World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: airport workers fired in anti-Muslim campaign

பிரான்ஸ்: முஸ்லிம்-எதிர்ப்புப் பிரச்சாரத்தில் விமான நிலையத் தொழிலாளர்கள் பணிநீக்கம்

By Pierre Mabut and Antoine Lerougetel
11 November 2006

Back to screen version

கோடை விடுமுறைக்கு பின்னர், பாரிசின் Roissy விமான நிலையத்தில், முஸ்லிம்கள் என்பதால் குறைந்தது 70 தொழிலாளர்களாவது பாதுகாப்பு இலத்திரன் அட்டைகளை இழந்து, அதையொட்டி தங்கள் வேலைகளையும் இழந்துள்ளனர். CFDT தொழிற்சங்கம் (French Democratic Federation of Labour) இந்த எண்ணிக்கையை கொடுத்துள்ளது; இது மற்ற தொழிற்சங்கங்களுடன் இணைந்து அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தில் இத்தகைய பாகுபாட்டிற்கு எதிர்ப்புக் காட்டி, ஒரு புகாரையும் கொடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் சிலர் தொழிற்சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆவர். CFDT, சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான அமைப்பு ஆகும்.

பிரான்சின் உள்நாட்டு மந்திரியான நிக்கோலா சார்க்கோசி, விமான நிலையப்பகுதியின் துணை போலீஸ் அதிகாரி Jacques Lebtrot -ஆல் பயணிகள் பொருட்களை கையாளும் 43 முஸ்லீம் தொழிலாளர்கள் பாதுகாப்பு இலத்திரன் அட்டைகளை கொடுக்காமல் அகற்றப்பட்டதை, அக்டோபர் 21 சோர்போன் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரை ஒன்றில் நியாயப்படுத்திப் பேசியதாவது: "ஒரு விமான ஒடும் பகுதியில் தீவிரப்போக்கு கண்ணோட்டம் உடையவர்கள்தான் வேலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை நான் ஏற்கமுடியாது; இதையொட்டி வழக்குகள் வந்தாலும் அதை நான் ஏற்கத்தயார்; ஏனெனில் கடுமையாக இல்லை என்பதை ஒட்டி பின்னர் அவதியுறவதைவிட மிகக் கடுமையாக இருந்தோம் என்ற நிலைப்பாடு மேலானதுதான்."

அவர் மேலும் கூறியதாவது: "அந்த அதிகாரியின் வேலை அவர்கள் தீவிர அமைப்புக்களுடன் மிக நெருக்கமான அல்லது தொலைத் தொடர்புகள் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதாகும்.... ...நாங்கள் சில தவறுகளை செய்திருக்கக் கூடும். ...அவர்கள் நீதிமன்றங்களில் தங்கள் உரிமைகளை கோரட்டும்." இத்தகைய அணுகுமுறை பிரெஞ்சு அரசு தன்னுடைய விருப்பப்படி "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் பலரை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டுகிறது.

தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் ஒருதலைப்பட்சமாக இரத்து செய்யப்பட்டுள்ளது, Bobigny நடுவர் மன்றம் Roissy தொழிலாளர்கள் எட்டு பேரால் அவசர வேண்டுகோளுக்கு இணங்க கோரிய வழக்கில் கொடுக்கப்பட்ட நவம்பர் 7 தீர்ப்பில் அடிக்கோடிட்டு காட்டப்படுகிறது. சார்க்கோசிக்கும் போலீஸ் அதிகாரிக்குமாக வாதாடிய வழக்கறிஞர் Georges Holleaux, இரண்டு தொழிலாளர்களை பொறுத்தவரையில் "பாதுகாப்பு இலத்திரன் அட்டை இரத்து செய்யப்பட்டது நீக்கப்பட இருப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அறிவித்தார்.

தங்களைப் பற்றி போலீஸிடம் இருக்கும் தகவல்கள் பற்றி குறிப்பு கொடுக்க வேண்டும் என்று ஏழு தொழிலாளர்கள் கோரியதற்கும் நீதிபதி தீர்ப்பு அளிக்க வேண்டும்; மேலும் "ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர் என்று கருதும் கொள்கை மீறப்பட்டுள்ளது பற்றியும்" தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

சில தொழிலாளர்களின் சார்பாக இருக்கும் வழக்கறிஞரான திரு மெளடே பாதுகாப்பு இலத்திரன் அட்டைகள் இரத்து செய்யப்பட்டுவிட்ட தொழிலாளர்கள் மீது எவ்வித சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் Roissy மற்றும் Orly விமான நிலையங்களில் "ஏழு சட்டவிரோத இஸ்லாமிய வழிபாட்டு இடங்களும்" மூடப்பட்டுவிட்டன, "குடியரசின் மதிப்பீடுகளுடன் முற்றிலும் இயைந்திராத வகையில் கருத்து தெரிவித்த 18 இமாம்கள் ஆண்டு தொடக்கத்தில் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டனர்" என்றும் விளக்கினார்.

"பயங்கரவாதிகளுடன் தொடர்பு" பற்றிய தன்னுடைய கூற்றுக்களின் "தெளிவான தன்மை" பற்றி ஆதரவு இருப்பதாக சார்க்கோசி கூறினாலும், அதற்குத் தக்க ஆதாரங்களை கொடுக்கவில்லை. இவருடைய "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதின் ஒரு பகுதியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள்கூட நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படும் வரை குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர். விமானநிலைய பாதுகாப்பிற்கு பொறுப்புடைய அவருடைய போலீஸ் தலைமை அதிகாரி, Jacques Leberot முஸ்லிம்களுக்கு எதிரான இத்தகைய சூனிய வேட்டையை காத்துப் பேசுகையில், ஒரு "பயங்கரவாத ஆபத்து வரக்கூடும்" என்று கூறுகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் நகைப்புக்கிடமான வகையில்தான் உள்ளது: "திருவாளர் X (தொழிலாளர் பெயர்) உடைய கருத்துக்கள் ஒரு விமான நிலையப் பாதுகாப்பிற்கு உகந்த வகையில் உத்தரவாதம் கொடுக்கும் தன்மையைப் பெற்றிராத நிலையில்", தொழிலாளர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு அது போதுமான காரணமாக கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்தான் எதிர்மறையை நிரூபிக்க வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணைகள் இவர்களுடைய மத நம்பிக்கைகளை மையமாக கொண்டிருந்தது என்பதை வழக்கறிஞர் மெளடே தெளிவாக்கியுள்ளார் : "நீங்கள் ஒரு முஸ்லிமா?, "குறிப்பிட்ட இமாமை உங்களுக்குத் தெரியுமா?, "இந்த/அந்த மசூதிக்கு அடிக்கடி செல்பவரா?, "ஏன் தாடி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?. மற்றய வினாக்கள், வெளிநாடுகளுக்கு பயணித்தது பற்றி, குறிப்பாக பாகிஸ்தானுக்கு சென்றது பற்றி உள்ளன. Jacques Lebrot, "பாகிஸ்தானில் சில விடுமுறைகளை ஒருவர் கழிக்கிறார் என்றால், எங்களுக்கு சில ஐயங்கள் தோன்றுகின்றன."

ஜனவரி 2002ல் இருந்து, அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடந்த பின்னர், விமான நிலைய பாதுகாப்புக்கள் நன்கு முடுக்கிவிடப்பட்டுள்ளன. முக்கியமான, ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பு இலத்திரன் அட்டைகள் போலீஸ் அதிகாரியால் கொடுக்கப்படுகின்றன; "அறநெறி, நடத்தை இவற்றில் சந்தேகப்பட வைப்பவர்கள், பொதுப் பாதுகாப்பிற்கு தேவையான உத்தரவாதங்களை அளிப்பதற்குத் தகுதியற்றவர்கள்" எனக் கருதப்படுபவர்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றனர். ஒரு தொழிலாளியின் குற்றம் சார்ந்திருகக் கூடிய ஆவணங்களை கணக்கில் கொள்ளாமல் போலீஸ் தொகுத்துவைத்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் இது நடைபெறுகிறது; அக்கருத்துக்கள் எந்த அளவிற்கு உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை.

பெப்ரவரி 2002ல் இருந்து மிகப் பரந்த அளவு பிரச்சாரம் விமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பு அடையாளம் சரிபார்ப்பதற்கு செய்யப்பட்டுள்ளது (இது பெட்டி போன்றவற்றை எடுத்து வைப்பவர்கள், காவலர்கள் ஆகியோருக்கு பொருந்தும்); இதையொட்டி பாதுகாப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படாத நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் பணிநீக்கத்திற்கு உட்பட்டுள்ளனர்.

தொழிலாளர் கூட்டமைப்பு (General Confederation of Labour) CGT உடைய அதிகாரி இதைப்பற்றிக் கருத்துத் தெரிவித்தார்: "பல ஆண்டுகளும் விமான நிலையத்தில் வேலைபார்த்த பிறகு இவர்கள் பற்றி இப்பொழுது விசாரணை நடத்தப்படுகிறது. பலரும் நகரக் குடியிருப்பில் வளர்ந்தவர்கள்; ஒருவேளை சில சமயம் முட்டாள்தனமான அக்கறை கொண்ட அல்லது அக்கறையற்ற செயல்களும் செய்திருக்கலாம்; ஆனால் இந்த வேலைதான் அவர்கள் அந்தப் பழைய செயல்களிடம் இருந்து முறித்துக் கொண்டு உறுதியான வாழ்க்கையை மேற்கொள்ள வைத்துள்ளது." போலீஸ் கோப்புக்களில் ஏற்கப்படாத குற்றச்சாட்டுக்களின் விவரங்கள் இருப்பதோடு குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் கைதுசெய்யப்பட்ட தகவல்களும் அடங்கியுள்ளன என்று இவ்வம்மையார் கூறினார்.

உள்ளூர் CGT கிளையின் சார்பாக Didier Frassin, செய்தியாளர்களிடம் விமான நிலையத்தில் இருக்கும் 80,000 தொழிலாளர்களில் -- பாரிஸ் பகுதியில் வேலைக்கே இது ஒரு மிகப்பெரிய ஆதாரம் ஆகும்-- பாதுகாப்பு இலத்திரன் அட்டைகள் எக்கணமும் பறிக்கப்பட்டுவிடலாம்; இதனால் கட்டுப்பாட்டை இயக்கும் கருவியாக பாதுகாப்பு அட்டைகள் மாற்றப்பட்டுவிட்டன." என்று கூறினார். "அவர்களுடைய தலைமீது ஊசலாடி நிற்கும் டமோக்கிள்ஸ் கத்தி போன்றதாகும் இது". போலீசாருடன் சிறு வாக்குவாதம், விமான நிலையத்திற்கு வெளியே இருந்தாலும், அடையாள இலத்திரன் அட்டை பறிமுதல் என்று ஆகிவிடும். "விமானங்கள் நிறுத்தப்படும் இடத்தில் வேலைநிறுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு செய்த பின்னர் போலீஸ் தலைவர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு ஊதியமில்லாமல், அடையாள அட்டை ஒரு வாரம் பறிமுதல் செய்யப்பட்ட வகையில் தண்டித்தார். ..இத்தகைய கட்டுப்பாட்டு அதிகாரம் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

SUD தொழிற்சங்க கூட்டமைப்பின் விமானநிலைய தொழிலாளர்கள் பிரிவு ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: "பயங்கரவாத அச்சுறுத்தல் என்பது தொழிலாளர்கள் மீது பழிசுமத்துவதற்கும், பாகுபாடு காட்டுவதற்கும் ஏற்கமுடியாத வகையில் வட ஆபிரிக்காவில் இருந்து வரும் தொழிலாளர்கள் மீது சுமத்தப்படுகிறது; அவர்கள் ஒரு மதத்தை பின்பற்றினாலும், பின்பற்றாவிட்டாலும், அவர்களுக்கு விமான நிலையத்தில் ஒதுக்கப்பட்ட இடங்களில் செல்லும் வாய்ப்பு மறுக்கப்படுவதால் இது நிகழ்கிறது"

அநேக தொழிலாளர்கள் MRAP (Movement against Racism and for Friendship between the Peoples, இனவெறிக்கு எதிராக, மக்களிடையே நட்பிற்காக என்ற இயக்கத்தில் சேர்ந்துள்னர்; ஆகஸ்ட் 2006ல் இருந்து கிட்டத்தட்ட 100 பேர் பாதிக்கப்பட்டுள்தாகவும், போலீஸ் தலைவரின் கருத்துக்களை கவனத்துடன் ஆய்ந்து, வழக்கின் விவரங்களை பார்த்ததில், "MRAP இம்முடிவில் ஒருதலைப்பட்ச பாரபட்ச கூறுபாடுகள் இருப்பதாக அஞ்சுகிறது" என்று அது கூறியுள்ளது.

ஏப்ரல் 2006ல் The Mosques of Roissy என்று Philippe de Villers வெளியிட்டுள்ள நூல் பிரான்ஸ் அரசின் இனவெறிச் செயற்பட்டியலுக்கு குரல் அமைத்துக் கொடுக்கிறது. MPF என்னும் தீவிர வலதுசாரி மக்கள் இயக்கத்திற்கு de Villiers தலைமை தாங்குகிறார்; இது Jean Marie Le Pen உடைய புதிய பாசிச Front National மற்றும் சார்கோசியின் ஆளும் UMP உடனும் புலம்பெயர் எதிர்ப்பு வாக்காளர் தளத்திற்கு போட்டியிடுகிறது. தன்னுடைய நூலில் de Villiers பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் "ஒரு புதிய அறிக்கையை பெற்றிருப்பதாகவும், அதில் பயணியர் பெட்டி, உடைமைகள் பகுதி பயங்கரவாதத் தாக்குதலுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் இப்பிரிவில் உள்ளவர்கள் எப்படி எளிதில் விமானங்களுக்குள் எளிதில் செல்ல முடியும் என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஜூலை 16ம் தேதி தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் de Villiers, "இஸ்லாம் என்பது பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் நிலம்" என்று கூறியுள்ளார். புத்தகத்தின் தலைப்பு Roissy விமான நிலையத்தில் இருக்கும் டஜன் கணக்கான சட்டவிரோத மசூதிகளை பற்றி கவனத்திற்கு கொண்டுவருகிறது; இவை இங்கும் அங்கும் ஆடைகள் வைக்கும் இடங்களுக்கு அருகே பிரார்த்தனை செய்வதற்கான பாய்விரிப்புக்களை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு கத்தோலிக்க பிரபு குடும்பத்தை சேர்ந்த de Villiers ஐரோப்பிய அரசியலமைப்பில் கிறிஸ்துவ சமயக் கொள்கை பொறிக்கப்பட வேண்டும் என்றும், "பிரெஞ்சுக் குடியரசின் தன்மையுடன் இஸ்லாம் பொருந்தி இருக்காது" என்றும் அறிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் மீதான தன்னுடைய தாக்குதலில் Philippe de Villiers, Le Figaro விற்கு நவம்பர் 2அன்று கொடுத்த பேட்டியில் இன்னும் மேலே சென்று, "அனைத்துப் பொது இடங்களிலும் முஸ்லிம் பர்தாக்கள் தடைசெய்யப்பட வேண்டும்" என்ற கோரிக்கை எழ வேண்டும் என்று அறிவித்தார். 2004ல் சிராக் அரசாங்கத்தால் பள்ளிகளில் முகத்திரைக்கு தடை விதித்துள்ள தற்போதைய சட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று இந்தக்கோரிக்கை வலியுறுத்துகிறது. இதற்கு சோசலிஸ்ட் கட்சி மற்றும் "இடது" தீவிரப் போக்கினரான Lutte Ouvriere (தொழிலாளர் போராட்டம்) ஆகியற்றின் ஆதரவு உள்ளது; இது புறநகர்ப்பகுதிகளின் சமூக நெருக்கடிக்கு புலம்பெயரும் மக்களைப் பலிகடாக்களாக்குதற்கு ஆதரவைக் கொடுக்கும் வகையில் உள்ளது.

சோசலிஸ்ட் கட்சியின் வலைத் தளம், Roissy ல் நிகழ்த்தப்பெறும் அப்பட்டமான அநீதிகளை பற்றி எக்குறிப்பையும் காட்டவில்லை; இப்பிரச்சினை பற்றி எந்த முக்கிய தலைவரும் கருத்து தெரிவிக்கவும் இல்லை; இது மிக வறிய நிலையில் ஆழ்ந்துள்ள வடக்கு பாரிசில் உள்ள Seine-Saint-Denis என்னும் பெரும்பாலான புலம்பெயர்ந்த மக்களிடையே இருக்கும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்களை பெரிதும் பாதிக்கிறது.

CGT, CDDT தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை பற்றிக் குறிப்பிட்டு, நவம்பர் 7ம் தேதி Roissy விமான நிலைய தொழிற்சங்கங்கள் அனைத்தின் கூட்டம் முடிந்த பின்னர் "பரந்த அளவிலான" நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளன. அரசாங்கத்துடன் மோதலை தவிர்க்கும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகளை இழுத்தடித்தல், வேலைநிறுத்த நடவடிக்கைகளை தள்ளி வைத்தல் போன்ற நடவடிக்கைகளில்தான் தொழிற்சங்கங்கள் உள்ளன. Roissy ல் இருக்கும் 80,000 தொழிலாளர்களின் சக்தி, பாரிஸ் பகுதியில் இருக்கும் தொழிலாளர்களின் சக்தி அனைத்தும் இது புலம்பெயர்ந்தோருக்கு மட்டும் என்றில்லாமல் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவிற்கும் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் அச்சுறுத்தும் முயற்சிகளுக்கு எதிராகத் திரட்டப்பட வேண்டும். அரசாங்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு வெகுஜன எதிர்ப்பு நடக்காமல் தடுக்கும்பொருட்டு, அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது போன்ற நீண்ட சான்றுகளைத்தான் தொழிற்சங்கங்கள் கொண்டிருக்கின்றன; அத்தகைய போராட்டத்தை நடத்துவதற்கு அவற்றின்மீது நம்பிக்கை வைக்க முடியாது.

அடுத்த ஏப்ரல் மாத ஜனாதிபதி தேர்தல்களை கருத்திற் கொண்டு அரசாங்கமும் UMP -ம் பெருகிய முறையில் இனவெறி துருப்புச் சீட்டை பயன்படுத்தி வருகின்றன; "பயங்கரவாதத்தின் மீதான போர்", "இஸ்லாமிய அச்சுறுத்தல்" புலம்பெயர்தல் ஆகிய அனைத்தையும் ஒரு கலவையாக "பிரெஞ்சு மதிப்பீடுகளுக்கு" அச்சுறுத்தலாக இவை எடுத்துரைக்கின்றன.

மதசார்பின்மை, குடிமக்கள் தங்கள் விருப்பப்படி மத நம்பிக்கைகளை கொள்ளும் உரிமை, அரசாங்கம் மத அதிகாரம் எதையும் கொள்ளாதிருத்தல், திருச்சபைக்கு அரசியல் அதிகாரம் கூடாது ஆகியவை பிரான்சின் அரசியல் நடைமுறை, இடது வலது இரண்டினாலும், சிதைவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன; இவை மத சிறுபான்மையினர்மீது தலையிடுதல், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் பழக்க வழக்கங்களில் அரசு தலையிடுவதை நியாயப்படுத்தும் வகையில், ஒரு தேசியவாத மற்றும் இனவாத வேண்டுகோளை விடுக்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved