World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French unions seeking end to national rail strike

பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் தேசிய இரயில் வேலைநிறுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர முயலுகின்றன

By our correspondent
24 November 2005

Back to screen version

இக்கட்டுரை வெளியாகும் நேரத்தில், பிரான்சின் தொழிற்சங்கங்கள், பிரெஞ்சு தேசிய இரயில்வேயுடன் (SNCF) ஊதியம், ஓய்வூதியம் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடத்திய பின்னர் நாடு முழுவதும் நடைபெற்று வரும் இரயில் வேலைநிறுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர முயன்றன.

இந்த ஆண்டு ஆறாம் தடவையாக நடக்கும் இந்த வேலைநிறுத்தம், பிரான்சின் 170,000 இரயில் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் பங்கு பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது. இரயில்வே துறையை கோலிச அரசாங்கம் தனியார் மயமாக்கக்கூடும் என்ற அச்சங்களை காண்பித்து நான்கு தொழிற்சங்கங்களினால் இந்த வேலைநிறுத்தத்திற்கு நவம்பர் 21ம் தேதி மாலையில் அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று இரவு மூன்றில் இரு பங்கு இரயில்கள் பாதிப்பிற்கு ஆளாயின; ஆனால் பூசலை தீர்ப்பதற்கான பேரம்பேசல்கள் உடனடியாகத் தொடங்கின.

இதில் தொடர்புடைய நான்கு தொழிற்சங்கங்களில் மிகப் பெரியது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்திற்குட்பட்ட CGT ஆகும்; இரயில்வேக்களை தனியார்மயமாக்குவது தங்கள் விருப்பம் அல்ல என்ற மெய்யென்று ஏற்கமுடியாத உறுதிமொழிகளைத்தான் அரசாங்கம் இச்சங்கத்திற்கு கொடுத்திருந்தது. போக்குவரத்து மந்திரியான Dominique Perben தொழிற்சங்கங்களுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் கூறுவதாவது: "பல நேரங்களிலும், கடந்த 10 நாட்களாக நான் கூறிவந்ததை கறுப்பு வெள்ளையாக (எழுத்து மூலம்) தெரிவிக்கிறேன்: SNCF ஐத் தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் இல்லை."

நவம்பர் 22 அன்று ஜனாதிபதி ஜாக் சிராக் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்ததோடு SNCF தனியார் மயமாக்கப்படாது என்ற உறுதிமொழியையும் கொடுத்தார். CGT இன் இரயில்வே பிரிவு தலைவர் Didier Le Reste உடன் ஊதியம், ஓய்வுதியம் இவற்றில் சில சலுகைகளும் வென்றெடுக்கப்பட்டிருப்பதாகவும் "சில பிரச்சினைகளில்" நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் சமரசப் போக்குத் தன்மை CGT யினால் உகந்ததாகவே ஏற்கப்பட்டது. ஆனால், போலீஸ் துரத்தியதில் இருந்து தப்பியோட முயன்ற இரு இளைஞர்கள் இறந்ததை தொடர்ந்து, மூன்று வாரங்கள் கலகங்களும், தீவைப்புக்களும் நிகழ்ந்த பின்னர் வேலைநிறுத்தம் ஏற்பட்ட வகையில், தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதலை தவிர்க்க வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் ஓரளவு இது உந்துதல் பெற்றதாகும். வட ஆபிரிக்க இனக்குழு மரபினைச்சேர்ந்த பலர் உள்ளடங்கிய இளைஞர்களின் எழுச்சியானது, இனவாதத்திற்கு எதிரான எதிர்ப்பு மட்டுமல்லாமல் பிரான்சின் ஏராளமான கவுன்சில் குடியிருப்புக்களில் வாழ்பவர்கள் எதிர்கொண்டிருக்கும் இழிந்த சமூக நிலைகளுக்கு எதிரான எதிர்ப்பாகவும் இருந்தது.

உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசி மற்றும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடன் சேர்ந்து அரசாங்கம் முன்வந்து கலவரங்களை பயன்படுத்தி திணித்த அவசரகால நிலை இப்பொழுது மூன்று மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கும் போலீசிற்கும், ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள், செய்தி ஊடக சுதந்திரம் இவற்றை அடக்குவதற்கு அசாதாரணமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சட்டம் ஒழுங்கு, புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு நடவடிக்கைகள் இவற்றிற்கு ஆதரவு காண்பதற்கும், மிகவும் ஒடுக்கப்பட்ட அடுக்குகளை தனிமைப்படுத்துவதற்கும், தொழிலாள வர்க்கத்திடையே பிளவுகளை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அவை செயல்பட முயற்சிக்கும் பொழுது, இந்த நேரத்தில் ஒரு பொது மோதலை தூண்டிவிட அவர்கள் தெளிவாக விரும்பவில்லை.

சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில், புறநகர் பகுதி இளைஞர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததோடு, அரசாங்கத்தின் அவசரகால நடவடிக்கைகளுக்கும், அடிப்படை ஜனநாயக உரிமைகள் இரத்து செய்யப்பட்டதற்கும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

இரயில் வேலைநிறுத்தம் இந்த இலையுதிர்காலத்தில் நடைபெற்றுள்ள நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டுள்ள பல வேலை நிறுத்தங்களில் கடைசியானதாகும். பாரிஸ் சுரங்க போக்குவரத்து பிரிவால் நவம்பர் 22 அன்று தனியான வேலைநிறுத்தம் ஒன்று நடைபெற்றது. ஆனால், புறநகர்ப் பகுதி இளைஞர்களுடைய நம்பிக்கை இழந்துவிட்ட எதிர்காலத்திற்கும், சம்பளங்களை தொடர்ச்சியாக அரித்தல், வேலைகளை அழித்தல் ஆகியவற்றுக்கும் இடையிலான வெளிப்படையான தொடர்பானது, அரசாங்கம் மிகவும் பயப்படும்வகையில் ஒரு ஒருங்கிணைந்த அரசியல் மற்றும் தொழிற்துறை பாணியில் தாக்குதலை உருவாக்காது என்பதை தொழிற்சங்கங்கள் உறுதிப்படுத்திக் கொள்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved