World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

Indian budget: a balancing act that cannot long be sustained

இந்திய பட்ஜெட்: நீடித்திருக்க முடியாத ஒரு சமநிலைப்படுத்தும் நடவடிக்கை

By Deepal Jayasekera
23 March 2005

Back to screen version

இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் பெப்ரவரி 28-ல் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் நவீன தாராளவாத நடவடிக்கைகளை மக்களை கவரும் வாய்வீச்சு மற்றும் சைகைகளில் மூடி மறைத்திருக்கிறது.

நிதியமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் சென்ற மே மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) பதவிக்கு வந்த பின்னர் தாக்கல் செய்துள்ள இரண்டாவது பட்ஜெட் "வறுமை மற்றும் வேலையில்லா நிலைமை ஆகியவற்றின் மீதாக ஒரு தாக்குதலை" கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பசியையும், பொருளாதார அவல நிலையையும் தனிப்பதாக அதிகமாக எக்காளமிட்டு வலியுறுத்திக்கூறியதை பொய்யாக்குகின்ற வகையில் பட்ஜெட்டில் சமூக செலவினங்கள் சொற்பமாகவே உயர்த்தப்பட்டிருக்கின்றன மற்றும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட வளர்ச்சி மூலோபாயத்தை அது பின்பற்றி வருவதால், அது இந்தியாவை சர்வதேச முதலீடுகளுக்கு ஒரு மலிவு ஊதிய தொழிலாளர் கிடைக்கும் சொர்க்கமாக ஆக்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.

இந்திய பெருவர்த்தகம் பட்ஜெட்டை பாராட்டியது, பம்பாய் பங்கு பரிமாற்றத்தின் அடிப்படை விலைக்குறீயிட்டு எண் பட்ஜெட் தினத்தில் ஒரு சாதனை அளவாக உயர்ந்தது. டாட்டா ஸ்டீல் நிர்வாக இயக்குனர், B.முத்துராமன் "ஒரு நல்ல பட்ஜெட், ஒரு நீண்ட தொலைநோக்கு கோணத்தை கொண்டது அது பொருட்களுக்கான தேவையையும் முதலீட்டையும் ஊக்குவிக்கக்கூடும்" என்று குறிப்பிட்டார். இந்திய தொழில்துறை கூட்டமைப்பை சார்ந்த தரூண்தாஸ், பட்ஜெட்டின் பொருளாதார "சீர்திருத்தங்கள் சரியான வழியில் செல்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. இதில் மிகப்பல ஆக்கபூர்வமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன, எதிர்மறையான எந்த அம்சத்தையும் காண்பது கடினம்" என்று குறிப்பிட்டார்.

அரசாங்கம் போக்குவரத்து, தகவல் தொடர்புகள், எரிபொருள் உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்கான செலவினங்களை அதிகரிக்காமலும் மிகத்தீவிரமாக பட்ஜெட் பற்றாக்குறையை குறைக்காமலும் இருக்குமானால் நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) குறைந்துவிடும் என்று பல எச்சரிக்கைகளுடன் வெளிநாட்டு செலாவணி நிர்வாகிகளின் பதில் மிகவும் விழிப்புடன் இருந்தது.

முக்கிய பட்ஜெட் நடவடிக்கைகளில் அடங்குபவை:

* ஏறத்தாழ பெருநிறுவன வரிகள் 15 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாய் பெருநிறுவன இலாபங்களுக்கு 35 சதவீதம் பதிலாக 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.

* நடுத்தர வர்க்கத்தில் அதிக சலுகைமிக்க பிரிவினரின் தனிமனித வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன.

* தனியார் வங்கிகள் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வழி செய்வதற்காக நிதித்துறை நெறிமுறைகள் பல நீக்கப்பட்டிருக்கின்றன. "இந்தியாவில் பல வங்கிகள் இருக்கின்றன, ஆனால் அவற்றில் எதுவும் உலகின் 20 முதன்மை வங்கிகள் பட்டியலில் இடம்பெறவில்லையே" என்று சிதம்பரம் புகார் கூறியுள்ளார்.

* சுரங்கத் தொழிற்துறைகளிலிலும், தனியார் ஓய்வூதியத் திட்டங்களிலும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது.

* முதலீட்டு பொருட்கள், நெசவு, தோல் மற்றும் காலணித்தொழில், மருந்து தயாரிப்பு மற்றும் உயிர்மரபியல் தொழில்நுட்பத் தொழில்துறைகள் உட்பட ஏராளமான வகைப்பட்ட பொருட்களுக்கு சுங்கத்தீர்வை கணிசமாக வெட்டப்பட்டிருக்கிறது. "நமது கிழக்கு ஆசிய பக்கத்து நாடுகளில் நிலவுகின்ற சுங்கத்தீர்வு கட்டமைப்பை நெருங்கி வருகிற அளவிற்கு நமது கொள்கை அமைய வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருப்பதை முன்னெடுத்துச் செல்ல நான் கருதுகிறேன்" என்று சிதம்பரம் பட்ஜெட் உரையில் கூறினார்.

* சிறுதொழில்களில் (பெரும்பாலும் கைவினைஞர்கள் தொழில்) உற்பத்திக்கு 108 பண்டங்களுக்கு மேல் ஏகபோக தயாரிப்பு உரிமை வழங்கப்பட்டிருந்த நெறிமுறைகள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

* பணக்காரர்களுக்கு வரிவிதித்து வரி வருவாயை பெருக்குவதற்கு பதிலாக இப்போதுள்ள தனிமனித வருமான வரிச் சட்டங்களை கட்டாயமாக செயல்படுத்துவதற்கு பதிலாக, இப்போது மாநிலங்களும், மத்திய அரசாங்கமும், நுகர்பொருள் வரி, மதிப்பு கூடுதல் வரியை அதிகம் நம்பியிருக்க நிலையை உருவாகியுள்ளது. (சென்ற ஆண்டு, இந்தியாவில் 80,000 இந்தியர்கள் மட்டுமே, ஆண்டிற்கு 1 மில்லியன் ரூபாய் அல்லது 23,000 டாலர்கள் சம்பாதிப்பவர்கள் என்று அறிவித்தனர்.)

* இராணுவ செலவினங்கள் மேலும் கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. பட்ஜெட் இராணுவ செலவினத்தை 7.8 சதவீதம் உயர்த்தி ரூ.830 பில்லியன் (19.1 பில்லியன் டாலர்களுக்கு) உயர்த்தியிருக்கிறது. ஏற்கனவே சென்ற கோடைக்கால பட்ஜெட்டில் சிதம்பரம் இராணுவச் செலவினத்தை 17.92 சதவீதம் உயர்த்தியிருந்தார், அதற்கு மேல் இந்த உயர்வு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருப்பதன் பொருள் என்னவென்றால், ஏழு மாதங்களுக்கு சற்று அதிகமான காலத்திற்குள் இந்தியா தனது இராணுவ செலவினங்களை கால்பங்கிற்கு மேல் உயர்த்தியிருக்கிறது என்பதாகும்.

இந்தியாவின் செல்வந்தத்தட்டினர் பாக்கிஸ்தானுடன் ஒரு சமாதான பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறிக்கொண்டாலும், இந்தியாவை உலகின் முதன்மை இராணுவ வல்லரசுகளில் ஒன்றாக ஆக்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இராணுவ பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் 40 சதவீதத்திற்கு மேல், புதிய ஆயுதங்களையும், ஆயுத-முறைகளையும் (weapon-systems) வாங்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. "இது நாம் சில முக்கிய உயர்நுட்ப ஆயுத முறைகளை கொண்டுவரும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நமக்கு வகை செய்கிறது" என்று பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பெருமைப்பட்டுக்கொண்டார்.

பெருகிவரும் சமூக நெருக்கடி

இந்தியாவின் தேசிய ரீதீயான நெறிமுறைபடுத்தப்பட்ட பொருளாதாரம் சிதைக்கப்பட்டதன் விளைவாக சமூக சமத்துவமின்மை, பொருளாதாரத்தில் பாதுகாப்பின்மை, மற்றும் வறுமை அதிகரித்ததால் பொதுமக்களது ஆத்திரம் ஒரு அலைபோல் கிளம்பி சென்ற மே மாதம், தானே வியப்படைகின்ற வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பதவியில் அமர்த்தப்பட்டது. சென்ற ஆண்டு தேர்தல் பிரசாரத்தில், இந்தியாவின் முதலாளித்துவ வர்க்க பாரம்பரிய ஆளுங்கட்சியான காங்கிரஸ், ஏற்றுமதி அடிப்படையிலான வளர்ச்சிக்கு செல்லும் 1991-ன் திருப்பத்திற்கு முன்முயற்சி செய்திருந்ததாக பெருமையடித்துக்கொண்டது. அதே நேரத்தில், காங்கிரஸ் மிக கவனமாக திட்டமிட்டு பொதுமக்களது அதிருப்திக்கு வேண்டுகோள் விடுத்து தான் "ஒரு மனிதமுகத்தோடு" பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக கூறிற்று.

ஸ்ராலினிஸ்ட்டுகள் தலைமையிலான இடது முன்னணியின் நாடாளுமன்ற ஆதரவோடு அரசாங்கத்தை அமைத்திருக்கின்ற காங்கிரஸ் தலைமையிலான UPA, நவீன தாராளவாத சீர்திருத்தங்களை நெருக்குதலுடன் முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிற, அதே நேரத்தில் "மிக பெரும்பாலான மக்களுக்கு மிகப்பெரும் நன்மைகளை செய்வதில் கவலை கொண்டுள்ள" அரசாங்கம்போல் காட்டி வருகிறது.

பட்ஜெட்டில் சமூக செலவினங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன, என்றாலும் பல உயர்வுகள் அடையாளபூர்வமானவை மற்றும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்தியாவே இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும்போது அதை தடுப்பதற்கு இந்த செலவினங்கள் கட்டுப்போடுவது போன்றுதான் உள்ளன.

உலக வங்கி தந்துள்ள தகவலின்படி இந்திய மக்களில் 35 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைந்த வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்திய குழந்தைகளில் மூன்று அல்லது அதற்கும் குறைந்த வயதுள்ளவர்களில் நாற்பத்தி ஏழு சதவீதம் பேர் ஊட்டச் சத்து குறைந்தவர்கள், 51 சதவீதம் மக்கள் சுமாரானது முதல் மிகக் கடுமையான இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஐந்து வயது மற்றும் அதற்கு குறைந்த வயதுடைய குழந்தைகளுக்கான இந்தியாவின் இறப்பு விகிதம் உலகிலேயே மிக அதிகமானவற்றில் ஒன்றாக உள்ளது. எழுதப்படிக்கத் தெரிந்தோர் எண்ணிக்கை பொதுவாக கூறப்படும் தாராள மதிப்பீட்டின்படி 57 சதவீதமாகும்.

கிராமப்புற இந்தியாவை சூழ்ந்து கொண்டுள்ள வேலையில்லாத நெருக்கடியை தீர்த்துவைப்பதாக சென்ற வசந்த காலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியளித்தது மற்றும் நகர்ப்புற குடிசை பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களில் வறுமையால் வாடும் ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த குறைந்தபட்சம் ஒருவருக்கு குறைந்தபட்சம் ஆண்டிற்கு100 நாட்கள் ஊதியத்துடன் வேலை வாய்ப்பும் தருவதாக உறுதியளித்தது. இந்த உறுதிமொழி பின்னர் குறைந்தபட்ச செயல்திட்டங்களில் சேர்த்துக்கொள்ளப்பட்டது, அது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் செயற்திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த குறைந்தபட்ச உத்திரவாதமும் கைவிடப்பட்டது, தற்போது அரசாங்கம் இந்தத் திட்டத்தை நாட்டிலுள்ள 150 மிகவும் வறுமையிலுள்ள மாவட்டங்களில்தான் செயல்படுத்தி வருகிறது, மற்றும் அதே நேரத்தில் அரசாங்கம் எந்த நேரத்திலும் அந்தத் திட்டத்தை இரத்து செய்யலாம், குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறைவாக ஊதியம் தரலாம்.

ரூ.110 பில்லியன் அல்லது சுமார் 2.5 பில்லியன் டாலர்கள் வேலைவாய்ப்பு உத்திரவாதம் மற்றும் நடப்பு வேலைக்கு - உணவு திட்டங்களுக்காக பட்ஜெட் ஒதுக்கீடு செய்திருக்கிறது, இந்தக் தொகையில் பெரும்பகுதி இதர வறுமை நிவாரணத்திட்டங்களிலிருந்து திருப்பப்படலாம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள், அரசாங்கம் சுகாதார சேவைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அதிகம் பேசுகின்றனர்----அத்துடன், சேர்த்து தற்போது GDP-ல் ஆண்டிற்கு 1 சதவீதத்திற்கும் குறைவான தொகையைத்தான் இந்திய அரசாங்கம் செலவிடுகிறது---- சுகாதாரத் துறைக்கு ரூ.71.56 பில்லியன் (1.6 பில்லியன் டாலர்) , ஆரம்பக்கல்விக்கு ரூ.102.8 பில்லியன் (2.35 பில்லியன் டாலர்) செலவிடுகிறது. இந்தியாவின் அரசியல் சட்டப்படி, மாநிலங்கள்தான் பொது சுகாதாரம் மற்றும் கல்வியில் அதிக பொறுப்பு வகிக்கின்றன, ஆனால் மிக முக்கியமான நிதி ஆதாரங்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்தின் கையில் இருப்பதால் இந்த புள்ளிவிவரங்கள் திகைப்பூட்டும் அளவில் சொற்பமானவையன்றி வேறுஅல்ல. மத்திய அரசாங்கத்தின் சுகாதார சேவை மற்றும் ஆரம்பக்கல்விக்கான செலவினங்களையும் சேர்த்துபார்த்தால் கூட இராணுவத்திற்காகும் செலவில் ஐந்தில் ஒரு பங்குக்கும் சற்றே கூட ஆகும்.

இடது முன்னணிக்கு, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது CPM தலைமை வகிக்கிறது, இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதாக்கட்சி (BJP) மேலாதிக்கம் செலுத்தும் போட்டியாளரான தேசிய ஜனநாயக முன்னணி (NDA) பதவிக்கு வருவதை தடுப்பதற்கு ஒரே வழி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பதுதான் என்றும் அதன் நவீன தாராளவாத செயற்திட்டத்தை செயல்படுத்துவதில் அழுத்தம் கொடுத்து மட்டுப்படுத்திவிட முடியுமென்றும் நியாயப்படுத்தி வருகிறது.

பட்ஜெட் தயாரிப்பிற்கு முன், இடதுசாரி முன்னணி மக்கள் ஆதரவு கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இடைவிடாது கோரிக்கைகளை விடுத்து வந்தது, நாடாளுமன்றத்தில் தங்களது ஆதரவை சாதகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் எச்சரித்தது. அதன் 18-வது மாநாட்டிற்காக சிபிஐ(எம்) தலைமை தயாரித்த தீர்மானத்தில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி செய்ததைப்போன்று, "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும் அதே தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளைக் கடைப்பிடித்து வருவதாக" ஒப்புக்கொண்டது.

அப்படியிருந்தும் எதிர்பார்த்தபடி, சிபிஎம் பொலிட்பீரோ பட்ஜெட்டை பாராட்டியுள்ளது, "வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும், குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்கட்டமைப்பை அபிவிருத்திசெய்வதற்கும் மற்றும் சமூக பிரிவுகளில் முதலீட்டிற்கும் வலியுறுத்தப்படுவதை நோக்கி வரவேற்கத்தக்க ஒரு மாற்றம்" ஏற்பட்டிருப்பதாக முன்னதாக கூறிவிட்டு "எதிர்பார்க்கப்படும் உண்மையான செலவினங்கள்.... நமது எதிர்பார்ப்புக்களை விட மிகக் குறைவாக இருக்கிறது" என்று புகார் கூறியுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் அரசாங்கத்தின் வரிவருவாய் மதிப்பீடுகளை தேவையற்ற நம்பிக்கைகளுடன் தயாரித்திருக்கிறது, எனவே பட்ஜெட் மதிப்பீடுகள் அளவிற்கு நிதி திரட்ட முடியாத நிலைமை ஏற்பட்டு சமூக செலவினங்கள் வெட்டப்படும் நிலை ஏற்படலாம் என்ற கவலையை சிபிஎம் அறிக்கை தெரிவித்திருக்கிறது.

நவீன-தாராளவாத சீர்திருத்தங்களை விரைவாக அமுல்படுத்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அழுத்தம்

இந்தியாவில் பெருகிவருகின்ற சமூக நெருக்கடி பூகோள பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் ஸ்திரமற்ற போக்கு, இந்திய அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டுள்ள நிதி நெருக்கடிகள் ஆகிய சூழ்நிலைகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பட்ஜெட் ஒரு ஆபத்தான கம்பிமேல் நடப்பது போன்ற செயலாகும், இந்த நிலைமையின் கீழ் நீண்ட காலம் நீடிக்க முடியது என்பதுதான் உண்மை.

இந்தியாவின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி குறைந்தபட்சம் 7 சதவீதம் அளவிற்கு தொடர்ந்து நிலைநாட்ட முடியும் என்று பட்ஜெட் வருவாய் மதிப்பீடு வலியுறுத்திக் கூறுகிறது. அத்தகைய பொருளாதார வளர்ச்சி விகிதம் ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவிற்குள் வருவதையும் தொடர்ந்து இரட்டைப்படை எண்களில் இந்தியாவின் ஏற்றுமதிகள் வளர்வதையும் சார்ந்திருக்கிறது.

இந்த இரண்டு வகைகளிலுமே எதிர்காலம் ஆபத்தானதாக இருக்கிறது. பட்ஜெட்டிற்கு முன்னோடியாக நிதியமைச்சர் தாக்கல் செய்த ஆண்டு பொருளாதார அறிக்கை விடுத்துள்ள எச்சரிக்கையில் 2004-ல் பதிவு செய்யப்பபட்ட 5 பில்லியன் டாலர் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கணிசமான அளவிற்கு இந்தியாவில் உயர்த்தப்படாவிட்டால் நடப்பு வளர்ச்சி விகிதத்தை நிலைநாட்ட முடியாது போய்விடலாம் என்று எச்சரித்துள்ளது.

ஒரு உலகம் தழுவிய பொருளாதார மந்தநிலை அல்லது உலக நாணய மாற்று முறையில் ஏற்பட்டுள்ள ஒரு நெருக்கடி அமெரிக்காவின் பிரம்மாண்டமான வர்த்தக பட்ஜெட் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறைகளால் உசுப்பிவிடப்பட்டுள்ள நெருக்கடி வெளிநாட்டு முதலீடுகளையும் இந்தியாவின் ஏற்றுமதிகளையும் கடுமையாக பாதிக்கும்.

இந்த அச்சுறுத்தல்கள் ஒருபக்கமிருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் வேகத்தை அதிகரிக்கவேண்டுமென்று கோரிவருகின்றனர். குறிப்பாக, அவர்கள் அரசாங்கம் செலவினங்களை குறைக்கவேண்டுமென்றும் "பொருளாதாரரீதியாக பலனளிக்கக் கூடிய" வகை செய்யும் உள்கட்டமைப்பை வளர்ப்பதில் அரசாங்க செலவினங்களை அதிகரிக்க வேண்டுமென்றும் கதவடைப்பு மற்றும் தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்குவதற்கு ஆகும் செலவினங்களை அதிகரிக்கும் தொழிலாளர் நலச்சட்டங்களை இரத்து செய்ய வேண்டுமென்றும் விரும்புகின்றனர். அத்தகைய மாற்றங்கள் பரம ஏழைகள் உட்பட கோடிக்கணக்கான இந்தியர்களை மிகக்கடுமையாக பாதிக்கும்.

தற்பொழுது பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது சிதம்பரம் NDA அரசாங்கம் ஆண்டிற்கு குறைந்தபட்சம் GDP-ல் 0.3 சதவீத அளவிற்கு பட்ஜெட் பற்றாக்குறையை வெட்டவேண்டும் என்று இயற்றிய சட்டத்தை தமது அரசாங்கம் மீறிவிட்டது என்று மிக சிரமப்பட்டு விளக்கம் தந்தார், அது மீண்டும் நடக்காது என்று கூறினார், "எனக்கு வேறு வழியில்லை பற்றாக்குறை குறைப்பு நடவடிக்கையை கைவிட்டுவிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இப்போது நிதி தொடர்பான செலவின வரையறைகளுக்கு மிக நெருக்கமாக வந்திருக்கிறோம் மற்றும் நமது வாய்ப்பு வசதிகளுக்கு மேல் செலவிடுவதற்கு இனி வழியில்லை" என்று கூறினார்.

"நிதி பொறுப்புணர்வு" சட்ட விதிமுறைகளின்படி சிதம்பரம் செயல்படவில்லை என்பது குறித்து சர்வதேச முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். "முந்திய ஆண்டில் மிக சுமாரான பட்ஜெட் பற்றாக்குறை வெட்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு 2005/2006 பட்ஜெட்டில் கணிசமான அளவிற்கு எந்த பற்றாக்குறை வெட்டிற்கும் வகை செய்யப்படவில்லை" என Standard & Poor கடன் தர நிர்ணய ஆய்வாளர் Ping Chew புகார் கூறினார். Morgan Stanley தலைமை பொருளாதார ஆய்வாளர் Stephen Roach, இந்த பட்ஜெட் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கும் போதுமான அளவிற்கு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார், "இந்த போக்குகள் அடுத்து வருகின்ற பின்னடைவுகளுக்கு தீர்க்க தரிசனமாக அமைந்துவிடுமானால் இந்தியாவின் வளர்ச்சி திட்ட அற்புதங்கள் நடைபெறாது போய்விடலாம், இந்தியாவை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்" என்று Roach எச்சரித்தார்.

சிதம்பரத்திற்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய பெருவர்த்தக நிறுவனங்களின் கோரிக்கைகள் மிக நன்றாகவே தெரியும். வறுமைக்கு எதிரான வாய்வீச்சும் ஸ்ராலினிஸ்டுகளின் நாடாளுமன்ற ஆதரவும் ஒரு மூடுதிரையாகப் பயன்பட, அதன் பின்னால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மானியங்களில் பெரிய வெட்டுக்களைக் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் உள்பட நவீன-தாராளவாத சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தள்ளுகிறது.

தனது பட்ஜெட் உரையில் சிதம்பரம் "மானிய முறை ஆட்சியை மறுசீரமைப்பு செய்யும் பணியை மேற்கொள்ளப்போவதாக உறுதி எடுத்துக்கொண்டார். "உர வகைகளுக்கு புதிய விலைத் திட்டத்தை" உருவாக்குவதற்குரிய ஆய்வுகளை நடத்துவதற்கு ஒரு பணிக்குழுவை அமைத்திருப்பதாக குறிப்பிட்டார் - அதாவது உரமானியத்தை வெட்டுவது.

நிதியமைச்சகத்தின் பொருளாதார ஆய்வுமதிப்பீடு மிகக் கூர்மையான செய்தியை சொல்லியிருக்கிறது. "ஒரு உற்பத்தித்திறன் மிக்க சர்வதேச அளவில் போட்டிபோடும் திறனுள்ள விவசாய கட்டமைப்பை" முன்னெடுத்துச் செல்வதற்கு மானியங்களை இரத்து செய்வதை பொருளாதார ஆய்வறிக்கை முடிச்சுப்போட்டிருக்கிறது. உயர்ந்த விலை தானியங்களுக்கு ஆதரவாக மற்றும் உரவகைகள், பாசனம் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான செலவினத்தை குறைக்க மானியங்கள் தருவதை வெட்டவேண்டுமென்றும் பொருளாதார ஆய்வ்வு மதிப்பீடு கோருகிறது.

தொழிற்துறையில் தொழிற்சாலைகள் மூடப்படுவது தொடர்பான விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டுமென்றும், சீனா வெளிநாட்டு நேரடி முதலீட்டை மிகப் பெருமளவில் ஈர்த்து வருவதைப்போன்ற வகையில் வர்த்தகர்களுக்கு சாதகமான தொழிலாளர் நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டுமென்றும் பொருளாதார ஆய்வு மதிப்பீடு கோருகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved