்காளியும் இவருடைய நான்கு குழந்தைகளின் தகப்பனாருமான ஹொலந்துடன் பெருகிய முறையில் மோதல் கொண்டிருந்தார். உண்மையில் ஞாயிறன்று இரவு, தேர்தல் முடிந்தவுடனேயே அவரிடத்தில் இருந்து தான் பிரிந்து வாழப்போவதாகவும் அறிவித்தார். தன்னுடைய கட்சிப் பொறுப்பை 2008 கட்சி மாநாடு வரை தான் விட்டுவிடப்போவதில்லை என்று ஹொலந்த் கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல்களின் முடிவுகள் வரவிருக்கும் வெகுஜனப் போராட்டங்களுக்கு ஒரு முற்றிலும் புதிய முன்னோக்குத் தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. சார்க்கோசியின் சட்டமன்ற பின்னடைவு இருந்தாலும், அவர் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்களின்மீது வரலாற்றளவு தாக்குதல்களை நடத்த தொடங்குவார். உழைக்கும் மக்களின் சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளின் காப்பு ஆகியவற்றிற்கான முன்னிபந்தனை, சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அதன் கூட்டாளிகள் உட்பட முழு அரசியல் நடைமுறையுடனும் முறித்துக் கொள்ளுவதும், சோசலிச மற்றும் சர்வதேச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய, உண்மையான சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியமைப்பதும் ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved