World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan police raid home of Tamil journalist

இலங்கை பொலிசார் தமிழ் பத்திரிகையாளரின் வீட்டை சோதனையிட்டனர்

By W.A. Sunil
12 May 2004

Back to screen version

இலங்கை பொலிசார், நீண்ட கால தமிழ் பத்திரிகையாளரான தர்மரட்னம் சிவராமை கொடூரமாக பயமுறுத்தும் முயற்சியாக, கொழும்பில் உள்ள அவரது வீட்டை மே 3 இரவு சோதனையிட்டனர். வெடிபொருட்களைத் தேடுவதாக பொலிசார் கூறும் போது, சிவராம் ஒரு தமிழர் என்பதாலும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் நெட் இணையத் தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் என்பதாலுமே அவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவு.

சோதனை மேற்கொள்ளப்பட்ட போது, சிவராம் உலக ஊடகவியலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தமிழ் ஊடக ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் பங்குபற்றுவதற்காக கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் இருந்தார். பத்திரிகையாளரின் துணைவியார் மற்றும் மூன்று பிள்ளைகள் அதே போல் ஊர்வாசிகளையும் அச்சுறுத்தும் வகையில், ஒரு தொகை ஆயுதம் தாங்கிய பொலிசார் தென் புறநகர் பகுதியான கல்கிசையில் உள்ள அவரது வீட்டை சுற்றிவளைத்திருந்தனர்.

சுமார் 15 பொலிசார் வீட்டுக்குள் நுளைந்து, கட்டிடத்தை சோதனையிடுவதற்கான நீதிமன்ற உத்தரவு இருப்பதாகத் தெரிவித்தனர். தமிழ் மட்டுமே பேசத் தெரிந்த சிவராமின் மனைவியால் அவருக்கு காட்டப்பட்ட ஆவனத்தை வாசிக்கவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடிந்திருக்கவில்லை. பொலிசார், கட்டிடத்தை சோதனையிட்டும், நிலத்தையும் வளாகத்தையும் ஆராய்ந்தும் மற்றும் அலமாரியை துருவித் துருவித் தேடியும் ஒரு மணித்தியாலத்தை செலவிட்டனர். வெடிபொருட்களோ, ஆயுதங்களோ அல்லது குற்றம் சாட்டுவதற்கான ஏனைய ஆதரங்களோ கண்டுபிடிக்கப்படவில்லை.

இலங்கை தமிழ் ஊடக ஒன்றியமும், தேச எல்லைகளற்ற நிருபர்கள் சங்கமும், இந்த தேடுதல் நடவடிக்கையை ஊடகங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல் என கண்டனம் செய்துள்ளன.

சிவராம் இதற்கு முன்னரும் தொல்லைகளுக்கு உள்ளானார். 1996ல், பாதுகாப்புப் படைகள், நாட்டின் கொடூரமான அவசரகாலச் சட்டத்தின் கீழ் அவரது வீட்டை சோதனையிட்டதோடு அவரையும் கைதுசெய்தது. அவரைத் தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதற்கான சாக்குப் போக்குகளை தேடுவதில் பொலிசார் தோல்வியடைந்ததை அடுத்து ஒரு நாளின் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

2001 ஜூனில் இனந்தெரியாத நபர் ஒருவர் அவரது வீட்டினுள் நுளைய முற்பட்டுள்ளார். இந்த முயற்சிக்கு முன்னதாக, உபாலி நியூஸ்பேப்பர் வெளியீடான திவயின மற்றும் அரசாங்கக் கட்டுப்பாட்டிலான தமிழ் நாளிதழான தினகரன் பத்திரிகையும், அவரது படத்தை வெளியிட்டு, அவரை விடுதலைப் புலி உறுப்பினர் என முத்திரை குத்தியதோடு அவரைக் கைதுசெய்யுமாறும் கோரின.

அண்மைய சோதனை நடவடிக்கை பற்றி உலக சோசலிச வலைத் தளத்திற்கு சிவராம் கருத்துத் தெரிவிக்கையில்: "மிக முக்கியமான தமிழ் பிரச்சினைகளைப் பற்றி நான் எழுதுவதாலேயே பொலிஸ் என் வீட்டை சோதனையிட்டது. நான் 16 வயதில் இருந்து பத்திரிகையாளராக இருந்து வருகின்றேன். நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரைகள் எழுதுவதோடு, லங்காதீப, ஹிரு, யுக்திய போன்ற சிங்களப் பத்திரிகைகளும் என்னுடைய கட்டுரைகளை சிங்கள மொழியில் வெளியிடுகின்றன. இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு படை மற்றும் ஊடகவியலாளர்களும் நான் ஒரு பத்திரிகையாளர் என்பதை நன்கு அறிவார்கள்.

"நான் உபாலி நியூஸ் பேப்பர்ஸ் வெளியிடும் ஐலண்ட் பத்திரிகையில் 1980 முதல் 1995 வரை வேலை செய்துள்ளேன். ஆயினும், நான் உபாலி நியூஸ்பேப்பர்சில் இருந்து இராஜினாமா செய்தவுடன் உடனடியாக அவர்கள் என்னை தமிழ் புலி என முத்திரை குத்தியதோடு, எனக்கெதிரான மூர்க்கத்தனமான பிரச்சாரங்களையும் ஆரம்பித்தனர். திவயின மற்றும் ஞாயிறு திவயின பத்திரிகைகளின் பாதுகாப்புத் துறை நிருபர்கள் என்னைத் தாக்கினர்.

"தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக எழுதுவது குற்றமா? நாட்டில் உள்ள ஜனநாயகம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரமும் இதுவா?" என அவர் வியப்புடன் கேட்டார்.

கடந்த இரு தசாப்தங்களாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க) விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்ததோடு தமிழர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் நசுக்கின. பாதுகாப்புப் படைகள், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் "பயங்கரவாத" சந்தேக நபர்களை கைது செய்து தடுத்து வைக்கும் அதிகாரங்களைக் கொண்டிருந்தன.

பொலிசாருக்கு தமிழர் ஒருவரை கைதுசெய்யத் தேவை வரும்போது, அவரது வீட்டு வளாகத்தில் வெடிபொருட்களை பதுக்கி வைத்துவிட்டு, பின்னர் அவரைக் கைது செய்து தமது "கண்டுபிடிப்பை" பற்றி பரந்த ஊடக விளம்பரத்தை கொடுப்பது ஒரு வெளிப்படையான இரகசியமாக இருந்தது. பலர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி வருடக் கணக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஏனையவர்கள் சாதாரணமாக "காணாமல்" போயினர்.

முன்னைய ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கம் 2002 பெப்பிரவரியில் விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டதை அடுத்து, தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் வழமையாக மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கைகள் பெருமளவில் நிறுத்தப்பட்டிருந்தன. எவ்வாறெனினும், ஏப்பிரல் 2 பொதுத் தேர்தலின் பின்னர், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீ.ல.சு.க, சிங்களப் பேரினவாத ஜே.வி.பி.யுடன் சேர்ந்து ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தது. ஜே.வி.பி, பாதுகாப்பு படைகளையும் அதனோடு கூட்டாக செயற்படும் குண்டர் படைகளையும் தமிழர்களை இலக்கு வைத்து மிகவும் உக்கிரமாக ஊக்குவித்தது.

சிவராம் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டை ஒரு தனிச் சம்பவம் அல்ல. கடந்த சில வாரங்களாக கொழும்பின் பல பாகங்களிலும் மற்றும் மட்டக்குளிய, கொட்டஹேன, தெஹிவலை போன்ற புறநகர் பகுதிகளிலும் பொலிஸ் தேடுதல் நடத்தியுள்ளது. ஒரு தொகை மக்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்திய தளபதியான கருணா என்றழைக்கப்படும் வி. முரளீதரன், அதிலிருந்து பிரிந்து சென்று தனது சொந்த அமைப்பை ஸ்தாபிக்க முயற்சித்ததை அடுத்து தோன்றிய, விடுதலைப் புலிகளுக்குள்ளேயான கோஷ்டி மோதல் இந்த தேடுதல் நடவடிக்கைகளுக்கான உடனடி காரணமாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் கலகத்தையும் கொலைகளையும் விளைபயன்களுடன் நசுக்கிய போதிலும், கருணாவின் ஆதரவாளர்கள் தங்கியிருப்பதாக அறிவிக்கப்படும் கிழக்கிலும் மற்றும் கொழும்பிலும் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இந்த இரு எதிர் குழுக்களும் கொழும்பில் செயற்படுவதாக பொலிசாரும் இராணுவத்தினரும் கூறுகின்றனர். அதிகரித்து வரும் கோஷ்டி மோதல்களையிட்டு எச்சரிக்கை செய்யும் செய்திகளை சேகரித்த ஊடகங்கள், தேடுதல் நடவடிக்கைகளை தூண்டின. பாதுகாப்பு படைகள், தமிழர்களுக்கு எதிரான பரந்த தேடுதல் வேட்டையை அதிகரிப்பதற்காக இந்த நிலமையை சுரண்டிக்கொள்வது முற்றிலும் சாத்தியமானதாகும். சிவராமின் வீட்டில் நடத்தப்பட்டுள்ள தேடுதல் அடுத்து வரவுள்ளது என்ன என்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

குறிப்பிடத்தக்க வகையில், அரசாங்க தகவல்துறை அமைச்சோ அல்லது, ஜனாதிபதி செயலகமோ தேடுதல் நடவடிக்கை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கவில்லை. முன்னைய சம்பவங்களில், இந்த இரு நிலையங்களில் ஏதாவது ஒன்று, சம்பவம் பற்றிய மேலெழுந்தவாரியான மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்த மெளனமானது, இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அரசாங்கத்தினதும் மற்றும் அரசினதும் உயர் மட்டத்தினரால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதற்கான ஒரு அறிகுறியேயாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved