World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Sri Lankan SEP presidential candidate to address public meeting in India

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் இந்தியாவில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

1 November 2005

Back to screen version

நவம்பர் 17 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளர் விஜே டயஸ் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். நான்கு தசாப்தங்களாக சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் உறுப்பினராக இருந்துவரும் டயஸ், சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினரும் ஆவார்.

இக்கூட்டமானது இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியாலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவாலும் (ICFI) போராடப்பட்டுவரும் சர்வதேச முன்னோக்கை சுருக்கமாகக் கூறும். சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை விளக்குகிறவாறு, "சோசலிச சமத்துவக் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுவது, வெறுமனே வாக்குகளை சேகரித்துக்கொள்வதற்காக அன்றி, தொழிலாளர்கள் சோசலிச வேலைத் திட்டத்தையும் முன்நோக்கையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பற்றி இந்திய துணைக் கண்டம் பூராவும் ஒரு கலந்துரையாடலை ஆரம்பித்து வைப்பதற்கேயாகும்."

ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கம் இன்று எதிர்கொள்ளும் மையப்பிரச்சினை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிக்கும் வெளிப்பாடு ஆகும். "பயங்கரத்தின் மீதான போர்" என்ற பதாகையின் கீழ், அமெரிக்காவானது பூகோளத்தின் முக்கிய மூலோபாய பகுதிகள் மீது அதன் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான அதன் உந்தலின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கை தனது அதிகாரத்திற்கு கீழ்ப்படியச் செய்திருக்கிறது. இராணுவ வாதத்திற்கு திரும்புதலானது பலத்தின் ஒரு அறிகுறியல்ல, மாறாக உலகப் பொருளாதாரத்திற்கும் காலாவதியாகிப்போன தேசிய அரசு அமைப்பு முறைக்கும் இடையிலான முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாட்டை, ஒரு அரசின் -அமெரிக்க அரசின்- மேலாளுமையை அதன் ஏனைய போட்டியாளர்கள் மீதாக வற்புறுத்துவதன் மூலம் தீர்ப்பதற்கான ஆற்றொணா முயற்சியாகும்.

இலங்கையிலும் காஷ்மீரிலும் "அமைதிக்கான" வாஷிங்டனின் ஊக்குவிப்பானது அதே ஏகாதிபத்திய மூலோபாயத்தின் பகுதியாகும். இரு பகுதியிலும் உள்ள பூசல்கள் இந்தப் பிராந்தியத்தில் அரும்பிவரும் அமெரிக்க பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு இப்பொழுது ஒரு பெரிய அச்சுறுத்தலை முன்வைக்கிறது. தெற்காசியாவில் அமெரிக்கத்தலையீடுகள் அமைதியை கொண்டுவருவதற்கு அப்பால், எதிர்கால போர்களுக்கான அடிப்படையை அமைக்கின்ற ஆழமான ஸ்திரமற்றதாக்கும் செல்வாக்கை கொண்டிருக்கின்றன.

இந்திய துணைக்கண்டம் முழுமையும், ஆளும் வர்க்கங்களின் பிரதிநிதிகளும், அவர்களின் ஸ்ராலினிச மற்றும் "இடது" வக்காலத்து வாங்குபவர்களும், புஷ் நிர்வாகத்தின் "பயங்கரத்தின் மீதான போர்" என்பதை தங்களின் சொந்த நலன்களுக்காக சுரண்டிக்கொள்வதை நாடி, அதன் நிலைப்பாட்டுடன் ஒன்றி முற்றிலும் வீழ்ந்துள்ளனர்.

போர், பெருகிவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் இவற்றை எதிர்ப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் அபிவிருத்தியின் அடிப்படையிலான ஒரு உண்மையான சோசலிச மூலோபாயத்திற்கான அவசியத்தை கலந்துரையாடுவதற்கு சென்னையில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு வருகைதருமாறு தொழிலாளர்கள், இளையோர் மற்றும் புத்திஜீவிகள் அனைவரையும் நாம் அன்புடன் அழைக்கிறோம்.

இடம்:

சீசன்ஸ் அரங்கு, இரண்டாம் தளம், சன்பிளாசா காம்ப்ளக்ஸ், 39 ஜி.என்.செட்டி ரோடு, (அண்ணா மேம்பாலம் அருகில்)

நாள் மற்றும் காலம்:

ஞாயிறு, நவம்பர் 6, காலை 10 மணி


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved