World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Crisis deepens over government's "First Job Contract" legislation

பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்த" சட்டம் பற்றிய நெருக்கடி தீவிரமடைகிறது

By WSWS reporters
3 April 2006

Back to screen version

ஜனாதிபதி ஜாக் சிராக், கோலிச அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்த" (சிறிணிContrat première embauche) சட்டத்தை பிரகடனப்படுத்தியதை அடுத்து பிரான்ஸ் முழுவதும் மாணவர்களுடைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வார இறுதியில் நடைபெற்றன. மக்களுடைய பெரும் எதிர்ப்பு மற்றும் ஏராளமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இருந்தபோதிலும், ஜனாதிபதி, பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுக்கு ஆதரவு கொடுத்து இளந் தொழிலாளர்கள் வேலையில் சேர்ந்துள்ள முதல் இரண்டு ஆண்டுகளில் எக்காரணமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார்.

வெள்ளி மாலை சிராக்கின் தொலைக்காட்சி உரைக்குப்பின், நாடு முழுவதும் நகரங்களிலும் பேரூர்களிலும் எதிர்ப்புக்கள் வெடித்தெழுந்தன. பாரிசில் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான Elysee Palace ற்கு அணிவகுத்துச் செல்ல கிட்டத்தட்ட 5,000 இளைஞர்கள் முற்பட்டபோது அவர்கள் கலவரத்தடுப்பு போலீசால் நிறுத்தப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள், "பொது வேலைநிறுத்தம், வில்ப்பனே இராஜிநாமா செய், சிராக்கை சிறையிலடை" என்று கோஷமிட்டனர். சோர்போனில் பாரிஸ் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்த கலவரத் தடுப்பு போலீசார் மாணவ ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது கண்ணீர்ப் புகையை எறிந்தனர். கிட்டத்தட்ட 100 பேர் கைது செய்யப்பட்டதாக நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

பல நகரங்களிலும் பேரூர்களிலும் மாணவர்கள் சனி, ஞாயிறு தினங்களில் சாலைகளையும் இரயில் பாதைகளையும் தடை செய்துவிட்டனர்; இன்னும் கூடுதலான வகையில் தேசிய நெடுஞ்சாலைகளை, இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் பொதுக் கட்டிடங்கள் ஆகியவை ஆக்கிரமிப்பிற்கும் தடைக்கும் உட்படும் என்பதற்கான திட்டங்களை மாணவர்கள் அறிவித்துள்ளனர். "ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் தேவையான செயலை செய்யவில்லை; எனவே எங்கள் எதிர்ப்பு முறையை மாற்றும் தேவை வந்துள்ளது." என்று உயர்நிலைப் பள்ளி மாணவர் சங்க (l'Union Nationale Lycéenne), தலைவரான Karl Stoeckel, இன்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிபூனுக்கு தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களும் மாணவர்களும் நாளை ஒரு தேசிய வேலைநிறுத்த மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தினமாக நிகழ்வுகளை கொள்ளுவர். பெரும்பாலான மக்கள் பங்கு பெறும் இந்த நடவடிக்கையில் 3 மில்லியன் மக்கள் பங்கு பெறக்கூடும் என்றும் கடந்த செவ்வாய் வந்த கூட்டத்தைவிட அதிகமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

20 மில்லியன் மக்களுக்கும் மேலானவர்கள் ---கிட்டத்தட்ட அனைத்து தொலைக்காட்சி பார்ப்போரில் 90 சதவிகிதத்தினர்-- சிராக்கின் உரையைக் கேட்டனர். Le Parisien நடத்திய கருத்துக் கணிப்பின்படி ஜனாதிபதியின் உரை நம்பத்தக்கதாக இருந்தது என்று நான்கில் ஒரு பங்கினர்தான் தெரிவித்தனர்.

CPE ஐ பொறுத்தவரையில் சிராக்கும், வில்ப்பனும் உண்மையான சலுகை எதையும் கொடுக்கத் தயாராக இல்லை. இளந் தொழிலாளர்களின் "பரீட்சார்த்த காலத்தை" இரண்டு ஆண்டுகளில் இருந்து ஓராண்டாகக் குறைக்கத் தயார் என்று ஜனாதிபதி கூறியுள்ளது CPE யில் மற்ற முக்கிய கூறுபாடுகள் அனைத்தையும் மாறுதலுக்குட்படுத்தா உறுதியைத்தான் காட்டியுள்ளது. இவர் திட்டமிட்டுள்ள மற்ற மாறுதல்களின்படி வேலைகொடுப்போர் நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அதற்கான காரணத்தை கொடுப்பர் என்பதை கொண்டுள்ளது; ஆனால் இந்த விளக்கம் வாய்மொழிமூலம் கொடுத்தால் போதும் என்று உள்ளது. இந்த நடவடிக்கை MEDEF என்னும் முதலாளிகளின் அமைப்புத் தலைவர் Laurence Parisot இடம் இருந்து பெரும் பாராட்டுதலை பெற்றுள்ளது.

அரசாங்கம், இச்சட்டம் பற்றிய விவாதத்தை, திருத்தங்கள் பற்றியதை சட்டமன்றத்தில் விவாதிக்கலாம் என்று உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசி மற்றும் ஆளும் கட்சியான UMP யின் மற்ற உறுப்பினர்கள் மூலம் தொழிற்சங்கங்களுக்கு தெரிவித்துள்ளது. மூத்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் அரசாங்கம் CPE ஐ திரும்ப பெறும்வரை வில்ப்பனை சந்திக்க மறுத்துள்ளனர். சார்க்கோசி கொண்டுள்ள புதிய இடைத்தரகர் பங்கானது தொழிற்சங்கங்கள் நிபந்தனையற்று சரணடையவேண்டும் என்று வடிவமைக்கப்பட்டது.

பல தொழிற்சங்கங்கள், தாங்கள் பங்கு பெறுவதில் ஆர்வம் உடையதாக இருப்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளன. "தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துபவர் பிரதம மந்திரியாக இல்லாமல், UMP கட்சியின் பிரதிநிதிகள் ஆவர்; இவர்களிடத்து நாம் சட்டம் கைவிடப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்க François Chérèque கூறியுள்ளார். தொழிலாளர்கள் சக்தி (FO) அமைப்பின் தலைவரான Jean Claude Mailly "பாராளுமன்ற பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கான வாய்ப்பை மறுக்கப்போவது இல்லை" என்று கூறியுள்ளார். நிர்வாகத்தின் சங்கங்களான CFTC, CFE-CGC ஆகியவற்றின் அதிகாரிகளும் இதேபோன்ற அறிக்கையைத்தான் வெளியிட்டுள்ளனர்.

அரசாங்க பிரதிநதிகளை சந்திப்பதற்கான தொழிற்சங்கங்களின் விருப்பம் CPE எதிர்ப்பு இயக்கத்தை தனிமைப்படுத்தி இறுதியில் ஒடுக்கிவிடும் அவர்களுடைய உறுதிப்பாட்டைத்தான் மீண்டும் விளக்கிக்காட்டுகிறது. ஆரம்பத்தில் இருந்தே அவர்களுடைய அக்கறை இயக்கம் சிராக்-வில்ப்பன் நிர்வாகத்திற்கு எதிராக ஒரு பெரும் வெளிப்படையான போராட்டமாக வளருவதை தடைசெய்துவிட வேண்டும் என்பதுதான்.

தொழிற்சங்கங்களை போலவே, நடைமுறையில் உள்ள பிரெஞ்சு "இடதுகளும்" ஆளும் உயரடுக்கினருக்கு தங்கள் வலிமையையும் விசுவாசத்தையும் காட்டுவதில் முனைப்புடன் உள்ளன. சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சியினர் மற்றும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR) உட்பட 11 அமைப்புக்கள் "Riposte Collective" என்னும் "கூட்டாக விடையிறுக்கும் குழுவை" நிறுவி, பிரெஞ்சு அரசிற்கு அடிபணிந்து நிற்பதில் தங்கள் முயற்சியை ஒருங்கிணைத்துச் செயல்படுகின்றன.

இந்தக் கூட்டுக் குழு, ஜனாதிபதி உரைக்கு சற்று முன்னே கூடி "தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் பாராளுமன்றத்தின்முன் மீண்டும் இப்பிரச்சினையை கொண்டுவரவும் CPE ஐ திரும்பப்பெறுமாறு உறுதியான உளப்பூர்வமான வேண்டுகோள் ஒன்றை ஜாக் சிராக்கிற்கு விடுத்தது.

சனிக்கிழமை காலை இக்குழு சிராக்கின் அறிவிப்பான CPE க்கு ஒப்புதல் கொடுத்துள்ளது பற்றி ஒரு கூட்டு விடையிறுப்பை தயார் செய்திருந்தது. "பொது நலன், அக்கறை பற்றி சிராக் நன்கு அறிந்திருக்கவில்லை என்றும் இயக்கத்தில் பிளவுகளை ஏற்படுத்த அவர் முயல்கிறார் என்றும், அவருடைய கொள்கைகளை சுமத்த முற்படுகிறார் என்றும் இளைஞர்கள் மற்றும் பெரும்பாலான மக்களுடைய அபிலாஷைகளுக்கு செவிமடுக்காது பின்வாங்குகிறார் என்றும் அவர்கள் அறிவித்தனர். மேலும் எரியும் நெருப்பை இவ்வாறு தூண்டிவிடுவதன் மூலம் அவர் நாம் கடந்து கொண்டிருக்கும் சமூக நெருக்கடியை பெரிதாக்கிவிடக் கூடும்" என்றும் அவர்கள் அறிவித்தனர்.

11 அமைப்புக்களும் நாளை நடக்க இருக்கும் தேசிய நடவடிக்கை தினத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதுடன், ஆர்ப்பாட்டங்களின் பொழுது ஒரு கூட்டறிக்கையையும் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளன.

உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள், கூட்டம் முடிந்த பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி (PCF) நிர்வாகக் குழு உறுப்பினரான Brigitte Dionnet ப் பேட்டி கண்டனர். அரசாங்கத்தை வீழ்த்தும் இலக்கை கொண்ட காலவரையற்ற பொதுவேலை நிறுத்தத்திற்கான அழைப்பை விடுக்க கம்யூனிஸ்ட் கட்சி ஏன் மறுத்துவிட்டது என்று WSWS கேட்டது. "ஒரு காலவரையற்ற பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு கொடுப்பது ஒன்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பணி அல்ல" என்று Dionnet பதிலளித்தார்: "தொழிற்சங்கங்கள் இதைச் செய்யவேண்டும்; அதன் பின்னர் மக்கட் திரட்டிற்கு தேவையான ஆதரவை நாங்கள் அளிப்போம்; தொழிற்சங்கங்கள் கொண்டுவரும் முன்மொழிவுகளுக்கும் ஆதரவு கொடுப்போம்" என்றார் அவர்.

பொது வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு தொழிற்சங்கப் பிரச்சினை அல்லாமல் ஓர் அரசியல் பிரச்சினையாகும் என்று உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டவுடன், இவ்வம்மையார் கூறிய பதிலாவது: "ஆம். ஆனால் ஒரு பட்டனை தட்டி விட்டால் முடிவுகள் எடுக்கப்பட்டுவிடலாம் என்று நாங்கள் நம்பவில்லை; எனவே மக்களை அணிதிரட்டுவதை விரிவுபடுத்துதற்கு போராடவும் வாதிடவும் தொடர்ந்து செயலாற்ற உள்ளோம். தொழிலாளர்கள் விரும்பினால், அவர்கள் அதை செய்யட்டும்; நாங்கள் அதற்கு ஆதரவைக் கொடுப்போம்."

தலைமேயேற்று வழிநடத்தாமல் பின்பற்றுவதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கா என்று WSWS ஆல் கேட்கப்பட்டதற்கு, அவ்வம்மையார் கூறியதாவது: "இல்லை, நாங்கள் பின்பற்றத்தான் செய்கிறோம் என்று பொருளில்லை; ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான பொறுப்பு பகுதி உள்ளது; எங்கள் பரப்பை நாங்கள் ஊன்றிக் கொள்ளுவோம்."

பல நெருக்கடிக் காலங்களில் பிரான்சில் முதலாளித்துவ ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து உறுதியாக்கும் பொறுப்பை பல நேரமும் கொண்டுள்ள தன்மை நீண்ட காலமாகவே ஸ்ராலினிஸ்டுகளுக்கு உள்ளது. 1936லும், 1968லும் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ளேயே புரட்சிகர கிளர்ச்சி எழுச்சிகள் ஏற்பட்டபோது, அவை கம்யூனிஸ்ட் கட்சியினால் அடக்கப்பட்டு காட்டிக் கொடுக்கவும் பட்டுவிட்டன. 1920 களில் கட்சி நிறுவப்பட்ட போது கொண்டிருந்த சர்வதேச மற்றும் சோசலிச கொள்கைகளை நீண்டகாலத்திற்கு முன்னரே அது கைவிட்டுவிட்டது.

தற்போதைய நெருக்கடி இளந்தொழிலாளர்களின் நிலைமைகள்மீது அரசாங்கம் கொண்டுள்ள தாக்குதலால் தூண்டிவிடப்பட்டுள்ளது; ஸ்ராலினிஸ்டுகள் இவ்வியக்கத்தை தொழிற்சங்கம் வழியே திசைதிருப்ப பல முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்; அதையொட்டி தங்களுடைய 2007 தேர்தல் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கலாம் என்ற கருத்தும் அவர்களுக்கு உண்டு. ஒருகாலத்தில் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் ஆதிக்கம் நிறைந்த அரசியல் சக்தியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, ஏராளமான உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் பல ஆண்டுகளாக இழந்து வருகிறது; தற்பொழுது அது ஒரு அதிகாரத்துவ கூடு என்றுதான் கூறப்படலாம். கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான Robert Hue மொத்த வாக்குகளில் 3.4 சதவிகிதத்தைத்தான் பெற்றார்.

LCR பிரதிநிதியான François Sabado உடனும் WSWS உரையாடிற்று. Sabado கட்சியின் அரசியல் குழுவின் உறுப்பினராக இருப்பதுடன் LCR இணைந்துள்ள சர்வதேச அமைப்பான ஐக்கிய செயலாளர் குழுமம் (United Secretariat) அமைப்பின் நிர்வாகக் குழுவிலும் பணியாற்றுகிறார். CPE எதிர்ப்பு இயக்கம் எவ்வாறு தொடரப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டதற்கு அவர் கூறிய விடையாவது, "நாம் சில நாட்களாகவே உறுதியான பொது வேலைநிறுத்தம் வேண்டும் என்றுதான் அழைப்புக் கொடுத்துள்ளோம். LCR க்குள் எங்களுடைய இலக்கு CPE -ஐ திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்; நாங்களும் சிராக், சார்க்கோசி, வில்ப்பன் இன்னும் பலரும் இராஜிநாமா செய்யவேண்டும் எனக் கோருகிறோம்."

இதன்பின்னர் சபடோவை ஏன் LCR கூட்டு விடையிறுப்புக் குழுவின் மூலம் சிராக்கிற்கு உளப்பூர்வே வேண்டுகோளை, அதாவது அத்தகைய எந்த வேண்டுகோளும் திசைதிருப்பும் முயற்சி என அறிவித்த மறுநாளே, வெளியிட முன்வந்தது ஏன் என WSWS கேட்டதற்கு, அவர் கூறியதாவது: "நாங்கள் நடவடிக்கையில் ஐக்கியத்தை விரும்பினோம்; அனைத்து இடதும் ஐக்கியத்துடன் திரண்டு நிற்கவேண்டும்; அதுதான் முக்கியமாகும். நேற்று சிராக் பேசினார்; உண்மையில் நாங்கள் சிராக்கை சட்டத்தை பிரகடனம் செய்யவேண்டாம் என்றுதான் கேட்டுக் கொண்டோம். அவ்வளவுதான் கூறமுடியும்." WSWS இடம் இருந்து மேலும் கேள்விகளை Sabado நிராகரித்து விட்டார்.

சபடோ தவிர்க்கும் வகையில் நடந்து கொண்டமை, CPE எதிர்ப்பு இயக்கத்தில் துரோாகத்தனமான பங்கை கொண்டிருப்பதை குறிப்பதாகும். அவர்களுடைய பொதுப் பிரதிநிதிகள் மக்களை திருப்திப்படுத்தும் வகையில் வேலைநிறுத்தம், அரசாங்கத்திற்கு எதிராக திரளுதல் போன்றவற்றை செய்யும் அதேவேளை, அவர்கள் தொழிலாள வர்க்கத்தை பிரெஞ்சு அரசின் தளைகளில் கட்டுவதற்கும் தொழிலாளர்கள், இளைஞர்களும் ஒரு சுயாதீனமான சோசலிச முன்னோக்கை வளர்ப்பதை தடைசெய்யவும் ஸ்ராலினிஸ்டுகளுடனும் சமூக ஜனநாயகவாதிகளுடனும் தோளோடு தோள்சேர்ந்து வேலை செய்கின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved