World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

One-day general strike in India exposes need for socialist-internationalist strategy

இந்தியாவில் ஒரு நாள் பொதுவேலை நிறுத்தம் சோசலிச சர்வதேசிய மூலோபாயத்தின் அவசியத்தை வெளிக்காட்டுகின்றது

By Wije Dias, Socialist Equality Party presidential candidate
29 September 2005

Back to screen version

ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கம் செயல்படுத்திவரும் நவீன தாராளவாத கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பில் இந்தியாவில் அரசுப் பணிகளிலும், தனியார் துறைகளிலும் வேலையில் இருக்கும் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது முன்னணியில் உள்ள அதன் கூட்டாளிகளும் நாடாளுமன்றத்தில் தருகின்ற ஆதரவு வாக்குகளால் தொடர்ந்து ஆட்சியதிகாரத்தில் நீடித்துக்கொண்டிருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியானது, முதலாளித்துவ பூகோளமயமாதலினால் உருவாக்கப்பட்ட துயரங்களாலும், சமூக சீரழிவினாலும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட கடல் அலை போன்ற ஆவேசத்தினால் 16 மாதங்களுக்கு முன்னர் ஆட்சி அதிகாரத்திற்கு இட்டுச்செல்லப்பட்டது.

ஆனால் புதிய அரசாங்கம் முந்திய இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான முந்தைய கூட்டணி செயல்படுத்திய அதே வேலைத்திட்டத்தை வலியுறுத்தி முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. உயர்ந்துகொண்டே வருகின்ற பங்கு விலைகளின் உயர்வுகள் மற்றும் சமூக ஏற்றதாழ்வுகள் மற்றும் 325 மில்லியன் இந்தியர்கள் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைந்த வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதைப் பற்றிய பிஜேபியின் இந்தியா ஒளிர்கிறது என்ற கொண்டாட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தவிர்த்து வந்தாலும், அது பிஜேபி அளவிற்கு அதில் எந்த வகையிலும் குறையாத நிலையிலும், இந்தியாவை ஒரு மலிவுக் கூலி உழைப்பு புகலிடமாக உலக முதலீடுகளுக்கு மாற்றுவதிலும் மற்றும் அந்த அடித்தளத்திலிருந்து இந்திய முதலாளித்துவ வர்க்கம் இலாபங்களுக்காகவும் உலக அரங்கில் பூகோள அரசியல் செல்வாக்கிற்காகவும் போராட முடியும் என்பதிலும் உறுதியாக உள்ளது.

இந்தியா முழுவதிலும் குறுக்கும் நெடுக்குமாய் இன்றைய எதிர்ப்பிற்கான பாரிய ஆதரவானது இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் தங்களது அடிப்படை பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதுகாக்கும் ஒரு வழிமுறையை காண்பதற்கான அடிப்படை உந்துதலுக்கு ஒரு சான்றாகும்.

என்றாலும், இன்றைய எதிர்ப்பை முன்னின்று நடத்துவோர் --தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அதற்கெல்லாம் மேலாக சிபிஐ(எம்) தலைமையிலான இடது முன்னணி-- முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தை சுயாதீனமான அரசியல் சக்தியாக திரட்டுவதற்கும் சோசலிச மற்றும் ஜனநாயக கோரிக்கைகளுக்கான ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலம் அகில இந்திய உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் முன்னணிப்படையாக அதனை ஆக்குவதற்கும், பிடிவாதமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இன்றைய எதிர்ப்பை தொடக்கி வைப்பதில் அவர்களது நோக்கம், வளர்ந்துவரும் சமூக அதிருப்தியை தங்களது தலைமையின் பக்கம் சேணமிட்டு திருப்பி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துடன் திறமானவகையில் விலங்கிட்டு பிணைப்பதற்காகும்.

இன்றைய எதிர்ப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட தற்காலிக அங்கமான "தொழிற்சங்கங்களின் தேசிய பேரவையால்" ஏற்றுக்கொள்ளப்பட்ட 16 அம்சத் திட்டம் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் சில அவசர பிரச்சனைகளை எழுப்பியுள்ளது. தனியார்மயமாக்கல், ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்கள் நியமனம், முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நல சட்டங்களில் மாற்றம் இவற்றிற்கு எதிர்ப்பு, விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி மற்றும் வேலை, தர நிர்ணயம் மற்றும் சமூக நலன்கள் சிறிய நிறுவனங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் ஏற்றுமதி செயல்முறை மண்டலங்களில் பணியாற்றுகின்ற பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஏழைகளுக்கு உணவு வழங்கும் பொது விநியோக முறையை வலுப்படுத்துவது ஆகியவற்றுக்கு சட்டமியற்றலும் அமல்படுத்துதலும் இவற்றுள் அடங்கியுள்ளன.

ஆனால் அந்த பேரவையின் அரசியல் அணுகுமுறை பெருவர்த்தக காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அது விடுத்துள்ள வேண்டுகோளில் சுருக்கமாக ``உடனடியாக செயல்பாட்டு வழியில் மாற்றம் கொண்டுவர வேண்டும்`` என்று கூறப்பட்டிருக்கிறது. சிபிஐ(எம்)-ஐ பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஐந்து ஆண்டுகளுக்கு முழுமையாக பதவியில் நீடிப்பதற்கான தனது உள்நோக்கத்தை திரும்பத்திரும்ப அறிவித்திருக்கிறது மற்றும் வருகின்ற பீகார் மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடனும் சாதியவாத ராஷ்டிரிய ஜனதா தளத்துடனும் ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கியுள்ளது.

சர்வதேச மூலதனத்துடன் புதிய கூட்டு

இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் கடைபிடித்து வந்த தேசிய பொருளாதார வளர்ச்சி மூலோபாயம் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நொருங்கிவிட்ட நிலையை எதிர்கொண்ட இந்திய முதலாளித்துவ வர்க்கம், நரசிம்மராவ் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தின் மூலம் அதன் வர்க்க மூலோபாயத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தைச் செய்தது. இந்தியாவை உலக முதலாளித்துவ பொருளாதாரத்துடன் முழுமையாக இணைப்பதன் மூலமும் சர்வதேச மூலதனத்துடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதன் மூலமும், இந்திய பெருவர்த்தக நிறுவனங்களின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மூலோபாயத்திற்கு ஆதரவாக தேசிய பொருளாதார ஒழுங்குமுறை கைவிடப்பட்டது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்றுமதி சந்தைகளுக்கான போராட்டத்தில் இந்திய வர்த்தக நிறுவனங்களின் நிலையை தாங்கி ஆதரிக்கவும், இந்திய அரசாங்கங்கள் எல்லாம் திட்டமிட்டபடி அரசிற்கு சொந்தமான பெருநிறுவனங்களை தனியார்மயமாக்கின, அரசிற்கு சொந்தமான தொழிலில் வேலைவாய்ப்புக்களை குறைத்தன, பொது மற்றும் சமூக சேவைகளை வெட்டின, விலை ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் விவசாயப் பொருள்களுக்கான மானியங்களை குறைத்தன மற்றும் இன்னொரு வழியில் அரசாங்க செலவீனங்களை வருமான ஆதரவு நடவடிக்கைகளிலிருந்து பெருவர்த்தகத்தால் கோரப்பட்ட உள்கட்டமைப்பு செயல்திட்டங்களில் முதலீடு செய்வதற்கு மாற்ற முயற்சித்தன.

அண்மையில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் பெருகியிருப்பதிலும் இந்திய முதலாளித்துவ வர்க்கம் மகிழ்ச்சியில் திளைத்தாலும், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களது வாழ்க்கையானது என்றும்பெரிய பொருளாதார பாதுகாப்பற்ற நிலை மற்றும் கடும்துன்பத்தால் குறியிடப்பட்டு வருகின்றது.

தனியார்மயமாக்கல் மற்றும் ஒப்பந்தக் கூலிமுறை மூலம் வேலைகளை அழிப்பது மற்றும் வேலை நிறுத்தம் செய்கின்ற உரிமைகளை மற்றும் அரசியல் எதிர்ப்புக்களை தாக்கும் வரிசையான தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்குவது இவற்றுடன் தொழிலாள வர்க்கம் விட்டுக்கொடுக்காத முதலாளிகளின் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றது. இந்த தாக்குதலின் ஒரு அளவுகோல் கதவடைப்புக்களால் இழந்த மனித உழைப்பு நாட்களாகும். அதாவது வேலை நிறுத்தங்களோடு ஒப்பு நோக்குகையில் முதலாளிகளால் முன்னெடுக்கப்பட்ட பணி நிறுத்தங்கள் ஆகும். 2003 மற்றும் 2004-ல் வேலை நிறுத்தங்களால் ஏற்பட்ட மனித நாட்கள் இழப்பு 7.6 மில்லியனுடன் ஒப்பிடுகையில் கதவடைப்புக்களால் ஏற்பட்ட மனித நாட்கள் இழப்பு37.5 மில்லியன் ஆகும்.

கிராமப்புறங்களில், வேலையின்மை, வளர்ந்துவரும் கடன் சுமை மற்றும் மானியங்கள், விலை ஆதரவு மற்றும் சமூக நலத்திட்டங்களில் வெட்டு ஆகியவை, தலைவீத நுகர்வு நபர் வாரியான நுகர்வில் வீழ்ச்சி மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை உள்பட அதிகரிக்கும் அவலங்களை உருவாக்கியுள்ளன.

முதலாளித்துவ வர்க்கத்தின் குறிக்கோளான உலக வல்லரசு அந்தஸ்தை பெறுவதற்காக இந்தியா ஒரு பாரிய அளவிற்கு இராணுவத்தை பெருக்கிக்கொண்டிருந்தாலும், சுகாதார சேவைக்கான அரசாங்க செலவினம் மொத்த உள்நாட்டு வருவாயில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

மேற்கு வங்காளத்திலும், கேரளத்திலும் இடதுசாரி முன்னணியால் அமைக்கப்பட்ட அரசாங்கங்கள் உட்பட ஒவ்வொரு யூனியன் மற்றும் மாநில அரசாங்கமும் அவர்களது சீர்திருத்த வேலைத்திட்டங்களை கடைப்பிடித்து வருவதை எடுத்துக்கொண்டால், இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி "திக்கு மாற்றத்தை" செய்ய அழுத்தம் கொடுக்கப்படும் என்று கருத்துரைப்பது வெளிப்படையாய் அபத்தமான கருத்தாகும்.

உண்மையிலேயே இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சீர்திருத்தங்களின் வேகம் முடுக்கிவிடப்பட்டாக வேண்டும் என்று திரும்பத்திரும்ப வற்புறுத்தி வருகிறார். இன்றைய எதிர்ப்பிற்கான திட்டங்கள் வரையப்பட்டிருந்தபொழுதும், தொழில் தகராறுகள் சட்டம், ஒப்பந்த தொழிலாளர் (ஒழிப்பு மற்றும் நெறிமுறை) சட்டத்தையும், "உழைப்பு சந்தை நெகிழ்ச்சி தன்மை" என்ற பெயரால் திருத்துவதற்காக முன்மொழியும், பிரதமர் அலுவலகத்தால் வரையப்பட்டது என்று கூறப்படும் குறிப்பை, தொழிலாளர் நல அமைச்சகம் சுற்றுக்கு விட்டது என்றும் வெளிப்படுத்தப்பட்டது. இந்த முன்மொழிவுகளில் தொழிலாளர்களை கதவடைப்பு செய்வதற்கான கட்டுப்பாடுகளை இரத்து செய்வதும், பணிகளை ஒப்பந்த முறையில் உருவாக்குவதும் மற்றும் ஒரு நிறுவனம், தொழிலாளர் நலச்சட்டங்களின்படி செயல்படுகிறதா? என்று சான்றிதழ் தருவதை மாற்றி "தானே" அதாவது முதலாளிகளே நெறிமுறையை உருவாக்கிக்கொள்வதும் அடங்கியிருக்கிறது.

குறைந்தபட்ச பொது செயல்திட்டம் ஏமாற்று

அரசாங்கத்தின் நவீன தாராளவாத சீர்திருத்தவாத வேலைத்திட்டத்திற்கு பொது மக்களிடையே எதிர்ப்பு நிலவுவதை தீவிரமாக அறிந்திருக்கின்ற மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் வெகுஜனங்கள் மீது தங்களுக்குள்ள கவலையை உறுதியாக எடுத்துக் கூறுவதை ஒரு குறியாக கொண்டு, தங்களது குறியிலக்கு "சீர்திருத்தம் ஆனால் மனித முகத்துடன்" என்று கூறி வருகின்றனர்.

இந்த ஒரு கொடூரமான ஏமாற்றை கண்டிப்பதற்கு பதிலாக மற்றும் மூலதனத்தின் மீது அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிவிடுகின்ற மற்றும் சமூக வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் சந்தைப் பொருளாதாரத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கச் செய்யும் முதலாளித்துவ வேலைத்திட்டத்தோடு பரந்த மக்களின் தேவைகள் ஒன்றுக்கொன்று இணைந்து செல்ல முடியாதவை என்பதை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக, சிபிஐ(எம்) தலைமையிலான இடது முன்னணி, வெகுஜன நெருக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியை எளிதில் மசியவைக்க முடியும் என்ற பிரமைகளை உருவாக்குவதற்கு விடாமுயற்சியுடன் வேலைசெய்கின்றது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை அவர்கள் ஊக்குவித்து முன்னெடுத்தலால் இது எடுத்துக்காட்டுடன் நிரூபிக்கப்படுகிறது. தெளிவானவகையில் அரசாங்கத்தின் செயல்திட்டமான குறைந்தபட்ச பொது செயல்திட்டம் பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்வதற்கான அர்ப்பணிப்புடன் ஏழைகளுக்கு உதவுவதாய் சர்க்கரையை ஒத்த தெளிவற்ற சாக்கரின் வாக்குறுதிகளையும் சேர்த்துக் கொண்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி வெகுஜனங்கள் மீது தாக்குதல்களை என்றும் அதிகரித்துக் கொண்டிருப்பதையும், புஷ் நிர்வாகத்துடன் முன்பு இருந்ததைவிட நெருக்கமான உறவுகளை கடைப்பிடித்து வருவதையும் எதிர்ப்பதற்கு தொழிலாள வர்க்கத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராக அணிதிரட்டுவதற்கு இடதுசாரி முன்னணி வற்புறுத்தவில்லை, ஆனால் சீர்திருத்தங்களை ஆதரிக்கும் குறைந்த பட்ச பொதுசெயல்திட்டத்தை செயல்படுத்துவதில் அதற்கு நெருக்குதலைக் கொடுக்க ஒரு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.

இது சிபிஐ(எம்)-ஆல் அதன் வார இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் (People's Democracy) நடப்பு இதழின் ஆசிரிய தலையங்கத்தில், ``செப்டம்பர் 29-க்கு முன்னெடுத்துச் செல்வது`` என்பதில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சியில் நிலைத்திருப்பதற்கு இடதுசாரி அணி வாக்குகளை தந்து வருவதற்கும் ஒரு தேசிய எதிர்ப்பு தினத்தை ஏற்பாடு செய்திருப்பதற்கும் இடையில் ஒரு முரண்பாடு காணப்படுவதை சுட்டிக்காட்டியிருக்கும் முதலாளித்துவ ஊடகங்களில் வந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கின்ற வகையில் People's Democracy, ``இடதுசாரி கட்சிகளின் முடிவு ஒரு முரண்பாடு அல்ல என்பதுடன் உண்மையிலேயே அது ஹிறிகி அரசாங்கம் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை ஒரு அரசாங்கக் கொள்கையாக அது ஏற்றுக்கொண்ட பொழுது அதுதாமே கொடுத்த உறுதிமொழிகளில் பெரும்பகுதியை செயல்படுத்துவதற்கு அதன் மீது பொதுமக்களது நெருக்குதலை வலுப்படுத்துகிறது. சாசனத்தில் (தேசிய தொழிற்சங்கங்களின் பேரவையின்) எழுப்பப்பட்டுள்ள பெரும்பாலான கோரிக்கைகள் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன எனவே அவற்றை நேர்மையாக அவசரமாக செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்`` என்று அறிவிக்கிறது.

அந்தத் தலையங்கம், ``நாட்டின் எதிர்கால செல்வச் செழிப்பை பேணிக்காக்கின்ற மற்றும் நாட்டு மக்களது நலன்களில் அக்கறை கொண்ட அனைத்து இந்திய தேச பக்தர்களும், சிறந்த எதிர்கால இந்தியாவை உருவாக்குகின்ற இந்த நடவடிக்கையை ஆதரிக்க முன்வர வேண்டும்` என்று தேசியவாதத்தில் தோய்ந்திருக்கும் ஒரு வேண்டுகோளோடு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

சிபிஐ(எம்)-மும் தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் "பூகோளமயமாக்கல் செயற்பட்டியலை" எதிர்ப்பது எதுவரை என்றால், கடந்தகாலத்தின் தேசியளவில் நெறிமுறைப்படுத்தப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரத்தை தற்காத்து நிற்கும் கண்ணோட்டத்திலும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை காக்கும் நிலைப்பாட்டிலிருந்துந்தான். எனவேதான், இடதுசாரி முன்னணியின் அதிக இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை, அவற்றில் பல மூலோபாய ஆற்றல் துறையைச் சார்ந்தவை, அவற்றை விற்பனை செய்வது மற்றும் பாதுகாப்பு பிரிவை வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்துவிடுவது போன்ற நடவடிக்கைகளில் இடது முன்னணியின் சில விமர்சனங்களை பெருநிறுவன ஊடகங்களில் ஒரு கணிசமான பகுதியினர் பாராட்டியுள்ளதில் ஆச்சரியம் இல்லை.

இடது முன்னணியின் தேசியவாதம், மூலதனத்தின் பூகோள தாக்குதலுக்கு பதிலளிக்கின்ற வகையில், இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள், இந்த துணைக் கண்டம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களது போராட்டங்களோடு, ஆசியா மற்றும் பெரிய முன்னேறிய முதலாளித்துவ மையங்களான ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்க தொழிலாளர்களது போராட்டங்களோடு தங்களது போராட்டத்தை ஐக்கியப்படுத்திக்கொள்வதை தங்களது முதலாவது கொள்கையாக கட்டாயம் கொள்ளும், சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்திற்கு முற்றிலும் எதிர்த்து நிற்பதாகும்.

நிலவும் சமூக ஒழுங்கிற்கு ஒரு முண்டுகோல்

எப்போதுமே வழக்கமாக "கம்யூனிசம்" மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் "கம்யூனிச" செல்வாக்கிற்கும் எதிராக தனது ஆத்திரத்தை வெளிப்படுத்திவரும் இந்திய தீவிர வலதுசாரி பிஜேபி-யைத் தவிர இந்தியாவின் ஆளும் செல்வந்தத்தட்டினர் இன்றைய தேசிய வேலை நிறுத்தம் பற்றி அதிகம் ஒன்றும் சொல்லவில்லை. இதற்குக் காரணம் என்னவென்றால், இந்திய ஆளும் வர்க்கம் நீண்டகாலத்திற்கு முன்னரே சிபிஐ(எம்) மற்றும் இடதுமுன்னணியின் இதர ஆக்கக் கூறுகளை அளந்து மதிப்பீடு செய்து வைத்திருக்கிறது மற்றும் தற்போது இந்தியாவில் நிலவுகின்ற அரசியல் மற்றும் சமூக ஒழுங்கில் அவர்களை அவசியமான முண்டுகோலாக தெளிவாகவே உணர்ந்துகொண்டிருக்கிறது.

இந்த வகையில், செல்வந்தத்தட்டினரின் வர்த்தக வெளியீடான மெக்கன்சீ காலாண்டு இதழுடனான (McKinsey Quarterly) அண்மைய பேட்டியில் மன்மோகன் சிங்கால் வழங்கப்பட்ட கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளத்தக்கனவாகும். இந்தியாவில் தொழிலாளர் நலச் சட்டங்களையும், இதர "சீர்திருத்தங்களையும்" செயல்படுத்துவதற்கு தேவைப்படுகின்ற பிற்போக்குத்தனமான மாற்றங்களை கொண்டு வருவதற்கு "பரந்த அளவிலான ஒருமித்த கருத்தை" உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து இடது அணியுடனான அவரது கூட்டை இந்தியாவின் பிரதமர் சரியென நியாயப்படுத்தினார்.

சிபிஐ(எம்) தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி தலைமையிலான மேற்கு வங்க மாநில அரசாங்கம் பற்றி குறிப்பிட்ட சிங், "மேற்கு வங்காளத்தில் அரசாங்கத்தில் உள்ள எங்களது நண்பர்கள், உழைப்பு சந்தை நீக்குப்போக்குடன் செயல்பட வேண்டிய அவசியத்தை ஏற்றுக்கொள்கின்றனர். தில்லியிலுள்ள நமது இடதுசாரி நண்பர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி ஏற்கச் செய்வது எனது பணியாகும். நான் அதைக் கைவிட்டுவிடவில்லை மற்றும் அனைத்து அம்சங்களையும் கருதிப் பார்க்கின்ற நேரத்தில் சீர்திருத்தம் பரந்த அடிப்படையில் ஆதரவை கொண்டதாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்`` என்றார்.

மேலும் ஒரு கேள்விக்கு பதிலளித்த சிங், மேற்கு வங்காளத்தில் உள்ள இடது முன்னணி அரசாங்கத்தின் தனியார்மயமாக்கும் திட்டத்தை வெகுவாக புகழ்ந்துரைத்தார். அதற்குப் பின்னர் உறுதிபட கூறினார்: "இந்தியாவிற்கு எது நன்மைதரும் என்று இறுதியாக ஆய்வு செய்கையில் நமது இடதுசாரி நண்பர்களின் தேசபக்தியில் நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன், அவர்களும் சேர்ந்து நம்மோடு பயணம் செய்வார்கள்."

தில்லியிலுள்ள அரசாங்கத்தில் சேருவதில்லை என்ற சிபிஐ(எம்)-ன் தந்திரோபாய முடிவு, நவீன தாராளவாத கொள்கைகளை செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தும் நோக்கம் கொண்டதல்ல, ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு உருவாக்கும் எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்காகத்தான்.

மத்தியில் உள்ள அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் மேற்கு வங்காளத்தில் உள்ள அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் இடையே ஒரு வேறுபாடு இருக்கிறதென்றால், அது மேற்கு வங்காளத்தில் நவீன தாராண்மை கட்டமைப்பு மாற்றங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளைவிட மிக கொடூரமானமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, ஏனென்றால் தொழிற்சங்க எந்திரத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை எல்லா எதிர்ப்புகளையும் ஒடுக்குவதற்கும், அடிமட்டத்து தொழிலாளர்களது ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் சிபிஐ(எம்) பயன்படுத்திவருகிறது.

ஆகஸ்ட் மாதம் பட்டாச்சார்ஜி இந்தோனேஷியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, 1965-ல் ஆட்சி அதிகாரத்தை பிடித்துக்கொண்டதும், இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரை மில்லியனுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை படுகொலை செய்வதற்கு தலைமை வகித்து நடத்திச் சென்ற முன்னாள் சர்வாதிகாரி சுகார்ட்டோவோடு நெருக்கமான உறவுகளை வைத்திருக்கும் சில பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட, பல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மேற்கு வங்காளத்தில் செயல்பட்டுக் கொண்டுள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு எதிராக தொழிற் தகராறு உருவாகுமானால் அப்போது அவரது அரசாங்கத்தின் நடவடிக்கை எதுவாக இருக்கும் என்று கேட்கப்பட்டபோது பட்டாச்சார்ஜி ஜக்கார்த்தா போஸ்ட்டிற்கு சொன்னார்: ``தொழிற்சங்கங்களில் எங்களது ஈடுபாடு ஒரு அணுகூலமாகும். பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த அரசாங்கத்தை ஆதரிக்கிறார்கள் மற்றும் அவர்களது மனப்போக்கை மாற்றுவதற்கு நாங்கள் முயன்று வருகிறோம். இது ஒரு புதிய நிலவரம், இதனைப் பாருங்கள் என்று அவர்களிடம் நான் சொல்கிறேன் நமக்கு வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) தேவைப்படுகிறது; நமக்கு உள்கட்டமைப்பு வசதி தேவைப்படுகிறது.``

சிபிஐ(எம்)-ன் இரட்டை வேடமும் பாசாங்கும் செப்டம்பர் 29 வேலை நிறுத்தம் தொடர்பாக மேற்கு வங்காள மாநில அரசாங்கம் மேற்கொண்டுள்ள அணுகுமுறையில் மிக அப்பட்டமாக அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

செப்டம்பர் 25-ல் எக்ஸ்பிரஸ் இந்தியா செய்தியின்படி, ``முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்ஜியும் சரி அல்லது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முஹமது அமீன் நீங்கலாக, அவரது மந்திரி சபை சகாக்களும் சரி, வேலை நிறுத்தத்திற்கான பிரசாரத்தில் ஈடுபடமாட்டார்கள். கடந்த காலத்தில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்ற நேரத்தில் எல்லாம் சிபிஐ(எம்) அமைச்சர்கள் பகிரங்கமாக பங்கெடுத்துக் கொண்டபொழுது, இது கடந்த காலத்தில் நடந்ததிலிருந்து கூர்மையாக வேறுபடுவதாகும்.`` வெளிநாட்டு முதலீட்டாளர்களை சமாதானப்படுத்தும் ஆர்வத்துடன் மேற்கு வங்காள அரசாங்கம் வேலை நிறுத்தங்களை ஊக்கி முன்னெடுக்க விரும்பவில்லை.

சிபிஐ(எம்)-ன் அணுகுமுறை எந்தவிதமான விலகிச் செல்லலும் இல்லை, மாறாக 1964-ல் அக்கட்சி அமைக்கப்பட்டது முதல் அது கடைப்பிடித்து வருகிற தேசியவாத, வர்க்க ஒத்துழைப்பு நிலையின் தர்க்கரீதியான விளைவுதான் என்பதை மேலும் சேர்ப்பது மட்டும் அவசியம். அதன் ஆரம்ப ஆண்டுகளில் சிபிஐ அப்பட்டமாக காங்கிரஸ் கட்சியின் பக்கம் சாய்வதை அது விமர்சித்து வந்தாலும், சிபிஐ(எம்) அதே போன்று எப்போதுமே தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை தொழிற்சங்க போர்க்குணத்தோடும் பாராளுமன்ற வாதத்தோடும் மட்டுப்படுத்துவதற்கு எப்போதுமே முயன்றது. அதே நேரத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலபிரபுத்துவ எதிர்ப்பு அல்லது வகுப்புவாத எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ வர்க்கத்தின் ஏதாவதொரு கட்சியுடன் கூட்டு சேர்ந்துகொள்ள வேண்டும் என்று வாதிக்கின்றது.

இலங்கை தீவு, இந்திய துணைக்கண்டம் மற்றும் ஆசிய நாடுகளின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் முன்னே சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் இயக்கத்தை வளர்த்தெடுப்பதற்கான அவசியத்தை உணர்த்துவதற்காக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அங்கு நடைபெறும் நவம்பர் 17 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு என்னை முன்மொழிந்துள்ளது.

1947-ல் தெற்கு ஆசியாவின் பிரதான நிலப்பரப்பை இரண்டு வகுப்புவாத அடிப்படையிலான அரசுகளாக பிரிப்பதை எதிர்த்தும் மற்றும் 1948-ல் இலங்கை குட்டித்தீவை ஒரு தனி அரசாக ஆக்குவதையும் எதிர்த்துப் போராடிய இந்திய ட்ரொட்ஸ்கிச போல்ஷிவிக் - லெனினிஸ்ட் கட்சியின் புரட்சிகர பாரம்பரியத்தை நாங்கள் அடித்தளமாகக் கொண்டு இருக்கிறோம். அவற்றின் போட்டி முதலாளித்துவ வர்க்கங்களோடு இந்த அரசுகளின் உருவாக்கமானது இந்தத் துணைக் கண்டத்தின் வலிமையான தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் அதனை நிதி மூலதனத்தின் கட்டளைகளுக்கு அடிமைப்படுத்தவும் மட்டுமே பயன்பட்டது.

காந்தி தலைமையிலான காங்கிரசை தேசிய ஜனநாயகப் புரட்சியின் தலைமை என பாராட்டுவதற்கும் இரண்டாவது உலகப்போரில் பிரிட்டிஷ் காலனித்துவ அரசிற்கு ஆதரவு தருவதற்கும் இடையில் ஊசலாடிய, இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியானது, ஏகாதிபத்திய எதிர்ப்பு வெகுஜன இயக்கத்தை முதலாளித்துவ இந்திய தேசிய காங்கிரஸ் வசமும் பிரிவினையின் பயங்கரத்திடமும் ஒப்படைப்பதில் உதவியது..இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்துதான் சிபிஐ(எம்) தோன்றியது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சிபிஐ-ம் அதற்குப் பின்னர் சிபிஐ(எம்)-ம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் கருச்சிதைவிலிருந்து வந்த முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையிலான இந்திய அரசை', ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அரண் என்று பாராட்டின. அந்த நிலைப்பாட்டை ஒட்டி இன்றைய தினம் ஸ்ராலினிஸ்ட்டுகள் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்கள் ஏகாதிபத்தியத்தையும், முதலாளித்துவ பூகோளமயமாக்கலின் நாச வேலைகளையும் இந்திய முதலாளித்துவ தேசிய அரசு மூலம் எதிர்த்துப் போராட முடியும் என்று கூறுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள எங்களது சக சிந்தனையாளர்களும், ஸ்ராலினிஸ்ட்டுகளது இந்த நிலைப்பாட்டிற்கு மாறாக, முதலாளித்துவ பூகோளமயமாக்கல் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம், முதலாளித்துவத்திற்கும் அதன் காலாவதியாகிவிட்ட தேசிய அரசு அமைப்புக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதின் மூலம்தான் சாத்தியமாகும் என்று வலியுறுத்துகிறோம். இந்தப் பேராட்டத்தின் ஓர் பகுதியாக தெற்காசிய போட்டி முதலாளித்துவ ஆட்சிகளால் ஊட்டி வளர்க்கப்படும் பிற இனபழிப்புவாத, வகுப்புவாத மற்றும் சாதிய அரசியலுக்கு எதிர்ப்பின் மற்றும் எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிச சமத்துவக் கட்சி தெற்கு ஆசிய ஐக்கிய சோசலிச கூட்டமைப்பிற்காக போராடுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved