World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP marks 20th anniversary of Keerthi Balasuriya's death

இலங்கை சோ.ச.க. கீர்த்தி பாலசூரிய மறைந்து 20வது ஆண்டை நினைவுகூர்ந்தது

By our correspondents
20 December 2007

Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), கீர்த்தி பாலசூரியவின் மறைவின் 20வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் முகமாக டிசம்பர் 18ம் திகதி அவரது சமாதியில் ஒரு சிறிய அஞ்சலி நிகழ்வை நடாத்தியது. கீர்த்தி பாலசூரிய சோ.ச.க. யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) பொதுச் செயலாளராக இருந்தார். அவர் பு.க.க. அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் போது ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் காலமானார். 1987ல் அவர் இறக்கும் போது அவருக்கு 39 வயதாகும்.

தோழர் கீர்த்தியுடன் நீண்டகாலமாக அரசியலில் ஈடுபட்டவர்கள், கட்சி ஆதரவாளர்கள் உட்பட முன்னணி சோ.ச.க. உறுப்பினர்கள் மத்திய கொழும்பில் உள்ள மயானத்தில் கூடினர். பு.க.க. ஸ்தாபக உறுப்பினரும் சோ.ச.க. பொதுச் செயலாளருமான விஜே டயஸ், மலர் அஞ்சலி செலுத்தியதோடு, ஆஸ்திரேலிய சோ.ச.க. யின் தேசிய செயலாளர் நிக் பீம்ஸ் அனுப்பி வைத்திருந்த செய்தியையும் வாசித்தார்.

"தோழர் கீர்த்தி உயிரிழந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதை நம்புவதற்கே சிரமமாக உள்ளது. அவர் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சீரழிவால் உருவாக்கப்பட்ட சகல நெருக்கடிகளின் போதும் அதற்கு எதிராக போராடி, தனாகவே எழுந்து நிற்கும் நிலையை நெருங்கியிருந்த போது உயிரிழந்தமையினால், அவரது இழப்பு மிகவும் ஆழமாக உறுத்துகிறது. ஆனால், அவருடன் வேலை செய்யும் மதிப்பையும் வாய்ப்பையும் பெற்றிருந்த நாம், கொள்கைப்பிடிப்பான போராட்டத்தின் மரபில் இருந்து உள்ளீர்த்துக்கொள்ளவும் மற்றும் அவர் விட்டுச் சென்ற கோட்பாட்டு நுண்ணறிவில் கவனம் செலுத்தவும் நிறையவே இருப்பதை காண்கின்றோம். இந்த மரபின் முக்கியத்துவத்தைப் பற்றி 20 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் சொன்னது, முன்னரை விட இப்போது மிகவும் சரியானதாக உள்ளது. நாம் இலங்கையிலும் அனைத்துலகிலும் எதிர்வரவுள்ள எழுச்சிகளின் போதும் இந்த மரபில் இருந்து உள்ளீர்த்துக்கொள்ள வேண்டும்.

"எமது அனைத்துலக இயக்கத்தின் மிகச்சிறந்த போராளிகளில் ஒருவரை நினைவுகூறும் இந்நாளில், தோழி விலானிக்கும் மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து தோழர்களுக்கும் எங்களது ஆழமான மனமுவந்த கவலையை தயவுசெய்து தெரிவிக்கவும்," என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் சோ.ச.க. தேசிய செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்துலக ஆசிரியர் குழவின் தலைவருமான டேவிட் நோர்த், கீர்த்தியின் மறைவின் 20வது ஆண்டு நினைவாக எழுதிய இரு பாகங்கள் கொண்ட கட்டுரையில் இருந்தும் டயஸ் மேற்கோள் காட்டினார். (பார்க்க " Twenty years since the death of Keerthi Balasuriya ")

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான புஷ் நிர்வாகத்தின் யுத்தங்களாலும், அதே போல் ஈரானுக்கு எதிரான இராணுவத் தயாரிப்புகளாலும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு உக்கிரமடைந்துள்ளது. இராணுவவாதத்திற்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விரோதம் வளர்ச்சியடைகின்றது. இந்த சர்வதேச நடைமுறைப் போக்குகளில் இருந்து இலங்கையின் அல்லது செற்காசியாவின் நிலைமைகளை பிரிக்க முடியாது, என டயஸ் சுட்டிக்காட்டினார்.

"இன்று உள்நாட்டு யுத்தம் தொடர்பாக இந்த நாட்டில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியிலும் ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியிலும் உள்ள மனநிலை, 1987ல் தோழர் கீர்த்தி பாலசூரிய காலமான சமயத்தில் இதே போன்று இருக்கவில்லை. அப்போது இனவாதம் காய்ச்சல் மட்டத்திற்கு உக்கிரமடைந்திருந்ததோடு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தொழிலாளர் வர்க்கத்தின் தலைக்கு நேரே தனது துப்பாக்கியை நீட்டிக்கொண்டிருந்தது," என அவர் கூறினார்.

யுத்தத்திற்கு எதிரான சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவதற்கான சந்தர்ப்பம் கட்சியின் முன் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த அரசியல் வாய்ப்புக்களை பற்றிக்கொள்வதன் பேரில் கீர்த்தி செய்த அரசியல் மற்றும் கோட்பாட்டு பங்களிப்புகளை ஜீரணித்துக்கொள்வது அவசியம், என டயஸ் தெரிவித்தார்.

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ் கூட்டத்தில் உரையாற்றினார்: "1966ல் ஒரு மாணவனாக இருந்து கீர்த்தி தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த போது, எல்லையற்ற அரசியல் பிரச்சினைகளுடன் அவர் போராட வேண்டியிருந்தது. 1964ல் பப்லோவாதத்தின் செல்வாக்குக்கு கீழ்படிந்த லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலாளித்துவ கூட்டரசாங்கத்திற்குள் நுழைந்து கொண்டதன் மூலம் ட்ரொட்ஸ்கிசத்தை முழுமையாகக் காட்டிக்கொடுத்தது. அந்த நிலைமைகளின் கீழ், ஒரு இளைஞர் குழுவினர், தோழர் ஸ்பைக்குடன் (நீண்டகாலமாக ட்ரொட்ஸ்கிசவாதியாக இருந்த வில்பிரட் பெரேரா) சேர்ந்து இலங்கையில் அனைத்துலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக போராட எழுந்தனர்.

"கீர்த்தி ட்ரொட்ஸ்கிச அடிப்படைகளுக்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்ததோடு சந்தர்ப்பவாதத்துக்கும் சீர்திருத்தவாதத்துக்கும் எதிராக சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுத்தார். அவர் மார்க்சிஸ இயக்கத்தின் முழு அனுபவங்களையும் கட்சிக்குள் கொணர்ந்ததோடு இன்று நாங்கள் கட்சிக்குள் அந்த போராட்டங்களால் கல்வியூட்டப்பட்டுள்ளோம்.

"நாம் கீர்த்தியின் மறைவின் 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனைத்துலக தொழிலாளர் வர்க்கத்துக்காக கீர்த்தியின் அரசியல் மற்றும் கோட்பாட்டு வேலைகளை பிரசுரிக்கத் தயாராகிக்கொண்டிருக்கின்றோம்... ஒப்பீட்டளவில் அவரது 22 ஆண்டுகால சுருக்கமான அரசியல் வாழ்க்கையில், கீர்த்தி செய்த பங்களிப்புகள் இன்று தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கல்வியூட்டுவதற்கு இன்றியமையாதவையாகும்," என அவர் குறிப்பிட்டார்.

கீர்த்தி பாலசூரிய மறைந்து 20வது ஆண்டை நினைவுகூற ஞாயிற்றுக் கிழமை நடக்கவுள்ள பொதுக் கூட்டத்திற்கு வருகை தருமாறு ஆதரவாளர்களுக்கும் வாசகர்களுக்கும் சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

காலம்: டிசம்பர் 23 பி.ப 3 மணி

இடம்: மகாவலி கேந்திர நிலையம், கிரீன் பாத், கொழும்பு 7


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved