World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: President Chirac enacts "First Job Contract" legislation

பிரான்ஸ்: ஜனாதிபதி சிராக் "முதல் வேலை ஒப்பந்தத்தை" சட்டமாக்குகிறார்

By Rick Kelly and Antoine Lerougetel
1 April 2006

Back to screen version

அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" (CPE) தான் ஒப்புதலை அளிக்கப் போவதாக பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் நேற்று அறிவித்துள்ளார். இச்சட்டத்திற்கு மிகப்பெரும் மக்கள் எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை இருந்தபோதிலும், CPE ஐ தொடர இருப்பதாக சிராக் கொண்டுள்ள முடிவு அரசியல் ஸ்தாபனம் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுடன் ஒரு மோதலுக்கு தயார் செய்து கொண்டிருப்பதை குறிக்கிறது.

இளந் தொழிலாளர்களை முதல் இரண்டு ஆண்டுகள் பணிகாலத்தில் எவ்வித காரணமும் இன்றி பணிநீக்கம் செய்யும் அதிகாரத்தை CPE முதலாளிகளுக்கு கொடுத்துள்ளது. நேற்று இரவு ஒரு தொலைக்காட்சி அறிவிப்பில், வேலை நிலைமைகளில் அரசாங்கத்தின் தாக்குதலானது வேலையற்ற இளைஞர்களுக்கு உதவும் என்று கூறும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடைய கூற்றை சிராக் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். "நிலைமையை சீராக்குவதற்கு நியாயமான, அறிவார்ந்த முதல் தேவையான தேசிய நலனை கருத்திற் கொண்டு செயல்பட வேண்டிய நேரம் வந்துள்ளது. தேசிய நலன் சம்பந்தப்படும்பொழுது எத்தரப்பிற்கும் தோல்வியோ வெற்றியோ இல்லை."

சிராக் உண்மையான சலுகைகள் எதையும் அளிக்கவில்லை. சட்டத்தின் சில கூறுபாடுகள் சற்று மாற்றப்படும் என்று முன்பு வில்ப்பன் கூறியதைத்தான் சிராக்கும் தெரிவிக்கிறார்; மேலும், "ஓர் ஒப்பந்தத்தை முடிவிற்கு கொண்டுவரும்போது, இளந் தொழிலாளர் காரணங்களை தெரிந்து கொள்ள முடியும் என்ற விதி புதிய சட்டத்தில் சேர்க்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார். வேறுவிதமாகக் கூறினால் நிறுவனங்கள் ஏதேனும் பணிநீக்கத்திற்கு ஒரு விளக்கம் கொடுக்க முடிந்தால், இன்னும் இளந்தொழிலாளர்களை காரணமின்றி பணி நீக்கம் செய்ய முடியும். முன்மொழியப்பட்ட தக்கவாறு சரிசெய்தல்கள் பாராளுமன்றத்தினால் ஒப்புதலளிக்கப்படக்கூடிய மேலதிக சட்ட வடிவத்தை எடுக்கும். CPE வடிவமைக்கப்பட்டது இப்பொழுது சட்டமாக ஆகிறது.

தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் சங்கங்களை "சமூகப் பங்காளிகள்" என்று ஜனாதிபதி குறித்துள்ளார். "அவர்களுடைய பொறுப்புணர்வு பற்றி நான் அறிவேன். அவர்களையும் பல்கலைக்கழக, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அமைப்புக்களுடைய பிரதிநிதிகளையும் பேச்சு வார்த்தைகளுக்கு வருமாறும், இப்புதிய சட்டத்தின் விரிவாக்கத்தில் முழுப்பங்கு பெறுமாறும் கேட்டுக் கொள்ளுவேன்." என்று அவர் அறிவித்தார்.

உள்துறை மந்திரியான நிக்கோலா சார்க்கோசி தன்னுடைய முழு ஆதரவை சிராக்கின் அறிவிப்பிற்கு கொடுத்துள்ளார். "இந்த முடிவை நான் வரவேற்கிறேன்; இது UMP பிரதிநிதிகள் பெரும்பாலோருடைய விருப்பத்தை ஒத்துத்தான் இருக்கிறது" என்று அவர் கூறினார். இதற்கு முன் வில்ப்பன் பற்றிக் கூறிய விமர்சனங்கள், CPE இன் சில கூறுபாடுகளை பற்றிக் கூறிய விமர்சனங்கள் இவற்றை கருத்திற்கொண்டு பார்க்கும்போது சார்க்கோசியின் ஜனாதிபதிக்கான இந்த ஆதரவு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. சார்க்கோசியும் வில்ப்பனும் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் UMP வேட்பாளராக போட்டியிடுவதில் எதிராளிகள் ஆவர்.

CPE மீதான அரசாங்கத்தின் ஒற்றுமையான போக்கு ஆளும் உயரடுக்கு எதிர்கொண்டுள்ள பொதுநிலையின் பிரதிபலிப்பாகும். பிரான்சில் தற்போதுள்ள "சமூக மாதிரி அமைப்பை" தக்க வைத்துக் கொள்ளுவது ஆளும் வர்க்கத்தால் இனி இயலாததாகும்; எனவே அது முறையான வகையில் இரண்டாம் உலகப் போருக்கு பின் தொழிலாள வர்க்கம் பெற்றுள்ள சமூக வெற்றிகளை தகர்த்து கொண்டு வருகிறது. பிரெஞ்சு முதலாளித்துவத்தின் சர்வதேச போட்டித்தன்மையை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், இலாபக் குவிப்பு மற்றும் தனியார் சொத்துக் குவிப்பு இவற்றிற்கு எதிராக உள்ள அனைத்து தடைகளும் தகர்க்கப்படுகின்றன.

அரசாங்கத்தை பொறுத்தவரையில், அதன் திட்டத்திற்கு எவ்வித மக்கள் எதிர்ப்பும் நெறியற்றதாக கருதப்படுகிறது. தங்கள் சமூகப், பொருளாதார சீர்திருத்தங்கள் பெரும்பாலான மக்களுடைய விருப்பத்தை பிரதிபலிக்க வேண்டும் என்ற கருத்துருவை சிராக்கும் வில்ப்பனும் நிராகரித்துள்ளனர். அரசியல் ஸ்தாபனம் வெளிப்படையாக ஜனநாயக விரோதப் போக்கின் வகையில்தான் இப்பொழுது செயல்பட்டு வருகிறது; பெரும்பாலன மக்களுடைய நலன்களுக்கு எதிராக நிதி ஆதிக்கமுடைய சிலரை கொண்ட சிறிய அடுக்கின் ஆணைகளை அது செயல்படுத்தி வருகிறது.

பிரெஞ்சு தொழிலாளர்களும் இளைஞர்களும் கடந்த மாதம் முழுவதும் தொடர்ச்சியான பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன், தங்கள் உயர்நிலை பள்ளிகளையும், பல்கலைக் கழகங்களையும் முற்றுகை இட்டுள்ளனர். மார்ச் 18 அன்று தேசிய நடவடிக்கை தினத்தன்று மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்களுடன் இணைந்து நின்றனர்; கடந்த செவ்வாயன்று 2 மில்லியனுக்கும் மேலான வேலைநிறுத்த தொழிலாளர்களும் இளைஞர்களும் பிரான்ஸ் எங்கிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த தேசிய வேலைநிறுத்தம் கடந்த இரு தசாப்தங்களிலேயே மிகப் பெரியது ஆகும்.

பாரிசிலும் ஏனைய நகரங்களிலும் சிராக்கின் தொலைக்காட்சி உரையை எதிர்த்து, அதற்கு பின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Bordeaux ல் இளைஞர்கள் "சிராக்கே, ராஜிநாமா செய்", "திருப்தியடையும் வரை பொது வேலைநிறுத்தம்" என்ற கோஷங்களை எழுப்பினர். பாரிசில் மாணவர்கள் Place de la Bastille யில் இருந்து சிராக்கின் அதிகாரபூர்வ இல்லம் வரை அவருடைய உரையை கண்டித்த வண்ணம் ஊர்வலம் சென்றனர்.

கடந்த மாதம் வெளிவந்த ஒவ்வொரு கருத்துக் கணிப்பு அறிக்கையும், CPE க்கும் மகத்தான எதிர்ப்பையும், சிராக்கிற்கும் வில்ப்பனுக்கும் எதிராகப் பெருகி வரும் விரோதப் போக்கையும் விளக்கிக்காட்டியது. Figaro இதழில் வெளிவந்த சமீபத்திய கருத்துக் கணிப்பு, வில்ப்பனுக்கான ஆதரவுப் புள்ளி 29 சதவிகிதம்தான், சிராக்கிற்கான ஆதரவுப்புள்ளி 20 சதவிகிதம் தான் என்று காட்டியுள்ளது. கணக்கெடுக்கப்பட்டவர்களில் 78 சதவிகித்தினர் தாங்கள் ஜனாதிபதியை நம்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய வலுவற்ற, ஒதுக்கப்பட்ட நிர்வாகம், CPE க்கு எதிரான மக்கள் இயக்கத்தை மோதும் திறனைக் கொண்டிருப்பதாக உணர்வது என்பது, தொழிற்சங்கங்களோ "இடது" எனப்படும் கட்சிகளோ தங்களுடைய ஆட்சிக்கு எதிராக சவால்விட மாட்டார்கள் என்ற சிராக் மற்றும் வில்ப்பனின் நம்பிக்கையைத்தான் குறிப்பிடுகிறது.

பிரெஞ்சு "இடது" அமைப்புக்களான தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தீவிர இடது எனப்படும் குழுக்கள் அனைத்துமே CPE எதிர்ப்பு இயக்கம் தோற்றுவித்துள்ள நெருக்கடிக்கிடையில் அரசாங்கத்தை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. இந்த அமைப்புக்கள் அனைத்தும் வெகுஜன இயக்கம் அரசாங்கத்தை வீழ்த்தும் இயக்கமாக வளர்ந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளன. ஆரம்பத்தில் இருந்தே, அவர்களுடைய அக்கறை அரசாங்கத்தின் உறுதித் தன்மையையும், பிரெஞ்சு முதலாளித்துவத்தின் உறுதித் தன்மையையும் பாதுகாக்க வேண்டும் என்றுதான் உள்ளது.

சிராக்கின் உரைக்கு தொழிற்சங்கங்கள், மற்றும் இடது கட்சிகளின் விடையிறுப்பில் மேலோக்கி இருக்கும் கருத்து ஜனாதிபதி இன்னும் பொறுப்பான முறையில் நடந்து கொள்ளவில்லை என்ற வருத்தத்தை காட்டியிருக்கிறது. "சமூக அமைதியை நாடி நாம் சென்று கொண்டிருக்கவில்லை என்றுதான் அஞ்சுகிறேன்." என்று சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான Francois Hollande அறிவித்தார். "இலக்கை புரிந்து கொள்ள சிராக் தவறிவிட்டார் என்று நான் நினைக்கிறேன்; நிலைமையை அவர் அமைதியாக்கி இருக்க வேண்டும்; மக்களிடம் நீதி மற்றும் சமரசத்துடைய தன்மையுடன் அணுக வேண்டிய தேவையைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். இவ்விதத்தில் நாம் அச்சத்தைத்தான் எதிர் நோக்க வேண்டியுள்ளது."

தொழிற்சங்கத் தலைவர்களும் இதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். சிராக்கின் உரைக்கு முன்பு Force Ouvrier தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரான Jean-Claude Mailly, ஜனாதிபதி CPE சட்டத்தை கைவிட்டு, திட்டமிட்டுள்ள தொழிலாளர் சந்தை சீர்திருத்தம் பற்றி ஒரு புதிய பாராளுமன்ற விவாதத்தை மேற்கொள்ளத் தயாராக இருந்தால் அடுத்த செவ்வாயன்று நடக்கவிருக்கும் தேசிய வேலைநிறுத்தத்தை கைவிடத் தயாரென்று கூறியுள்ளார்.

"இடது" கட்சிகள் அரசாங்கத்திற்கு முன் பரிதாபகரமாக வணங்கி நிற்பது நேற்று காலை, சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட், பசுமைக் கட்சிகள் மற்றும் LCR உட்பட, 11 அமைப்புக்கள், CPE ன் சட்டநெறித்தன்மைக்கு அரசியலமைப்பு ஒப்புதல் கொடுத்ததற்கு பதில் கூறும் வகையில் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் நன்கு புலனாயிற்று.

சிராக்கின் தேசிய உரைக்கு முன்னர் வெளிவந்த அறிக்கை ஜனாதிபதியிடம் மிகத் தாழ்ந்த முறையில் முறையீடு செய்ததற்கு ஒப்பாயிற்று. "அரசாங்கத்தின் பிடிவாதம், அரசாங்கத்தின் உறுப்பினர்களுடைய ஆத்திரமூட்டல் அறிக்கைகள் பலமுறையும் வந்தமை ஆகியவை பொறுப்பற்றது என்பதுடன் சூழ்நிலையை நச்சுப்படுத்தவும் செய்துள்ளன. நிர்வாகம் சிறப்பு நலன்களுக்கும், உட்பூசல்களுக்கும் தேசிய நலனுக்கும் மேலாக முன்னுரிமை கொடுத்துள்ளது.... அமைப்புக்களும் இடது கட்சிகளும் உளப்பூர்வமாக ஜாக் சிராக்கிடம் CPE ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றன; அதுதான் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்து பிரச்சினையை மீண்டும் பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு எளிமையாக்கும் செயல் ஆகும். அவருடைய 2002 தேர்தலில் இருந்து அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டால், இச்சட்டத்தை அவர் பிரகடனப்படுத்தினால், பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது போல் ஆகிவிடும். அதிகாரத்தை செயல்படுத்துவதில் துஷ்பிரயோகம் செய்வதைத்தான் அது வெளிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை."

இப்படிப்பட்ட சிறிதும் நேர்மையற்ற அறிக்கை தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே பெரும் பிரமையை விதைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது ஆகும். "பொறுப்பாகவும்", "தேசிய நலனை கருத்திற் கொண்டும்" நடந்து கொள்ளுமாறு சிராக்கிற்கு முறையிடப்பட்டுள்ளது; நிர்வாகத்தின் தொழிலாள வர்க்க விரோத தாக்குதலுக்கு இவர்தான் முக்கிய தூண்டுகோலாக இருப்பவர் என்பதை மறைத்து, ஏதோ அவர் நடுநிலை ஆட்சியாளராக இருப்பது போன்ற தோற்றத்தை இவ்வறிக்கை கொடுத்துள்ளது.

இக்கூட்டறிக்கையில் சிராக்கின் 2002 தேர்தலில் இருந்த "அசாதாரணத் தன்மைகள்" பற்றிய குறிப்பு கவனிக்கத்தக்கது ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய முன்னணியின் ஜோன் மரி லூ பென் ஐ எதிர்த்து இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் அவர் நின்றபோது, அனைத்து "இடது" கட்சிகளும் சிராக்கின்பின் அணிவகுத்து நின்றிருந்தன. ஜனநாயகத்தின் காப்பாளர் என்று இவரை வளர்த்து அவருக்கு இறுதி வாக்குகளில் 82 சதவிகிதத்தைப் பெற்று தந்ததற்கு ஈடாக அவர் ஏதேனும் கொடுக்க வேண்டும் என்று "இடது" கட்சிகள் இன்னும் விரும்புகின்றன, நம்புகின்றன. ஆனால் 2002 லேயே உலக சோசலிச வலைத் தளம் ஜனநாயக விரோத வாக்கெடுப்பை தீவிரமான முறையில் தொழிலாளர் வர்க்கம் புறக்கணிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தபொழுது எச்சரித்திருந்ததுபோல், வலதுசாரித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை துரிதப்படுத்துவதற்கு சிராக் தன்னுடை வெற்றியை பயன்படுத்தியுள்ளார்.

LCR, 11 "இடது" அமைப்புக்கள் நடத்தும் இழி செயல்களில் கொண்டுள்ள பங்கு குறிப்பிடத்தக்க வகையில் இகழ்விற்கு உரியதாகும். "முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி" என்று தன்னை அழைத்துக் கொள்ளும் LCR, ஏன் ட்ரொட்ஸ்கிசக் கட்சி என்று கூட கூறிக் கொள்ளும் அமைப்பு அரசியல் ஸ்தாபனத்தின் மக்கள் முன்னணி இடது பிரிவு ஒன்றைத் தழுவி CPE எதிர்ப்பு இயக்கம் பிரெஞ்சு அரசாங்கத்தை சவால்விடும் இயக்கமாக மாறிவிடக் கூடாது என்பதில் தீவிர நாட்டம் கொண்டுள்ளது. இவ்வமைப்பின் முற்றிலும் அவநம்பிக்கைத் தன்மை கடந்த புதனன்று LCR வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் நன்கு நிரூபணம் ஆகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "ஜா. சிராக்கிற்கு முறையிடுவது என்பது CPE எதிர்ப்பை பரந்த அளவிற்கு ஆக்கும் முயற்சிக்கு உதவாத வகையில் இருக்கும், திசை திருப்பும் முயற்சி" ஆகும். 24 மணி நேரம் கழித்து கட்சியின் மூத்த தலைவர் Alain Krivine ஜனாதிபதிக்கு "உளப்பூர்வ முறையீட்டில்" இணைக் கையெழுத்து இட்டார்.

பிரெஞ்சுத் தொழிலாளர்களும் இளைஞர்களும் CPE க்கு எதிரான அரசாங்கத்தின் வலதுசாரித் திட்டத்திற்கு எதிரான தங்களுடைய போராட்டங்களில் சிராக்-வில்ப்பனை வீழ்த்துவதற்கு போராடாமல் முன்னேற்றத்தை காண முடியாது. தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அரசியல் ஸ்தாபனத்தின் தாக்குதல் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நலன்களை உண்மையில் பிரதிபலிக்கும் அரசாங்கத்தை நிறுவுதல் மூலம்தான் தோற்கடிக்கப்பட முடியும். அத்தகைய அரசாங்கம்தான் உண்மையான சமூக சமத்துவத்தை நிறுவுவதின் அடிப்படையில் சமூக பொருளாதார வாழ்வை சீரமைக்கும் முயற்சியை கொள்ளும். ஜனநாயக முறையில் திட்டமிடப்படும் பொருளாதாரம், சர்வதேச அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டு இயங்கும்போது சமுதாயத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பாதுகாப்பான, கெளரவமான வேலை வாய்ப்பினை வழங்கும்.

தொழிலாள வர்க்கம், அதன் திவாலான சீர்திருத்தவாத, தேசிய "இடது" அதிகாரத்துவத்தில் இருந்து முற்றிலும் முறித்துக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் புதிய சுயாதீனமான, புரட்சிகரமான தலைமையை வளர்த்தெடுப்பதற்கு போராட வேண்டும்; அது போராட்டங்களை முன்னோக்கி இட்டுச் செல்லும் திறனைக் கொண்டிருக்கும். இந்த முன்னோக்குத்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினாலும் அதன் அன்றாட இணைய பதிப்பான உலக சோசலிச வலைத் தளத்தாலும் முன் வைக்கப்பட்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved