World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்

Does Haiti's "non-violent" opposition want a bloodbath in Port-au-Prince?

ஹைட்டியின் "அகிம்சை வாத" எதிர்க்கட்சி போர்ட்-ஒ-பிரின்சில் ஓர் இரத்தக் களரியை விரும்புகிறதா?

By Keith Jones
26 February 2004

Back to screen version

அமெரிக்கா, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் இவ் வறிய காரிபிய நாட்டின் நெருக்கடியைத் தீர்க்க தெரிவித்த உடன்பாட்டை, தன்னைத்தானே "அகிம்சை முறையில்" செயல்படுவது என அறிவித்துக் கொள்ளும் அரசியல் எதிர்க்கட்சி நிராகரித்துள்ளது. பத்திரிகை இந்த தோல்வியுற்ற உடன்பாட்டை அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் உடன்பாடு என முத்திரையிட்டுள்ளது. உண்மையில், இது எதிர்க்கட்சியான ஜனநாயக அரங்கிற்கு (Democratic Platform) - ஹைட்டியின் சர்வாதிகார, மரபுவழி செல்வந்த தட்டின் அரசியல் பிரதிநிதிகள் தலைமையிலான கூட்டணிக்கு --நாட்டின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதியான ஜீன்-பெர்ட்ராண்ட் அரிஸ்டைடின் உடனடி ராஜிநாமைவை தவிர, கிட்டத்தட்ட அது கேட்டிருந்த அனைத்தையும் வழங்கத் தயாராக இருந்தது.

இந்த உடன்பாட்டின்படி, அரிஸ்டைட் வெறும் பெயரளவிற்குத்தான் ஜனாதிபதி என்ற நிலைக்கு, மதிப்புக் குறைப்பிற்கு உட்பட்டிருப்பார்; அவருடைய அதிகாரங்கள் வாஷிங்டன் முடிவெடுக்கக் கூடிய ஒரு முத்தரப்புக் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதம மந்திரிக்கு மாற்றப்பட்டிருக்கும். இந்தக் குழுவிற்கு புதிய சட்டமன்ற, ஜனாதிபதி தேர்தல்களை நடத்தும் அதிகாரமும், பாதுகாப்பு படைகளை அவற்றின் "அரசியல்", அதாவது அரிஸ்டைடின் செல்வாக்கிலிருந்து, குறைத்து மறு சீரமைக்கும் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருந்திருக்கும்.

இத்திட்டத்திற்கு காண்பித்துள்ள எதிர்ப்புக்களை கைவிடுமாறு வற்புறுத்தும் முயற்சியில், வாஷிங்டன், அரிஸ்டைடும் அவருடைய லாவாலாக் கட்சியினரும் "அமைதி ஒப்பந்தத்தின்" விதிகளை சரிவரச் செயல்படுத்துகின்றனரா என்பது பற்றிய தொடர்ச்சியான மதிப்பீடுகளை, தேவையானால் வாராந்திரமாகக் கூட, மேற்கொள்ளலாம் என்று இணங்கியிருந்தது. அவை சரிவர செயல்படுத்தப்படவில்லை என்றால் ஜனாதிபதியை பதவி இறக்கம் செய்யவும் தயார் என்பதையும் அமெரிக்கா தெளிவுபடுத்தியிருந்தது.

எதிர்க்கட்சியின் நிராகரிப்பு "இந்த அதிகாரப் பகிர்வு திட்டத்தை தயாரித்து, அதற்கு எப்படியும் எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த புஷ் நிர்வாக அதிகாரிகளுக்கு ஆச்சரியம் அளித்தது" என்று New York Times தெரிவிக்கிறது. ஆனால் புஷ் நிர்வாகம் பேச்சுவார்த்தைகளின்போது பாசிசக் குண்டர்களால் தலைமை தாங்கப்பட்டு ஆயுத எழுச்சியில் வீழ்ந்துகிடக்கும் நாடு உள்ள நிலையில், அது ஹைட்டியின் அரசியலமைப்பு முறையிலான அரசாங்கத்தை, அரிஸ்டைட் ஜனநாயக அரங்கத்துடன் உடன்படிக்கை கொண்ட பிறகுதான் நிலைநிறுத்தும் என்று கூறியதின்மூலம், எதிர்க்கட்சியின் கையில் வலுவாக அடிக்கக் கூடிய சாட்டையை கொடுத்தது போல் ஆகிவிட்டது.

எதிர்க்கட்சியின் ஜனநாயகம் பற்றிய போலி அக்கறைகள் எப்பொழுதுமே மெல்லியதுதான். அரிஸ்டைடின் அதிருப்தியடைந்த தொண்டர்களையும் சேர்த்துக் கொண்டுள்ளது என்றாலும், டுவலியர், செட்ரஸ் ஆகிய சர்வாதிகாரிகளின் பழைய ஆதரவாளர்களுடைய தலைமையில் வழிநடத்தப்படுகிறது; இதற்கு குடியரசுக் கட்சி தலைமையுடன் நீண்டகால, நெருங்கிய தொடர்பு உண்டு; அமெரிக்க ஜனாதிபதியான மூத்த புஷ் 1991 ஆட்சிக்கவிழ்ப்பில் அரிஸ்டைட் பதவி இழந்ததற்கு ஆதரவு கொடுத்தது, பின்னர் கிளின்டன் நிர்வாகம் இவரை மீண்டும் ஆட்சியில் இருத்தியதற்கு குடியரசுக்கட்சி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.

வாஷிங்டனை போலவே, எதிர்க் கட்சியும், பெப்ரவரி 5ம் தேதி நாட்டில் ஹைட்டியின் கலைக்கப்பட்ட இராணுவம், மற்றும் FRAPH கொலைப் படை இவற்றில் பழைய தலைவர்களினால் வழிநடத்தப்பட்டு வரும், வடக்குப்பகுதியில் தோன்றிய ஆயுதமேந்திய எழுச்சியைப் பயன்படுத்திக் கொண்டு, போர்ட்-ஒ-பிரின்சில் ஆட்சிமாற்றத்தை வலியுறுத்தி வருகிறது.

தொடக்கத்தில், ஜனநாயக அரங்கின் தலைவர்கள் எழுச்சியை வரவேற்றனர். பின்னர் அவர்கள் தங்களை "அகிம்சாவாத" எதிர்ப்பாளர்கள் என தாங்களே கூறிக்கொண்டனர்; இது தங்களுக்கும் துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும் இடையே தொலைவு இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதைக் குறிக்கும். ஆயினும்கூட, திங்களன்று, ஒரு முக்கியமான ஹைட்டிய வணிகரான ஹான்ஸ் டிப்பென்ஹெளர், ஒரு எதிர்க்கட்சிச் செய்தியாளர் கூட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் "சுதந்திரத்திற்குப் போராடுபவர்கள்" எனக் கூறினார். பழமொழியின்படி கூறப்படும் பூனையை பையிலிருந்து கட்டவிழ்த்துவிட்ட இந்த டிப்பென்ஹெளருடைய பேச்சில் பயந்துபோன, அமெரிக்க குடிமகன், முக்கிய எதிர்க்கட்சி செய்தி தொடர்பாளர் மற்றும் கடும் உழைப்புக்கூட உரிமையாளரான ஆண்ட்ரே அபைட் குறுக்கிட்டுக் கூறினார்: "நாங்கள் அகிம்சை முறையைக் கைக்கொள்ளும் அமைதியான இயக்கத்தைத்தான் கொண்டிருக்கிறோம்."

அமெரிக்கா ஆதரிக்கும் அதிகாரப்பகிர்வு திட்டத்தை நிராகரித்ததில், எதிர்க்கட்சி புஷ் நிர்வாகம், வெறுக்கப்பட்டிருக்கும் அரிஸ்டைடுக்கு ஊக்கம் கொடுப்பதற்காக தங்களை ஒருபோதும் அவமானப்படுத்தாது என்ற கணக்கை போட்டிருந்தது. உண்மையில், தன்னுடைய திட்டம் சரிந்ததற்கு வாஷிங்டன் விடையிறுக்கும் வகையில் தான் தொடர்ந்து எதிர்க்கட்சியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும், அரிஸ்டைடின்மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நேற்று இரவு Asssociated Presss அறிவித்ததாவது: "இரண்டு மேலைநாட்டு தூதர்கள் தங்களுடைய சக ஊழியர்கள் அரிஸ்டைட் ராஜிநாமா செய்யுமாறு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்."

ஆனால், எதிர்க்கட்சி ஓர் உடன்பாட்டை ஆணவமான முறையில் நிராகரித்து அரிஸ்டைடின் ஆட்சிக்குத் திறமையுடன் முற்றுப்புள்ளி வைத்ததும், இதை ஒட்டி ஹைட்டி மனிதப் பேரழிவையும், உள்நாட்டுப் போரையும்கூட எதிர்கொள்ளக்கூடும் என்பதைப் பற்றி அசட்டை செய்துள்ளது, ஒரு வினாவை எழுப்புகிறது; அது, அல்லது அதிலுள்ள முக்கியக் கூறுபாடுகள், போர்ட்-ஒ-பிரின்சில் ஓர் இரத்தக் களரிக்கு தயார் செய்கிறதா அல்லது சதித்திட்டம் கொண்டுள்ளதா என்பதே ஆகும். இது வடக்கில் எதிர்ப்பாளர்கள் தாக்குதலுக்கு வரவேற்பளிக்கும் வகையாகவும் இருக்கலாம்; ஆனால் இன்னும் கூடுதலாக, தேசியப் போலீசும் அரசாங்கமும் சிதைந்துகொண்டு போகும் நிலையில், இது தனியே அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியாகவும் இருக்கலாம். ஹைட்டியின் வணிக உயர்குழு ஏற்கனவே ஏராளமான தனிப்பட்ட பாதுகாப்புப் படைகளை தங்கள் அதிகாரத்தின்கீழ் கொண்டுள்ளன; இவர்களில் பெரும்பாலானோர் ஹைட்டிய இராணுவத்தில் முன்பு இருந்தவர்களே ஆவர்.

உலக சோசலிச வலைதளம் அரிஸ்டைடுக்கு வக்காலத்து வாங்கவில்லை. 1985 லிருந்து 1991க்குள் ஹைட்டி நாட்டையே மிகப்பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு உலுக்கியபோது அதைத் தகர்த்ததில் இவர் முக்கிய பங்கு கொண்டிருந்தார்; சமுதாயத்தை தாக்கும் IMF மறுசீரமைப்புத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்; மேலும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளுவதற்காக வன்முறையையும், ஊழலையும் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் அரிஸ்டைட், டுவாலியரை விட மோசம், கிட்டத்தட்ட பிசாசின் மறு உரு என்று எதிர்க்கட்சி கூறுவது வெறும் வலதுசாரியினரின் மக்களைத் திருப்திப்படுத்தும் பேச்சு அல்ல. ஹைட்டியின் சலுகை பெற்றுள்ள செல்வந்தத்தட்டு அரிஸ்டைடை, கீழிருந்து வலிமை பெற்றுள்ள அறைகூவலுடன் அடையாளம் காண்கிறது; இவர் வெளியேற்றப்படுதல் நாட்டின் இயற்கையான ஒழுங்கை மீண்டும் நிலைநிறுத்தும் என்ற கருத்தைக் கொண்டுள்ளது; ஆனால் இருந்த ஒழுங்கோ நாட்டின் பெரும்பாலான மக்களை படிப்பறிவற்ற தன்மையிலும், கொடிய வறுமையிலும் தள்ளியிருக்கிறது.

எந்த அளவிற்கு இந்த "அகிம்சை வாத" எதிர்ப்பு செல்ல உள்ளது என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்; வாஷிங்டனுடைய துணையுடன் அரிஸ்டைட்டை அதிகாரத்திற்கு கொண்டுவந்திருந்த போர்ட்-ஒ-பிரின்சின் சேரிவாழ் மக்களின்மீதும் எந்த அளவிற்கு பழிவாங்க முற்படுகிறது என்பதும் காணப்படவேண்டும். ஆனால் ஏற்கனவே ஹன்ஸ் டிப்பென்ஹெளர் போன்றவர்கள் வெளிப்படையாகவே, பழைய குருதிதோய்ந்திருந்த சர்வாதிகாரிகளினுடைய ஆயுதமேந்திய காலிகளின் தலைமையிலான, வடக்கு ஹைட்டி எதிர்ப்பு படைகளுக்கு பாராட்டுத் தெரிவிக்க தலைப்பட்டுள்ளனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved