World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: political posturing over oil price hikes

இந்தியா: எண்ணெய் விலை உயர்வில் அரசியல் தோற்றப்பாட்டு நாடகம்

By Ganesh Dev and Singam Thayan
9 December 2004

Back to screen version

இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு முன்னணி (UPA) அரசாங்கம் சென்றமாதம் அறிவித்த பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு மத்திய நாடாளுமன்றத்தில் அனைத்து தரப்பினருமே நாடகமாடுகின்ற நிகழ்ச்சியாக முடிந்திருக்கிறது.

ஏற்கனவே பணவீக்கம் 7- சதவீத்திற்குமேல் உயர்ந்துகொண்டிருக்கிறது மற்றும் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகிவற்றின் விலையை உயர்த்துவது பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் தாக்கத்தை உருவாக்கிவிடும் என்பதை அரசியல் செல்வந்த தட்டு நன்றாகவே அறிந்திருக்கின்றனர்.

அதிகாரபூர்வ வலதுசாரி எதிர்கட்சியான இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சியும் (BJP) அதன் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) பங்காளர் கட்சிகளும் இந்திய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்ப நாளான டிசம்பர் 1 -ம் தேதி பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக்கண்டித்து வெளிநடப்புச்செய்தன.

சென்ற மே மாதம், அரசியல் அதிகாரத்திலிருந்து கீழிறங்கிய பாரதிய ஜனதாக் கட்சி, அது பெருவர்த்தக மற்றும் செல்வந்தத்தட்டு மக்களின் கட்சி என்ற ஆழமான சிறந்த அடிப்படை கொண்ட கருத்தை மறுப்பதற்கு ஒரு வழியாக, பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைப் பிடித்துகொண்டது. பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான NDA- ஆறு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது, அப்போது அது நவீன-தாராளவாத பொருளாதார கொள்கைகளை கடைபிடித்ததன் விளைவாக வறுமையும், பொருளாதார பாதுகாப்பின்மையும், சமூக ஏற்றத்தாழ்வுகளும் மிகப்பெருமளவிற்கு திடீரென்று உயர்ந்தன.

இந்தியாவின் கீழ்சபையான மக்களவையில் பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத்தலைவரான V.K. மல்ஹோத்ரா உரையாற்றும்போது இந்த விலை ஏற்றங்களால் இந்தியாவில் பணவீக்கம் இரட்டை இலக்கத்திற்கு சென்றுவிடும் என்று குறிப்பிட்டார். ஐக்கிய முற்போக்கு முன்னணியின் பிரதான பங்காளியான காங்கிரஸ் கட்சி தேர்தல் நேரத்தில் ''சாதாரண மனிதனுக்கு'' தந்த உறுதிமொழியை காட்டிகொடுக்கும் வகையில் செயல்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்.

நாடாளுமன்றத்திலிருந்து NDA வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயியும் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்றத் தலைவருமான L.K. அத்வானியும் தெருவில் எதிர்ப்புப்பேரணி நடத்தியபோது கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறிது நேரம் போலீசாரால் காவலில் வைக்கப்பட்டு எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டனர்.

பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென்று பாரதிய ஜனதாக் கட்சி அழைப்பு விடுத்திருப்பது, அரசாங்க கூட்டணிக்குள் நிலவுகின்ற பிளவுகளையும், UPA இற்கும், இடது முன்னணிக்குமிடையே நிலவுகின்ற பிளவுகளையும் பயன்படுத்திக்கொள்வதை நோக்கமாகக் கொண்டது. இடதுமுன்னணியின் ஆதரவினால்தான் UPA அதிகாரத்தில் இருக்கிறது--- அந்த அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மற்றும் பார்வேர்டு பிளாக் ஆகிய கட்சிகள் அடங்கியிருக்கின்றன. ஸ்ராலினிஸ்ட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் இடதுமுன்னணி அரசாங்கத்தில் பதவியேற்பதில்லை என்று முடிவு செய்தாலும் UPA அரசாங்கத்தின் செயற்திட்டத்தை தெளிவாக வரையறை செய்யும் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை (Common Minimum Programme -CMP) உருவாக்குவதில் அது உதவியது. மேலும் இடது அணியின் முன்னணித் தலைவர்கள், அடிக்கடி பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் இதர முதல் நிலை UPA அரசியல்வாதிகளையும் UPA- இடதுமுன்னணி ''ஒருங்கிணைப்புக் குழு'' மூலம் சந்தித்துப் பேசுகின்றனர், அந்த ஒருங்கிணைப்புக் குழு அரசாங்கம் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை அமுல்படுத்துவதில் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டதாகும்.

பெட்ரோலிய பொருட்கள் விலை ஏற்றத்தை இடதுமுன்னணி கண்டித்துள்ளது மற்றும் தனது பெயரில் அல்லது தன்னோடு இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயக்குழுக்கள் பெயரில் அறிக்கைகளை வெளியிட்டும், எதிர்த்தும் கண்டனப்பேரணிகளை நடத்தி வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தையும், ஒடுக்கப்படும் வெகுஜனங்களையும் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தோடு கட்டிப்போடுவதை நோக்கமாகக் கொண்டது, தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் தாக்குதலை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டதல்ல.

UPA- அரசாங்கத்திற்கு தனது ஆதரவை விலக்கிக்கொள்வது தொடர்பான எந்த சந்தேகத்தையும் ஸ்ராலினிஸ்டுகள் உடனடியாக நீக்கிவிட்டனர், இந்து வகுப்புவாத பாரதிய ஜனதாக் கட்சியை எதிர்ப்பதற்கு உழைக்கும் மக்கள் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தை ஆதரிப்பது ஒன்றேவழி என்று திரும்பத்திரும்ப கூறிவருகின்றனர். ''அரசாங்கம் பதவியில் நீடித்து சாதனை புரிய வேண்டும், இதில் பிரதானமான பிரச்சனை நாங்கள் ஆதரவை விலக்கிக்கொள்வதோ, அல்லது தொடர்ந்து ஆதரவு தருவதோ அல்ல'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் D. ராஜா குறிப்பிட்டார். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரான, சீதாராம் எச்சூரி ''பிரதானமான பிரச்சனை நாங்கள் ஆதரிக்கிறோமா? அல்லது ஆதரவை விலக்கிக்கொள்கிறோமா? என்பதல்ல குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை அரசாங்கம் நேர்மையோடு செயல்படுத்துகின்றதா என்பதுதான் முக்கியப்பிரச்சனை'' என்று குறிப்பிட்டார்.

ஸ்ராலினிச தலைவர்கள் நன்கு அறிந்தவாறே குறைந்தபட்ச பொது செயல்திட்டம் ஒரு மோசடி ஆகும். காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் பொருளாதார சீர்திருத்தங்களை- அதாவது இந்தியாவை சர்வதேச முதலீடுகளுக்கான ஒரு மலிவுக்கூலி மையமாக மாற்றும் நோக்கைக் கொண்ட. நவீன தாராள சீர்திருத்தங்களை அமல்படுத்தல் மற்றும் மக்கள் ஆதரவு கொள்கைகளை கடைபிடிக்கும் என்ற ஒரு போலியான கூற்றை அது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

அப்படியிருந்தும் ஸ்ராலினிஸ்டுகள் ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம்- பாரம்பரிய இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆளுங்கட்சி --மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கம், அவர் 1990-களின் ஆரம்பத்தில் நிதியமைச்சராக பணியாற்றியபோது நவீன-தாராளவாத கொள்கைகளுக்கு இந்தியாவை மற்றும் முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டவர்- இப்போது மக்களை கவரும் வெற்று உறுதி மொழிகள் அடங்கிய குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை நிறைவேற்ற தவறுகின்ற நேரத்தில் எல்லாம் ஸ்ராலினிஸ்டுக்கள் தாங்கள் வியப்படைவதாக நாடகமாடுகின்றனர்--- அதே நேரத்தில் மன்மோகன் சிங் தனியார்மயமாக்கல், நெறிமுறைகள் தளர்வு மற்றும் முதலீட்டாளர் ஆதரவு கொள்கைகளை முனைப்போடு செயல்படுத்தி வருகிறார்.

தங்களது மேற்குவங்காள கோட்டையில்--- 1977 முதல் இடது முன்னணி மாநில அரசாங்கத்தை நடத்தி வருகிறது--- ஸ்ராலினிஸ்டுகளே முதலாளித்துவ சீர்திருத்தங்களை தழுவிக்கொண்டு ஒரு ''மனித நேய'' போக்கை கடைபிடிக்க இயலாது என்பதை எடுத்துக்காட்டியுள்ளனர். முதலீட்டாளர்களது ஆதரவை பெறுவதில் ஆர்வம் கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் இதர அரசாங்கத் தலைவர்களும், வேலை நிறுத்தங்கள் மற்றும் கண்டனப்பேரணிகளை தொழிற்சங்கங்கள் நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டுமென்று கோரிக்கைவிடுப்பதில் மிகுந்த ஆவேசப்போக்கில் காணப்படுகின்றனர்.

இந்த நிலைப்பாட்டை ஒட்டியும் வலதுசாரி டெலிகிராப் (கல்கத்தா) இடதுசாரி அரசிற்கு தெரிவித்துள்ள முழுமையான பாராட்டையும் கருத்தில் கொண்டு, எண்ணெய் விலை உயர்வுகளை கண்டித்து மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்ட்டுக்கள் அழைப்பு விடுத்திருக்கும் ஒரு நாள் பொதுவேலைநிறுத்தம் அல்லது ஹர்த்தாலினால் உற்பத்தி மற்றும் வர்த்தக வாழ்வு சீர்குலைந்து விடாது தடுப்பதில் இடதுசாரி அரசாங்கம் ஒரு தீவிர முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் புதிய கடுமையான அணுகுமுறையால் உத்வேகம் பெற்று நீதிமன்றங்கள், மாவோயிஸ்டுக்கள் நடத்தும் ஹர்த்தாலும் NDA -வுடன் கூட்டணியிலுள்ள திருணாமுல் காங்கிரஸ் நடத்தும் ஹர்த்தாலும் சட்டவிரோதமானவை என்று அறிவித்திருப்பதுடன் நீதிமன்ற கட்டளைகளை மீறி நடப்பார்களானால், அவ்விரு கட்சிகளின் அரசியல் அங்கீகாரத்தை இரத்து செய்துவிடுவதாக அச்சுறுத்தியுள்ளன.

எண்ணெய் விலை உயர்வு தொடர்பாக அதை கண்டிப்பவர்களுக்கு மேலாக தன்னுடைய உணர்வுகளை வெளிச்சம் போடுக்காட்டுவதற்காக UPA அரசாங்கம் மக்களது துன்பத்தை உணர்வதாக நாடகமாடியது. உலக எண்ணெய் விலைகள் அண்மையில் வீழ்ச்சியடைந்ததை சாதகமாக எடுத்துக்கொண்டு பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வில் ஒரு பகுதியை இரத்து செய்தது. அதே நேரத்தில் விலை உயர்வை அது நியாயப்படுத்தியது ''கல்வி, சுகாதார சேவைகள், பாசனம் மற்றும் விவசாயத்திற்கு'' அதிகமாக செலவிட வேண்டியிருப்பதால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தாவிட்டால் அரசிற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கம்பெனிகளின் இலாபம் ஈட்டும்திறனும் பாதிக்கப்படும், ஏனெனில் இந்தியா தனது பெட்ரோலிய தேவையில் 70-சதவீதத்திற்கு மேல் இறக்குமதி செய்கிறது என்று கூறியது.

நவம்பர் 15ல் அரசாங்கம் அறிவித்த பெட்ரோல் விலை உயர்வை லிட்டருக்கு 2.2 ரூபாயிலிருந்து 1.16 ரூபாயாக குறைத்தது மற்றும் நவம்பர் 24-ல் UPA- இடதுமுன்னணி ஒருங்கிணைப்புக் கூட்டத்தை தொடர்ந்து அடுத்த நான்கு மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் LPG சிலிண்டர் விலையில் ரூபாய் 5- வீதம் உயர்த்தும் திட்டத்தை கைவிடுவதாக அரசாங்கம் அறிவித்தது. நவம்பர் 4-ல் அரசாங்கம் LPG சிலிண்டர் விலையை ரூபாய் 20 ஆக உயர்த்தியது.

இப்படி விலை உயர்வை குறைத்தது இருவகை நோக்கத்தை கொண்டதாகும்: பொது மக்களது தேவைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கிறது என்று காட்டுவதற்கும் அரசாங்கத்தை ஆதரிப்பது மற்றும் CMP ஒருங்கிணைப்புக் குழுவில் ஸ்ராலினிஸ்டுகள் பங்கெடுத்துக் கொள்வதை நியாயப்படுத்துவதற்கு ஒரு சாக்குப் போக்கை அவர்களுக்கு தருகிறது.

ஆனால் அரசாங்கம் ஒரு கையால் வழங்குகின்ற சலுகையை மற்றொரு கையால் தட்டிப்பறித்துக் கொள்கிறது. அதற்கு சில நாட்களுக்குப் பின்னர் LPG விலையில் மறு உயர்வை இரத்து செய்த பின்னர், பண வீக்கத்தை மேலும் உசுப்பிவிடுகிற அளவிற்கு நிலக்கரி, சிமெண்ட், மற்றும் கனரக பண்டங்களின் சரக்கு கட்டணங்களை உயர்த்தியது.

மிகவும் அடிப்படையாக, பொதுமக்களது கவனம் எண்ணெய் விலை உயர்வு பிரச்சனையில் குறியாக இருக்கும்போது UPA அரசாங்கம் சர்வதேச முதலீடுகளுக்கும், இந்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தாராளமயமாக்கலை முன்னெடுத்துச்செல்வதில் உறுதியளிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது. மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் பா. சிதம்பரமும் இலாபத்தில் நடக்கும் அரசாங்கக் கம்பெனிகளது சிறுபான்மை பங்குகளை அரசாங்கம் விற்றுவிடுமென்று சமிக்கை காட்டியுள்ளனர், அதே நேரத்தில் ''நொடிந்துவிட்டது'' என்று கூறப்படும் பொதுநிறுவன பகுதிகளை விற்றுவிடவும் அல்லது மூடிவிடவும் முடிவுசெய்து திட்டங்களை அறிவித்திருக்கின்றனர் ''பூகோள நடைமுறைகளுக்கு'' ஏற்ப தொழிற்சாலை நெறிமுறைகளயும், தொழிற்கூட சோதனைகளையும் கட்டுப்படுத்துகின்ற சட்டங்களை மாற்றுவதற்காக திட்டங்களையும், அறிவித்திருக்கின்றனர், பொது உள்கட்டமைப்புக்களில் பில்லியன் கணக்கான டாலர்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக இந்தியாவின் முன்னணி முதலாளித்துவ வாதிகளில் மிக முக்கியமான ஒருவரை அதற்கான குழுவின் தலைவராக அரசாங்கம் நியமித்துள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved