World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Schröder's policy of closing his eyes to reality
The German government seeks closer relations with the US

உண்மை நிலையைப் பார்க்காது கண்ணை மூடிக்கொள்ளும் ஷ்ரோடரின் கொள்கை

ஜேர்மன் அரசாங்கம் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளை விரும்புகிறது

By Peter Schwarz
16 May 2003

Back to screen version

''விளக்கம் தேவையில்லை, குற்றம் கூறத் தேவையில்லை, உங்களுடன் இருக்கும் நேரத்தில் நம்முடைய கண்களை முன்னோக்கி பார்ப்பதில் செலவழிக்க விரும்புகிறேன்''. ஈராக் போருக்குப் பின்னர் ஜேர்மனியின் வெளிநாட்டுக் கொள்கை பற்றி விளக்க அதிபர் ஹுகார்ட் ஷ்ரோடர் (Gerhard Schröder), மே 9ம் திகதியன்று பேர்லினில் உள்ள அமெரிக்க வர்த்தக சங்கம் (American Chamber of Commerce) நிறுவப்பட்ட 100வது ஆண்டு விழாவைக் கொண்டாடும்போது இவ்வாறு கூறினார்.

வெளிநாட்டு அமைச்சர் ஜோஸ்கா பிஷ்ஷரும் இப்படிப்பட்ட உணர்வைத்தான் Die Zeit என்னும் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் வெளியிட்டுள்ளார். ஈராக்கிய போரைப் பற்றிக் குறிப்பிடுகையில் ''நேற்றைய விவாதங்களைப் பற்றி இப்பொழுதும் தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை. இப்பொழுது நாளை என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் கேள்வி.'' என கூறினார்.

கடந்த சில மாதங்களின் நெருக்கடிகளுக்கும் முரண்பாடுகளுக்கும் பின்னர், ஜேர்மன் அரசாங்கம் எதுவுமே நடக்காததுபோல் நடிக்க முனைகின்றது. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கண்களை மூடிக்கொண்டுவிட்டு பாராமல் விட்டு விட்டு எவ்வாறு அது எதிர்காலத்தைப் பார்க்கவுள்ளது என்பது ஒரு புதிராகவே உள்ளது.

பேர்லினில் ஷ்ரோடர் ஜேர்மனியையும் அமெரிக்காவையும் இணைக்கும் ''முக்கிய நட்புக்கான'' ''பொது மதிப்புகள்'' (common values) பற்றி குறிப்பிட்டார். இப்பொதுமதிப்புகள் ''அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல்'', ''சுதந்திரம், ஜனநாயகம்'', ''சர்வதேச சட்டங்கள்'', ''சர்வதேச சட்ட அமைப்பு முறை'' போன்றவற்றை அங்கீகரித்தில் என்பனவாகும். ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரில் இந்த ''மதிப்புகள்'' அனைத்துமே அமெரிக்காவால் மொத்தமாக நிராகரிக்கப்பட்டது தொடர்பாக அவருடைய உரையில் கவனமெடுக்கப்படவில்லை.

ஷ்ரோடரின் மெளனம், இப்போர் சர்வதேச உறவுகளில் ஆழ்ந்த திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்ற உண்மையை மறைக்கவில்லை. சர்வதேச சட்டத்தையும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பெரும்பான்மை விருப்பத்தையும் அமெரிக்கா பொருட்படுத்தவில்லை என்பதும், எதிர்காலத்தில் தன்னுடைய நலன்களையும் இராணுவ பலத்தையும் தவிர வேறு எந்த அதிகாரத்தையும் மதிக்கப்போவது இல்லை என்பதையும் மிகத்தெளிவாக உணர்த்தியுள்ளது.

இந்த நிலையில், ஷ்ரோடரினதும் பிஷ்ஷரினதும் நிலைப்பாடு ஈராக்கிய போருக்கு அங்கீகாரம் வழங்கியதற்கும், போருக்கு பின்னரான ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்பையும் நியாயப்படுத்தியதற்கு சமமானதாகும். இப்படிப்பட்ட நிலை தங்களுடையது அல்ல என்று Die Zeit பேட்டியில் பிஷ்ஷர் மறுத்திலிருந்தாலும், அதைத்தொடர்ந்து ''ஈராக்கின் மீதான போரைப் பற்றி ஒருவர் முதலில் எந்தக் கருத்தைக் கொண்டிருந்தாலும் சரி, முதல் சூடு சுடப்பட்டவுடன், ஒரு புதிய ஒழுங்கமைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் வெற்றியடைய வேண்டும் என்பதே, ஐரோப்பியப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்'' எனக் கூறினார். இந்தப் பேட்டிக்குக் கொடுக்கப்பட்ட தலையங்கம் ''சதாம் ஹுசைன் வீழ்த்தப்பட்டமை கொண்டாட்டத்திற்கு ஒரு காரணம்'' என்பதாகும்.

நடைமுறையில் ஜேர்மனிய அரசாங்கம் பல முக்கியமான சலுகைகளை அமெரிக்காவிற்குக் கொடுத்துள்ளது. ஈராக்கைக் கிட்டத்தட்ட தனது ஆளுமைக்கு உட்பட்ட நாடாக்கும் அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானத்திற்கு பேர்லின் தனது ஆதரவை காட்டியுள்ளது. அமெரிக்க வெளிநாட்டு அமைச்சு தன்னுடைய சிறப்புத் தூதர் கிம் ஹோம்ஸை (Kim Holmes) அமெரிக்காவின் ஐ.நாடுகள் தீர்மான வரைவைப் பற்றிய விவரங்களை விளக்குவதற்கு பேர்லினுக்கு அனுப்பி வைத்திருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை Breslau நகரத்தில் நடந்த பிரெஞ்சு, ஜேர்மனிய, போலந்து அரசாங்கத்தின் உச்சி மகாநாட்டின்போது ஷ்ரோடர் அமெரிக்கத் தீர்மானத்திற்கு பாரிஸ் மற்றும் மொஸ்கோ ஆகியவற்றின் ஆதரவு தேட மத்தியஸ்த நாடாக ஜேர்மனி பங்குபெறத் தயாராயுள்ளது என்று தெளிவாக்கினார். ஜேர்மனியின் விருப்பம் அதுதான் என்றும் அவருடைய அரசாங்கம் அதைச் செயல்படுத்துவதற்குப் பாடுபடும் என்றும் கூறினார்.

அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானத்திற்கு, பாதுகாப்புக் குழுவில் தடுப்பு அதிகாரம் (Veto Power) கொண்டுள்ள பிரான்ஸ், ரஷ்யா இரண்டுமே அமெரிக்காவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பு பற்றி தங்களுடைய கவலைகளைக் கொண்டுள்ளன. அது பிரெஞ்சு, ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் நலன்களுக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் காரணத்தால் மட்டுமல்ல, சதாம் ஹூசேனின் அரசாங்கத்தோடு தாங்கள் கொண்டிருந்த நீண்ட கால ஒப்பந்தங்களின் கதி என்ன ஆகும் என்பதையும் பற்றிய கவலையும் உண்டு.

மே 16 அன்று அமெரிக்க வெளிநாட்டு அமைச்சரான கொலின் பெளலைப் பேர்லினில் ஷ்ரோடர் சந்திக்க இருக்கிறார். இந்தக் கூட்டம் பல மாதங்களுக்குப் பின்னர் அதிபருக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தையாகும். ஐ.நா.வில் அமெரிக்கத் தீர்மானம் பற்றி கூடுதலாக நெருக்கமான உடன்பாட்டிற்கு வரும் முயற்சியாகவும் இது அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஈராக்கில் ஜேர்மன் படைகள் பயன்படுத்தக்கூடும் என்ற அறிவிப்புக்களும் உள்ளன. Der Spiegel சஞ்சிகையின்படி இரகசிய பேச்சுவார்த்தைகளில், ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஸ்ருர்க் (Peter Struck) தன்னுடைய அமெரிக்க இணையாளியான டொனால்ட் ட்ரம்ஸ்பீல்டுக்கு ஈராக்கிய ஆக்கிரமிப்பில் பங்குகொள்ள ஜேர்மனியருக்குத் எதிர்ப்புகள் ஒன்றுமில்லை என உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த வாரம் பீட்டர் ஸ்ருர்க் வாஷிங்டனுக்குச் சென்றிருந்தார். அங்கு நடந்த பேச்சுக்களில் ஜேர்மன் இராணுவம் ஈராக்கில் ஈடுபடுத்துவது பற்றிய நிலைமை பற்றி முடிவு எடுக்காது விடப்பட்டிருக்கலாம். ஏனெனில் ஜேர்மனியப் பாராளுமன்றம் தான் அந்த முடிவை எடுக்க முடியும். ஆனால் Der Spiegel சஞ்சிகையின்படி, ஜேர்மன் படைகள் ஈராக்கிற்கு அனுப்பப்படுவது கொள்கை தொடர்பான முடிவு அல்ல, மாறாக எப்பொழுது என்பதுதான் என குறிப்பிட்டிருந்தது. அப்படிப்பட்ட நடவடிக்கையை மேற்கொள்வதில் அடிப்படை ரீதியான தடைகள் ஏதும் இல்லை.

அரசாங்கத்தின் இலையுதிர்காலத் தேர்தல்களில் கண்ட வெற்றிக்கு காரணமான கடந்த செப்டம்பர் மாதம் சமூக ஜனநாயக கட்சியும் (SPD) பசுமைக் கட்சியும் (Greens) எடுத்திருந்த போர் எதிர்ப்பு நிலைப்பாடு மேலும் மேலும் வாய்ச்சவடால் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. பின்னர் போரை நியாயப்படுத்தியதும், அடுத்த போர் எப்பொழுதும் நடக்கலாம் என்ற நிலைமையின் கீழ் அமெரிக்காவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு அங்கீகாரம் அளித்த நடவடிக்கையும் அமெரிக்க நிர்வாகத்தின் கரங்களை வலுப்படுத்துகின்றது. அதேபோல் ஜேர்மன் அரசாங்கம் தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கியது அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் முதுகில் குத்தியது போலாகும்.

எவ்வாறாயினும், அமெரிக்காவுடன் சமாதானமாகிப் போகும் ஜேர்மனியின் நம்பிக்கைகள் கற்பனையானதாகும். ஒவ்வொரு வாய்ப்பு கிடைக்கும்பொழுதும் ஷ்ரோடரும், பிஷ்ஷரும் ஐரோப்பிய ஒற்றுமைக்கு ஆதரவாக இருப்பதாக வற்புறுத்துவதும், அமெரிக்காவுடன் கூட்டாக நிற்பதாகவும் கூறுகையில் இந்த இரண்டு இலக்குகளில் முரண்பட்ட தன்மையை அவர்கள் உணரவில்லை.

''ஜேர்மன் - பிரெஞ்சு நட்பும், கூட்டுணைப்பும் ஐரோப்பாவிற்கு எந்த அளவிற்குத் தவிர்க்க முடியாததோ, அதேபோல்தான் ஐரோப்பாவின் அட்லாண்டிக் கடல் கடந்த நட்பும்'' என்று ஷ்ரோடர் பேர்லினில் கூறினார். ''எவரும் பிரான்சுடனான நட்பா அல்லது அமெரிக்காவுடனான நட்பா ஜேர்மனிக்கு தேவை என்ற பொருளற்ற தேர்வு செய்யும் முயற்சிக்கு செல்லத் தேவையில்லை. ஒன்றுபட்ட பலம் வாய்ந்த ஐரோப்பா ''அமெரிக்காவினதும் நலன்களுக்கு உகந்ததும் ஆகும்.'' எங்கள் நட்பில் 'கூடுதலான அமெரிக்கா, குறைவான ஐரோப்பா` என்ற சிக்கல் எல்லாம் கிடையாது எனவும் கூறினார்.

Die Zeit ல் பிஷ்ஷரும் இதேபோன்ற மொழித் தொடரைத்தான் பயன்படுத்தியுள்ளார். ஐரோப்பியப் பொருளாதார வலிமையை `ஐரோப்பிய வலிமையை அமெரிக்க வலிமைக்கு எதிராக` ஒன்றையொன்று மோதிக்கொள்ளும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்று கருதிவிடத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், கடந்த சில வாரங்களில் ஏதாவது ஒன்று தெளிவாக வந்தது என்றால், அது வாஷிங்டன் எந்தப் போட்டியாளரையும் சமமான முறையில் நடத்தத் தயாரில்லை

என்பதேயாகும். ஐரோப்பியக் கண்டத்தை பிரித்துவிட சிறிதும் ஈவு இரக்கமின்றித் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்துகின்றது. ஜேர்மன் அரசாங்கம் அமெரிக்க நிர்வாகத்திடம் குழைந்து போகும் தன்மை இந்த போக்கை மேலும் மோசமாக்கவே செய்யும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved