World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Rumsfeld: "Frontline in terror war"

Washington signals escalation of US intervention in Colombia

ரம்ஸ்பெல்ட்: "பயங்கரவாத போரின் முன்னணியில்"

கொலம்பியாவில் அமெரிக்கத் தலையீட்டை அதிகரிக்க வாஷிங்டன் சமிக்கை காட்டுகிறது

By Bill Vann
26 August 2003

Back to screen version

கொலம்பியாவில் 40 ஆண்டுகளாக நிகழும் உள்நாட்டுப் போரில் தன்னுடைய இராணுவத் தலையீட்டை அதிகரித்துக்கொள்ளத் தயாராகிவிட்டது என கடந்த வாரம் புஷ் நிர்வாகம் வலுவான முறையில் சமிக்கை காட்டியுள்ளது.

பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்டும், படைப் பிரிவுகளின் கூட்டுத் தலைமையின் தலைவர் ஜெனரல் ரிச்சார்ட் மியர்ஸ் இருவரும் அடுத்தடுத்து போகோடா சென்று வந்ததையடுத்து, சட்ட விரோதமான போதை மருந்துகளையோ, ஆயுதங்களையோ சுமந்து வருவதாக சந்தேகப்படும் விமானங்களைத் தடுத்துச் சுட்டு வீழ்த்தும் நோக்கமுடைய முயற்சிகள், வான்வழிக் கட்டுப்பாட்டுத் திட்டம், மீண்டும் தொடக்கப்பெறலாம் என்பதற்கு புஷ் அனுமதி அளித்துவிட்டார் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

50 பேரடங்கிய குழுவிற்குத் தலைமையேற்று கொலம்பியத் தலைநகரை அடைந்த ரம்ஸ்பெல்ட் நாட்டின் வலதுசாரி ஜனாதிபதி அல்வாரோ உறிபி வெலெஸ் (Alvaro Uribe Velez) புஷ் நிர்வாகத்தின் ஆதரவை மீண்டும் வலியுறுத்திப் பேசினார்.

"அமெரிக்காவின் எண்ணம் இப்பகுதியில் உறுதித்தன்மை வேண்டும் என்றுள்ளதால், இப்பொழுது நான் இங்கு வந்திருக்கிறேன்" என்று தன்னுடைய ஒரு நாள் கொலம்பிய வருகையின்போது செய்தியாளர் மாநாட்டில் ரம்ஸ்பெல்ட் தெரிவித்தார். "நம்முடைய உலகப் பகுதியிலேயே கொலம்பியா ஒரு மிக முக்கியமான நாடு" என்று கூறிய அவர், "பயங்கரவாதத்திற்கெதிரான உலகளாவிய போரில் அது முன்னணியில் உள்ளது" என்றும் வலியுறுத்திக் கூறினார்.

ஜெனரல் மியர்ஸின் வருகைக்கு ஒரு வாரம் முடிவதற்குள்ளாகவே நடைபெற்ற ரம்ஸ்பெல்டின் விஜயம், கடந்த மாதம் புஷ் நிர்வாகம் கொலம்பியாவிற்கு இராணுவ உதவியை நிறுத்திய அறிவிப்பைப் பற்றி மறுபரிசீலனைக்குட்படுத்தப்படும் என்று தெரிவித்தது, உறிபிற்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் ஓரளவு அமைந்தது. கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட ஒரு சிறு தொகை வழங்காமல் போனதற்கான அந்த நடவடிக்கையானது, உலகம் முழுவதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ஏற்காமலிருந்ததற்கும், அமெரிக்கப் படைகள் மீது எந்தப் போர்க் குற்ற நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்காத நாடுகள் அனைத்துக்கும் எதிரான அமெரிக்காவின் பூகோள ரீதியான பதிலடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்தது.

இரு நாடுகளுமே குறிப்பிட்ட உடன்பாட்டிற்கு ஒப்புக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. இஸ்ரேல், எகிப்து இவற்றிற்கு அடுத்தபடியாக கொலம்பியா தான் அமெரிக்க இராணுவ உதவி பெறும் நாடுகளில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இராணுவப் பயிற்சியை பொறுத்தவரையில் கொலம்பியா தான் முதலிடத்தில் உள்ளது; அமெரிக்கச் சிறப்புப் படைகள், முறையான 15 கொலம்பிய இராணுவப் பட்டாலியன்களுக்குப் பயிற்சி கொடுத்துள்ளதோடு, வாஷிங்டனின் ஆலோசனையில் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்புப் பிரிகேடுக்கும் பயிற்சி கொடுத்துள்ளன; இந்தச் சிறப்பு பிரிகேட், அமெரிக்காவை சேர்ந்த ஆக்சிடன்டல் பெட்ரோலியம் நிறுவனத்தினுடைய (Occidental Petroleum Corporation) எண்ணெய் வயல்களிலிருந்து செல்லும் 500-மைல் அளவு குழாய் வழியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 75 பசுமை பெரட்டுக்கள் என்ற பிரிவும் எண்ணெய் வளம் கொழித்த அரவ்கா மாநிலத்தில் உள்ள இரண்டு இராணுவ தளங்களில் கொலம்பிய எண்ணெய் குழாய் பாதுகாப்புப் படைக்கு பயிற்சியளிப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கச் சந்தைக்கு முக்கிய கொகய்ன் (Cocaine) வழங்கும் நாடாக இருந்த கொலம்பியாவில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட என்ற நோக்கத்தை வெளிப்படையாகத் தெரிவித்து, 1.3 பில்லியன் டாலர் இராணுவ உதவிக்கான கொலம்பியா திட்டத்திற்கு ஒப்புதலை, அப்பொழுதிருந்த ஜனாதிபதி கிளின்டன், அளித்து இப்பொழுது 3 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதற்குப்பின் அமெரிக்க இராணுவ உதவி 3 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

செப்டம்பர் 11, 2001ல் நிகழ்ந்த வாஷிங்டன் மற்றும் நியூயோர்க் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து, கொலம்பியாவை, பயங்கரவாதத்திற்கெதிரான போரில் ஒரு களமாக புஷ் நிர்வாகம் அறிவித்தது. இதையொட்டி அமெரிக்க கூட்டமைப்பின் பாராளுமன்றம், வெளிப்படையாகவே அமெரிக்க இராணுவ உதவியைப் போதைப்பொருட்கள் தடுப்பிற்கு மட்டுமல்லாமல், அரசாங்கத்திற்கெதிரான கொரில்லா இயக்கங்களை நசுக்குவதற்கும் ஒப்புதல் கொடுத்தது.

அமெரிக்க நிதியுதவியில் கிட்டத்தட்ட முக்கால் பகுதி அரசாங்கத்திற்கெதிரான கொரில்லா இயக்கங்களை ஒடுக்க செலவு செய்யப்படுவதாகவும், கால் பகுதி மட்டுமே போதைப்பொருள் தடுப்பிற்காகச் செலவு செய்யப்படுவதாகவும் மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. கொலம்பிய ஜனாதிபதியுடனும், நாட்டின் இராணுவத் தளபதிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர், ஜெனரல் மியர்ஸ் இன்னமும் கூடுதலான தொகை போதைப்பொருள் கடத்தல் தடுப்பித்திட்டத்திலிருந்து, அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கைகளை நசுக்ககும் திட்டத்திற்கு கொடுக்கப்படலாம் என குறிப்புக் காட்டி உள்ளார். அமெரிக்க, கொலம்பிய அரசாங்கங்கள் தங்கள் போதைப்பொருள் எதிர்ப்புப் பிரச்சார முயற்சிகளில் வெற்றிகள் பற்றி பல கணக்கீடுகளைக் கொடுத்துள்ளபோதிலும், அமெரிக்காவில் கிடைக்கும் கோகெய்ன்களின் அளவு குறைந்துள்ளது என்பதற்கான சான்றுகள் ஏதும் இல்லை.

சமீபத்தில் ஓராண்டு காலம் ஜனாதிபதி பதவியினை முடித்துள்ள உறிபி யின் கீழ், கொலம்பிய சமுதாயம் கூடுதலான இராணுவமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது; தொழிற்சங்கங்கள் மீது அடக்குமுறை, ஏழைகள் பால் கொடுமை, அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் என்று கருதப்படுபவர் மீது கடும் நடவடிக்கைகள் போன்றவை நிறைந்த தன்மை அரசாங்க நடவடிக்கைகளில் இப்பொழுது மிகுந்துள்ளன. அரசாங்கம் இராணுவப்படையில் வீரர்களின் எண்ணிக்கையை 1,20,000லிருந்து 135,000ஆக உயர்த்தியுள்ளது; தேசியப் போலீஸ் எண்ணிக்கை அதேபோல் 100,000லிருந்து 110,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள், இதற்கிடையில், நேரடியாகவே கொலம்பிய இராணுவப் பிரிவிற்கு அனுப்பப்படும் அளவில், அவர்கள் கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளையும் நேரடியாகவே திட்டமிட்டு இயக்குகிறார்கள். இராணுவத்திற்கும், போலீசிற்கும், கொலில்லாப் போராளிகளுக்கு ஆதரவாளர்கள் என சந்தேகப்படுபவர் அல்லது அரசாங்கத்திற்கெதிராக உள்ளவர்கள் என்று கருதப்படுபவர் மீது கண்காணிப்பு கொள்வதற்கு ஒரு சிவிலிய ஒற்றர்படையை அமைப்பதற்கு அதற்கு ஆள் எடுப்பதற்கு உறிபி ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகளின் தவிர்க்க முடியாத விளைவு இரத்தம் சிந்துதலை உக்கிரப்படுத்துவதாக இருக்கிறது. ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, கொலம்பிய இராணுவம் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை 55 சதவிகிதம் அதிகப்படுத்தியுள்ளதில் இராணுவத்தின் மீதான தாக்குதல்களும் 26 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால் இவற்றின் வன்முறையும், விளைவும், சுமையும், சாதாரண மக்களால் ஏற்கப்படுகின்றன. ஒரு மதிப்பீட்டின்படி கடந்த ஆண்டு மட்டும் 7000 சாதாரண மக்கள் கொல்லப்பட்டதாக நாளொன்றுக்கு சராசரியாக 19 பேர் தெரிகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் கொலம்பியாவில் இத்தகைய மரணங்கள் இருமடங்காகப் போய்விட்டன.

உறிபி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ``பயங்கரவாத எதிர்ப்புச்`` சட்டங்கள், வீடுகளைச் சோதனை போடவும், தன்னிச்சையாகக் காவலில் வைக்கவும் போலீசிற்கு மிக அதிக அளவு அதிகாரங்களைக் கொடுத்துள்ளன. அரசாங்கக் கொள்கைகளை எதிர்க்கும் அரசியல், சமுதாய அமைப்புக்களுக்கு அவற்றை அடக்குவதற்காகப் பாதுகாப்புப்படையினர் ``கொரில்லா முன்னணியினர்`` என்ற முத்திரையை, பாதுகாப்பு படைகள், குத்திவிடுகின்றனர். சமீபத்திய இராணுவச் செயற்பாடுகளில் சுக்ரே மாநிலத்தில் கொரில்லாப் போராளிகளுக்கு ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வாஷிங்டனுடனும் சர்வதேச நாணய நிதியத்துடனும் இணைந்து, உறிபி அரசாங்கம் மேற்கொள்ளும் வலதுசாரிக் கொள்கையை எதிர்ப்போர் மீது அரசாங்க அடக்குமுறை முழு வீச்சில் கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 130 தொழிற்சங்கத் தலைவர்களும் போராளிகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 184 தொழிற்சங்கத் தலைவர்கள் கொல்லப்பட்டனர், உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவு இது உயர்ந்த எண்ணிக்கையாகும்.

இந்த இராணுவத்தின் துணையோடு செய்யப்படும் அரசியல் கொலைகளோடு, தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்குதலும் இணைந்து நடத்தப்பட்டது. அரசு உடைமை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் என்ற உறிபின் பொருளாதாரத் திட்டத்தின் மையப் பகுதி, அமெரிக்காவோடு தடையற்ற வணிக உடன்படிக்கைக்காக வற்புறுத்தப்பட்டது, அது மக்களுடைய எதிர்ப்புக்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் உட்படலாயிற்று. தனியார்மயமாக்கப்பட இருக்கும் துறைகளை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்தல் என்ற பதிலடியை அரசாங்கம் செய்யலாக்கிற்று- Ecopetrol (கொலம்பிய அரசாங்க எண்ணெய் நிறுவனம்), Telecom (அரசாங்க தொலைபேசி இணையம்), பொது மருத்துவமனைகள் ஆகியன அவையாகும்.

கொலம்பிய மருத்துவமனை ஊழியர்களின் தேசிய அமைப்பின் (National Association of Hospital Workers of Columbia) தலைவர் கார்லோஸ் ஹெர்னாண்டெஸ் அரசாங்க ஆதரவு பெற்ற துணை இராணுவ சக்திகளால் கொலை செய்யப்பட்டுவிடுவோம் என்ற சதியை அறிந்து, அதைத் தடுக்க அரசாங்கம் ஏதும் செய்யாது என்றும் அறிந்த அளவில், சமீபத்தில் நாட்டைவிட்டு தப்பி ஓடிப்போக வேண்டியதாயிற்று.

தொழிற்சங்கத்தின் மற்ற தலைவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டனர். அண்மையிலுள்ள கார்டகேனாவில், பல்கலைக்கழக மருத்துவமனை தனியார்மயமாக்குதலை தடை செய்ய எதிர்ப்புத் தெரிவிக்க இருக்கையில், இராணுவத்தினர் அப்பகுதியை இராணுவப் பகுதியாக அறிவிப்பதற்குச் சில மணி நேரம் முன்பு, செவிலியரும் மருத்துவமனை தொழிலாளர் சங்கத் தலைவருமான கார்லோ பாரேரோ ஜிமினெஸ், ஜூலை 24-ம் தேதி அன்று பாரன் குய்ல்லாவில் கொலை செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 12-ம் தேதி நாட்டின் 3 தொழிற்சங்கக் கூட்டமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருமளவிலான வேலை நிறுத்தத்தில் 400,000 தொழிலாளர் கலந்து கொண்டதுடன் பல்லாயிரக்கணக்கானோர் பொகேடாவின் ப்ளாஸா பொலிவரில் (ஙிஷீரீஷீtஊs றிறீணீக்ஷ்ணீ ஙிஷீறீவீஸ்ணீக்ஷீ) நிரம்பி வழிந்து உறிபியின் கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பரித்தனர். கலவரத் தடுப்பு போலீஸ் பிரிவினர் மோதலைத் தூண்டுவதற்காக சதுக்கத்தில் கண்ணீர் புகையை வெடித்து நிரப்பியும், ஆர்ப்பாட்டத்தைக் கலைக்கவும் செய்த முயற்சியில் தோல்வியடைந்தனர்.

உறிபி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசாங்கத்துறை ஊழியர்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அரசாங்க உடைமை டெலிகாம் கலைக்கப்படுவதுடன், இரண்டு மாதங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட 10,000 தொழிலாளர்கள் வேலையிலிருந்து தற்காலிக விடுப்பு கொடுக்கப்பட்டனர், மருத்துவமனை மற்றும் எண்ணெய் தொழிலாளர்களும் இதுபோன்ற தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். மொத்தம் 30,000 அரசு பணியாளர்கள் இந்த அளவில் வேலைநீக்கம் பெற்றுள்ளனர். 2006க்குள் முடிக்கப்பட இருக்கின்ற "மறுசீரமைப்பு" திட்டம் முடிவதற்குள் அதன் பகுதியாக 40,000 அரசாங்கத் தொழிலாளர்கள் வேலையிழப்பினால் வேலையில்லாதவர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கிறது.

அதிகாரபூர்வமாக கொலம்பியாவில் வேலையின்மை விகிதம் இப்பொழுது 14.2 சதவிகிதம் அல்லது 3 மில்லியன் தொழிலாளர்கள் என்று உள்ளது. தொழிற்சங்க தலைவர்கள் உண்மையான எண்ணிக்கை 4 மில்லியனுக்கு அருகில் இருக்கும் என கருதுகிறார்கள். மேலும் தொழிலாளர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினரை "முறை சாரா பகுதி" என, உண்மையான முழு வேலை இல்லாமல் வாழ்பவர்களாக அரசாங்க புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

பொருளாதார மீட்சியைக் கொண்டுவந்துவிட்டதாக உறிபி அரசாங்கம் கூறினாலும் கூட, சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசாங்க புள்ளிவிவரங்கள் பணக்காரர்கள் மட்டுமே நன்மை அடைந்து விட்டதாக கோடிட்டுக்காட்டுகின்றன; தொழிலாள வர்க்கமும் மற்றும் ஏழைகளும் கூடுதலான இழப்புக்களைக் காணவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மிக கவலைக்குரிய புள்ளி விவரப்படி ஆண்டு தொடங்கியதிலிருந்து 7 சதவிகித வீழ்ச்சி உணவு விற்பனையில் பதிவாகியுள்ளது, உற்பத்தி 3 சதவிகிதம் உயர்ந்தபோதிலும் கூட. எந்தத் தொழிலையும் விடக் கட்டுமானப்பணி அதிக அளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ள அளவில், தொழிலாளர்களுக்கு வீட்டு வசதியளிக்கும் வகையிலான திட்டங்கள் 50 சதவிகிதச் சரிவைக் காட்டியுள்ளன.

சுருங்கக் கூறினால், நாட்டு மக்களின் 42 மில்லியன் மக்கட் தொகையில் 33 மில்லியன் வறுமையில் வாடும்போது, அதற்கும் மிகச் சிறிய உயர் மட்டத்தில் இருக்கும் செல்வந்தர் அடுக்கிற்கும் இடையிலான சமூக இடைவெளி அகன்றுள்ள சமுதாய நிலைக்குத்தான் உறிபி அரசாங்கம் தலைமை தாங்குகிறது. கொலம்பியாவின் 40 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு இந்தச் சமூக துருவமுனைப்படல்தான் முக்கியமான அடிப்படையாகும்.

உறிபியின் ஆட்சியில் அமெரிக்க தலையீடு இப்பகுதி முழுவதும் வேரூன்ற கொலம்பியா முக்கிய தளமாகப் போய்விட்டது. கொலம்பிய உள்நாட்டுப் போர் எவ்வாறு இப்பகுதியின் உள் விளைவுகளைக் கொண்டுள்ளது என்பதை தளபதி மியர்சும், ரம்ஸ்பெல்டும் தங்கள் பயணத்தின்போது வலியுறுத்திப் பேசியுள்ளனர். கூட்டுப் படைப்பிரிவுகளின் தலைவர் கூடுதலான ஆத்திரமூட்டல் உணர்வுடன் பேசினார். கொலம்பிய FARC (Revolutionary Armed Forces of Columbia) கொரில்லாக்களை அண்டை நாடான வெனிசுலாவின் Hugo Chavez ன் அரசாங்கம் ஊக்குவிக்கிறது என்று கூறினார்.

"நாடுகள் பயங்கரவாதத்திற்கெதிராக முழுமையான அளவில் ஆதரிக்காவிட்டால் அது நன்மை பயக்காது" என்று மியர்ஸ் அறிவித்தார். "வெனிசுலாவைப் பொறுத்தவரையில் நாம் கூடுதலாகத் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது, அதைத் தொடர்ந்து ஆராய்வோம்." என்றார். வெனிசுலாவின் பங்கினை, அமெரிக்கா இராணுவத் தாக்குதல் நடத்துவோம் என்று அச்சுறுத்தலுக்குட்பட்ட சிரியாவுடன் ஒப்பிட்டு அவர் பேசினார்.

சாவேசும் மற்ற வெனிசுலா அதிகாரிகளும் FARC உடன் எந்த ஒத்துழைப்பும் இல்லை என்று கடுமையாய் மறுத்துள்ளனர். வெனிசுலா மற்றும் கொலம்பியச் செய்தி ஊடகங்களில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள குற்றஞ்சாட்டிய பரபரப்பான கதைகள், கட்டுக் கதைகள் என அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 2002ல் அமெரிக்க ஆதரவுடன் நிகழ்ந்த இராணுவ ஆட்சி கவிழ்ப்பினால் சிலகாலம் பதவியிழந்திருந்த சாவேஸ் மீண்டும் ஈராக்கியப் போருக்குப் பிறகு புதிய அளவில் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொலம்பிய கொரில்லாக்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரையிட அவர் மறுத்துவிட்டார். பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் இவற்றிற்கெதிராகப் போராடல் என்ற பெயரில் நடத்தப்படும், கிளர்ச்சிக்கு எதிரான கொலம்பிய எதிர்ப்பியக்க பிரச்சாரத்துடன் ஐக்கியம் கொள்வதாக உறுதி அளிக்கும், மற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகள் கையெழுத்து இட்டுள்ள Declaration of Asucion என்ற அறிக்கையில், கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவோடு சேர்ந்து இவரும் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

ஆபத்தைத்தரும் வகையில், புஷ்ஷின் வெள்ளை மாளிகையும், பென்டகனும் கொலம்பிய தலையீட்டு நடவடிக்கையை, ஈராக் போர்த்தயாரிப்பு நடவடிக்கை போன்றே மேற்கொண்டுள்ளனர். ஜூன் மாதம் செனட் மன்ற விசாரணையில் சாட்சியம் அளித்த அமெரிக்க படையின் தெற்கு தலைமையின் தலைமைத் தளபதியான ஜேம்ஸ் ஹில் கொலம்பியாவிலிருந்து வரும் போதை பொருட்களை "பேரழிவு தரும் ஆயுதங்கள்" என்று விவரித்துள்ளார்; மேலும் "சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுக்கு" இங்குள்ள உறுதியற்ற தன்மை "பாதுகாப்பு புகலிடங்களை" உருவாக்கக் கூடும் என்றும் எச்சரித்தார்.

சமீபத்திய அமெரிக்க நடவடிக்கையான கொலம்பியாவில் பறக்கும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் முயற்சி நாட்டின் அதிக அளவிலான இறப்பு எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தத் திட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கக் கண்காணிப்புப் படையின் இணைப்புடன் செயல்பட்ட, CIA ஒப்பந்தப் பணியாளர்களால் இயக்கப்பெற்ற ஒரு பெரு நாட்டின் போர் விமானம். அமெரிக்க சமயச் செய்தியாளர்கள் குடும்பத்தை அழைத்துச் சென்ற ஓரியந்திர விமானத்தை சுட்டு வீழ்த்திய பின்னர், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. வெரோனிகா பெளவர்ஸ் மற்றும் அவருடைய பெண் சிசுவும் இந்தச் சுட்டு வீழ்த்தலில் இறந்து போயினர்.

புதிய பாதுகாப்பு முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன என்று கூறியுள்ள போதிலும், அமெரிக்க அதிகாரிகள் தனிப்பட்ட முறையில், ஏப்ரல் 2001 நடந்த நிகழ்ச்சியான தாயும் அவரது இளம் மகளும் கொல்லப்பட்டது போன்றவை மீண்டும் நிகழலாம் என்று ஒப்புக் கொள்கின்றனர்.

புஷ் நிர்வாகத்தால் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகள் போலவே, கொலம்பியாவில் சுட்டு வீழ்த்து என்ற கொள்கையும் சர்வ தேச சட்டத்திற்கு மிகவும் எதிரானது. அப்படிப்பட்ட குற்றஞ் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்ற சந்தேகம் ஏற்படுகிறதோ இல்லையோ பறந்து கொண்டிருக்கும் ஒரு சிவிலியன் விமானத்தின் மீதான ஆயுதத் தாக்குதலை சர்வதேச சட்டம் தடுக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved