World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Central Bank union demands retraction of threats against SEP

இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிரான அச்சுறுத்தல்களை கைவிடுமாறு மத்திய வங்கி தொழிற்சங்கம் கோருகிறது

By our correspondent
29 November 2007

Back to screen version

இலங்கையில் உள்ள மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (ம.வ.ஊ.ச.) நிர்வாகக் குழு, அதன் தலைவர் கே.பி. மாவிகும்புர மற்றும் பொருளாளர் எம்.டபிள்யூ. பியரட்னவுக்கும் எதிராக இலங்கை மத்திய வங்கி ஊழியர் சங்கத் (இ.ம.வ.ஊ.ச.) தலைமைத்துவம் விடுத்த அச்சுறுத்தலை விலக்கிக்கொள்ளுமாறு கோரி, நவம்பர் 12ம் திகதி பிரேரணை ஒன்றை நிறைவேற்றியுள்ளது. மாவிகும்புர சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) நீண்டகால உறுப்பினராவார். பியரட்ன சோ.ச.க. யின் நெருங்கிய ஆதரவாளராவார்.

செப்டெம்பர் மாதம் நடந்த ம.வ.ஊ.ச. பொதுச் சபைக் கூட்டத்தில் அரசாங்கம் மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குத் திரும்பியதை எதிர்த்து பிரேரணை ஒன்றை நிறைவேற்றியதை அடுத்து, மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) சார்ந்த இ.ம.வ.ஊ.ச. துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை வெளியேற்ற அழைப்பு விடுத்ததை கண்டனம் செய்ததோடு மாவிகும்புரவையும் பியரட்னவையும் "சிங்களப் புலிகள்" என முத்திரை குத்தியது. யுத்தத்தை ஆதரிக்கும் சிங்களப் பேரினவாதிகளின் மொழியில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற அர்த்தத்தைக் கொண்ட "சிங்களப் புலிகள்" என்பது துரோகி என்பதற்குச் சமமானதாகும்.

ஜே.வி.பி. புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை முழுமையாக ஆதரிக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் புலிகள் மீதான யுத்தத்தை வெளிப்படையாக பிரகடனம் செய்யவும், சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் எனப்படுவதை நிராகரிக்கவும் தவறிவிட்டது என ஜே.வி.பி. விமர்சிப்பதோடு புலிகளை இராணுவ ரீதியில் நசுக்கவும் விரும்புகிறது. தொழிற்சங்கங்களில் உள்ள ஜே.வி.பி. ஆதரவாளர்கள், தம்மை தொழிலாளர்களின் உரிமைகளையும் நிலைமைகளையும் காப்பவர்களாக காட்டிக்கொள்ளும் அதே வேளை, யுத்த முயற்சிகளுக்கு அர்ப்பணிக்குமாறும் அழைப்பு விடுப்பதுடன் இனவாத யுத்தத்தை எதிர்ப்பவர்களை வேட்டையாடவும் முயற்சிக்கின்றனர்.

மாவிகும்புர சோ.ச.க. யின் நீண்டகால உறுப்பினர் என்ற வகையில், "அவர் புலிகளின் பிரிவினைவாதத்தையும் அதே போல் ஜே.வி.பி. யின் பேரினவாதத்தையும் கொள்கை ரீதியில் எதிர்ப்பதில் பிரசித்திபெற்றவர்" என்பதையும் சுட்டிக் காட்டிய ம.வ.ஊ.ச., மாவிகும்புர "சிங்களப் புலி" என இ.ம.வ.ஊ.ச. சுமத்திய அவதூறை நிராகரித்தது. மாவிகும்புரவும் பியரட்னவும் "சிங்களப் புலிகள்" எனப் பிரகடனம் செய்வதானது சரீர வன்முறையை மேற்கொள்ளும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என அந்தப் பிரேரணை எச்சரித்தது. "கொலைப் படைகள் கடத்தல்களையும் காணாமல் ஆக்கும் வேலைகளையும் தண்டனையில் இருந்து விலக்களிப்புடன் முன்னெடுப்பதோடு தீவு பூராவும் தனிநபர்களை விசாரணையின்றி தடுத்து வைப்பதும் அரங்கேறுகிறது," என அந்த பிரேரணை சுட்டிக் காட்டியது.

"இ.ம.வ.ஊ.ச. விடுத்துள்ள அச்சுறுத்தல் போலி நடிப்பு அல்ல. 1988-1989 பயங்கர காலப்பகுதியில் கொலைப் படைகளைக் கட்டவிழ்த்து விட்ட ஜே.வி.பி., அப்போது அதன் இனவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இணைந்துகொள்ளாமல் அதை எதிர்த்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக (சோ.ச.க. யின் முன்னோடி) உறுப்பினர்கள் மூவர் உட்பட, நூற்றுக்கணக்கான அரசியல் எதிரிகள், தொழிற்சங்கவாதிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களையும் கொன்று தள்ளியது. இதே தலைவிதியை மாவிகும்புரவுக்கும் ஏற்படுத்த ஜே.வி.பி. யின் துப்பாக்கிக் கும்பல் ஒன்று அவரைத் தேடித் திரிந்தது. மாவிகும்புர தனது வீட்டைக் கட்டிக்கொண்டிருந்த பிரதேசத்திற்கு ஜே.வி.பி. கொலைக் கும்பல் சென்றிருந்த போதிலும், அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது," என அந்த பிரேரணை மேலும் தெரிவித்துள்ளது.

பிரேரணை தெரிவிப்பது போல், மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் அசல் பிரேரணையை இ.ம.வ.ஊ.ச. எதிர்ப்பதன் உண்மையான நோக்கம், "அதில் அடங்கியுள்ள உண்மையேயாகும். யுத்தத்தை எதிர்க்காமல் அவர்களது மிகவும் அடிப்படையான வாழ்க்கைத் தரம் மற்றும் உரிமைகளைக் கூட பாதுகாக்க முடியாது. இ.ம.வ.ஊ.ச. மற்றும் ஜே.வி.பி. யும் யுத்தத்தை ஆதரிப்பதோடு தொழிலாளர்கள் அதற்காக அர்ப்பணிக்க வேண்டும் எனவும் கோருகிறது." துருப்புக்களை திருப்பி அழைக்கக் கோருவது புலிகளுக்கு உதவுவதற்கே என இ.ம.வ.ஊ.ச. குற்றஞ்சாட்டுவது பொய்யானது என அது விளக்கியிருந்தது. "மாறான விதத்தில், அது சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் எதிராக சிங்கள மற்றும் தமிழ் பேசும் மக்களை ஐக்கியப்படுத்த விடுக்கும் அழைப்பாகும்," என அது தெரிவித்தது.

ம.வ.ஊ.ச. நிர்வாகக் குழு, இ.ம.வ.ஊ.ச. மாவிகும்புரவுக்கும் பியரட்னவுக்கும் எதிராக விடுத்த அதன் அவதூறு குற்றச்சாட்டுக்களை விலக்கிக்கொள்ள வேண்டும் எனக் கோருவதோடு தொழிலாளர்களுக்கும் பரவலாக வேண்டுகோள் விடுக்கின்றது. "ம.வ.ஊ.ச. தலைவர்களுக்கு எதிரான இந்த அச்சுறுத்தல், வெகுஜனங்களின் வாழ்க்கைத் தரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் காக்கப் போராடும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாகும். இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான பிரச்சாரம், இந்த உரிமைகளைக் காப்பதற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாக முன்னெடுக்கப்பட வேண்டும். ம.வ.ஊ.ச. தலைவர்களுக்கு எதிராக இ.ம.வ.ஊ.ச சுமத்தியுள்ள அவதூறுகளை கண்டனம் செய்து, அதை விலக்கிக்கொள்ளுமாறு கோரி அறிக்கைகளை வெளியிடுமாறு ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அமைப்புகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்," என அந்த பிரேரணை தெரிவிக்கின்றது.

நவம்பர் 12ம் திகதி வருகை தந்திருந்த ம.வ.ஊ.ச. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 12 பேரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். வருகை தராமல் இருந்த ஐந்து உறுப்பினர்களில் மூவர், பின்னர் பிரேரணைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி அதில் கைச்சாத்திட்டனர். ஏனைய மத்திய வங்கி ஊழியர்களும் இ.ம.வ.ஊ.சங்கத்தின் ஆத்திரமூட்டும் நடவடிக்கையை கண்டனம் செய்ததோடு வேலைத் தளத்தில் துண்டுப் பிரசுரமாக விநியோகிக்கப்பட்ட சோ.ச.க. யின் அறிக்கைக்கும் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஒரு ஊழியர் உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்ததாவது: "நான் ஜே.வி.பி. துண்டுப் பிரசுரத்தைக் கண்ட உடனேயே, அதில் உள்ள அச்சுறுத்தலை பற்றி மாவிகும்புரவுக்கு எச்சரித்தேன். ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவர்கள் ஒரு பொலிஸ்கார வேலை செய்துள்ளனர். இன்னுமொரு துண்டுப் பிரசுரத்தில், இதற்கு முன்னர் நடந்த வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் மாவிகும்புரவும் பியரட்னவும் முன்வைத்த பிரேரணைகளை அவர்கள் மேற்கோள் காட்டியிருந்தனர். அவர்கள் அந்தப் பிரேரணையில் வடக்கு கிழக்கில் இருந்து துருப்புக்களை திருப்பி அழைக்கக் கோரும் அந்தப் பகுதியை மட்டுமே மேற்கோள் காட்டியிருந்தனர். அந்தப் பிரேரணையை வாசிக்கும் எவரும், அது சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் பிரச்சாரத்தின் ஒரு பாகமாகும் என்பதை காண்பார்.

"மத்திய வங்கி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது. மாவிகும்புரவும் பிரயரட்னவும் 'சிங்களப் புலிகள்' என முத்திரை குத்தப்படும் போது அச்சுறுத்தல் பெரியளவிலானதாகும்.

"மாவிகும்புர கொள்கைகளுக்காகப் போராடுபவர் என்பது எங்களுக்குத் தெரியும். ஒரு சில மாதங்களுக்கு முன்னர், மத்திய வங்கி நிர்வாகத்திற்கு ஒரு அநாமதேய மனு ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. ஜே.வி.பி. தொழிற்சங்கத்தின் தலைவர் சரத் ஏகநாயக மேலதிக வேலை நேரத்தின் போது அரசியல் செய்வதாக அந்த மனுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவின் ஒரு பிரதி மாவிகும்புரவுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அவர் அதை ஏகநாயக்கவுக்கு காட்டி, எந்தவொரு தொந்தரவையும் தான் எதிர்ப்பதாகத் தெரிவித்தார். அவர் குழுவின் அங்கத்தவர்களுக்கும் அதையே தெரிவித்தார்.

"ஜே.வி.பி. இப்போது இராணுவத்தைப் பாராட்டுவதோடு அதற்கு முழுமையாக ஆதரவளிக்கின்றது. 1988-1989ம் ஆண்டுகளில் அதன் தலைவர் ரோஹண விஜேவீரவைக் கொன்று இராணுவ ரீதியில் நசுக்கப்பட்ட இந்த அமைப்பு இப்போது இராணுவத்திற்கு ஆதரவளிப்பதையிட்டு ஒருவர் ஆச்சரியப்படலாம். அவர்களின் ஆதரவு சிங்களப் பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கட்சி தொழிலாளர்களின் கட்சியாக பாசாங்கு செய்ய முயற்சித்தாலும் கூட அவர்களுக்கு தொழிலாளர் வர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது.

இன்னுமொரு மத்திய வங்கி ஊழியரும் மாவிகும்புர மற்றும் பியரட்னவுக்கு எதிரான இ.ம.வ.ஊ.ச. அறிக்கையை எதிர்த்தார். "அவர்கள் (ஜே.வி.பி.) யுத்தத்தை முழுமையாக ஆதரிப்பதுடன் அதற்காக பிரச்சாரம் செய்கின்றனர். ஜே.வி.பி. யுத்தத்திற்கு எதிரான கோரிக்கைகளை எதிர்ப்பதற்குக் காரணம் அத்தகைய கோரிக்கைகள் அவர்களது குறிக்கோள்களுக்கு எதிராக இருப்பதே."

"இலங்கை இராணுவத்தை வடக்குக் கிழக்கில் இருந்து திருப்பி அழைக்கும் கோரிக்கை, சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்காக அபிவிருத்தி செய்யப்பட்டது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இராணுவமும் பொலிசும் அங்கு தமிழ் மக்களை நசுக்குகின்றன. இங்கும் அவர்கள் அதையே செய்கின்றனர். தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தாமல் எதுவும் செய்ய முடியாது. ஜே.வி.பி. யினர் தாங்கள் மார்சிஸ்டுகள் எனக் கூறிக்கொண்டாலும் அவர்கள் அப்படி அல்ல."

இந்த ஊழியர் ஒரு காலத்தில் ஜே.வி.பி. யை ஆதரித்தவர். ஆனால் இப்போது ஜே.வி.பி. யின் கொள்கைகள் தொழிலாளர் வர்க்கத்திற்கு விரோதமானது எனக் கருதுகிறார். வேலைத் தளங்களில் அரசியல் நடவடிக்கைகளுக்கு இ.ம.வ.ஊ.ச. விரோதமாக இருப்பதையும் அவர் எதிர்க்கின்றார். "தொழிற்சங்கங்களிலும் வேலைத் தளங்களிலும் "அரசியல் இருக்கக் கூடாது" மற்றும் எமது (உடனடி) பிரச்சினைகளைப் பற்றி மட்டும் பேசினால் போதும் என்ற கருத்துடன் நான் உடன்படவில்லை. தொழிலாளர்கள் சர்வதேச பிரச்சினைகளையும், உள்நாட்டில் உள்ள பிரச்சினைகளையும் மற்றும் அரசாங்கத்தைப் பற்றியும் கலந்துரையாட வேண்டும்."

அரசாங்கம் அரசியல் நெருக்கடியில் இருப்பதால் அதற்கு யுத்தம் வேண்டும் என அவர் விளக்கினார். "அரசாங்கத்தின் செயற்பாடு தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிரான பெரும் அடியாகும் மற்றும் மக்களின் அவதானத்தை (யுத்தத்தில் இருந்து) திசை திருப்புவதே அரசாங்கத்தின் தேவை."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved