World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Why is the US press silent on Brzezinski's warnings of war against Iran?

அமெரிக்க பத்திரிகைகள் பிரிஜேஜின்ஸ்கியின் ஈரானுக்கு எதிரான போர் பற்றிய எச்சரிக்கைகள் மீது ஏன் மெளனமாக உள்ளன?

By Barry Grey in Washington DC
3 February 2007

Back to screen version

முக்கிய தேசிய செய்தித்தாட்களும் அனேக ஒலிபரப்பு நிலையங்களும் செனட் வெளியுறவுக் குழுவில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski கொடுத்த அதிர்ச்சி தரக்கூடிய சாட்சியத்தை பற்றி சிறு தகவல்களைகூட கொடுக்கத் தவறிவிட்டன.

ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிஜேஜின்ஸ்கி அமெரிக்க வெளியுறவு அமைப்புமுறைக்குள்ளே மிக முக்கியமானவர்களுள் ஒருவராவார். ஈராக்கில் நடக்கும் போர் பற்றி கடுமையான விமர்சனத்தை அவர் அளித்ததுடன், புஷ் நிர்வாகம் ஈரானுடன் தவிர்க்க முடியாத ஒரு இராணுவ மோதலுக்கு சென்று கொண்டிருக்கிறது என்றும் அதன் விளைவு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளாக இருக்கும் என்றும் எச்சரித்தார்.

இதையும்விட முக்கியத்துவம் வாய்ந்ததும், கவலை கொடுப்பதும், புஷ் நிர்வாகம் ஈரான் மீது இராணுவத் தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக ஒரு போலிக்காரணத்தை தயாரிக்கக்கூடும் என்ற பிரிஜேஜின்ஸ்கி இன் கருத்து ஆகும். "ஈரானுடன் ஒரு இராணுவ மோதலுக்கான வாய்ப்பு நிலை" என்பது பற்றிக் கூறிய பிரிஜேஜின்ஸ்கி கீழ்க்கண்ட தொடர் நிகழ்வுகள் வரலாம் என்றும் கூறினார்: "குறிப்பிட்ட மட்ட இலக்குகளை ஈராக்கியர் அடையத் தவறுதல், அவற்றிற்கு காரணம் ஈரானியரின் பொறுப்பு எனக்கூறல், பின்னர் ஈராக்கிலோ அல்லது அமெரிக்காவிலோ ஒரு பயங்கரவாத செயலுக்கு ஈரான் மீது குற்றம் சாட்டப்படல், இவை ஈரானுக்கு எதிரான 'பாதுகாப்பு', மேற்கோளில்/ மேற்கோள் அல்லாமல், அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் உச்சக் கட்டத்தை அடைதல்' ". (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது).

இவ்வாறு ஈரான் மீதான அமெரிக்க இராணுவ தாக்குதல் ஒரு ஆக்கிரோஷமான நடவடிக்கையாக இருக்கும், ஈரானிய ஆத்திரமூட்டல்கள் எனக் கூறப்படுவதற்கு தற்காப்பு பதில் நடவடிக்கை போல் காட்டப்படும் என்றும் பிரிஜேஜின்ஸ்கி கருத்துத் தெரிவித்து, வெளிப்படையாக அவ்வாறு கூறாமல், வெள்ளை மாளிகை போருக்கான ஒரு காரணத்திற்காக அமெரிக்காவிற்குள்ளேயே ஒரு பயங்கரவாத தாக்குதலை அனுமதிக்கக்கூடும் அல்லது தயாரிக்கும் திறனுடையது என்றும் கூறினார்.

அத்தகைய சாட்சியம், அதுவும் காங்கிரசின் பகிரங்க விசாரணையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை அமைப்பு முறையுடன் பல தசாப்தங்கள் அனுபவம் உடையவர், இராணுவ, உளவுத்துறை கருவிகளுடன் நெருக்கமான தொடர்பு உடையவரிடம் இருந்து வருவது என்பது செய்தித் தகுதியை கொண்டிருப்பது என்று மட்டும் அல்லாமல், மிக ஆழ்ந்த சிந்தனைக்குரிய கருத்தும் ஆகும். எந்தப் பாரபட்சமற்ற, மனசாட்சியினின்றும் பிறழாத செய்தித்தாளோ, செய்தி தொலைக்காட்சி, வானொலி செய்தி அலைவரிசைகளோ மக்களுக்கு இத்தகைய போக்கைப் பற்றி தெரிவித்தல் கட்டாயம் என்று கருதியிருக்கும்.

ஆனாலும் நியூ யோர்க் டைம்சோ, வாஷிங்டன் போஸ்ட்டோ பிரிஜேஜின்ஸ்கி இன் சாட்சியத்தை பற்றி ஒரு சிறு செய்தித் தகவலை கூட தங்கள் வெள்ளிக்கிழமை பதிப்பில் கொடுக்கவில்லை. அதேபோல் USA Today அல்லது வோல்ட் ஸ்ரீட் ஜேர்னலும் இது பற்றிக் கூறவில்லை. இவையனைத்தும் வாஷிங்டன் தொகுப்புத் தகவல்களில் போதுமான பணியாளர்களை கொண்டுள்ளனர்; அவை சட்டமன்ற விசாரணைகள் பற்றி வாடிக்கையாக தகவல் கொடுப்பவை; அதிலும் குறிப்பாக ஈராக்குடனான போர் போன்ற எரியும் பிரச்சினைகளை பற்றிக் கூறுபவை.

அவர்கள் இத்தகவலை அடக்கி வைத்திருப்பதற்கான அவர்களின் முடிவுக்கு எளிமையாள விளக்கம் எதுவும் கிடையாது. வியாழக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் இதே செனட் குழு முன் முந்தைய தினம் ஹென்றி கிஸ்ஸிங்கர் தோன்றி சாட்சியம் கொடுத்தது பற்றி மிகப் பெரிய அளவில் இரண்டாம் பக்கம் கட்டுரையும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தது. ரிச்சார்ட் நிக்சன் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி, புஷ் நிர்வாகத்தின் போர்க் கொள்கை பற்றி பொதுவான ஆதரவை தெரிவித்திருந்தார்.

மேலும் போஸ்ட்டின் வலைத் தள பதிப்பு பிரிஜேஜின்ஸ்கி தோன்றியது பற்றி Associalted Press கொடுத்திருந்த தவகலை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையில் நுட்பமாக, ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் பிரிஜேஜின்ஸ்கி இன் ஈரானுடனான போருக்கான பாதை பற்றிய ஊக காட்சியில் முக்கிய மாறுதல்கள் இருந்தன; அவற்றின் மூலம் புஷ் நிர்வாகத்தை பற்றி பிரிஜேஜின்ஸ்கி இன் விமர்சனத்தின் கடுமையான மற்றும் அவசரமான தன்மை குறைக்கப்பட்டது. அமெரிக்காவிற்குள்ளேயேயான ஒரு பயங்கரவாத தாக்குதல், போரை நியாயப்படுத்துவதற்கு முடியும் என்ற கருத்தையும் அது; பிரிஜேஜின்ஸ்கி இன் உரையில் மேற்கோளின் கீழ் கொடுக்கப்பட்டிருந்த ஈரானுக்கு எதிரான "தற்காப்புப் போர்" பற்றியதில் மேற்கோள் குறிப்புக்களும் நீக்கப்பட்டிருந்தன.

உலக சோசலிச வலைத் தளம் வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் USA Today ஆகியவற்றிற்கு பிரிஜேஜின்ஸ்கி சாட்சியம் பற்றி அவை கூறாததற்கு விளக்கம் கேட்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டது. எந்த செய்தித்தாளும் எமது அழைப்பிற்கு விடையிறுக்கவில்லை.

தொலைக்காட்சி செய்தி ஊடகங்களை பொறுத்தவரையில், PBS TM "News Hour with Jim Lehrer" நிகழ்ச்சியில் செனட் குழுவிற்கு முன்பு பிரிஜேஜின்ஸ்கி போர்க்காட்சி பற்றித் திறந்துகாட்டிய ஒரு துண்டுக்காட்சி எந்த அபிப்பிராயமும் கூறப்படாது காட்டப்பட்டது. "NBC Nightly News" இத்தகவலை முற்றிலும் புறக்கணித்துவிட்டது.

ஈராக்கிய போர், புஷ் நிர்வாகத்தின் சதிகார திட்டங்கள், மத்திய கிழக்கில் இன்னும் கூடுதலான பரந்த போருக்கான அதன் உந்துதல் பற்றி இந்த கண்டனம் செய்யும் விமர்சனத்தை அடக்குதல் ஆகியவை மீண்டும் அமெரிக்க பரந்த செய்தி ஊடகத்தின் ஊழல் மலிந்த, பிற்போக்குத்தனமான தன்மைக்கு உதாரணங்கள் ஆகும். செய்தி ஊடக அமைப்புமுறை, மீண்டும், ஈராக் படையெடுப்பிற்கு முன் இருந்த நிலைபோலவே, நிர்வாகத்தின் போர்ப் பிரச்சாரம் மற்றும் பொய்களுக்கு துணை நிற்கத் தயார் என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved