World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spain: Tens of thousands march against Iraq occupation

ஸ்பெயின்: ஈராக்கில் ஆக்கிரமிப்புக்கு எதிராக பல்லாயிரக் கணக்கானோர் கண்டனப்பேரணி

By Vicky Short
19 February 2004

Back to screen version

ஸ்பெயினில், பெப்ரவரி 15-ல், ஞாயிறன்று பல்லாயிரக்கணக்கானோர் ஓராண்டிற்கு முன்னர் ஈராக் போருக்கு எதிராக திரண்ட லட்சம் பேர் அடங்கிய கண்டனப்பேரணியை நினைவுபடுத்துகின்ற வகையில் அணிவகுப்புக்களை நடத்தினர். சென்ற ஆண்டு ஈராக்கிற்கு எதிராக போர் தொடுக்கப்பட்டதை ஸ்பெயின் நாட்டு மக்கள் மிகப்பெருமளவில் எதிர்த்தனர். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய ஆர்பாட்டத்தை நடத்தினர். குறிப்பாக பார்சிலோனாவில் மட்டுமே 15-லட்சம் பேரும், மாட்ரிட்டில் 10-லட்சத்திற்கு மேற்பட்டவர்களும் அப்போது கண்டனப்பேரணியில் பங்கெடுத்துக் கொண்டனர்.

தலைநகர் மாட்ரிட்டில் ஆண்டுநிறைவைக் குறிக்கும் வகையில் மிகப்பெரிய பேரணி இப்போது நடைபெற்றது இந்தப்பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் தந்திருக்கும் தகவலின்படி நகரின் மையப்பகுதியில் 1,50,000-பேர் திரண்டார்கள் மற்றும் ஈராக்கிலிருந்து ஸ்பெயின் துருப்புக்கள் வெளியேறவேண்டும் என்றும் அந்நாட்டு ஆக்கிரமிப்புக்கு புற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். ஸ்பெயின் "சட்ட விரோதமான மற்றும் தார்மீக ஒழுக்கத்திற்கு எதிரான" அந்தப்போரில் கலந்து கொண்டதற்கான உண்மையான காரணத்தை பிரதமர் ஜோஸ்மரியா அஸ்னார் கூறவேண்டும் என்றும் கேண்டுக்கொண்டனர்.

மாட்ரிட் சமூக அரங்கு (Madrid Social Forum) ''ஓராண்டிற்குப் பின்னர்...... போருக்கு எதிராக மாட்ரிட்'' என்ற முழக்கத்தின் கீழ் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டு தொலைக்காட்சி நிறுவனமான Telecinco- விற்காக கேமிராமேனாக பாக்தாத்தில் பணியாற்றி வந்த 37-வயது Jose couso- ஏப்ரல் 8ம் தேதி பாக்தாத் வீழ்ச்சியடைவதற்கு முதல் நாள் எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாமல் பாலஸ்தீன ஹோட்டல் மீது அமெரிக்க டாங்கிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது உறவினர்களும், நண்பர்களும், இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். (பார்க்க, ''ஈராக்கில் ஸ்பெயின் பத்திரிகையாளர்கள் மரணத்தால் வெடித்த எதிர்ப்புக்கள்'')

எல்லா அரசியல் கட்சிகளும் ஆளும் PP- கட்சி நீங்கலாக இந்தப்பேரணியில் கலந்து கொண்டன. கூட்டுறவுகள், புறநகர் குடியிருப்புக்கள், தொழிற்சங்கங்கள், சுற்றுப்புற சூழல் பராமரிப்பு இயக்கத்தினர், சமாதான இயக்கத்தினர், திரைப்பட மற்றும் கலை பண்பாட்டுத்துறைகளை சார்ந்தவர்கள் என 40- அமைப்புக்களின் சார்பில் பிரதிநிதிகள் பங்கெடுத்துக் கொண்டனர், மிகப்பெருமளவில் திரண்டு கலந்து கொண்டனர்.

எழுத்தாளர் ரோசா ரிகார்ஸ் மற்றும் நடிகர் Juan Diego Botto ஆகியோர் ஈராக்கில் சர்வதேச துருப்புக்கள் இருப்பதற்கு எதிராகவும் ஈராக் மக்களுக்கு தங்களது இறையாண்மையை முடிவு செய்து கொள்கின்ற சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றும் அறிக்கையொன்றைப் படித்தனர்.

''ஈராக் மக்கள் அவர்களது எண்ணெய் முழுவதையும் தங்கள் கையில் எடுத்துகொண்டு தங்கள் நாட்டை தாங்களே மீளக் கட்டியமைத்துக்கொள்ள முடியும்''- என்று எழுத்தாளர் Ragas- குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயர் மற்றும் அஸ்னர்- மூவரும் சதாம் ஹூசைனிடம் பயங்கர ஆயுதங்கள் குவிந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய பொழுது "நனவாகவே பொய் சொன்னார்கள்" மற்றும் அதே நேரத்தில் அவர்களது உண்மையான நோக்கங்கள் என்னவென்றால் "ஈராக் எண்ணெய்யைக் கைப்பற்றிக்கொண்டு" ஈராக்கில் "காலனித்துவ பாணி" ஆட்சியை நிறுவுவதாகும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மக்களைத்திரட்டி எதிர்ப்பு இயக்கம் நடத்துவதற்கு ஈராக் மக்களுக்கு உள்ள நியாயமான உரிமையைப் பேணியது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

கட்டலோனியாவில் கண்டனப் பேரணி ஒவ்வொரு நகரத்தையும் அடிப்படையாகக் கொண்டு பரவலாக நடத்தப்பட்டது. பார்சிலோனாவில் 10,000-த்திற்கு மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர் மற்றும் 30-மாநகர்களிலும் அந்த மாகாணம் முழுவதிலும் உள்ள நகர்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் தனித்தனியாக பேரணிகளை நடத்தினர்.

''போரை நிறுத்து'' இயக்கத்தின் பிரதிநிதி இந்தப்பேரணியில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போது, மார்ச் 20-ல்தான் ஈராக் மீது விமான குண்டு வீச்சு தாக்குதல்கள் தொடங்கின. அந்த அடிப்படையில் அடுத்த மாதம் 20-ந்தேதி சர்வதேச அளவில் ஈராக் தாக்குதலை நினைவுப்படுத்தும் ஆண்டு நிகழ்ச்சியை நடத்துவதென்று பம்பாயில் உலக சமூக அரங்கு முடிவு செய்தது. "அப்படியிருந்தும் இந்த ஆண்டு நினைவு நிகழ்ச்சியை புறக்கணித்துவிட முடியாது. போருக்கு எதிராக மக்கள் லட்சக்கணக்கில் திரண்டனர். போரைத் தொடங்குவதற்கு கூறப்பட்ட ஒவ்வொரு பொய்யான சாக்குப்போக்கும் ஒன்றன்பின் ஒன்றாகப் பொறிந்தது. பயங்கர ஆயுதங்கள் எதுவுமில்லை, பயங்கரவாதத்தோடு எந்த விதமான தொடர்புமில்லை, ஈராக் மக்களுக்கு சுதந்திரம் எதுவுமில்லை, ஓராண்டிற்குப் பின்னர் ஈராக் மக்கள் மேலும் பாதுகாப்பற்ற நிலையில் தள்ளப்பட்டிருக்கின்றனர்" என்று விளக்கினார்.

வலன்ஸியா, செவில் மற்றும் இதர ஸ்பெயின் நகரங்கள் பலவற்றில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இவற்றில் அமெரிக்க தூதரகங்கள் மற்றும் கொன்சுலாட் அலுவலகங்கள் முன்னர் நடத்தப்பட்ட பேரணிகளும் அடங்கும்.

ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் (ICT) தாக்கல் செய்வதற்கு சட்டப்பூர்வமான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய விவரங்களைத் தயாரித்துக் கொண்டிருப்பதாக பார்ஸிலோனா ஆர்ப்பாட்ட முடிவில், அதன் அமைப்பாளர்கள் தெரிவித்தனர். ''போரை நிறுத்து'' இயக்கத்தை சார்ந்தவர்கள் ஆக்கிரமிப்புக் குற்றம் புரிந்த பிளேயர் மற்றும் அஸ்னர் மீது சட்டபூர்வமான கிரிமினல் வழக்கு விசாரணையை தொடக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved