World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Answer the French government/corporate offensive against workers with socialist internationalism

தொழிலாளர்களுக்கு எதிரான பிரெஞ்சு அரசாங்க/பெருவணிக தாக்குதலுக்கு, சோசலிச சர்வதேசியத்தால் விடையிறு

Statement of the WSWS Editorial Board
4 October 2005

Back to screen version

பிரெஞ்சு தொழிற்சங்கங்களும் இடது கட்சிகளும் வேலைநிறுத்தங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கொண்ட தேசிய நடவடிக்கை தினம் ஒன்று அக்டோபர் 4ம் தேதி நடைபெறுவதற்கு அழைப்பு விடுத்துள்ளன. அந்த நடவடிக்கை ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் ஆகியோரின் தொழிலாளர்களின் உரிமைகள்மீதான தாக்குதல்கள், சமூகநலப் பணிகள் குறைப்பு, தனியார்மயமாக்குதல் மற்றும் ஊதியக் குறைப்புக்கள் ஆகியவை உள்ளடங்கலான "சுதந்திர சந்தை" கொள்கைகளை எதிர்த்து இயக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வினியோகிக்கப்படவிருக்கும் துண்டுப்பிரசுரத்தின் பொருளுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய தாராளவாத தாக்குதல்களுக்கு எதிராக போராட விழையும் தொழிலாளர்கள் அவர்களுடைய உரிமைகளை அழிப்பதற்கு எதையும் நிறுத்தாத அரசாங்கத்திற்கு எதிராக எழ வேண்டும். இந்த அரசாங்கத்தையும், அரசியல் நிறுவனத்தில் உள்ள அதன் கூட்டுக்களையும் தோற்கடிக்கக்கூடிய திறனுள்ள ஒரு புதிய அரசியல் முன்னோக்கு அவர்களுக்கு தேவைப்படுகிறது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த படகின் மாலுமிகள், மற்றும் அவர்களுக்குத் துணையாக இருந்த அலுவலர்கள் ஆகியோரிடம் இருந்து Pascal Paoli படகின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள, செப்டம்பர் 28 காலை இராணுவ ஹெலிகாப்டர்கள் GIGN சிறப்புப் படைகளின் கொமாண்டோ வீரர்களை சுமந்து வந்த காட்சியில் இந்நிலைமை அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

நிராயுதபாணிகளான படகுத் தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தின் தனியார் மயமாக்குதலை எதிர்த்தும், தாங்கள் வேலையிழப்பிற்கு உள்ளாகக் கூடாது, தங்கள் உரிமைகளும், நிலைமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், முற்றிலும் முறையான வகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அதில் இராணுவத் தலையீட்டை கொண்டு வருவது என்பது புதிய தாராளவாத நடவடிக்கைகளை சுமத்துவதில் ஒரு புதிய கட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. பிரதம மந்திரி வில்ப்பனால் உத்தரவிடப்பட்டு, ஜனாதிபதி சிராக் மற்றும் உள்துறை மந்திரி நிக்கோலா சார்கோசியின் ஒப்புதலையும் கொண்டிருக்கும் இந்நிகழ்வானது எந்த அளவிற்கு முதலாளித்துவ வர்க்கமும் அரசும், தங்களுடைய உரிமைகள் அழிக்கப்படுவதை எதிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிலாளர்களின் எதிர்ப்புக்களை தோற்கடிக்க தயாராகவுள்ளனர் என்பதை காட்டுகிறது.

Marseilles துறைமுகமும் மூடப்பட்டு இருப்பினும், போராட்டத்திற்கு துறைமுக தொழிலாளர்களுடைய பரந்த ஆதரவு இருப்பதோடு படகுத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான CGT (General Confederation of Labour - தொழிலாளர் பொது கூட்டமைப்பு), மற்றும் கோர்சிகன் தேசிய STC (Corsical Workers Union - கோர்சிக தொழிலாளர் சங்கம்) இரண்டும், ஏற்கனவே ஒரு சமரசத் தீர்வை காண முற்பட்டுள்ளன; இதில் தனியார்மயமாக்குதலும், தொழிலாளர்களை குறைப்பதும் உள்ளடங்கும்.

CGTஇன் Bernard Thibault, மற்றும் FSU வின் Gerard Ascheien இருவரும் 2003ம் ஆண்டில், ஓய்வூதிய பாதுகாப்பிற்காக நடந்த வேலைநிறுத்த இயக்கத்தை நெரித்து, தடுத்ததற்கான பங்கினையும், அதற்காக ஜனாதிபதி சிராக் மற்றும் ஆட்சிப் பணித்துறை மந்திரி பிரான்சிஸ் பிய்யோன் இருவராலும் அவர்கள் புகழப்பட்டதையும் தொழிலாளர்கள் மறந்துவிடக் கூடாது.

சாதாரண குடிமக்களை அவர்கள் ஏதோ அந்நிய விரோதிகளை நடத்துவது போல் இராணுவம் நடத்துவது என்பது பூகோளமயமாக்கப்பட்ட முதலாளித்துவத்தின் பொது இயல்பாக மாறிக்கொண்டிருக்கிறது; இதில் இலாபம் பெறுவதற்குத் தடையாக எது இருந்தாலும், அது கண்ணியமான ஊதியங்கள், சமூகநலப் பணிகள் என்றிருந்தாலும் கட்டாயம் அகற்றப்படவேண்டும் என்பதே அவர்களுடைய எண்ணமாகும்.

உலகில் மிகச் செல்வக்கொழிப்புடைய நாடு, பூகோளமயமாக்கல் சகாப்தத்தில், அனைத்து தேசிய ஆளும் செல்வந்த தட்டுகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் நாடு, கத்ரினா சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தை எதிர்கொள்ள முடியாமல் போனதில் இத்தன்மை கோடிட்டுக் காட்டப்படுகிறது.

நியூ ஓர்லியன்சில் ஏற்கனவே இருந்த சமூகப் பேரழிவுதான், கத்ரினாவின் மூலம் கொடுமையான முறையில் வெளிப்படுத்தப்பட்டது. அமெரிக்கா முழுவதும் குடியரசு, ஜனநாயக நிர்வாகங்கள் இரண்டினாலும் பல தசாப்தங்களாக சாதாரண மக்கள் நிலைமை, சமூக அடிப்படை கட்டுமானம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டதன் விளைவுதான் அது. பொதுமக்களுடைய, குறிப்பாக ஊனமுற்றவர்கள், ஏழைகள், சிறுபான்மையினர் ஆகியோருடையை கஷ்டங்கள் முழு ஆயுதமயமாக்கப்பட்ட படைகளால் அற்பமாக புறக்கணிக்கப்பட்டன.

அமெரிக்காவில் பத்து மில்லியன் கணக்கான மக்களால் எதிர்கொள்ளப்படும் சமூக இழப்புக்கள் மற்றும் இரு பெரும் கட்சிகளையும் கட்டுப்படுத்தும் செல்வக் கொழிப்பு உடைய தன்னலச் சிறுகுழுவிலிருந்து ஒரு கூலிக்காக உழைக்கும் பெரும்பாலான மக்களை பிரிக்கும் பரந்த இடைவெளியை,.முதலாளித்துவ அமைப்பின் ஆழ்ந்த நெருக்கடியின் மிக அடிப்படையான கூறுபாடுகளில் சிலவற்றை, சூறாவளி மேல்மட்டத்திற்குக் கொண்டு வந்து காட்டியது:

புஷ் நிர்வாகம் நியூ ஓர்லியன்ஸ் மக்களிடம் காட்டிய புறக்கணிப்பும், அலட்சிய போக்கும் ஈராக்கில் அமெரிக்கா நிகழ்த்தும் போரில் காட்டும் குற்றம் சார்ந்த தன்மை, பிறர் துயரில் இன்பம்காணும் தன்மை இவற்றைத்தான் பிரதிபலித்தன. ஈராக்கில் நிகழும் போர் இதுகாறும் 100,000 ஈராக்கியர்கள் உயிரையும், 2000க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்களின் உயிர்களையும் குடித்துள்ளது.

வலிமையை பயன்படுத்தி முக்கியமான இருப்புக்களையும் சந்தைகளையும் கைப்பற்றுவது என்பது செல்வந்தர்க்கு மாபெரும் வரிவெட்டுகளுக்காக அமெரிக்காவிற்குள்ளேயே சமூக நலத்திட்டங்களை அழித்தல், உண்மையான ஊதியங்கள்மீது தாக்குதல் நடத்துதல் என்பவற்றுடன் இணைந்து நடைபெறுகிறது. இது உள்நாட்டிலும் மற்றும் வெளியிலும் கொள்ளை என்ற கொள்கையாகும்.

அமெரிக்காவுடனும், சீனா மற்றும் இந்தியாவுடனும் வணிக, பொருளாதார, புவிசார்- மூலோபாயத்தில் போட்டியிடுவதற்கான ஐரோப்பிய வல்லரசுகளின் முயற்சிகளுக்கு கீழே அனைத்து தேசிய ஆளும் செல்வந்தத்தட்டுக்கள் மற்றும் அரசாங்கங்களின் தொழிலாளர் செலவினங்களை பெரிதும் குறைக்கும் இடையறா உந்துதல் அடிப்படையாய் இருக்கிறது.

பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகியவை அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு ஈரானுக்கு எதிராக அணு ஆற்றலை வளர்ந்தெடுப்பதற்கான அதன் உரிமைக்கு எதிராக தற்பொழுது ஒரு கூட்டான புவி சார் - மூலோபாய தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்த தூதரகமுறை மற்றும் அரசியல்வகை தாக்குதல் ஈராக்கிய மாதிரியில் இராணுவத் தலையீடு செய்வதற்கான தயாரிப்புக்களின் முத்திரைகள் அனைத்தையும் கொண்டுள்ளது. எண்ணெய், எரிவாயு இருப்புக்களில் கொழித்துள்ள இந்த மூலோபாய பகுதியை ஏகாதிபத்திய முறையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் இலக்கு ஆகும்.

Pascal Paoli இல் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை கடற்கொள்ளையர், கடத்தல்காரர்கள் அதாவது பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்ட முற்பட்டுள்ள அதிகாரிகளின் முயற்சி, புதிய தாராளவாத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை குற்றவாளிகள் ஆக்க வேண்டும், நாட்டை ஒரு போலீஸ் அரச நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பிரெஞ்சு அரசாங்கத்தின் விருப்பத்துடன் முற்றிலும் இயைந்துதான் காணப்படுகிறது.

லியோனல் ஜோஸ்பனுடைய, சோசலிசஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி ஆகியவற்றின் பன்முக இடது அரசாங்கத்தின் கொள்கையின் தொடர்ச்சியாகவே, வில்ப்பனுடைய அரசாங்கமும் சமூக உரிமைகள் மற்றும் பொதுநலப் பணிகள் மீதான தாக்குதலை அதிகப்படுத்திக் கொண்டு இருக்கிறது. நோயுற்றோர், வேலையற்றோர் மற்றும் முதியோர் ஆகியோர் கடுமையான பற்றாக் குறைகளை சமூகப் பாதுகாப்பில் (Sécurité Sociale) சந்திக்க வேண்டியுள்ளது; நாட்டின் வரவுசெலவுத் திட்டமானது, வீட்டு நெருக்கடிகள், தனியார் துறையில் இருக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகள், கல்வித்துறை, சமூக நலப் பணிகள் ஆகியவற்றிற்கு தக்க நிதி ஒதுக்கீடு செய்யவில்லை; தொழிலாளர்கள் அனைவரும் கூடுதலான நேரம் அதே ஊதியத்திற்காக வேலை செய்யவேண்டி உள்ளது என்பதோடு மட்டுமன்றி, அப் பணத்தின் வாங்கும் திறனும் குறைந்து கொண்டே வருகின்றது.

சார்க்கோசி, தன்னுடைய கட்சியின் இளைஞர் அமைப்பு கூட்டமொன்றில் செப்டம்பர் 3ம் தேதி உரையாற்றுகையில், பிரெஞ்சு முதலாளித்துவத்தின் உண்மையான நோக்கங்களை சுட்டிக் காட்டினார். "வளங்கள் மென்மையாய் பரவி நிரம்பும் ஒரு மாதிரிக்கு, இனியும் இடமிருக்காது, இனி உழைப்பு ஒன்றுதான் அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கும் ஒரு மாதிரி இருக்கும்.... குடியரசு அனைவருக்கும் ஒரேவிதமாகக் கொடுத்துவிடாது" என்று முன்மொழிந்து, தன்னுடைய இளைய ஆதரவாளர்களிடம் பிரெஞ்சு அரசியல், சமூக வாழ்வில் சமத்துவம் என்பது ஒரு கொள்கையாக இராது என்று அவர் வெளிப்படையாக நிராகரித்தார்.

இது, பிரெஞ்சு சமுதாயத்திற்குள் உள்ள மிகப் பிற்போக்கான, பின்தங்கிய சக்திகளுக்கான ஒரு அழைப்பாகும். தொழிலாளர்களுடைய உரிமைகளின் மீது இன்னும் ஆழ்ந்த முறையில் தாக்குதல் வேண்டும் என்று கூறப்பட்டதோடு மட்டும் அல்லாமல், வேலை கொடுப்போர், அரசு ஆகியவற்றின் அதிகாரங்கள் இன்னும் வலிமையாக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது; ஆனால் மேலும் முதலாளித்துவ அரசாங்கங்களால் பெரும்பாலும் கடமை மீறுதலில் கெளரவிக்கப்பட்ட பிரெஞ்சு குடியரசின் வரலாற்று முதுமொழியான "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்பதையும் மறுதலித்தது.

பிரெஞ்சுப் புரட்சியின் இந்த முதுமொழியில் இருந்து பிரெஞ்சு அரசியல் வாதிகள் வெளிப்படையாக முறித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் எதிர்ப்புரட்சி சக்தியையை திரட்ட வேண்டும், ஒருமித்த உணர்வுடன் அரசியலை நடத்தவேண்டும் என்ற உணர்வை கைவிட வேண்டும், முதலாளித்துவ ஜனநாயக முறையைக் கைவிட வேண்டும்; இவற்றிற்கு பதிலாக பலாத்கார முறையிலும் சர்வாதிகார முறையிலும் அரசாங்கத்தை இயக்க வேண்டும்.

நாஜிப் படையெடுப்பாளர்களுடன் 1940ல் இருந்து 1944 வரை ஒத்துழைத்த மார்ஷல் பிலிப் பெத்தன் (Phillippe Petain) இன் ஆட்சியே இத்தகைய முறையை கடைசியாக கையாண்டதாகும்.

சார்கோசியும், நீதித்துறை மந்திரியான கிளெமென்டும் அல்கொய்தா பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பற்றிய ஒரு இசிவுநோயை (Hysteria) ஊக்குவிக்கின்றனர்; இதற்கு காரணம் அரசின் ஒருதலைப்பட்ச அதிகாரங்களை அதிகமாக்குவதும், குடியுரிமைகள் மீது ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்துவதும்தான். மனித உரிமைகள் பிரகடனத்தின் கோட்பாடான "குற்றம் நடைபெறுவதற்கு முன் சட்டபூர்வமாக நிறுவப்பட்டு, வெளியிடப்பட்டு மற்றும் முறையாக செயல்படுத்தப்படாமல் சட்டத்தின் அடிப்படையில் எந்த நபரும் தண்டிக்கப்படக்கூடாது" என்பதை மீறும் வகையில் பிற்போக்கான சட்டங்களை இவர்கள் இயற்ற விரும்புகின்றனர். மக்கள்மீது கண்காணிப்பு நடத்துவதற்கு போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பரந்து, விரிவாக்கப்பட்டுள்ளன; இது புஷ் நிர்வாகத்தின், பிற்போக்குத்தனமான தேசபக்த சட்டத்தைத்தான் பின்பற்றும் வகையில் உள்ளது.

மாற்று இல்லங்கள் ஏதும் இல்லாத நிலையில், தக்க சமூகநல இல்லங்கள் இல்லாத நிலையில், மனிதன் வசிப்பதற்கு பொருத்தமில்லாத ஆபத்தான கட்டிடங்களில் தங்க வைப்பதற்காக, பாரிசில் வீடற்ற குடும்பங்களை, மிருகத்தனமான முறையில் சார்க்கோசியின் உத்தரவின்பேரில் வெளியேற்றியது, நியூ ஓர்லியன்சுக்கான மற்றொரு குறிகாட்டி ஆகும். கொடூரமான தீ விபத்துக்கள், மற்றும் 48 ஆபிரிக்கர்கள் இறந்தமை இரண்டும், சார்க்கோசியினால் சட்டத்திற்கு புறம்பாக குடியேறுவதால் ஏற்படுகின்றது எனக் கூறப்பட்டு குடியேற்றத்தின்மீது பெருகிய தாக்குதலுக்கு போலிக் காரணமும் ஆயின; இவை பல ஆண்டுகளாக, இடதுகளாயினும், வலதுகளாயினும் உள்ளூர் மற்றும் தேசிய அரசாங்க நிர்வாகங்களின் புறக்கணிப்பின் விளைவுகள் ஆகும்.

ஏராளமானவர்கள் வேலையில் இருந்து அகற்றப்படுதல் மற்றும் சமூக நலன்களை தகர்த்தல் என்பதற்கு விடையானது, முழு அரசியல் செல்வந்தத்தட்டு அதேபோல தொழிற்சங்கங்கள் இவற்றால் ஆதரிக்கப்படும் தேசிய பொருளாதாரத்திற்கு ஆதரவு என்பது அல்ல. அத்தகைய கருத்துருவின் பொருள் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் அமெரிக்க நாடுகடந்த கூட்டு நிறுவனமான Hewlett-Packard உடன் நிகழ்த்திய பேச்சுவார்த்தைகளில் தெளிவாயிற்று. பிரான்சில் 1,240 உட்பட, 6,000 தொழிலாளர்களை ஐரோப்பாவில் பணிநீக்கம் செய்வதாகவும், உலகம் முழுவதிலும் இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் பணிநீக்கம் நடைபெறும் என்றும் பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் அறிவிக்கப்பட்டது. நாடுகடந்த கூட்டு நிறுவனம் முழுவதிலும் பணிநீக்கம் கூடாது என்று போராடுவதற்கு பதிலாக, தொழிற்சங்கங்கள், அதன் திட்டமிடப்பட்ட பிரெஞ்சுப் பணியாளர்கள் குறைப்பு 15 சதவீதத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன; இந்த சதவீதம்தான், முன்மொழியப்பட்ட 25 சதவீதத்திற்கு பதிலாக ஏனைய ஐரோப்பிய நாடுகளில் செலவுரீதியாக அதன் தொழில்சீரமைப்பாக்கத்திற்காக கொண்டுவரப்படும் சராசரியாகும்.

எந்தவொரு தொழிற்சங்கமும் பணிநீக்கத்திற்கு எதிராக HP தொழிலாளர்களை சர்வதேச அளவில் ஒன்று திரட்டி போராடுவதற்கு முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை.

கடந்த 25 ஆண்டுகள், முன்னோடியில்லாத வகையில் பூகோள உற்பத்தியின் ஒருங்கிணைப்பு மற்றும் மிகப் பெரிய புதிய உற்பத்தி திறனின் அபிவிருத்தியை சீனா, இந்தியா போன்ற நாடுகளில் நாடுகடந்த நிறுவனங்களால் கொண்டுவரப்பட்டதை கண்டுள்ளது. மிகக் குறைவான சர்வதேச ஊதிய தரத்தை ஏற்படுத்தியதுடன் உலகம் முழுவதும் மூலதனம் எளிதில் இயங்கும் தன்மையானது, தொழிற்சங்கங்களின் செயல்பட்டை தீவிரமாக குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது; அவை உற்பத்தியில் தனியார் சொத்துரிமை அடிப்படையிலான இலாப அமைப்பு முறையின் இருப்பை, புறப்பாட்டுப்புள்ளியாக எடுத்துள்ளன மற்றும் அவை அமைப்பு ரீதியாகவும் வேலைத்திட்ட ரீதியாகவும் தேசிய அரசு அமைப்பினுள் வேரூன்றி உள்ளன. இப்பொழுதோ அவை, ஊதிய வெட்டுக்களை சுமத்தும் சர்வதேசரீதியாக போட்டிமிக்கதாக தொடர்ந்து இருத்தல் என்ற பெயரில் விரைவுபடுத்தலையும் பொறுப்பேற்கும், நிர்வாகத்தின் போலீஸ் படைக்கும் சற்று அதிகமானதாக ஆகியுள்ளன.

உலகின் ஏனைய பகுதியில் இருக்கும் மற்றய குறைந்த ஊதியத் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்தாது இருக்கும் பொருட்டு, ஆலைகள் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் மற்றும் ஆலைப் பணிகள் வெளிநாடுகளுக்கு கடல்கடந்து வேறு வடிவங்களில் கொடுக்கப்படலாம் என்ற அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுதற்கும், தொழிலாளர்கள் ஒரு முற்றிலும் புதிய அரசியல் முன்னோக்கினை -சோசலிச சர்வதேசியத்தை கட்டாயம் ஏற்க வேண்டும்: ஐரோப்பிய தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளை காத்துக் கொள்ளுவதற்கான ஒரே வழி சீன, இந்திய தொழிலாளர்களுடனான ஒரு கூட்டின் அடிப்படையில் மட்டுமே ஆகும், அவர்களுடனான போட்டியில் அல்ல, அந்தப்போட்டி முதலாளிகளுடைய நலன்களுக்குத்தான் பயனுள்ளதாக இருக்கும்.

பொருளாதார வாழ்வு பூகோளமயமாக்கப்படுதலானது, தற்போது ஒரு அச்சுறுத்தல் போல்தான் தோன்றுகிறது என்றாலும், மக்களுடைய அடிப்படை சமூகத் தேவைகளை, அதாவது கண்ணியமான வேலைகள், இல்லங்கள், கல்வி, சுகாதரத்திற்கு காப்பு, ஓய்வூதியங்கள் ஆகியவற்றை நிறைவு செய்யும் ஓர் உற்பத்திமுறையை அடிப்படையாக கொண்ட ஒரு புதிய பொருளாதார முறைக்கான ஒரு பொதுப் போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு மிகவும் சக்திவாய்ந்த அடிப்படையை கொடுத்துள்ளது.

மே மாதம் 29ம் தேதி பிரான்சில் நடைபெற்ற கருத்து வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று ஐரோப்பிய அரசியலமைப்பை நிராகரித்து அதற்கு எதிராக வாக்களித்தமை, மற்றும் பெரும்பாலான தொழிலாளர்கள், வேலையில்லாதோர் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜேர்மன் தேர்தல்களில் பிரதான அரசியல் கட்சிகளின் புதிய தாராளவாத தாக்குதல்களை நிராகரித்தமை ஆகியவை நலன்புரி அரசை தகர்ப்தற்கு, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

வாக்கெடுப்பின்போது "வேண்டாம்" வாக்கிற்காக பிரச்சாரம் செய்திருந்த இடது கட்சிகளும் அரசியல் வாதிகளும், தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் எதிர்ப்பை குறைப்பதற்காகத்தான் அவ்வாறு செய்தனர். அரசாங்கமும் சோசலிஸ்ட் கட்சியும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் போட்டிமிக்க தன்மையை பலவீனப்படுத்தும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை.

ஒருவேளை வலது சாரியினர் நிலைமையின் மீது கட்டுப்பாட்டை இழந்தால், மற்றும் தொழிலாள வர்க்கம் 40 ஆண்டு காலம் மித்திரோன் மற்றும் ஜோஸ்பனுடைய 5 ஆண்டு காலம் இவற்றுடன் கொண்டிருந்த தொடர்பில் இருந்து முறித்துக்கொண்டுவிடாமல் தடுப்பதற்கு, சோசலிஸ்ட் கட்சியில் இருந்த அதிருப்தியாளர்கள் (Fabius, Emmanuelli, Montebourg, Melanchon) அவர்களுடைய முன்னாள் பன்முக இடது கூட்டணியில் இருந்த பழைய பங்காளிகளான கம்யூனிஸ்ட் கட்சியினரால் ஆதரிக்கப்பட்டு, ஐரோப்பிய அரசியல் அமைப்பு சார்புடைய சோசலிஸ்ட் கட்சியின் பெரும்பான்மையுடன் மீண்டும் இணைந்து ஒரு பன்முக இடது திரும்புதல் ஒன்றை அமைக்க முற்படுகிறார்கள்.

தொழிலாள வர்க்கம் சுயாதீனமான இயக்கத்தை கொண்டுவருவதற்கு எதிரான ஒரு அரணாக போலி ட்ரொட்ஸ்கிச LCR இப்பொழுது "வேண்டாம்" பிரச்சாரத்தில் அவர்களுடன் ஒத்துழைத்த இந்த முன்னாள் ஒத்துழைப்பாளர்களுடன் ஒன்று சேர்ந்து கொண்டு ஒரு இடது கூட்டணியை ஒட்டுப்போடுகிறது. LCR ம் குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கினரான LO, PT இரண்டும் ஒருபோதும் இந்த சீரழிந்து விட்ட சக்திகளில் இருந்து கொள்கை ரீதியாக முறித்துக்கொள்ள விரும்பவே மாட்டார்கள்.

ஆனால் ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையிலான அத்தகைய முறிவுதான், முழு அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்புமுறையால் இணைந்து நடாத்தப்படும் தாக்குதலை சமாளித்து கடந்து வருவதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு மிகவும் தேவையானது ஆகும். இதுதான் உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் கட்சிகளின் பணியாகும்.

நாங்கள் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் எங்கள் வலைத் தளத்தை அன்றாடம் கூர்ந்து படிக்குமாறும், அதன் வளர்ச்சிக்கு பங்களிப்பு தருமாறும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியமைப்பதற்கான போராட்டத்தில் இணையுமாறும் அழைப்பு விடுகின்றோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved