World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Hundreds swept up in Baghdad crackdown

பாக்தாத் தாக்குதல் நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

By James Cogan
6 June 2005

Back to screen version

அமெரிக்க இராணுவ-ஈராக் அரசாங்கம் மேற்கொண்ட திடீர் தாக்குதல் நடவடிக்க்ைகளுக்கு, மின்னல் நடவடிக்கை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது, அது பிரதானமாக சுன்னி முஸ்லீம்கள் வாழ்கின்ற புறநகர் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கை என்று ஈராக் அரசியல் தலைவர்களும் மதபோதகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று, சுன்னிகளை தளமாக கொண்ட முஸ்லீம் அறிஞர்கள் அமைப்பின் (AMS) ஒரு பிரதிநிதியான Mahmoud al-Sumaidie சுன்னி um-al-Qura மசூதியில் நடைபெற்ற ஒரு பெரும் தொழுகைக்கூட்டத்தில்: "இந்த சோதனை நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் மற்றும் மக்களை இழிவுபடுத்துவது நிறுத்தப்படவேண்டும் என இங்குள்ள ஒவ்வொரு அதிகாரியையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார். சுன்னியை அடித்தளமாக கொண்ட, ஈராக் இஸ்லாமியக் கட்சியின் ஒரு தலைவரான Iyal al-Ezzi, "இந்த நடவடிக்கைகளின்பொழுது, அவர்கள் சுன்னிகள் என்ற உண்மையால், எங்களது புதல்வர்களை கைது செய்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பின்னர் நூற்றுக்கணக்கான ஈராக்கியர்கள், இந்நடவடிக்கையை ''அமெரிக்க பயங்கரவாதம்'' என்று முத்திரை குத்தும் மற்றும் ''அமெரிக்க துருப்புக்கள் வெளியேறவேண்டும்'' என்று கோரும் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

அந்த நடவடிக்கைகள் நடத்தப்பட்ட முதல்வாரத்தில், நகரின் மேற்கு புறநகர்களில் 700 பேருக்கும் மேற்பட்ட மக்கள் காவலில் வைக்கப்பட்டனர், தலைநகருக்கு தெற்குபுறமுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் நடைபெற்ற திடீர் சோதனைகளில் 250-க்கும் மேற்பட்டவர்கள் அதிரடிச் சோதனைகளில் கைது செய்யப்பட்டனர். ஈராக் உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, ஆயுதந்தாங்கிய கிளர்ச்சிக்காரர்கள் என்று கூறப்பட்ட 28 பேர் கொல்லப்பட்டனர். தலைநகரின் 23 பிரதான நுழைவு வாயில்களிலும் சாலைத்தடைகள் ஏற்படுத்தப்பட்டன மற்றும் நகரம் முழுவதிலும் நூற்றுக்கணக்கான சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

இதற்கு பதிலடியாக வெள்ளிக்கிழமையன்று கிளர்ச்சிக்காரர்கள் பாக்தாத் விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள சாலைப்பகுதிகளில் இராணுவ கவச வாகனங்களையும் அமெரிக்க இராணுவத்தினரையும் குறிவைத்து குண்டுவீசி தாக்குதல்களை நடத்தினர்.

ஆயுதந்தாங்கிய போராளிகளை கைது செய்வது அல்லது கொல்வது என்பதுடன் பாக்தாத் நகரவாசிகளை அச்சுறுத்துவதுதான் இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும். 2003 ஏப்ரலில் படையெடுத்து வந்த அமெரிக்க துருப்புக்களுக்கு தலைநகர் பாக்தாத் வீழ்ச்சியடைந்தமை முதல் இடைவிடாது, அமெரிக்க துருப்புக்கள் மீது கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருப்பது நகர மக்களில் பெரும்பாலானவர்களின் அனுதாபத்தினால்தான்.

பாக்தாத் புறநகர்களில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிரதான ஈராக் பிரிவுகளில் ஒன்று 12,000 பேரைக்கொண்ட சக்திவாய்ந்த சிறப்பு போலீஸ் அதிரடிப்படை வீரர்கள் அல்லது "ஓனாய்ப்படைகள்" ஆகும், இது சதாம் ஹூசேனுடைய வெறுப்பிற்குள்ளான முந்தைய உறுப்பினர்களான இரகசியப்போலீஸ் மற்றும் குடியரசுக்காவலர்களிடமிருந்து, இது சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது.

இதற்கு முந்திய ஆட்சியை பாதுகாப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஒடுக்குமுறையும் கொடூரங்களும் தற்போது அமெரிக்க ஆக்கிரமிப்பையும் அமெரிக்க ஆதரவு பிரதமர் இப்ராஹிம் அல் ஜாபரியின் ஈராக் அரசாங்கத்தை பாதுகாத்து நிறுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. சுன்னி நகரங்களான ரமதி, சமாரா, மற்றும் மோசூலில் ஆக்கிரமிப்புக்கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்டுவதற்காக, அதிரடிப்படை வீரர்களும், அவர்களது அமெரிக்க ஆலோசகர்களும் நடவடிக்கையை பயன்படுத்தி வருகின்றனர். நியூயோர்க் டைம்ஸ் தந்துள்ள தகவலின்படி, இந்தப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கான கமாண்டர் ஜேம்ஸ் ஸ்டீல் 1980களில் எல் சல்வடோர் நாட்டில் பயிற்சியளிக்கப்பட்ட, வலதுசாரி கொலைக்குழுக்கள் அடங்கிய அமெரிக்க சிறப்புப்படைகளுக்கு தலைமை வகித்துச் சென்றவராவர்.

சென்ற வாரம் நடைபெற்ற திடீர் சோதனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், அமெரிக்க மற்றும் ஈராக் படைகள் கட்டுப்பாடு எதுவுமில்லாமல் கைது செய்து, மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் நடவடிக்கைகளில் இறங்கி தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பதாகவும், திட்டமிட்டு வீடுகளை சூறையாடி கொள்ளையடித்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

``நகரங்களிலும், கிராமங்களிலும், ஆண்களை சுற்றி வளைத்து கைது செய்வதாகவும், அதே நேரத்தில் குழந்தைகளையும், பெண்களையும், ஆயுதந்தாங்கிய காவலில் வைத்திருப்பதாகவும், அந்தப் பகுதி மக்கள் கூறினர்`` என்று Operation Lightning தெற்கு மாவட்டங்களில் குறி வைத்தமை குறித்து ஜூன் 4-ல் ஈராக் செய்தி பத்திரிகையான Azzaman செய்தி வெளியிட்டது.

அமெரிக்கா புதிதாக நியமித்த ஈராக் படைகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக பரவலாக கூறப்பட்டது குறித்து வாரக் கடைசியில் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஜாபரியின் புதிய அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. பிரதம மந்திரியின் ஒரு பேச்சாளரான Laith Kuba, அசோசியேட் பிரஸ்ஸிற்கு கூறும் போது இந்த அரசாங்கம் அதன் துருப்புக்கள் ''ரொக்கத்தையும், இதர பொருட்களையும் கொள்ளையடித்திருக்கக்கூடும் என்பதை ''தள்ளிவிடுவதற்கில்லை'' என்று குறிப்பிட்டார்.

பல சம்பவங்களில், ஒரு ஆள்காட்டி அவர்கள் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சிக்காரர்களின் ஆதரவாளர்கள் என்று கூறிய ஆதாரமற்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கா மற்றும் ஈராக் துருப்புக்கள் மக்களில் பலரை கைது செய்தன.

தவறான தகவல் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முதலாவது பாக்தாத் குடிமக்களில் ஒருவர் ஈராக் இஸ்லாமிய கட்சி தலைவரான (IPP), மோசன் அப்துல் ஹமீத், இது அமெரிக்க இராணுவத்திற்கு ஒரு பெரிய சங்கடமாகிவிட்டது. அந்த அரசியல் பிரமுகர், கிளர்ச்சிக்காரர்களை தன் வீட்டில் மறைத்து வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமெரிக்க துருப்புக்கள் சென்ற திங்களன்று காலை அவரது வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து அவரது மேஜை நாற்காலிகளை உடைத்து ஹமீத்தை அவரது புதல்வரை மற்றும் ஹமீதின் மெய்க்காவலரை இழுத்துக்கொண்டு சென்றனர்.

அடுத்த ஆறு மாதம் முடிவுற்றப்பின் நடைபெறும் தேர்தல்களுக்கும், அமெரிக்க கட்டளைப்படி நடத்தப்படவிருக்கின்ற கருத்தெடுப்பிற்கும் தமது கட்சியின் எதிர்ப்பிற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஹமீதை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு புஷ் நிர்வாகம் முயன்று வருகிறது. ஜனவரி 30-ல் நடைபெற்ற தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததில் முன்னோடியாக செயல்பட்டது, IPP-யும் முஸ்லீம் அறிஞர்கள் அமைப்பும்தான்.

கைது செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள் ஹமீத் விடுதலை செய்யப்பட்டு அவர் தவறான அடிப்படையில் கைது செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்த அதேவேளை, மிகவும் செல்வாக்கான முன்னணி சுன்னி முதலாளித்துவ அரசியல்வாதிகளில் ஒருவரான அவர் அமெரிக்கா விரித்துள்ள வலையில் வீழ்ந்துவிட்டார் என்ற உண்மைதான் ஒட்டுமொத்த நடவடிக்கையையும் கண்டிப்பதற்கு முக்கிய குவிமையப் புள்ளியாக ஆகியிருக்கிறது.

பாக்தாத் எரிகிறது என்ற வலைத் தளத்தின் ஆசிரியர் மே 30-ல் வெளியிட்ட கருத்தில்: ``இது உண்மையிலேயே ஒரு தவறாக இருக்குமானல், அப்போது நியாயமற்ற வகையில் கைது செய்யப்பட்டு அபுகிரைப் போன்ற இடங்களில் சித்திரவதை செய்யப்பட்ட ''தவறுகள்'' எத்தனை என்பதை கற்பனை செய்து பாருங்கள்... [ஹமீத் கைது] சுன்னிகளுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்புவதற்கா? அதைத்தான் மக்கள் கூறுகிறார்கள். பல மக்கள் நம்புவது என்னவென்றால். அது சுன்னிகளுக்கு என்ன சொல்கிறது என்றால், `உங்களில் எவரும் பாதுகாப்பாக இருக்கப்போவதில்லை------எங்களோடு பணியாற்றுபவராக இருந்தாலும்'. இது ஒரு தவறாகப் புரிந்து கொண்டதால் அல்லது தவறான அடிப்படையில் ஏற்பட்டுவிட்டது என்று நம்புவது கடினமாக உள்ளது`` என்று எழுதியிருக்கிறார்.

இந்த கைதுகள் தொடர்பான பொதுமக்களின் பரவலான கோபத்திற்கு பதிலளிக்கின்ற வகையில் ஈராக்கிய அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற கட்சிகளின் நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ஷியாக்களின் அடிப்படைவாத தாவாக்கட்சி மற்றும் ஈராக் இஸ்லாமிய புரட்சி சுப்ரீம் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஹமீத் கைது ``ஏற்றுக்கொள்ள முடியாதது`` என்றும் ''அமெரிக்க படைகள் மனித உரிமைகளை மதித்து முறைகேடான கைதுகளையும் காவலையும் கைவிட வேண்டும்`` என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

அதற்கு சில நாட்களுக்கு முன்னர், மே 31-ல், பாக்தாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில், அமெரிக்க மற்றும் இதர வெளிநாட்டுத் துருப்புக்கள் ``ஆக்கிரமிப்பு படைகள் அல்ல அவர்கள் நட்புப் படைகள், பாதுகாப்பை நாம் ஸ்தாபிப்பதற்கு உதவிக் கொண்டிருக்கின்றன. ஈராக் அரசாங்க அதிகாரத்தின் கீழ், ஈராக்கிய மக்களின் நலன்களுக்காக கட்டளையை செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்`` என்று குறிப்பிட்டார்.

உண்மையிலேயே ஜாபரி அரசாங்கம் சட்ட விரோதமானதொரு அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஒரு செயலற்ற போலித்தலைமை தவிர வேறு எதுவுமில்லை என்பதை பாக்தாத் நடவடிக்கைகள் வலியுறுத்திக் கூறுகின்றது, ஈராக் மக்கள் மத்தியில் எதிர்ப்பை மேலும் கொடூரமான ஒடுக்குமுறை மூலம் நிலைநாட்டி வருகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved