World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

Insurers relieved by low-level exposure to tsunami disaster

சுனாமி பேரழிவால் காப்பீட்டு நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளதாக நிம்மதி

By Terry Cook
7 January 2005

Back to screen version

டிசம்பர் 26 சுனாமி தாக்குதலால் ஏற்பட்டுவிட்ட உயிர் சேதங்களும் நாசங்களும் பெருகிக்கொண்டு வருகின்ற நேரத்தில் வர்த்தக சமுதாயத்தில் ஒரு பிரிவினர் அதை கொண்டாடுகின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. பெரிய காப்பீட்டு (Insurance) கம்பெனிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றன. ஒரு முன்னணி காப்பீட்டு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி கூறிய வார்த்தைகளில் சொல்வதென்றால் நடப்பு பேரழிவுகளை ஒப்பிடும்போது நிறுவனங்கள் தரவேண்டிய இழப்பீடு சுமாராகத்தான் இருக்கிறது".

வங்கக்கடலை சுற்றியுள்ள கடற்கரை பிராந்தியங்களில் சுனாமி தாக்கிய பின்னர் பில்லியன் (Billion) டாலர்கள் மதிப்பிற்கு சேதம் ஏற்பட்டிருப்பது குறித்து, பிரதான காப்பீட்டு நிறுவனங்களின் கணக்கு மற்றும் சேதமதிப்பீட்டாளர்கள் மிகக் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். சில கம்பெனிகள் தாங்கள் செலுத்தவேண்டிய இழப்பீடு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்குதான் இருக்கும் என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். உலகின் மிகப் பெரிய மறு காப்பீட்டு நிறுவனம் Munich Re உதாரணத்திற்கு, அந்த நிறுவனம் தான் செலுத்தவேண்டிய இழப்பீடு 100 மில்லியன் யூரோக்கள் (135 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்று மதிப்பிட்டுள்ளது. அதன் போட்டி நிறுவனமான Swiss Re தான் செலுத்த வேண்டிய இழப்பீடு 88 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவானது என்று கணக்கிட்டிருக்கிறது.

அமெரிக்கன் இன்டர்நேஷனல் குரூப் (AIG) உலகின் மிகப்பெரிய காப்பீட்டு குழு நிறுவனமாகும், ''தான் செலுத்த வேண்டிய இழப்பீடு கணிசமான அளவிற்கு இருக்காது'' என்று இது உறுதிப்படுத்தியுள்ளது. மற்றும் லண்டன் Lloyds காப்பீட்டு நிறுவனம் தனது குழுவைச் சார்ந்த கம்பெனிகள் செலுத்த வேண்டிய இழப்பீடுகள் விடுமுறை விடுதிகள், தனிமனிதர்கள், விபத்து காப்பீடு, போக்குவரத்துக் காப்பீடு மற்றும் கப்பல் காப்பீடு ஆகிய அளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக கூறுகிறது. காப்பீட்டு தகவல் கழகம் தந்துள்ள விவரத்தின்படி "பெரும்பாலான இழப்பீட்டுக் கோரிக்கைகள் பெரிய வெளிநாட்டு நாடுகடந்த நிறுவனங்கள் நடத்துகின்ற ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் சம்மந்தப்பட்டவையாகவே இருக்கும்." தங்களது வாழ்வு வர்த்தகம் சிதைக்கப்பட்ட நிலையில் இழப்பீடு கோரிக்கைகள் சிறிய வர்த்தகர்களிடமிருந்துதான் வரும்.

பிரிட்டனிலுள்ள மிகப்பெரும் காப்பீட்டு நிறுவனம் Aviva சுனாமி பாதிப்பிற்கு உள்ளான பிராந்தியங்களில் இருந்து சொத்து சேதங்கள் தொடர்பாக காப்பீடு செய்து கொண்டவர்களிடமிருந்து 1000-ற்கு சற்று அதிகமான தொலைபேசி தகவல்கள் வந்தன, மருத்துவ இழப்பீடுகள் கோரி 25 தொலைபேசி தகவல்கள்தான் வந்தன. இந்த பிராந்தியத்தில் கணிசமான அளவிற்கு கிளைகளை கொண்டிருக்கிற ஒரே ஆஸ்திரேலிய QBE காப்பீட்டு குழுவின் பிரதிநிதி, "இந்த பேரழிவினால் எங்களது நிதி நிலையில் எந்த பாதிப்பும் இருக்காது" என்று கூறியுள்ளார். இழப்பீடுகள் மறு இன்சூரன்ஸ் வகையில் சரிசெய்யப்பட்டுவிடும் என்பதால் எங்களது நிதி நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது'', என்று அந்த நிறுவன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

தரப்படவேண்டிய இழப்பீட்டு மதிப்பு மிகக் குறைவாக இருப்பதை முதலீட்டாளர்கள் வரவேற்றுள்ளனர். இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பெரும் சுவர்களை போன்று எழுந்து வந்த அலைகள், கிராமங்கள், நகரங்கள் மற்றும் சமூகங்கள், அனைத்தையும் அடித்துச் சென்றுவிட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர், டிசம்பர் 28-ல் வர்த்தகம் முடிவடைகின்ற நேரத்தில் காப்பீட்டு நிறுவன பங்குகள் விலை ஒட்டு மொத்தமாக 0.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது, AIG பங்குகள் 18 Cent -கள் உயர்ந்து ஒரு பங்கின் விலை 65.89 டாலர்களாக உயர்ந்தது. அதே நேரத்தில் St Paul Travelers கம்பெனிகள் பங்கு விலை 1.4 சதவீதம் உயர்ந்தது, அன்றைய தினம் 37.33 டாலர்களாக ஒரு பங்கின் விலை உயர்ந்தது.

இவ்வளவு மிகக் குறைவாக இழப்பீடுகள் கிடைப்பது உலகம் முழுவதிலும் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வெளியிடப்படும் சுனாமி பாதிப்பு தாக்குதல் காட்சிகளைக் கண்ட மில்லியன் கணக்கான சாதாரண மக்களது அதிர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த பேரழிவு அனைத்து வர்க்கங்களையும் பாதித்திருந்தாலும் அதில் படுமோசமாகவும், மிக ஆழமாகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மில்லியன் கணக்கான பரம ஏழைகள் நிரந்தரமாக சலுகைகள் மறுக்கப்பட்டு மீன்பிடித்தொழிலிலும் குறைந்த வருவாய் சுற்றுலா தொழிலிலும், வாழ்வை நடத்துவதற்கான விவசாயத்திலும் ஈடுபட்டிருப்பவர்கள் ஆவர்.

இவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள், தங்களது வீடுகள், மீன்பிடிப்படகுகள், ஆடுமாடுகள், விவசாயக் கருவிகள் இவற்றுடன் தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் இழந்து விட்டார்கள். பலர் தங்களது குடும்பத்தின் ஒரே தலைவரையும் இழந்துவிட்டனர். இப்படிப்பட்ட ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் எப்படி காப்பீடு செய்து கொள்ள முடியும், அவர்கள் தங்களது உடைமைகளை அல்லது தங்களுக்கே ஆயுள்காப்பீடு செய்துகொள்ளும் பிரச்சனைக்கே இடமில்லை.

இந்த உண்மை இன்னொரு அம்சத்தையும் எடுத்துக்காட்டுகிறது. வளர்ச்சி குன்றிய நாடுகளில் மிகப்பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றனர் என்பதை இந்த பேரழிவு மேலும் எடுத்துக்காட்டியிருக்கிறது. காப்பீட்டு தகவல் கழகம் (III) வெளியிட்டுள்ள தகவலின்படி ஆயுள் காப்பீடு அல்லது பிறவகை காப்பீடுகளுக்கு இலங்கையில், 2003-ல் நபர்வாரி 7 அமெரிக்க டாலர்களும், இந்தோனேஷியாவில் 8-டாலர்களும், இந்தியாவில் 4-டாலர்களும், தாய்லாந்தில் 27.6-டாலர்களும் செலவிடப்பட்டிருக்கின்றன. இதை ஒப்புநோக்கும் போது, அமெரிக்காவில் நபர்வாரி செலவினம், 1980 டாலர்களாக உள்ளது. இது இந்தோனேஷியாவைவிட 250 மடங்கும் இலங்கையை விட 280 மடங்கும், அதிகமாகும். இவ்விரு நாடுகளிலும்தான் உயிர்சேதமும் மிக அதிகமாக உள்ளது. Swiss Re தந்துள்ள தகவலின்படி, அமெரிக்காவில் ஆயுள் காப்பீடு உட்பட நபர்வாரி காப்பீடு வகைகளுக்கு ஆகும் செலவீனம் 3638 டாலர்கள் ஆகும்.

எனவேதான் டிசம்பர் 26 தாக்குதல்களில், இழப்பீடு கோரிக்கை மிகக்குறைவாக இருக்கிறது. இதை ஒப்புநோக்கும்போது சென்ற ஆண்டு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் கரீபியன் நாடுகளில் சூறாவளி தாக்கிய நேரத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் 2004-ம் ஆண்டிலேயே மிக அதிகமான தொகையான, 35 பில்லியன் (Billion) டாலர்களை இழப்பீடாக வழங்கியிருக்கின்றன. சென்ற ஆண்டு உலகம் முழுவதிலும் 300 இயற்கை மற்றும் செயற்கையான பேரழிவுகள் ஏற்பட்டன. அவற்றில் 21,000 பேர் மடிந்தனர், இதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிய இழப்பீடு 42 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

சுனாமி சேதத்திலிருந்து காப்பீட்டை பாதுகாக்க ஏனைய காரணிகளும் வேலை செய்துள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நாடுகளில் கடற்கரையிலிருந்து வெகுதொலைவு உள்ளே தள்ளி தங்களது தொழிற்சாலைகளை, தொழிற்கூடங்களை (Plants) மற்றும் அலுவலகங்களை வைத்திருக்கின்றனர். இந்தோனேஷியா, அல்லது தாய்லாந்தில் பெரிய தொழிற்சாலைகள் எதுவும் விரிவான சேதமடையவில்லை மற்றும் துறைமுகங்களுக்கும் பெரும்பாலும் பாதிப்பு இல்லை.

தண்ணீர் மற்றும் வெள்ளத்தினால் ஏற்படுகின்ற சேதங்களுக்குத்தான் இழப்பீடுகள் வழங்கப்படும். III பட்டியல்களின்படி மூன்று வகையான சொத்து காப்பீட்டு விதிமுறைகள் உள்ளன. அவற்றில் அனைத்து ஆபத்துக்களையும் உள்ளடக்கிய அதிக செலவு பிடிக்கும் விதிமுறை உண்டு. இதன்படி "காப்பீடு செய்தவரின் உடைமைக்கு எதிர்பாராத திடீரென்ற விபத்து ஏற்பட்டு உடல்ரீதியான இழப்பு/ சேதம்/ அழிவு ஏற்படலை" உள்ளடக்குகிறது. ஆனாலும் கூட, "வெள்ளத்தால் வருகின்ற ஆபத்துக்கள்தான் இழப்பீட்டு கோரிக்கைக்கு உரியவை" என்று மட்டுமே குறிப்பிடுகின்றது. இத்தகைய விதிமுறைகளை எடுத்திருக்கிறவர்களுக்கு கூட தற்போது இழப்பீடு கிடைக்காது, ஏனெனில் சுனாமியை, அவர்கள் ''வெள்ளம்'' என்று ஏற்றுக்கொள்வதில்லை, எனவே அதனால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கிடைக்காது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved