World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government withdraws "First Job Contract," enlists unions in assault on job security

பிரெஞ்சு அரசாங்கம் "முதல் வேலை ஒப்பந்த சட்டத்தை" திரும்ப பெறுகிறது, வேலைப்பாதுகாப்பின் மீதான தாக்குதலுக்கு தொழிற்சங்கங்களின் உதவியை பெறுகிறது

By Rick Kelly
11 April 2006

Back to screen version

ஜனாதிபதி ஜாக் சிராக்கும், பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனும் சமீப வாரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் ஒரு பாரிய அலையை தூண்டிவிட்டிருந்த "முதல் வேலை ஒப்பந்த சட்டத்திற்கு" (CPE) பதிலாக வேறு ஒரு சட்டம் கொண்டுவரப்படும் என்று நேற்று அறிவித்தனர்.

தொழிற்சங்கத் தலைவர்கள், சில மாணவர் சங்கங்கள் மற்றும் "இடது" அரசியல் கட்சிகள் உடனடியாக இந்த மாற்றத்தை CPE எதிர்ப்பு இயக்கத்திற்கான தீர்மானகரமான வெற்றி என்று பிரகடனப்படுத்திய வகையில், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் திரண்டு எழுவதை நிறுத்தும் தங்கள் விருப்பத்தையும் அடையாளம் காட்டினர்.

மக்களை திருப்தி செய்யும் வகையில் தொழிற்சங்கங்களும் "இடது கட்சிகளும்", CPE எதிர்ப்பு இயக்கத்தின் காட்டிக் கொடுப்பை ஒரு "வெற்றி" எனக் கூறியுள்ளன. கோலிச அரசாங்கத்தின் இச்சமீபத்திய சூழ்ச்சிக்கையாளலுக்கு அவை கொடுத்துள்ள ஒப்புதல், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை நிராயுதபாணிகளாக்கி இருப்பதுடன், இப்பொழுது உறுதியாக உள்ள பல தொழிலாளர்களின் உரிமைகள், சமூக நிலைமைகள் ஆகியவற்றை தகர்க்கும் இலக்கு கொண்ட வருங்கால தடையற்ற சந்தைக்கான நடவடிக்கைகளுக்கு பாதை அமைத்துள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே, தொழிற் சங்கங்களும், அதிகாரபூர்வ "இடது" கட்சிகளும் --சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி) பிரெஞ்சு முதலாளித்துவ அரசுக்கு அறைகூவல் விடுவதை தடுக்கும்பொருட்டு, சிராக்-வில்ப்பன் நிர்வாகத்தை ஸ்திரப்படுத்தவும், பள்ளிக்கூட மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், தொழிலாளர்கள் இயக்கத்தை சிதைக்கவும் முயன்றுள்ளன.

"CPE க்கு பதிலாக இளைஞர்களை வேலைவாய்ப்புக்களில் திறமையான ஒருங்கிணைக்கும் நடவடிக்கை தொகுப்புக்களை கொண்டுவரும் முடிவை எடுத்துள்ளதாக" நேற்று காலை சிராக் அறிவித்தார். புதிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி அதிக தகவல்கள் இதுகாறும் வெளிவரவில்லை; ஆனால் பாதகமான நிலைமையில் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முன்வரும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் மற்றும் உதவித்தொகைகள் உட்பட சில நடவடிக்கைகள் வரும் எனத் தெரிகிறது. பயிற்சிக்கால வேலைகளும் பொதுவாக குறைவூதியப் பணி இருக்கும் துறைகளான உணவு விடுதிகள், செவிலியர் துறை ஆகியவற்றில் கொடுக்கப்பட உள்ளன.

வேலைவாய்ப்பு மற்றும் சமூக நல்லிணக்க துறை மந்திரியான Jean-Louis Borloo -ன் கருத்தின்படி இத்தகைய சீர்திருத்தங்கள் 2006ம் ஆண்டில் அரசாங்கத்திற்கு 150 மில்லியன் யூரோக்கள் (US$ 182 மில்லியன்), செலவைக் கொடுக்கும் என்று தெரிகிறது. இந்த சிறிய தொகையே அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளின் பெயரளவுத்தன்மைக்கு சான்றை அளிக்கிறது.

இருக்கும் வேலைப் பாதுகாப்புக்களில் மாற்றம் கொண்டுவராமல் இளைஞர்களுடைய வேலைவாய்ப்புக்கு உந்துதல் கொடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வரும் எனக் கூறப்படுவதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. சிராக்கும், தொழிற்சங்கங்களும் இணைந்து இன்னும் கூடுதலான சட்டத்தை CPE யின் அடிப்படை தன்மையை ஒட்டிய வகையில் கொண்டுவரக்கூடும் எனக் கருதுவதற்கு இடமுள்ளது. தொழிற்சங்கங்களுடன் மூடிய கதவுகளுக்கு பின் நடந்த பல நாட்கள் விவாதத்திற்கு பின்னர்தான் அரசாங்கத்தின் நேற்றைய அறிவிப்பு வந்துள்ளது; தொழிற்சங்கங்களோ, முதலாளிகளுடனும் அரசாங்கத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பு தருவதாகத்தான் பலமுறையும் வலியுறுத்தி வந்துள்ளன.

அனைத்து முக்கிய பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் இணைந்துள்ள ஐரோப்பிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (European Trade Union Confederation) கடந்த மாதம் ஐரோப்பாவின் முக்கிய வணிக அமைப்புக்கள் UNICE உட்பட பலவற்றுடன் "சமூக உச்சிமாநாடு" ஒன்றை நடத்தியது. "ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூக மாதிரி நவீனப்படுத்தப்படுவதற்கு", மற்றும் EU வின் லிஸ்பன் மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கு தமது ஆதரவு கிடைக்கும் என்று தொழிற்சங்கங்கள் உறுதியளித்தன; பிந்தையதில் வணிக ஆதரவுடைய வரிவெட்டுக்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு, ஓய்வூதிய பிரிவுகளின் சீர்திருத்தம் மற்றும் உழைப்பு சந்தை வளைந்து கொடுக்கக் கூடிய தன்மையை உயர்த்துதல் ஆகியவற்றிற்கான திட்டங்கள் உள்ளன.

CPE ஐ போன்ற ஏனைய ஒரு தொடர் நடவடிக்கைகளை பிரெஞ்சு அரசாங்கம் தக்க வைத்துக் கொண்டுள்ளது; இவற்றின் இலக்கு பிரெஞ்சு வணிகத்திற்கு தொழிலாளர் செலவினங்களை குறைப்பதும், இளந்தொழிலாளர்களை சுரண்டுவதை தீவிரப்படுத்துவதும்தான். புதிதாக வேலைக்கு வருவோருக்கான ஒப்பந்தம் (CNE) என்பது 20 தொழிலாளர்களுக்கும் குறைவானவர்களை கொண்டுள்ள நிறுவனங்களின் முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களை முதல் இரண்டு ஆண்டு வேலைக்காலத்தில் எக்காரணமும் இன்றி பணிநீக்கம் செய்யும் உரிமையை இன்னும் கொண்டுள்ளது.

CPE-ன் ஒரு கூறுபாடாக இருக்கும் --- சமவாய்ப்பு சட்டம் என்று கூறப்படும் இச்சட்டத்தின் மற்றய பிரிவுகளும் அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பினால் இதேபோல் பாதிப்பிற்கு ஆளாகவில்லை. பாரிசின் வறிய புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கலகங்களுக்கு பதில்நடவடிக்கையாக அரசாங்கத்தால் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டம் சமவாய்ப்பு சட்டமாகும். இதன்படி 14 வயது நிரம்பியவர்கள் முழுநேர பயிற்சி வேலைக்கு நியமிக்கப்படலாம் என்றும், 15 வயதானவர்கள் இரவு பணியில் ஈடுபடுத்தப்படலாம் என்றும், வேலையற்ற இளைஞர்களுக்கு போலீஸ், இராணுவ பயிற்சி கொடுக்கப்படலாம் என்றும், பல தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் தாய்மார்களுக்கான சமூக நலன்கள் பறிக்கப்பட்டு விடும் என்றும் உள்ளது.

இவை எதுவுமே தொழிற்சங்க, மாணவர்கள் சங்கத் தலைவர்களை சிராக், வில்ப்பனுடைய அறிவிப்பிற்கு ஒப்புதல் கொடுப்பதை தடுத்து நிறுத்திவிடவில்லை. UNL எனப்படும் பள்ளி மாணவர்கள் சங்கத்தின் தலைவரான Karl Stoeckel, "ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மக்கள் எழுச்சிக்கு, வரலாற்றுரீதியான வெற்றி" என்று அறிவித்துள்ளார். "அரசாங்கம் இறுதியில் உணர்ந்துகொண்டது, நாங்கள் திருப்திகொண்டுவிட்டோம் என்று நாங்கள் கூறலாமென்று நான் நினைக்கிறேன்." என்று பல்கலைக் கழக சங்கமான University student union Confédération Étudiante இன் தலைவர் Julie Coudry, மாணவர்கள் வேலைநிறுத்தங்களும், பள்ளி, பல்கலைக்கழக முற்றுகைகளும் முற்றுப்பெற்றுவிடும் என்றும் கூறினார்.

இவ்விதமான கருத்துக்களை கொண்டுதான் தொழிற்சங்க தலைவர்களும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். FO (தொழிலாளர் சக்தியின்) Jean-Claude Mailly CPE "மடிந்து, புதைக்கப்பட்டுவிட்டதாக" கூறியதுடன் "இலக்கு அடையப்பட்டுவிட்டது" என்றும் கூறியுள்ளார். CGT இன் Bernard Thibault, CPE எதிர்ப்பு இயக்கம் "வெற்றி கொண்டுவிட்டதாக" அறிவித்துள்ளார்; மே முதலாம் தேதி வெற்றி தினமாகக் கொண்டாடப்படும் என்றும் கூறினார்.

இரு பெரும் பல்கலைக்கழக, உயர்நிலைப்பள்ளி சங்கங்களான UNEF, FIDL இரண்டும் சற்று தயக்கத்துடனேயே உள்ளன. பல பல்கைல்கழகங்களின் மாணவர்கள் சிராக்கின் அறிவிப்பை தொடர்ந்தும், முற்றுகைகள் தொடரவேண்டும் என்று வாக்களித்தனர்; இந்த இரண்டு சங்கங்களும் கணிசமான அளவில் கீழிருந்து அழுத்தத்திற்கு உட்பட்டவை என்ற உண்மை நிரூபணம் ஆகிறது. ஏப்ரல் 11 அன்று நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்றும் CNE, மற்றும் சமவாயப்புச் சட்டத்தின் சில பிரிவுகளும் அகற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளன.

12 தொழில்துறை, மாணவர், பள்ளி மாணவர் சங்கங்களின் குழு அமைப்பான Intersyndicate திங்களன்று இரவு கூடியபோது செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது; ஆனால் CNE திரும்பப் பெறவேண்டும் என்று கோர மறுத்துவிட்டது.

இப்படி தம்மைத் தாமே பாராட்டிக் கொள்ளுதல் இருந்தாலும், CPE திரும்பப் பெறப்படுவதின் உடனடி அரசியல் விளைவானது பிரெஞ்சு அரசியல் ஸ்தாபனத்திற்குள் தீவிர வலதுசாரி கூறுபாடுகள் வலுப்படுவதுதான். எல்லாவற்றிற்கும் மேலாக உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசி வலுவடைகிறார். தொழிற்சங்கங்கள்தான் இதற்கு நேரடிப் பொறுப்பை கொள்ள வேண்டும்; ஏனெனில் CPE க்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அவைதான் சார்க்கோசியுடன் ஒத்துழைத்தன.

பிரான்சிற்குள்ளும், ஐரோப்பாவிலும், அண்மைய நெருக்கடியில் இருந்து முக்கிய நன்மை பெற்றவர் மிகப் பெரிய அளவில் சார்க்கோசிதான் என்று அறியப்பட்டுள்ளார்; அடுத்த ஆண்டு தேர்தலில் கோலிச UMP இன் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்துக்கு இவர்தான் பெரிதும் விரும்பப்படுவார்.

CPE யின் மீது சொந்த முறையில் பெரும் நம்பகத்தன்மையை காட்டியதால், வில்ப்பன் இப்பொழுது ஒரு நொண்டிவாத்து என்று கருதப்படுகிறார். சமீபத்திய கருத்துக் கணக்கின்படி, பிரதம மந்திரிக்கான ஆதரவு 25 சதவிகிதம் என்று சிராக்கிற்கு இருப்பது போல் உள்ளது. "வியப்பான நிலைமையும், பல இளைஞர்களின் திகைப்பும் நான் விரைவில் செயல்பட விரும்ப வைத்தன" என்று நேற்று கசப்புடன் ஓர் உரையில் அவர் குறிப்பிட்டார். "இச்சட்டம் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை; அதற்கு நான் வருத்தப்படுகிறேன்" என்றார்.

பிரான்சிலுள்ள மிகப் பிற்போக்கான உணர்வுகளை தூண்டி ஒரு தளத்தை பலப்படுத்தும் முயற்சியில் சார்க்கோசி ஈடுபட்டுள்ளார். குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகள் கடினமாக்கப்பட்டுள்ள வகையில் புதிய பாசிச தேசிய முன்னணி ஆதரவாளர்களுக்கு அவர் நேரடி அழைப்புக்களை வெளியிடுகிறார்; ஒரு வலுவான "சட்டம், ஒழுங்கு" பராமரிப்பவர் என்ற தோற்றத்தைக் காட்டி தன்னுடைய ஆளுமையை பெருக்கிக் கொள்ள முற்பட்டுள்ளார்; இதனால் இடைவிடாமல் போலீசார், மற்றும் சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புக்களுடன் புகைப்படங்களை வெளியிடுகிறார். CPE ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போலீசாரை அவர் நேரடியாக இயக்கியுள்ளார்; இது டஜன் கணக்கானவர்களை காயப்படுத்தியதுடன் ஆயிரக்கணக்கானவர்களை கைதும் செய்துள்ளது.

பிரான்சில் நிலைகொண்டுள்ள சமூகப் பாதுகாப்புக்கள், வேலைப்பாதுகாப்பு நெறிகள் "உடைக்கப்பட வேண்டும்" என வெளிப்படையாக மிகவும் வாதிடுபவர்களில் சார்க்கோசியும் ஒருவராவார். அமெரிக்க முறையில் "தடையற்ற சந்தை" சீர்திருத்தங்கள் வரவேண்டும் என்பதற்கு ஆதரவை தெரிவித்துள்ளார். CPE பிரச்சினையில் வில்ப்பனிடம் அவர் கொண்டுள்ள கருத்து வேறுபாடுகள் சட்டத்தின் பொருளுரையின் அடிப்படையில் அல்ல; மாறாக தொழிற்சங்கங்களின் ஆதரவை முன்னரே வில்ப்பன் கேட்கவில்லை என்பதில்தான். மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்கு உதவும் பொருட்டு தொழிற்சங்கங்களை பயனுள்ள வகையில் அரசாங்கக் கருவிகளுடன் இணைக்கும் ஒரு பெருநிறுவன முன்மாதிரியை சார்க்கோசி விரும்புகிறார் .

பிரான்சில் உள்ள தொழிற்சங்கங்களும் மற்றும் ஐரோப்பா முழுவதிலுமே, நீண்ட காலமாக ஆளும் உயரடுக்குகளின் ஆக்கபூர்வமான "சமூகப் பங்களிகள்தாம்" தாங்கள் என்பதை காட்டிக்கொள்ளப் பாடுபட்டுள்ளன. சார்க்கோசியுடனான அவர்களுடைய பிணைப்பு தற்செயல் நிகழ்வோ, பொருத்தமற்றதோ அல்ல. பிரான்சில் இருக்கும் தொழிலாளர்களுடைய ஊதியங்கள் மற்றும் நிலைமைகளை போட்டி மிக்க உலகந்தழுவிய முதலாளித்துவ அமைப்பிற்குள்ளே தக்க வைத்துக்கொள்ளுவது இயலாத செயல் என்று தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ வர்க்கத்துடன் ஒப்புகொண்டுள்ளனர்.

தொழிற்சங்கங்கள் மற்றும் ஆளும் உயரடுக்குகள் இரண்டையும் எதிர்கொண்டுள்ள பிரச்சினை சுதந்திர சந்தைச் சீர்திருத்தத்திற்கு தொழிலாளர்கள் காட்டும் எதிர்ப்பை எப்படி முறியடிப்பது என்பதுதான். பல தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும், சார்கோசியின் கீழ் ஒரு சர்வாதிகார அரசாங்கத்தை தங்களுடைய சலுகைகள் நிறைந்த நிலைமையை அச்சுறுத்தும் தொழிலாளர் வர்க்கத்தின் மேலும் கூடுதலான கிளர்ச்சி எழுச்சிகளை தடுப்பதற்கான செயல்திறமுள்ள வழிவகை என்றே ஐயத்திற்கிடமின்றி கருதுகின்றனர்.

மேலும் சார்க்கோசியின் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு மற்றும் "சட்டம் ஒழுங்கு" கொள்கைகளானது தொழிற்சங்க தலைமையின் சில பிரிவுகளிடமே கூடுதலான பரிவுணர்வைக் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. அதிகாரத்துவத்தின் முக்கிய அதிகாரிகள் பலரும் மத்தியதர கீழ்மட்டப் பிரிவில் இருந்து வந்தவர்கள்; இவர்களுக்குத்தான் சார்க்கோசி அழைப்பு விட்டுள்ளார்; பல தொழிற்சங்க அதிகாரிகள் பிரெஞ்சு ஸ்ராலினிச பேரினவாத மரபுகளில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

இன்னும் கூடுதலான "சுதந்திர சந்தை" நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தலைமை தாங்குவதற்கு தயாரிப்பு செய்துகொண்டிருப்பதாக சார்க்கோசி ஏற்கனவே குறிப்புக் காட்டியுள்ளார். Nouvel Observateur இன் கருத்தின் படி, சிராக் CPE பற்றி அறிவிப்பு கொடுத்ததற்கு பின்னர், "பிரான்சை நவீன மயப்படுத்த தேவையான மேலும் கூடிய சீர்திருத்தங்கள்" பற்றி விவாதிக்க சார்க்கோசி மே 15ம் தேதி UMP இன் மூத்த பிரதிநிதிகளை ஒரு கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மற்றய மந்திரிகளும் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த தங்கள் உறுதியைக் குறித்துள்ளனர். Le Monde இடம் நேற்று Jean-Louis Borloo, அரசாங்கம் தொழிலாளர் சந்தை வளைந்துகொடுக்கப்படும் தன்மை பற்றி இன்னும் விரிவான விவாதங்களை நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

"நாங்கள் சமூகப் பங்காளிகளுடன் [அதாவது, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் கூட்டமைப்பு], வேலை ஒப்பந்தங்களின் நீதிமன்ற வகைப் பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றி, ஊதியம் பெறுவோருக்கு மட்டும் அல்லாமல் வேலைகொடுப்போருக்கும் பாதுகாப்பு பற்றி விவாதிக்க இருக்கிறோம்" என்றார். இருதரப்பினருக்கும் இணைந்து முழுமையாக்கும் உத்திரவாதங்களுடன் அதனை இணைப்பதன் மூலம் ஒருவர் வளைந்து கொடுக்கும் தன்மை பற்றி கேள்வி எழுப்பக்கூடும்."

தொழிற்சங்கங்களை போலவே, "இடது" அரசியல் கட்சிகளும் அராசங்கத்தின் நேற்றைய அறிக்கைக்கு விடையிறுக்கும் வகையில் அது தொழிலாளர்கள், இளைஞர்களுக்கு பெரும் வெற்றி எனக் கூறின. சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (Ligue Communiste Revolutionnaire) அனைத்துமே சிராக்-வில்ப்பன் அரசாங்கம், மிகப்பெரிய பலவீனத்தையும், ஒதுக்கப்பட்ட தன்மையையும் பெற்றிருந்தாலும்கூட, CPE நெருக்கடிக் காலம் முழுவதும் அதிகாரத்தில் இருத்திக்கொள்ளத்தான் பாடுபட்டன. இப்பொழுது அரசாங்கத்தின் வலதுசாரி தாக்குதல்கள் மக்கள் அழுத்தத்தால் மட்டுமே தோற்கடிக்கப்பட முடியும் என்ற பொய் தோற்றத்தை வளர்க்கின்றனர்; உண்மையில் மக்கள் இயக்கத்தின் முதல் கோரிக்கை சிராக்-வில்ப்பன் அரசாங்கம் அகற்றப்பட வேண்டும் என்றே இருந்தது.

அந்த அடிப்படையில்தான் ஒரு சிறிய நிதிய தன்னலக்குழுவின் நலன்களுக்கு பாடுபடும் அரசாங்கம் என்பதற்கு மாறாக, உண்மையில் தொழிலாளர்கள், இளைஞர்களுடைய நலன்களை பிரதிபலிக்கும் ஒரு புதிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட முடியும். முக்கியமான பணி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நடைமுறைக் கட்சிகளில் இருந்து முறித்துக் கொள்வதும் புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் கட்சியை கட்டியமைப்பதும் ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved