World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

"Only the SEP advances a clear program against war and social inequality"

Colombo meeting participants attracted to internationalism

சோசலிச சமத்துவக் கட்சி ஒன்றுதான் போர் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக ஒரு தெளிவான வேலைதிட்டத்தை முன்வைத்துள்ளது

கொழும்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சர்வதேசியத்தின்பால் கவரப்பட்டனர்

By our correspondents
16 November 2005

Back to screen version

இலங்கையில் நவம்பர் 17-ம் தேதி நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களையொட்டி, சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய கடைசித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் பலரிடம் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் கலந்துரையாடினர்.

மத்திய மலைப்பகுதி மாவட்டங்களில் இருக்கும் பதுளை இருந்து வந்திருந்த சுஜித் என்னும் இளவயது தொழிலாளி ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போதுதான் சோசலிச சமத்துவக் கட்சி பற்றி தெரிந்து கொண்டதாக கூறினார்.

"இத்தேர்தலில் உங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்துகிறது என்பது பற்றி உங்கள் துண்டுப் பிரசுரத்தின் மூலம் தற்சசெயலாக தெரிந்து கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக நான் தேடிக்கொண்டிருக்கும் கட்சி உங்களுடையதாகத்தான் இருக்கும் என்பதை துண்டுப்பிரசுரம் படித்த பின் உணர்ந்தேன். அரசியல், சமூகப் பிரச்சினைகளான போர், வறுமை போன்றவற்றை அறிவியல்பூர்வமாக விளக்கும் கட்சி ஒன்றை நான் தேடிவந்தேன். பதுளையிலும் சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்." என்று அவர் கூறினார்.

பதுளை கூட்டத்தின் விரிவுரையினால் தான் பெரிதும் கவரப்பட்டதாக சுஜித் கூறினார். "அது அறிவியல் பூர்வமாகவும், உற்சாகமளிக்கக் கூடியதாகவும் இருந்தது. உண்மையில் அந்த உரைக்கு முன்பு, எனக்கு சர்வதேசியம் பற்றி எதுவும் தெரியாது. அந்த உரை சர்வதேசியத்தை பற்றிய பெரும் ஆர்வத்தை என்னுடைய உள்ளத்தில் தூண்டிவிட்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கையை நான் படித்து, ஈராக்கின்மீதான படையெடுப்பு மற்றொரு சாதாரண படையெடுப்பு இல்லை என்பதை அறிந்து கொண்டேன்; அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஆரம்பித்துள்ள புதிய காலனித்துவத்தின் ஒரு பகுதிதான் என்பதை அறிந்துகொண்டேன். சோசலிச சமத்துவக் கட்சி கூறியதுபோல், அது ஒன்றும் உள்ளூர் வேலைத்திட்டத்தின் மூலம் நிறுத்தப்பட்டுவிட முடியாது. அதை தோற்கடிப்பதற்கு, சர்வதேசரீதியாக சர்வதேசிய சோசலிசத்திற்காக போராடும் தொழிலாளர்களின் ஐக்கியம் தேவையாகும்."

"இலங்கையில் வருகின்ற ஜனாதிபதித் தேர்தல்களை பொறுத்தவரையில், சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரான விஜே டயஸ் ஒருவர்தான் போருக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக ஒரு தெளிவான வேலைதிட்டத்தை முன்வைத்துள்ளார். இந்த உண்மைகளை பரிசீலித்த பின் இந்த இறுதிக் கூட்டத்திலும் கலந்து கொள்ள நான் முடிவுசெய்தேன். நான் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவது என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளேன் என்பதை இறுதியாக நான் கூறமுடியும்."

மத்திய மலைப் பகுதிகளில் இருக்கும் பண்டாரவளையில் இருந்து வந்த மாணவரான நிமால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் சோசலிச சமத்துவக் கட்சி உடன் நெருக்கமான தொடர்பை வளர்த்துள்ளதாக கூறினார். "கொழும்பில் நடந்த பல கூட்டங்களில் பங்கு பெறும் வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்தது. சோசலிச சமத்துவக் கட்சியை தவிர, இலங்கையில் ஏனைய கட்சிகள் அனைத்தும் தீவின் எல்லைக்குள் தம்மைக் குறுக்கிக் கொண்டுள்ளன என்பதை நான் காண்கிறேன். இந்த பூகோளமய சகாப்தத்தில் ஒரு சிறு தீவிற்குள் நம்மை வரம்பிற்குட்படுத்திக் கொள்ளுவதின் மூலம் நாம் எப்படி பிரச்சினைகளை தீர்க்க முடியும்?"

"என்னுடைய ஆங்கில அறிவு மிகக் குறைவு; எனவே WSWS கட்டுரைகளை நான் ஆங்கிலத்தில் படிக்க முடியாது. ஆனால் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் அவற்றின் சிங்கள மொழிபெயர்ப்புக்களை கொடுக்கும்போது அவற்றைப் படிக்கிறேன். இந்தக் கட்டுரைகளின் மூலம் நான் அரசியலில் மட்டும் இல்லாமல், பல துறைகளிலும் துரிதமாக என்னுடைய அறிவை வளர்த்துள்ளேன்."

"சோசலிச சமத்துவக் கட்சி அறிக்கையை படித்த பின்னர், அதன் பிரதிகளை நான் என்னுடைய நண்பர்களுக்கு விநியோகித்தேன். அவர்கள் அதைப் பாராட்டி, சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை மட்டுந்தான் தவறான வாக்குறுதிகளை கொடுக்காமல் சரியான முன்னோக்கை கொடுத்துள்ளது என்று கூறுகின்றனர். அடுத்த ஆண்டு உயர்தர தேர்வுகளை எழுதிய பின்னர், நான் முழுமையாக என்னை இந்த முன்னோக்கிற்காக போராடத் தயார் செய்துகொள்ளுவேன். மனிதகுலத்தின் இந்த வரலாற்றுப் பணிகளை சுமப்பது பெரும் இன்பமாகும்."

கொழும்பில் இருந்து வந்திருந்த ஒரு இளவயதுத் தம்பதியினர் சோசலிச சமத்துவக் கட்சி பற்றியும் அதன் முன்னோக்கு பற்றியும் அவர்களுடைய பல்கலைக்கழக நாட்களிலேயே அறிந்ததாகக் கூறினர். கணவர் ஓர் அரசாங்க அதிகாரியாகவும், நாடக ஆசிரியராகவும் இருப்பவர்; மனைவியும் ஆசிரியையாக உள்ளார். "WSWS ல் பிரசுரிக்கப்படும் கலை பற்றிய மீளாய்வுகளில் நாங்கள் குறிப்பாக ஈடுபாடு கொண்டுள்ளோம். நாங்கள் இருவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி பில் வான் ஓகென் கொழும்பில் பேசிய கூட்டத்திற்கு வர விரும்பினோம். துரதிருஷ்டவசமாக அது இயலாமற் போயிற்று. ஆயினும், இந்தக் கூட்டத்தை பற்றி கேள்விப்பட்டபொழுது, உங்கள் கட்சி ஏற்பாடு செய்யும் மற்றொரு நிகழ்ச்சிக்கு ஆவலுடன் காத்திருந்தோம். உங்களுடைய நடவடிக்கைகளில் எங்களை ஈர்த்தது உங்கள் அமைப்பின் சர்வதேசிய தன்மைதான்."

புகழ்வாய்ந்த தொலைக்காட்சி அமைப்பில் வேலை பார்க்கும் ஓர் இளவயது செய்தியாளர் தன்னுடைய கருத்தை வெளியிட விரும்பினார்; ஆனால் அவருடைய எசமான்கள் ஏதேனும் கூறலாம் என்பதால் பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

"இந்த ஊடக அமைப்பில் என்னுடைய வேலை உலகச் செய்திகளை திரட்டுவது ஆகும். இணைய தளத்தில் செய்திகள் தேடும்போது நான் உலக சோசலிச வலைத் தளத்தை பற்றி அறிந்தேன். இப்பொழுது செய்திகளை தெரிந்து கொள்ளுவதற்காக என்று இல்லாமல் என்னுடைய அறிவைப் பெருக்கிக் கொள்ளுவதற்காக WSWS ஐ படிக்கிறேன். WSWS மூலமாகத்தான் ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னணியிலும் பரந்த சமூக இயங்குசக்தி உள்ளது என்பதை நான் அறிந்துள்ளேன்."

"சுவர்ணவாஹினியில் [இலங்கையில் புகழ்பெற்ற தொலைக்காட்சி] கினிஹிரா (Anvil) உரையாடல் நிகழ்ச்சியில் விஜே டயஸ் பங்கு கொண்ட தைரியமான அணுகுமுறையை பார்த்ததில் இருந்து நான் சோசலிச சமத்துவக் கட்சி பற்றி அதிகம் அறிந்து கொள்ள விரும்பினேன். இன்று அவருடைய பேச்சைக் கேட்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்."

தான் எதிர்கொண்டுள்ள கஷ்டங்களை விளக்குகையில் அவர் கூறினார்: "இத்தொலைக்காட்சி நிலையத்தில் நான் ஓராண்டாக வேலைசெய்து வருகிறேன் ஆனால் எனக்கு மாதம் 6,000 ரூபாய்தான் (US 60 டாலர்) கிடைக்கிறது. நான் வெளியூரில் இருந்து கொழும்பில் தங்கி இருப்பவன். உணவு, உறைவிடச் செலவுகளுக்குப் பின் என்னால் ஒரு சென்ட் கூட சேரிக்க முடியவில்லை. பல வகை படிப்புகளுக்குப் பின் ஆறு ஆண்டு காலம் வேலை தேடியலைந்தேன்; பயனில்லாமல் இருந்தது."

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு விரிவுரையாளர் கூறிய கருத்து பின்வருமாறு:

"எனக்கு எப்போதுமே லியோன் ட்ரொட்ஸ்கி மீது பெரும் மதிப்பு உண்டு: ஓர் எழுத்தாளர், அறிவுஜீவி, புரட்சிகர அரசியல்வாதி, பகுப்பாய்வாளர் என்னும் முறையில் அவர் ஒப்புயர்வற்றவர். சோசலிச சமத்துவக் கட்சி, அனைத்துலகக் குழு ஆகியவை பற்றித் தெரியுமுன், அவருடைய படைப்புக்கள் சிலவற்றை நான் படித்துள்ளேன். இந்தக் கூட்டம்தான் சோசலிச சமத்துவக் கட்சி உடன் என்னுடைய முதல் அனுபவம். விஜே டயஸ், மற்றய தலைவர்கள் இன்று ஸ்தூலமான அனைத்தையும் தழுவிய பகுப்பாய்வு முறையை தற்போதைய சமூகப், பொருளாதார, அரசியல் நிலைமைக்கு கொடுத்ததுபோல் வேறு எந்த அரசியல் கட்சியும், ஜனாதிபதி வேட்பாளரும் இதுகாறும் கொடுத்தது இல்லை. சர்வதேச இயக்கத்தின் முன்னோக்கை அவர்கள் முன்வைத்த முறையால் நான் பெரிதும் கவரப்பட்டேன்."

"மேலும் என்னுடைய மனத்தில் தீவிரமாக இருந்த மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு தக்க விடைகளையும், விளக்கங்களையும் நான் பெற்றேன். இந்திய ஆளும் வர்க்கம் அதன் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான தொடர்பு பற்றிய சமீபத்திய போக்குகளின் தன்மை பற்றி சோசலிச சமத்துவக் கட்சி கொடுத்த பகுப்பாய்வு மிகவும் தெளிவாக உள்ளதை நான் கண்டுகொண்டேன். அவர்கள் பழைய தேசியவாத முழக்கங்களை கைவிட்டுவிட்டு புஷ் நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டுள்ளனர். நட்வர் சிங் போன்றவர்கள் அந்த காட்சியிலிருந்தே அழிக்கப்பட்டு விடுகின்றனர்! இத்தகைய போக்கின் அடையாளங்கள்தான் தோழர் விஜே டயஸினால் நன்கு விளக்கப்பட்டது. இந்நாடுகளில் இருக்கும் வெகுஜனங்களுக்கு அது நன்மை அளிக்காது.

"நான் சமசமாஜ [LSSP] பின்னணியில் இருந்து வந்தவன்; என்னுடைய பெற்றோர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் 1950, 1960-கள் இயக்கத்தில் தொடர்பு பெற்றிருந்தனர். ஆனால் 1964 சம சமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பு எனக்கு முற்றிலும் விளங்கா புதிராகத்தான் இருந்தது. சம சமாஜக் கட்சி ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கத்தை வழங்கவில்லை. இன்று சோசலிச சமத்துவக் கட்சி தவிர வேறு ஒருவரும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. உரைகளை மிகவும் கவனத்துடன் கேட்டேன்; சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் சிலருடனும் விவாதித்தேன். காட்டிக் கொடுப்பின் தன்மை இப்பொழுது தெளிவாகப் புரிகிறது; இந்திய துணைக் கண்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பார்வையிலிருந்து அது எவ்வளவு விலைக்கொடுக்க நேரிட்டது என்பது தெரியவருகிறது. மேலும், இது வகுப்புவாத, பயங்கரவாத, ஒருவகையில் பாசிசம் போன்ற அமைப்புக்களான JVP, LTTE ஆகியவற்றிற்கும் வழிகோலியுள்ளது. இன்று நாம் அனைவருமே அதன் பேரழிவு விளைவுகளைத்தான் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்."

"பலரைப் போலவே நானும் SLFP-LSSP-CP கூட்டணியானது UNPஇன் முதலாளித்துவ கொள்கைகளுக்கு ஒரு மாற்றீட்டை பிரதிபலித்தது என்று நினைத்தேன் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். இது பரந்த அளவில் இருக்கும் கருத்து ஆகும்; அதை விடுவது மிகக் கடினமாகும். ஆனால் வரலாற்றுச் சான்றுகள் இந்தக் கூட்டணியின் உண்மையான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன."

"உழைக்கும் மக்களிடையே மேற்பரப்பில் சுமத்தப்பட்டுள்ள இத்தகைய பிரிவுகள் அனைத்திற்கும் எதிராக போராடுதலும் அவர்களை ஐக்கியப்படுத்த எடுக்கும் அனைத்து முயற்சிகளும் இந்த துணைக் கண்டத்தில் சோசலிசத்தை அடைய முக்கியம் என்பதில் இப்பொழுது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. இப்பகுதி முழுவதையும் வகுப்புவாத, இனவாத அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் செயற்பட்டியலாக இருந்தது. BLPI அதற்கு எதிராக இருந்தது என்பதை நான் அறிவேன். இவ்விதத்தில் BLPI ட்ரொட்ஸ்கிச பாரம்பரியமான சர்வதேச சோசலிசத்தை இப்பகுதியில் பிரதிநிதித்துவப்படுத்தியது மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி இந்த மரபை பாதுகாப்பதற்கு போரிடுவது பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

"பல ஆண்டுகளாக சாதாரண மக்களிடையே வகுப்புவாதப் பிளவுகளை தோற்றுவிக்கவும் பெரிதாக்கவும் ஆளும் வர்க்கம் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் வைக்கும் விதத்தை நான் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். இப்பொழுது வர்க்கப்போராட்டத்தில் இருந்து சாதாரண மக்களை திசைதிருப்ப முதலாளித்துவம் இயல்பாக கையாளும்முறை அது என்பதை அறிந்துள்ளேன்.. தொழிலாள வர்க்கம் அவர்களுடைய கைகளில் சிக்காமல், சுயாதீனமான முறையில் தங்களை ஒழுங்கமைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் கூடுதலான விவாதங்களில் பங்கு பெற விரும்புகிறேன்; சர்வதேச இயக்கத்தின் வரலாறு பற்றி படிக்க விரும்புகிறேன். டேவிட் நோர்த் எழுதியுள்ள நாம் காக்கும் மரபியம் என்பதன் பிரதி ஒன்றை நான் வாங்கியுள்ளேன்; அதைப் படிப்பேன். இதைத்தவிர, நான் சீனா, கியூபா பற்றி சோசலிச சமத்துவக் கட்சியின் விமர்சனத்தை பற்றியும் அறியவிரும்புகிறேன்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved