கொலம்பியா விண்வெளிக்கல விபத்து: பாதுகாப்பு எச்சரிக்கைகளை ''நாசா'' காங்கிரஸ்,
புஷ் புறக்கணிப்பு
By the Editorial Board
4 February 2003
Back
to screen version
சென்ற சனிக்கிழமையன்று கொலம்பியா விண்வெளிக்கலம் எரிந்து விழுந்தது தொடர்பாக
நடைபெற்றுவரும் விசாரணைகள் இன்னும் பூர்வாங்க கட்டத்திலேயே இருப்பதால் இந்த துயரமான விபத்திற்கு திட்டவட்டமான
தொழில்நுட்ப காரணங்கள் அல்லது பல்வேறு வகையான காரணங்கள் இருந்தனவா என்பது குறித்து திட்டவட்டமான முடிவுகள்
எதையும் செய்வதற்கு காலம் நெருங்கவில்லை, ஆனால், அந்த விண்வெளிக்கலம் அழிந்ததும், மற்றும் அதிலிருந்த ஏழு விண்வெளி
வீரர்களின் மரணம் ஆகியவை அவர்கள் சம்மந்தப்பட்ட குடும்பங்களுக்கு மட்டும் தனிப்பட்ட துயர நிகழ்ச்சியல்ல. உலகம்
முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அதிர்ச்சியடைந்துடன், துக்கத்தில் ஆழ்ந்தனர். அதுமட்டுமல்ல, அது ஒரு முக்கிய
ஒரு அரசியல் சம்பவமும் ஆகும்.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிற விசாரணைகளின் முடிவு, எதுவாக இருந்தாலும்,
கொலம்பியா விண்வெளிக்கலம் வெடித்து சிதறியதில் பல்வேறு முக்கிய படிப்பினைகள் அடங்கியுள்ளன. அவற்றை முறையான
சமூக மற்றும் அரசியல் உள்ளடக்கத்தில் ஆராய்ந்து பார்த்தால், அமெரிக்க சமுதாயத்தைப் பற்றியும் அதை ஆதிக்கம்
செலுத்தும் சக்திகள் பற்றியும் கூடியளவு தெளிவினை வழங்கும்.
பல்வேறு எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன
விண்வெளிக்கலம் வெடித்து சிதறியதைத் தொடர்ந்து பல்வேறு அறிக்கைகள் பிரசுரிக்கப்பட்டு
வருகின்றன. விண்வெளிக்கலத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று தலைமை நாசா நிர்வாகிகளுக்கும், அந்த அமைப்பைக்
கண்காணிக்கின்ற நாடாளுமன்ற குழுக்களுக்கும் மற்றும் ஜனாதிபதி புஷ்ஷிற்கும் கிடைத்திருந்தன.
விண்வெளி ஆய்வு திட்டத்திற்கு பொறுப்பு வகிக்கின்றவர்களுக்கு பெருகிவரும் பாதுகாப்பு பிரச்சனைகள்
குறித்து முன்கூட்டியே எச்சரிக்கைகள் செய்யப்பட்டன. ஆனால், சம்மந்தப்பட்டவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை,
அதற்கு நேர்மாறாக பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு எதிராக
நடவடிக்கைகளை எடுத்தார்கள். விண்வெளி திட்ட செலவினங்கள் பல்வேறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டு வந்ததால், விண்வெளி
ஆய்வு நடவடிக்கைளை பராமரிப்பு பிரச்சனைகள் இருப்பதாக அந்தப் பொறியாளர்களும், விஞ்ஞானிகளும்,
சுட்டிக்காட்டினார்கள். நாசா விண்வெளி ஓடத்தை செயல்படுத்துவதில் நிலவுகின்ற குறைபாடுகளை திரும்பத்திரும்ப
சுட்டிக்காட்டிய ஆறு விஞ்ஞானிகள், விண்வெளி பாதுகாப்பு ஆலோசனை குழுவிலிருந்து 2001 மார்ச் மாதம் பதவி நீக்கம்
செய்யப்பட்டனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் புஷ் நிர்வாகம் ஓய்வுபெற்ற நாசா பொறியாளரின் எச்சரிக்கையை
புறக்கணித்தது. அவர் பலமுறை விண்வெளிக்கலம் செலுத்தும் திட்டத்தை கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி வெள்ளை
மாளிகைக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அப்படி அவர் எழுதிய ஓர் கடிதத்தில், ''மற்றொரு பேரழிவில் முடியும், விண்வெளிக்கல
விபத்தை'' தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை தேவை என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கடிதத்தை எழுதியவர் டொன் நெல்சன்
(Don Nelson). முதலாவது
சந்திர மண்டல ஆய்வு கலத்தை செலுத்திய காலத்திலிருந்து நாசாவில் மேற்பார்வையாளராகவும், ஆய்வுத் திட்ட அதிகாரியாகவும்
பணியாற்றி 1999ம் ஆண்டு ஓய்வுபெற்றார். அவர் புஷ்ஷிற்கு, சென்ற ஆகஸ்ட் மாதம் ஒரு கடிதம் எழுதினார். அந்தக்
கடிதத்தில் விண்வெளிக்கலத்தில் பயணம் செய்யும் விண்வெளி வீரர்களுக்கு உடனடி ஆபத்து இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
ஹைட்ரஜன் (hydrogen)
வாயு கசிவது, எரிசக்தி இணைப்புக்களில் அழுத்தம் ஏற்படுவது, நுட்ப கம்பிகளை பொருத்துவது தொடர்பான பிரச்சனைகள்
மற்றும் கம்ப்யூட்டர் இயங்காமல் முடங்கிவிடுவது போன்ற பல்வேறு செயல்பாட்டு குறைபாடுகளை தமது கடிதத்தில்
சுட்டிக்காட்டியிருந்தார்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அலுவலக இயக்குநரும், ஜனாதிபதி புஷ்ஷின் தலைமை
விஞ்ஞான ஆலோசகருமான ஜோன் மார்பர்கர் (John
Marburger), நெல்சன் தெரிவித்துள்ள கண்டனங்கள் குறித்து நாசா
அதிகாரிகளுடன் விவாதித்தார். அதற்குப்பின்னர், கடிதம் எழுதிய, ஓய்வுபெற்ற பொறியாளருக்கு பதில் அனுப்பினார்.
அந்த பதிலில் நாசா பாதுகாப்பு நடைமுறைகளை புகழ்ந்திருந்தார். ''இந்த விவாதங்களின் அடிப்படையில்,
பார்க்கும்போது இந்த நேரத்தில் விண்வெளிக்கலங்கள் செலுத்தும் திட்டத்திற்கு ஜனாதிபதி தடை விதிப்பது சரியான நடவடிக்கையாக
இருக்கும் என்று நான் கருதவில்லை'' என்று கடிதத்தை முடிக்கும்போது குறிப்பிட்டிருந்தார்.
நெல்சன் கடைசியாக ஒரு முயற்சியை மேற்கொண்டார். விண்வெளிக்கலத்தில், அதை உந்தித்
தள்ளுகின்ற பகுதியில் கசிவு ஏற்பட்டதாக பிரசுரிக்கப்பட்ட ஒரு செய்தியை பார்த்த பின்னர், டிசம்பர் 21 அன்று வெள்ளை
மாளிகைக்கு கடிதம் ஒன்றை எழுதினார். ''எல்லா விண்வெளிக்கலங்களிலும் ஆரம்பத்தில் பல்வேறு தீவிர குறைபாடுகள்
கண்டுபிடிக்கப்பட்டது உங்களுக்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன். விண்வெளிக்கல திட்டங்களுக்கு தடைவிதிக்க
வேண்டுமென்ற கோரிக்கை மறுக்கப்பட்டுவிட்டது என்பதை நீங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்திருப்பீர்கள் என்று நான்
கருதுகிறேன். மேலும் விண்வெளிக்கலத்தில் செல்கின்ற விண்வெளி வீரர்கள் உயிருக்கு ஜனாதிபதி நிர்வாகமே பொறுப்பு ஏற்றுக்கொள்கிறது
என்று கருதுகிறேன்'' என்று நெல்சன் டிசம்பர் 21 அன்று தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதில்
எதுவும் வரவில்லை.
பராமரிப்பு பணியாளர்கள் குறைப்பு
நாசா விண்வெளி ஆய்வு திட்ட செயல்பாட்டில் பொதுவாகவும், விண்வெளி ஆய்வு கலங்கள்
செலுத்தும் திட்டங்களில் குறிப்பாக நிலவுகின்ற சீர்குலைவுகள் குறித்து, கவலைகளும் எச்சரிக்கைகளும் செய்யப்பட்டு வருவதில்
மிக வெளிப்படையான எச்சரிக்கை தான் இந்தக் கடிதங்கள் பரிவர்த்தனை. பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திட்டங்களுக்காக
விண்வெளிக்கல திட்டங்களில், 1995 இற்கும் 1999 இற்கும் இடையில் 3,000 ஆக இருந்து தொழில்நுட்ப பணியாளர்களின்
ஆளவு 1,800ஆக குறைக்கப்பட்டனர். தற்போது இந்தப் பணிகளில் 2,000பேர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
காங்கிரசின் மத்திய பொது கணக்கு அலுவலகம், 2,000 ஆகஸ்ட் 15 அன்று, செனட்
சபையின் வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் போக்குவரத்து தொடர்பான குழுவிற்கு அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதில் ''நாசா அமைப்பிற்குள் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. விண்வெளிக்கல திட்டபணியாளர்கள் குறைக்கப்பட்டதால்
பணிகள் பாதிக்கப்ட்டிருக்கின்றன என்று அந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன'' என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அதே அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ''விண்வெளிக்கல திட்டங்கள் பலவற்றில்
தகுதிவாய்ந்த ஊழியர்கள் போதுமான அளவிற்கு இல்லை. மீதமிருப்பவர்கள் அதிகமாக பணியாற்றுவதால் களைப்பு அடைகின்றனர்.
விடுமுறைகள் இன்றி மற்றும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளாமல் பணியாற்றிக் கொண்டிருப்பதால் தங்களது வேலைப்பழு
நெருக்கடியை தீர்ப்பதற்கான மருந்தகங்களுக்கு அவர்கள் வருவது அதிகரித்திருக்கிறது''.
அப்படியிருந்தும், அதே ஆண்டு ஒவ்வொரு விண்வெளிக்கல திட்டத்திற்கும், 380 மில்லியன்
டொலர்களுக்கு மேல் செலவிடக்கூடாது என்று நாடாளுமன்றம் உச்ச வரம்பு விதித்தது. இதனால், நாசா அதிகாரிகளே
ஊழியர் வெட்டு தொடர்பாக எச்சரிக்கை செய்தனர். இப்படிப்பட்ட ஆட்குறைப்புக்கள் விண்வெளிக்கல பயணத்தில் குறிப்பிடத்தக்க
பாதுகாப்பு ஆபத்துக்களை உருவாக்கக்கூடும் என்று எச்சரித்தனர்.
2001 மார்ச் மாதம் நாசா வின் விண்வெளி பாதுகாப்பு ஆலோசனைக்குழு அறிக்கை
ஒன்றை வெளியிட்டது. நாசாவின் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளை அந்த அறிக்கை கடுமையாக கண்டனம் செய்தது.
வயதாகிக்கொண்டிருக்கும் நான்கு விண்வெளிக்கலங்கள் தொடர்பாக அவற்றின், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக
அந்த அறிக்கை கண்டனம் செய்தது. வரவுசெலவுத்திட்ட வெட்டுக்கள் காரணமாக நீண்ட கால பாதுகாப்பு ஏற்பாடுகள்
சீர்குலைந்தன. உடனடியாக கவனிக்கவேண்டிய பிரச்சனைகள் தேங்கிவிட்டன என்று அந்த அறிக்கை எச்சரிக்கை செய்தது.
அந்த அறிக்கைக்கு, நாசா நிர்வாகம் அளித்த பதில், ஆலோசனைக்குழுவிற்கு உறுப்பினர்களைத்
தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையை வகுத்ததுதான். அதன் மூலம் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் 5 பேர் பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.
இரண்டு ஆலோசகர்களும் நீக்கப்பட்டனர். ஆறாவது உறுப்பினரான ஓய்வுபெற்ற அட்மிரல் பெர்னாட் காதரர் (Bernard
Kauderer) தனது சகாக்களை பதவி நீக்கம் செய்ததைக் கண்டித்து
ராஜிநாமா செய்தார்.
இப்படி பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான
Dr. Seymour C. Himmel
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ''நாங்கள்
நாசாவிற்கு, ஆலோசனைகளை கூறி வந்தோம் அவர்களது சில நடவடிக்கைகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லாமல்
இருந்தது'' என்று குறிப்பிட்டார். பதவி நீக்கம் செய்யப்பட்ட, மற்றொரு உறுப்பினர்,
Dr. Norris D. Krone
மேரிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சி அமைப்பைச் சார்ந்தவர். நாசா
பாதுகாப்பு ஆலோசனைக்குழு போன்ற உயர்மட்ட குழுக்களில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை வழக்கத்திற்கு மாறாக
இடைக்காலத்திலேயே பதவி நீக்கம் செய்வது முறையற்றது. நாங்கள் அனைவரும் அது சரியான நடவடிக்கை என்று கருதவில்லை
என்பதாக குறிப்பிட்டார்.
நாசாவின் நடவடிக்கைகளை கண்டித்தவர்களை பதவி நீக்கம் செய்த பின்னரும், திருத்தியமைக்கப்பட்ட
ஆலோசனைக்குழு தொடர்ந்து பாதுகாப்பு பிரச்சனைகளை வலியுறுத்தி வந்தது. அந்தக் குழுவின் தலைவர்
Dr. Richard D. Blomberg
சென்ற ஏப்ரலில் காங்கிரஸில் உரையாற்றும்போது தமது கவலையை தெரிவித்தார். ''இதற்கு முன்னர் எப்போதும்
இல்லாத அளவிற்கு விண்வெளிக்கலத்தின் பாதுகாப்பு குறித்து நான் தற்போது கவலையடைந்திருக்கிறேன். எனது கவலைகளுக்கு
அடிப்படையாகயிருக்கிற காரணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த அளவிற்கு சீர்குலைந்தது எந்த காலத்தில் என்பது
யாருக்கும் தெரியாது. இப்போது நடைமுறையில் உள்ள அணுகுமுறை எதிர்கால ஆபத்துக்கான விதையை ஊன்றுவதாகயிருக்கிறது
என்று என் உள்ளுணர்வுகள் கூறுகின்றன. எனது கவலை தற்போது அல்லது அதற்குப்பின்னர் அல்லது அதற்கடுத்த விண்வெளிக்கலங்களைப்
பற்றியதல்ல, ஆனால் இடைப்பட்ட காலத்தில் விண்வெளிக்கல பயணங்களைப் பற்றித்தான் நான் அதிகம் கவலை
கொண்டிருக்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.
இன்றைய நாசா பாதுகாப்பு ஆலோசனைக்குழு தலைவர் எச்சரிக்கை செய்த பின்னர்
நடைபெற்ற நான்காவது விண்வெளிக்கலம்தான் கொலம்பியா.
அதற்குப்பின்னர், நாடாளுமன்றம் மேற்கொண்ட நடவடிக்கை பாதுகாப்பு தொடர்பாக
அதிகரித்துவரும் கவலைகளை எதிரொலிப்பதாக இல்லை. கடந்த 10ஆண்டுகளில் நாசாவிற்கான நிதி ஒதுக்கீடு 40%
குறைக்கப்பட்டுவிட்டது. 2002 ஜூலை மாதம் விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் ஆய்வுத் திட்டங்களுக்கான வரவுசெலவுத்திட்டத்தில்
இன்னும் 10.3% குறைக்கப்பட்டது.
விண்வெளிக்கலத்தில் பயணம் செய்த ஒரு செனட் சபை உறுப்பினரான புளோரிடாவிலிருந்து
ஜனநாயகக் கட்சி சார்பில் செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பில் நெல்சன் இத்திட்டம் பற்றி நன்றாக அறிந்தவர்.
அவர் விண்வெளிக்கல பாதுகாப்பு கருத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைள் தாமதப்படுத்தப்பட்டு வருவதாக புகார்
கூறினார். ''விண்வெளிக்கல வரவுசெலவுத் திட்டத்தை நாம் குறைத்துவிட்டோம். இதனால் விண்வெளிக்கல பயணங்களில் பேரழிவு
இழப்புக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துவிட்டது'' என்று அவர் எச்சரித்தார். எதிர்வரும் நிதியாண்டில் நாசா விற்கு
வரவுசெலவுத்திட்டத்தில் 3% அதிகரிப்புக்கு மட்டுமே வெள்ளை மாளிகை வழிவகை செய்திருக்கிறது.
தனியார்மயமாக்கத்தின் தாக்கம்
அதில் கிளிண்டன் நிர்வாகத்தின் பங்கு ஒரு முக்கிய அரசியல் உண்மையை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்காவின் இரண்டு முதலாளித்துவ கட்சிகளுமே, விண்வெளி கலத்திட்டத்தை சீர்குலைப்பதற்கு உடந்தையாக செயல்பட்டிருக்கின்றன.
1996ம் ஆண்டு, கிளிண்டன் விண்வெளிக்கல பராமரிப்புப் பணிகளை தனியார்மயமாக்க
கட்டளையிட்டார். ஒரு கூட்டு நிறுவனத்திடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. யுனைடட் ஸ்பேஸ் அலையன்ஸ் (United
Space Alliance-USA), என்ற அந்தக் கூட்டு நிறுவனத்தை அமெரிக்காவின்
மிகப்பெரும் விமானம் நிறுவனங்களான போயிங் (Boeing)
மற்றும் லாக்ஹிட்மார்டின் (Lockheed-Martin)
ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. அதிக லாபம் தரும் நாசா விண்வெளிக்கல பராமரிப்பு பணிகள் இந்தக் கூட்டு
நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாசாவிலும் பார்க்க இந்தக் கூட்டு நிறுவனத்தில் தான் விண்வெளி ஆய்வு பணியாளர்களில்
மிகப்பெரும்பாலோர் பணியாற்றி வருகின்றனர். டெக்ஸாஸ் ஹூஸ்டனில் (Houston)
உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணியாற்றி வரும் 10,000பேரில்
7,600பேர் தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டவர்கள், புளோரிடா கென்னடி ஆய்வு நிலையத்தில் பணியாற்றுகின்ற
14,000 பேரில் 12,600 பேர் தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டவர்கள்.
நாசா விண்வெளி ஆய்வு திட்டங்களுக்காக 3.2 பில்லியன் டொலர்களை செலவிட்டு வருகிறது.
இதில், 92% தனியார்துறையைச் சார்ந்த ஒப்பந்தக்காரர்களுக்கே சென்றுவிடுகிறது. அமெரிக்காவில் மத்திய அரசு மேற்க்கொண்டுள்ள
மிகப்பெரும் திட்டமான விண்வெளி ஆய்வுத்திட்டம் தனியார்மயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டு நிறுவனத்தில் மூலம், இதர
விண்வெளி ஆய்வு தொடர்பான துணை ஒப்பந்தம் மூலம், லாக்ஹில் மார்டீன் விமான நிறுவனம், ஆண்டிற்கு 85 மில்லியன்
டொலர்களை தனது பங்கு இலாபமாக பெற்று வருகிறது. போயிங் விமான நிறுவனம், இந்தக் கூட்டு நிறுவனத்தின் மூலமும்,
ராக்கெட்டெய்ன் (Rocketdyne)
துணை நிறுவனத்தின் மூலமும், தனி காண்டிராக்ட் ஒப்பந்தங்கள் பெற்று சம்பாதித்து
வருகிறது. ராக்கெட்டெய்ன் துணை நிறுவனம் தான் விண்வெளி ஓட இஞ்சின்களை தயாரிக்கிறது.
நாசா வில் சொந்த ஆய்வு அதிகாரியே ஓர் அறிக்கை தந்திருக்கிறார். அந்த அறிக்கையில்,
யுனைடெட் ஸ்பேஸ் அலையன்ஸ் நிறுவனத்தின் பணிகளை நுணுக்கமாக கண்காணிப்பதில்லை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அப்போதைக்கு அப்போது தராதரச் சோதனைகள் நடத்தப்படுகின்றனவே தவிர, அரசாங்கத்தின் வழமையான, ஆய்வுகள்
ஒப்பந்தத்தின்படியும், தீர்மானத்தின்படியும் எந்த நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தனது தனியார்மய முயற்சி குறித்து கிளிண்டன் நிர்வாகம் பெருமையடித்து மிகப்பெரிய வெற்றி
என்று கூறியது. துணை ஜனாதிபதி அல்கோர் அரசின் செயல்பாட்டை மீண்டும் கண்டுபிடித்துவிட்டதாக அதிகம் பேசியது இதைப்
பற்றித்தான். விண்வெளிக்கல பராமரிப்பை துணை ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைத்துவிட முடிவு செய்யப்பட்டதால், அரசாங்கம்,
மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை கால் பங்கு குறைந்துவிட்டது. ஒவ்வொரு விண்வெளிக்கல பயணத்திற்கும் ஆகும் சராசரி
செலவு, 600மில்லியன் டொரில் இருந்து 400மில்லியன் டொலராக குறைந்தது.
அண்மையில் ரான்ட் கார்ப்பரேஷன் (Rand
Corporation) வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கையில் நாசாவிற்கு
எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மிக நெருக்கடியான நேரத்தில், விண்வெளி பயணிகள், அவர்கள் வயது காரணமாக
அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் நாசா பராமரிப்பில் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது, என்று அந்த அறிக்கை
எச்சரிக்கின்றது. கொலம்பியா விண்வெளிக்கலம் 25 ஆண்டுளுக்கு முன்பு கட்டப்பட்டது. 1981ம் ஆண்டு முதலில் விண்வெளியில்
செலுத்தப்பட்டது. ''இப்படிப்பட்ட விண்வெளிக்கலங்களை மேலேழுந்த வாரியாக கண்காணிக்கவும் ஆழமாக ஆராயவும்
தேவைப்படுகின்ற பொறியாளர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்களை நாசா தன் பொறுப்பிலேயே வைத்துக்கொள்ளவேண்டும்.
மற்றும் அது அவசியம்'' என்று ரான்ட் கார்ப்பரேஷன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
வலதுசாரிகளின் போலி மருந்தான தனியார்மயமாதல் மற்றும் முதலாளித்துவ சுதந்திர சந்தையின்
கட்டுப்பாடற்ற தன்மை ஆகியவற்றால் ஏற்படுகின்ற அழிவுகளின் மிக அண்மைக்கால எடுத்துக்காட்டுத்தான் கொலம்பியா
விண்வெளிக்கல பேரழிவு. அமெரிக்க தனியார் விமான கம்பனிகள் ஐந்து விண்வெளிகலங்களை உருவாக்கியுள்ளன. அவற்றில்
இரண்டு அழிந்துவிட்டது. இந்த இரண்டு சம்பவங்களிலும் விண்வெளி வீரர்கள் மற்றும் அதில் இருந்த ஊழியர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.
கடந்த 10-ஆண்டுகளாக, நாசா செலவுகள் குறைக்கப்பட்டே வந்திருக்கின்றன. இந்த குறைப்பு
நடவடிக்கை மூலம் அமெரிக்காவிற்குள் சலுகைகள் பெற்ற சிறிய குழுவினர், செல்வவளத்தை குவித்துக்கொண்டனர்.
அடிப்படை தொழில் கட்டமைப்பு வசதி சிதைவதற்கு அனுமதிக்கப்பட்டது. தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு பில்லியன் கணக்கான
தொகை ஊதியமாகவும், போனசாகவும், பங்குகளாகவும் வழங்கப்பட்டு பெருந்தொகை பாழாக்கப்பட்டது. அதே நேரத்தில்,
1970களில் வடிவமைக்கப்பட்ட அந்தக் காலத்து பொறியியல் நுணுக்கத்தோடு கட்டப்பட்ட விண்வெளிகலங்களில் விண்வெளி
வீரர்கள் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இறுதி ஆய்வுகளில், மனிதர்கள் விண்வெளி செல்லும் திட்டமும், விண்வெளி வீரர்களுக்கான
பாதுகாப்பு நடவடிக்கைகளும் நவீனமயமாக்கப்பட்டு முழு பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கப்படவேண்டிய தலையாய
பணி முதலாளித்துவ, சந்தையில் தனியார் இலாபம் சம்பாதிப்பதற்காக தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இப்படித்தான்,
அமெரிக்க சமுதாயத்தின் எல்லா அம்சங்களிலும் முதலாளித்துவ கோரிக்கைக்கு சமூகத் தேவைகள் தியாகம் செய்யப்படுகின்றன.
விண்வெளி ஆய்வுத் திட்டத்தில், தற்போது புகுத்தப்பட்டுள்ள செலவீன நடைமுறைகள் எந்த
அளவிற்கு அழிவையும், அறிவுக்கு பொருந்தாத தாக்கங்களையும் உண்டாக்கி வருகிறது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளையும்
தரமுடியும். 90களின் ஏற்பட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வளர்ச்சியின் புரட்சியில் வைபர் ஒப்டிக் லைன்களுக்கு (fiber
optic lines) 300 பில்லியன் டொலருக்கு மேல் முதலீடு செய்யப்பட்டது.
இது அமெரிக்க மக்களுக்கு தேவைப்படுவதைவிட 20 மடங்கு கூடுதலானதாகும். இதே காலகட்டத்தில் விண்வெளி வீரர்
விண்வெளிக்கலத்தில் செல்லும்போது 8086 கம்பியூட்டர் சில்லுகளை (computer
chips) பயன்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவை 20 ஆண்டுகளுக்கு
முன்னர் முதலாவது IBM
தனிநபர் கணணிகளுக்கு பன்படுத்தப்பட்டவையாகும்.
புஷ் நிர்வாகம், விண்வெளியும் போரும்
புஷ் தனிப்பட்ட முறையில் விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் அக்கறை எதுவும் எடுத்துக்கொள்வதில்லை
என்று பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. அவர் டெக்சாஸ் கவர்னராக 6 ஆண்டுகள் பதவி வகித்திருக்கிறார். இந்த ஆறு
ஆண்டுகளில் ஒருமுறை கூட ஹூஸ்டனில் உள்ள ஜான்சென் விண்வெளி ஆய்வு (Johnson
Space Center) நிலையத்திற்கு சென்று பார்த்ததில்லை. அவரது,
விஞ்ஞான ஆலோசகர் மார்பர்கர் (Marburger)
விண்வெளி திட்டம் தொடர்பாக அவருடன் எப்போதும் தான் பேசியதில்லை என்று
கூறுகிறார். ஆனால், ஏவுகணை பாதுகாப்பு திட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் தான் விவாதம்
நடத்தி இருப்பதாக கூறியிருக்கிறார்.
புஷ்ஷின் நிர்வாகத்தில் நடக்கும் ஏனைய விடயங்களைப்போல் விண்வெளி ஆய்வுத் திட்டத்தை
நிர்வகிக்கும் அதிகாரத்தை துணை ஜனாதிபதி ரிச்சர்ட் ஷென்னியிடம் புஷ் வழங்கியிருந்தார். துணை ஜனாதிபதி அவருடைய
அடிவருடியான சியன் ஓகிபை நாசா - நிர்வாகத்தை நடத்துமாறு ஒப்படைத்தார். ஓகி பட்ஜெட் மற்றும் நிர்வாக அலுவலகத்தில்
ஒரு அதிகாரி அவருக்கு விண்வெளி ஆய்வு தொடர்பான எந்த அனுபவமும் இல்லை. செலவுகளை குறைப்பது தான் புஷ்ஷின்
முன்னுரிமை. எனவே ஓகி விண்வெளி ஓட தர மேம்பாட்டு செலவினங்களை, 2006-ம் ஆண்டில் 43-விழுக்காடு குறைத்துவிட்டார்.
இந்த நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும், 400-பில்லியன் டாலர் அளவிற்கு இராணுவ செலவினங்களை அதிகரித்துக்கொண்டு வருகிறது.
அமெரிக்க, விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் இரண்டு வகையான அணுகுமுறைகள், கண்ணோட்டங்களிடையே
அடிப்படையான கொந்தளிப்பு நிலவத்தான் செய்கிறது. நியாயமான முற்போக்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பச்
சாதனைகளை - சந்திரனில் மனிதன் காலடி எடுத்து வைத்ததை, மனிதன் இல்லாத, விண்வெளி கலங்கள் விடப்படுவதை,
ஹபல் விண்வெளி தொலைநோக்கி (டெலஸ்கோப்) போன்றவற்றை இதுபோன்ற அறிவியல் முன்னேற்றங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம்,
தனது தேசிய கெளரவத்திற்காகவும், இராணுவ நலன்களுக்காகவும், பயன்படுத்திக்கொள்ள முயன்று வருகிறது.
இத்தகைய முரண்பாடுகள், புஷ் நிர்வாகத்தில் உச்சக் கட்டத்தை அடைந்துவிட்டன. விண்வெளியையே
இராணுவமயமாக்குவோம் என்று, புஷ் பிரகடனப்படுத்திவிட்டார். அதே நேரத்தில் நாசா - ஆலோசனைக்குரிய மிக முக்கியமான
அறிவியல் ஆய்வு திட்டங்களை இரத்து செய்துவிட்டார். பல்வேறு கிரகங்களுக்கு விண்வெளி ஓடங்களை அனுப்புவது, வியாழன்
கிரகத்தில் சூரிய மண்டலத்திலேயே தண்ணீர் கிடைப்பதாகவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற ஆய்வுகளை புஷ் ரத்து
செய்துவிட்டார்.
கொலம்பியா, அழிவின் அரசியல் தாக்கம்
கொலம்பியா விண்வெளி ஓடம் எரிந்து விழுந்ததால், அதிலிருந்த விண்வெளி வீரர்கள் மாண்டனர்.
அது, அவர்களது குடும்பங்களுக்கு, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மேதைகள் அடங்கிய விரிவான சமுதாயத்திற்கு
பேரிழப்பாகும். இவர்கள் எல்லாம் தங்களது வாழ்வை விண்வெளி ஆய்விற்காக அர்பணித்துக் கொண்டவர்கள். மனித இனத்தின்
முன்னேற்றப் பாதையில், இயற்கை அற்புதங்களை ஆராய்வதில், உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள்.
ஆனால், புஷ் நிர்வாகத்திற்கும், பெரும் கம்பெனிகள் நிறைந்த அமெரிக்காவிற்கும்
கொலம்பியா இழப்பு, மற்றொரு வகையான, `இடியை கொடுத்திருக்கிறது.` 1991-ல், பாரசீக வளைகுடாப்
போரில் தொடங்கி, ஆப்கானிஸ்தான் மீது படையெடுப்பு என்று பல்வேறு இராணுவ, தலையீடுகளை நடத்தி இராணுவ வலிமையில்
குறைந்திருக்கும் எதிரிகளை ஒருதலைபட்சமாக முறியடித்து, அமெரிக்க வீரர்கள் எவரும் பழியாகாத நிலையை உருவாக்கி
இப்படியே அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியில் முறியடிக்க முடியாத நாடு என்ற மாய்மாலத்தை உருவாக்கி வந்திருக்கிறார்கள்.
``இந்த பொய்மான் கரடு`` தற்போது வீழ்ச்சியடைந்துவிட்டது.
ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்ற தருணத்தில்,
பென்டகனும், வெள்ளை மாளிகையும், அதன் அதிகாரிகள் மூலம் அமெரிக்காவின் தொழில்நுட்ப வலிமை எளிதாக, வெற்றி
பெற்றுவிடும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். துல்லியமான, ஆயுதத்தின் மூலம் சதாம் ஹூசேனையும், அவரது ஆதரவாளர்களையும்
குறிவைத்து தீர்த்துக்கட்டிவிட முடியும். ஈராக் மக்களில் ஏறத்தாழ அத்தனை பேரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று அமெரிக்க
அதிகாரிகள் கூறி வருகிறார்கள்.
இந்த கொலம்பியா விண்வெளிக்கல அழிவு, ஏற்பட்டது தொடர்பாக புஷ் நிர்வாகத்தின்,
கருத்து முன்னுரிமை என்ன என்பதை பார்ப்போம். அந்த துயர நிகழ்ச்சி நடந்து மறுநாள், வெள்ளை மாளிகை அதிகாரி,
அரி பிளிட்சர், ஈராக்கிற்கு எதிரான போர் முயற்சியை முடிக்கிவிடப்படுவதற்கு, இந்த துயர நிகழ்ச்சி எந்த வகையிலும்
இடையூறாகயிருக்காது என்று கூறியிருக்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சர் கோலின்பவல், பெப்ரவரி-5-ந் தேதி தனது,
கருத்தை ஐ.நா. பந்தோபஸ்து கவுன்சிலில், எடுத்துரைப்பார் என்றும் பிளிட்சர் குறிப்பிட்டார். போர் தொடங்கும் முன்னர்,
ராஜ்ஜியத்துறை வட்டாரங்களில் பரபரப்பான நடவடிக்கைகள் உருவாவதற்கு, கோலின்பவல் உரை அடிப்படையாக
அமைந்துவிட்டதாக பிளிட்சர் வலியுறுத்தினார்.
விண்வெளி ஓடம், எரிந்து விழுந்த பல நேரத்திற்கு பின்னர் புஷ் தொலைக்காட்சியில் அதைப்
பற்றி கருத்து தெரிவித்தார். அது மிக சாதாரணமாகவும் அரை குறையாகவும் இருந்தது. அமெரிக்காவின் கெளரவத்தையும்,
செல்வாக்கையும், இந்த விபத்து சேதப்படுத்திவிட்டதாக ஆளும் குழுவில் நிலவும் கவலைகள், அவர்களது உரைகளில் தெளிவாகின.
அமெரிக்க மக்களில் மிகப்பெரும்பாலோர், அரசின் வெளிநாட்டு இராணுவமய கொள்கை தொடர்பாகவும், உள்நாட்டில்
ஜனநாயக உரிமைகளை பறிப்பது தொடர்பாகவும், பெருமளவில் கவலை அடைந்திருக்கின்றனர். அமெரிக்காவில் சமூக
நிலவரம் மிக மோசமாக உள்ளது.
அவர் தனது வழக்கமான பாணியில் வேத ஆகம வசனங்களை கூறி, மத அடிப்படையில் ஆறுதல்
பெறுவது ஓர் அரசியல் நடவடிக்கை என்று புஷ் முடித்துக்கொண்டார். உயிர் நீத்த விண்வெளி வீரர்களின் ஆத்மாக்கள்,
சொர்க்கத்திற்கு செல்லட்டும் என்று, முறையிட்ட புஷ், அவர்களது மரணத்திற்கு காரணமான, தனது பொறுப்பையும் இறைவனது
சந்நிதானத்திலேயே ஒப்படைத்துவிட்டார்.
முதலாளித்துவம், தேசிய அரசு மற்றும் விண்வெளி ஆய்வு
கொலம்பியா விண்வெளி ஓட அழிவு நாம் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். இந்த சமுதாயத்தில்,
கோடிக்கணக்கான மக்கள் வேலையில்லாமல், முறையான வீடு இல்லாமல், கல்வி இல்லாமல், சுகாதார வழி இல்லாமல்
வாடிக்கொண்டிருக்கிறார்கள். நகரங்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. போக்குவரத்து அத்தியாவசிய வசதிக்குக்கூட நிதி
ஆதாரம் இல்லை. அதே நேரத்தில் உரிமை பெற்ற சிலர், மேலும் தங்களது வசதிகளை பெருக்கிக்கொண்டே போகிறார்கள்.
அவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை, சமுதாய அடிப்படையில், முற்போக்கு திசையில் கொண்டு செல்ல
வல்லமை இயல்பாகவே இல்லை.
மேலும், மனிதனது அறிவுத் தேடலின் எல்லா வகைகளையும் போல், விண்வெளி ஆய்வு தடுத்து
நிறுத்தப்படுகிறது. சிதைக்கப்படுகிறது. ஏனென்றால், இந்த சமுதாயம், தேசியவாதம் தேசிய அரசு என்கின்ற குறுகலான
கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது. சர்வதேச அடிப்படையில் திட்டமிட்டு சீரமைக்கப்பட்டு, அறிவியல் ஆய்வு நடத்தப்பட்டால்தான்
மனித இனம் முழுவதும் பயன் பெறமுடியும்.
போர் வெடிப்பது, அது தொடர்பாக, அமெரிக்காவில் ஏற்படும் உணர்வுகள், அறிவியல்
மற்றும் தொழில்நுட்பம், முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதை நிரூபித்துகாட்டுகின்றன. அறிவியலும், தொழில்நுட்பமும்,
இராணுவ வெற்றிக்கும், ஒடுக்குமுறைக்கும் கருவிகளாக பயன்படுத்தப்படும்போது, தனியார் இலாபநோக்கு மேலோங்கிவிடுகிறது,
விண்வெளி அறிவியல் உட்பட அறிவியல் தொடர்பான ஆய்வுகள், எப்போது செழித்து வளரும் எனில், சர்வதேச உழைக்கும்
வர்க்கம் தன்னை, நிதி ஆதிக்கச் சக்திகளிடமிருந்து விடுவித்துக்கொள்ளும்போதுதான். அப்போது திட்டமிட்டு ஜனநாயக
அடிப்படையில், நெறிமுறைப்படுத்தப்படும் சோசலிச சமுதாயம் நிலை நாட்டப்படும்போது தான், ஒட்டுமொத்த மனித
சமுதாயமும் பயன்படுகிற அளவில் வளரமுடியும். |