World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : கிழக்கு தீமோர்

East Timor's "independence": illusion and reality

கிழக்கு தீமோரின் ''சுதந்திரம்'': நப்பாசையும் யதார்த்தமும்
By Mike Head and Linda Tenenbaum
18 May 2002

Use this version to print | Send this link by email | Email the author

மே மாதம் 20ம் திகதி நள்ளிரவின் பின்னர் ஒரு சிறிய நிலப்பரப்பான கிழக்கு தீமோர் 21ம் நூற்றாண்டின் புதிய சுதந்திர நாடாக அழைக்கப்படவுள்ளது. தலைநகரான டிலி (Dili) யில் நடைபெறவிருக்கும் உத்தியோகபூர்வமான கொண்டாட்டங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான கொபி அனான் ஜனாதிபதியாக தெரிவுசெயப்படவுள்ள ஸனானா குஸ்மாவோ (Xanana Gusmao) இடம் அதிகாரத்தை கையளிப்பதுடன், 800,000 மக்கள் உள்ள பிரதேசம் விடுதலையடைந்துள்ளதாக அறிவிக்கவுள்ளார்.

கிழக்கு தீமோரின் மக்கள் நிர்வாகத்தின் வலைத் தளமான ''சுதந்திர தின நிகழ்வு'' இன் படி ''தீமோர் புதிய நூற்றாண்டினதும், உலகத்தின் நவீன ஜனநாயகத்தின் முதலாவது நாடாகவும் மாறவுள்ளது. 500வருட காலனித்துவத்தினதும், 25வருட ஆயுதப்போராட்டத்தினதும் பின்னர் தீமோர் மக்கள் நீண்டகாலமாக அவர்கள் கடுமையாக போராடியதற்கான சுதந்திரத்தை அணைத்துக்கொள்ள இருக்கின்றார்கள்'' எனக் குறிப்பிட்டது.

முற்றும் நப்பாசைமிக்க இந்த கருத்துக்களின் தன்மை இக் கொண்டாட்டங்களிலேயே தெளிவாக வெளிப்படுகின்றது. இக் கொண்டாட்டங்களை நடாத்துவதற்காக, அதன் ஒழுங்கமைப்பாளார்கள் நிறுவனங்களின் ஆதரவிற்கான தரகுவேலையில் ஈடுபட்டுள்ளனர். அவ் வலைத் தளமானது ''விரும்பும் ஆதரவு வழங்குபவர்கள் கொண்டாட்டங்களின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கலாம். மற்றவர்கள் ஒரு சிறிய தொகையை ஆதரவாக வழங்கலாம்'' என குறிப்பிட்டது. வழங்கும் தொகையின் அடித்தளத்தில் நிகழ்ச்சிகளுக்கான பெயர் வழங்கும் உரிமை அவர்களுக்கு கிடைக்கும். இதில் முக்கிய கலாச்சார கொண்டாட்டமும் அடங்கும்.

ஆதரவு வழங்குபவர்களுக்கான மற்றைய பலன்களில் தொலைக்காட்சி, வானொலி, வீதி பதாகைகள், ஞாபகார்த்த மேலாடைகள், சுதந்திரதின விற்பனைப்பொருட்கள் போன்றவற்றில் அவர்களின் பெயர்களையும், இலட்சனையையும் பதிக்கும் உரிமையும் அடங்கும். பாரம்பரிய தேசிய பூங்காவில் வைக்கப்படவிருக்கும் ''போராட்ட வீரர்களின்'' பெயர் பதிக்கும் கல்லில் கூட ஆதரவு வழக்குபவர்களின் பெயர்கள் பதிக்கலாம். சிறிய வியாபாரிகளும், தனிநபர்களும் நன்கொடை வழங்க ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இவ்வலைத்தளமானது ''எமக்கு பாரிய நிறுவனங்கள் தேவை. ஆனால் எல்லோரும் தமது பங்கை வகிக்கும் வண்ணம் நாம் ஒழுங்கமைத்துள்ளோம்'' என புகழ்ந்தது.

பெரிய நன்கொடை வழங்குபவர்களாக இருப்பவர்கள், தீமோருக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் உள்ள தீமோர் கடலில் உள்ள பாரிய வளங்களினால் மில்லியன் கணக்கான டொலர் இலாபத்தை அடைய காத்திருக்கும் எண்ணெய், நிலவாயு நிறுவனங்களாகும். Phillips Petroleum, Shell, Osaka Gas, Woodside Energy என்பன இவற்றுள் அடங்கும். இது ''சுதந்திர'' பிரகடனமானது எண்ணெய் நிறுவனங்களின் அளவிலேயே தங்கியுள்ளது என்பதை காட்டுகின்றது.

இக்கொண்டாட்ங்களில் 80 நாடுகள் கலந்து கொள்ளும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள் போதிலும், நான்கு நாடுகளின் தலைவர்களே கலந்து கொள்வதாக உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நான்கு நாடுகளும் கிழக்கு தீமோரில் உடனடி பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை கொண்டுள்ளன. நீண்டகால காலனித்துவ ஆட்சியாளரான போர்த்துக்கல், பிரதமரையும் ஜனாதிபதியையும் அனுப்பவுள்ளது. இக்கொண்டாட்டங்களின் பின்னர் முன்னாள் காலனிகளின் அமைப்பான போர்த்துகேய மொழிபேசும் நாடுகளின் கூட்டத்தின் (CPLP) மூலம் தனது பொருளாதார இராஜதந்திர பிரசன்னத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவதற்காக அதன் தூதுக்குழுவினர் உண்மையான வியாபாரத்தில் ஈடுபடுவர்.

கிழக்கு தீமோரில் போர்த்துக்கலின் முக்கிய போட்டியாளனும், இப்பிரதேசத்தின் முக்கிய பிராந்திய சக்தியுமான அவுஸ்திரேலியா தனது பிரதமரான ஜோன் ஹவாட்டை அனுப்பவுள்ளது. ஒரு வாரத்தின் முன்னர் ஹவாட் அரசாங்கமானது தீமோரின் பிரதமராகவுள்ள மாரி அல்காதிரியை விஷேட விமான மூலம் அழைத்துவந்தது. அவர் நிதியமைச்சரான பீட்டர் கொஸ்டல்லோ, வெளிநாட்டு அமைச்சரான அலெக்ஸாண்டர் டெளனர், பாதுகாப்பு அமைச்சரான றொபேட் கில் போன்றோரை சந்தித்ததுடன், தீமோர் கடலில் உள்ள பாரிய எண்ணைய், நிலவாயு வளங்களை கொண்ட Greater Sunrise Field இனை அவுஸ்திரேலியாவிற்கு இச்சிறிய நாடு விட்டுக்கொடுக்குமாறு வலியுறுத்தலுக்குள்ளானார். இக்கட்டத்தில் ஒரு முழுமையான உடன்பாட்டை அடையமுடியாது போனாலும், மே 20ம் திகதி புதிய நாட்டின் முதலாவது ''சுதந்திர'' நடவடிக்கையாக ஒருவகையான உடன்படிக்கையில் கையெழுத்திடுமாறு அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.

1999 இல் இறுதிகளில், அவுஸ்திரேலிய தலைமையிலான இராணுவ ஆக்கிரமிப்பில் முக்கிய பங்கு வகித்த நியூஸிலாந்திற்கும் முக்கிய பொருளாதார நலன்கள் உண்டு. இதுவும் தமது பிரதமரான கெலன் கிளார்க்கை அனுப்பவுள்ளது. ஆனால் பிரதம அதிதியாக மதிப்பளிக்கப்படவுள்ளவர் இந்தோனேசிய ஜனாதிபதியான மேகவதி சுகர்னோபுத்திரியாகும். ஸனானா குஸ்மாவோ இரண்டு வாரங்களின் முன்னர் ஜகார்த்தாவிற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு மேகவதியின் விஜயத்தை உறுதிப்படுத்திக்கொண்டார். இதுவரை தீமோர் இந்தோனேசியாவின் பிராந்தியம்தான் என்பதை கைவிடாத இந்தோனேசிய இராணுவ அமைப்பின் கடுமையான எதிர்பை எதிர்கொண்டு அவர் தனது முடிவை இறுதி நேரத்திலேயே அறிவித்தார். மேகவதி 4 மணித்தியாலங்களே அங்கு தங்கவுள்ளதுடன், தனது சொந்த இராணுவ பாதுகாப்புடனும், தனது கடற்படை கப்பல் டிலியின் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் எனவும் வலியுறுத்தியுள்ளார். உருவாகவிருக்கும் அரசாங்கத்திற்கான ஒரு தெளிவான எச்சரிக்கையாக சனிக்கிழமை 5 இந்தோனேசிய கடற்படை கப்பல்கள் சுதந்திரதின விழா நடைபெறவிருக்கும் பிரதேசத்தில் உலாவி திரிந்ததை காணக்கூடியதாக இருந்தது.

1975 இல் சர்வாதிகாரி சுகார்ட்டோவின் கீழான இந்தோனேசிய இராணுவம் தீமோர் மீதான ஆக்கிரமிப்பிற்கு அவுஸ்திரேலியாவுடன் இணைந்து ஆதரவளித்த அமெரிக்கா தனது முன்னாள் ஜனாதிபதியான பில் கிளின்டனை அனுப்பவுள்ளது.

இவ் அனைத்து நிகழ்வுகளும் இச்சிறிய நாட்டின் இருப்பின் மீது ஆதிக்கம் செலுத்தவிருக்கும் உறவுகளை எடுத்துக்காட்டுகின்றது. அதாவது இந்நாடானது பல உலக சக்திகளுக்கும், பாரிய எண்ணெய் நிறுவனங்களுக்கும், சர்வதேச நிதி நிறுவனங்களான சர்வதேச நாணய நிதியத்திற்கும், உலக வங்கியிற்கும் அடிமைப்பட்டிருக்கும் என்பதாகும். கிழக்கு தீமோரின் வாழ்க்கை ஆசியாவில் ஒரு வறுமையான நாடாகவும், உலகின் மிகவும் ஏழ்மையான நாடு ஒன்றாகவும், தனது அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள முடியாத, கட்டுமானத்திற்கும், தேவைகளுக்கும் தொடர்ச்சியாக வெளிநாட்டு உதவிக்கும் கடனுக்கும் தங்கியிருக்கும் ஒன்றாக ஆரம்பிக்கினறது. முதல்வருட வரவுசெலவுத்திட்டமான 100 மில்லியன் டொலரில், துயரம்தோய்ந்தவகையில் சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, மற்றும் முக்கிய தேவைகளை வழங்கமுடியாதுள்ளதுடன், 1/3 பகுதி உள்நாட்டு தேவையே நிறைவேற்றப்படலாம்.

கிழக்கு தீமோர் அரசாங்கமானது தனது நிறுவனங்களிற்கும், அமைப்புரீதியான ஆதரவாளர்களிற்கும் சாதகமாக இருப்பதன் மூலமே இயங்க கூடியதாக இருக்கும். உதாரணத்திற்கு, மார்ச் 12ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாக அதிகாரியான Sergio Veira de Mello, கிழக்கு தீமோர் அமைச்சர்கள் சபையிடம் மே மாதம் 20ம் திகதிக்கு பின்னர் சட்டரீதியான, அரசமைப்பு தொடர்பான, வலைத்தள வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், போட்டோ பிரதி, வாகன பராமரிப்பு வசதிகள் போன்றவற்றை தொடர்ந்தும் வழங்காது என தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஒரேநேரத்தில் மொழிபெயர்ப்பு செய்பவர்கள், வானொலி, தொலைக்காட்சி சேவைவசதிகள் போன்றவை வேறுவழிகளில் நிதி வழங்கப்படாவிட்டால் இயங்காது போய்விடும்.

இரண்டரை வருடங்களின் முன்னர் 1999 ஆகஸ்ட் 30ம் திகதி கிழக்கு தீமோர் மக்கள் இந்தோனேசிய இராணுவத்தினதும், இராணுவ அதிகாரிகளினதும் வன்முறையையும் கொடுமையையும் எதிர்த்து இந்தோனேசியாவில் இருந்து பிரிந்துபோவதற்கு பெரும்பான்மையுடன் வாக்களித்தனர். வாக்களிப்பை தொடர்ந்து உடனடியாக இராணுவ வெறியாட்டத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், நூறாயாரக்கணக்கானோர் இந்தோனேசிய மேற்கு தீமோரினுள்ள செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டதுடன், அப்பிராந்தியத்தில் வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், பொதுக்கட்டிடங்கள் உள்ளடங்கலான முழுக்கட்டுமானமும் அழிக்கப்பட்டது. இறுதி ஆய்வுகளில், டிலியில் நடைபெறவிருக்கும் விழாக்கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்பட்டிருக்கும் அரசாங்கங்களே இவ் அழிவுகளுக்கு காரணமாகும். பல பத்தாண்டுகளாக அவர்கள், கிழக்கு தீமோர் மக்களை தமது பொருளாதார, மூலோபாய நலன்களுக்கான பணயமாக வைத்திருந்தனர். தற்போது, இப்புதிய ஏழ்மையான சிறிய நாடானது ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கும், சதிகளுக்கும் எதிரான பரந்துபட்ட மக்களின் சுயாதீனமான அணிதிரட்டலுக்கு மாறாக, தனது இருப்பிற்கு முற்றாக இதே ஏகாதிபத்திய சக்திகளில் தங்கியிருக்கவேண்டியுள்ளது.

ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் வரலாறு

லிஸ்பனில் Salazar-Caetano இன் பாசிச சர்வாதிகார ஆட்சி 1974 ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்ததில் இருந்து போர்த்துக்கல் உலகத்தின் மிகவும் பின்தங்கிய இடமாக இருந்த கிழக்கு தீமோர் மீதான எதிர்க்கமுடியாத காலனித்துவ அதிகாரத்தை கொண்டிருந்தது. 1975 இல் வியட்னாமில் பாரிய தோல்வியை சந்தித்த பின்னர், அமெரிக்காவினதும் அவுஸ்திரேலியாவினதும் அரசாங்கங்கள் கிழக்கு தீமோரில் Fretilin இன் தலைமையில் உருவாகிக்கொண்டிருந்த சுதந்திர இயக்கமானது இந்தோனேசிய தீவுக்கூட்டங்கள் அனைத்திலும் உறுதியற்ற நிலைமையை உருவாக்கிவிடும் என அஞ்சினர். 1975 டிசம்பரில் இத்தீவின் மீது ஆக்கிரமிப்பு செய்யுமாறு சுகார்ட்டோவின் இராணுவ அரசாங்கமானது தூண்டிவிடப்பட்டது. அடுத்த இருபது வருடங்களாக வெற்றிபெற்ற அமெரிக்காவினதும் அவுஸ்திரேலியாவினதும் அரசாங்கங்கள் தீமோரியர்களின் எதிர்ப்பை இந்தோனேசியா ஒடுக்குவதற்கு உறுதியான ஆதரவை வழங்கின. இதில் 200,000 உயிர்கள் பலிகொள்ளப்பட்டது.

1965-66 இல் அமெரிக்காவினதும் அவுஸ்திரேலியாவினதும் ஆதரவுடனான, சதிமூலம் இந்தோனேசிய மக்கள் மீது இருத்தப்பட்ட சுகார்ட்டோவின் அரசாங்கமானது, ஒரு மில்லியன் தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் கொலைக்கு காரணமானதுடன், தென்கிழக்கு ஆசியாவில் மேற்குலகின் மூலோபாய, பொருளாதார நலன்களின் பாதுகாவலனாக இருந்தது.

1978 இல் தீமோர் கடலின் கீழான எண்ணைய், நிலவாயு இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இந்தோனேசியாவுடனான கிழக்கு தீமோரின் இணைப்பை உலகத்தில் முதல் முதலாக அங்கீகரித்தது அவுஸ்திரேலிய அரசாங்கமாகும். இதற்கு பதிலாக இந்தோனேசிய அரசாங்கமானது, தீமோர் கடலின் வளங்கள் தொடர்பான சொந்தத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் அவுஸ்திரரேலிய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்தது. இப் பேச்சுவார்த்தைகள் 1989 இல் Timor Gap Treaty என்ற உடன்படிக்கையை Hawke இன் தொழிற்கட்சி அரசாங்கத்துடன் விஷேட அதிதிகளுக்கான விமானப்படை விமானத்தில் வைத்து கையெழுத்திடப்பட்டது. இவ்வுடன்படிக்கையானது கடலுக்கு கீழான வளங்களின் பெரும்பகுதியை அவுஸ்திரேலியாவிற்கு கிடைக்க வழியமைத்தது.

ஆனால் பொருளாதார, அரசியல் மாற்றங்கள் கன்பரா அரசாங்கத்தின் கணிப்புகளை இல்லாதொழித்தது. இப்பாரிய எண்ணைய், நிலவாயு வளங்களின் கண்டுபிடிப்பானது தனது முன்னைய காலனி மீது தனது அக்கறையை புதிப்பித்தலுக்கு போர்த்துக்கலை தூண்டியது. கிழக்கு தீமோர் மீதான அதனது ஆளுமை, ஐக்கிய நாடுகள் சபையால் இன்னமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கையில், லிஸ்பன் இந்தோனேசிய -அவுஸ்திரேலிய உடன்பாடு மீது உலக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. 1995 இல் நீதிபதிகள் ஐக்கிய நாடுகள் உரிமைப்பத்திரத்தின் கீழ் போர்த்துக்கலின் கோரிக்கையை ஏற்றுகொண்டனர். இந்தோனேசியா இதனை ஏற்க மறுத்ததால் நீதிமன்றம் அதனை நடைமுறைப்படுத்துமளவிற்கு செல்லவில்லை.

ஆனால் 1990 இன் மத்தியில், இந்தோனேசிய அரசாங்கத்துடனான வாஷிங்டனின் அணுகுமுறை ஒரு மாற்றத்திற்குள்ளானது. அப்பிராந்தியத்தின் பொலிஸ்காரனாக மதிக்கப்பட்ட சுகார்ட்டோவின் ஊழல்மிக்கதும், உறவினருக்கு சார்பான அரசாங்கம் வளம்மிக்க இந்தோனேசிய பொருளாதாரத்தை உலகச்சந்தைக்கு முற்றாக திறந்துவிடுவதற்கான தடையானது. 1997 இல் சர்வதேச நாணய நிதியத்தாலும், உலக வங்கியினூடாகவும் ஆசிய பொருளாதார வீழ்ச்சியை சந்தர்ப்பமாக பாவித்து அமெரிக்கா இராணுவ சர்வாதிகாரியை இல்லாதொழித்தது. போர்த்துக்கல் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஒரு இராஜதந்திர முயற்சியில் ஈடுபட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் தீமோருக்கான ஐக்கிய நாடுகளின் தூதுவரை நியமிப்பதில் அது வெற்றிபெற்றது.

இதேவேளை போர்த்துக்கல் ஆட்சியாளர்கள் Gusmao, Horta, Alkatiri போன்றோரையும், ஏனைய இந்தோனேசிய தலைவர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சித்தனர். 1998 ஏப்பிரலில் இந்தோனேசியா முழுவதும் சுகார்ட்டோ எதிர்ப்பு கலவரங்கள் ஆரம்பித்தபோது, லி்ஸ்பனுக்கு அருகாமையில் தீமோரியரின் எதிர்ப்பிற்கான தேசிய அமைப்பு (National Council of Timorese Resistance -CNRT) ஒரு மாநாட்டில் உருவாக்கப்பட்டது. CNRT இன் தலைவர்கள் சுகார்ட்டோவிற்கு எதிரான தொழிலாளர்களினதும் மாணவர்களினதும் இயக்கத்தை கண்டதுடன், இந்தோனேசிய ஒடுக்கமுறைக்கு எதிரான போராட்டத்தின் உண்மையான கூட்டாக காட்டிக்கொள்ளமல், இச்சந்தர்ப்பத்தை ''மிகவும் பாதுகாப்பனதும், உருவாகவுள்ள சூழ்நிலையின்'' பாதுகாவலர்களை உருவாக்குபவர்களாக தம்மை காட்டிக்கொள்வதற்கு பயன்படுத்திக்கொண்டனர்.

CNRT இன் முன்னோக்கான கிழக்கு தீமோருக்கான ''சுயநிர்ணய உரிமையானது'' ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தையோ அல்லது தீமோர் மக்களினது நலன்களை பாதுகாப்பதுடனோ தொடர்புபட்டதல்ல. மாறாக போர்த்துக்கல் அல்லது அவுஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தினது ஆதரவை பெற்றுக்கொள்வதை நோக்கமாக கொண்டதாகும். இதன் மூலம் தனிநாடு ஒன்றை உருவாக்குவதன் மூலம் உள்ளூர் ஆளும் பிரிவினர் ஏகாதிபத்தியங்களின் இளைய பங்காளிகளாக இயங்குவதாகும். இதன் முடிவில் CNRT இரண்டு முக்கிய இலாபங்களை வழங்குவதாக வாக்களித்தது. அவையாவன ஸ்திரத்தன்மை -அதாவது தீமோர் மக்களின் மத்தியில் உருவாகும் கிளர்ச்சியை ஒடுக்குவது, மற்றையது முக்கியமாக எண்ணெய் போன்ற தீவின் முக்கிய இயற்கை வளங்களை சுரண்டுவதின் அடித்தளத்திலான இலாபம் ஆகும்.

போர்த்துக்கலின் முயற்சிகளுக்கு பதிலளிக்க கன்பரா இந்தோனேசிய அரசாங்கத்துடனான மிகவும் இலாபமான உறவுகளை நெருக்கமாக்கிக்கொள்ள முயற்சித்தது. சுகார்னோவிற்கு பின்னர் பதவிக்கு வந்த ஹபீபி (B.J. Habibie) இற்கு 1998 இன் இறுதியில் ஹவார்ட் எழுதிய கடிதத்தில் கிழக்கு தீமோருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியை வழங்குவதுதான் இந்தோனேசியாவின் இறைமையை பாதுகாத்துக்கொள்ள சிறந்தது என குறிப்பிட்டார்.

1999 ன் ஆரம்பத்தில் தனது அரசாங்கம் பொருளாதார மரணநெருக்கடிக்குள்ளும், மாணவர்களினதும் தொழிலாளர்களினதும் அமைதியின்மை தொடர்கையில் ஹபீபி கிழக்கு தீமோர் மீது ஒரு நிபந்துனையை முன்வைத்தார். அவையாவன, ஒரு சில மாதத்தினுள் இந்தோனேசியாவின் கட்டுப்பாட்டின் கீழ் ஒருவகைப்பட்ட ''மக்கள் ஆலோசனை'' முறையை ஏற்றுக்கொள்வது அல்லது இந்தோனேசியா உடனடியாக வாபஸ்பெறுவதன் மூலம் உருவாகும் உடனடி ''அழிந்த பூமியை'' எதிர்நோக்க விரும்புகின்றீர்களா என்பதாகும். இவ் வாபஸ்பெறுவதன் கீழ் அப்பிரதேசத்திற்கான சகல நிதி, சேவை, கட்டுமானத்திற்கான உதவிகள் இல்லாதுபோதலாகும்.

ஹபீபியின் முன்மொழிவானது போர்த்துக்கல்லின் நிகழ்ச்சிநிரலை நற்செய்தியாக கொண்டிருந்தது. ஐக்கிய நாடுகளின் ஆசீர்வாதத்துடனும், தீமோர் மக்களை எவ்விதத்திலும் கலந்து ஆலோசிக்காதும் போர்த்துக்கல் இந்தோனேசியாவுடன் மே மாதம் 5ம் திகதி இந்தோனேசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஐக்கியநாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் ஒரு சர்வஜன வாக்கடுப்பை நடாத்த ஒரு உடன்பாட்டினை செய்திருந்தது. CNRT இன் தலைவர்கள் பிரிவினைக்கான வாக்கெடுப்பு ஒன்று நடாத்துவது இந்தோனேசிய ஆதரவுடனான ஆயுதக்குழுக்களால் விசர்பிடித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிந்திருந்ததால் இப்படியான வாக்கெடுப்பை ஆரம்பத்தில் நிராகரித்தனர். ஆனால் விரைவில் அவர்களும், வன்செயல்கள் ஏதாவது உருவாகுமானால் அது ஐக்கிய நாடுகள் சபையினதும், மேற்கினையும் பலப்படுத்தி தலையீடு செய்வதன் மூலம் CNRT இனை அரசாங்கத்தில் இருத்திவிடும் என கணிப்பிட்டதன் மூலம் இவ்வழிக்கு வந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் சூழ்ச்சிகளை இல்லாது செய்வதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கமானது தனது போர்த்துக்கல் எதிராளியை வெளியே அகற்ற சூழ்ச்சித்திட்டங்களுக்கு முயற்சித்தது. கிழக்கு தீமோர் மீதான இந்தோனேசியாவின் நீண்டகால இறைமையை பராமரித்துக்கொண்டு ஹவாட் இன் அரசாங்கமானது இரண்டு திசைகளில் இயங்க தொடங்கியது. தனது நலன்களை பாதுகாத்துக்கொள்ள வியட்னாம் யுத்ததின் பின்னர் பாரிய இராணுவ தயாரிப்பை செய்தது. உளவுத்துறையின் குறுக்கீடு இருந்தபோதிலும் ஹவாட்டிற்கும் அவரது முக்கிய அமைச்சர்களுக்கும் இந்தோனேசிய அமைச்சரவையினதும் இராணுவ உயர் கட்டளையகத்தினதும் திட்டங்கள் நன்றாக தெரிந்திருந்தது. ஹவாட்டின் அரசாங்கமானது ஆயுதக்குழுக்களின் எந்தவொரு நடவடிக்கையும் அவுஸ்திரேலிய தலைமையிலான இராணுவத்தலையீட்டு தேவையான மனிதாபிமான நடவடிக்கை போன்ற முன்னிபந்தனைகளை உருவாக்கும் என கணிப்பிட்டிருந்தது.

அவுஸ்திரேலிய படைகள் கிழக்கு தீமோர் மக்களை பாதுகாப்பது என்ற முகமூடியின் கீழ் 1998 செப்டம்பர் மத்தியில் டிலியில் இறங்கியபோது படுகொலைகள் நடந்து முடிந்திருந்தது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் INTERFET படைகளுக்கு தலைமை தாங்கி ஹவாட் அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் எவ்வகைப்பட்ட அரசாங்கம் உருவாகினாலும், அதில் தனது கருத்துக்கள் முக்கிய இடத்தை பெற்றுக்கொள்வதற்கான நிலையை உருவாக்கிக்கொண்டது.

எதிர்ப்புக்கள் ஒடுக்கப்படுகின்றன

இந்த இரத்தம் தோய்ந்த நிகழ்வுகள் தொடர்கையில், கிழக்கு தீமோரின் தலைவர்கள் எவ்விதமான பரந்த எதிர்ப்பையும் தடுப்பதற்கு செயற்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்பிற்கு முன்னரும் பின்னரும் அவர்கள் எதிர்ப்பையும், ஆர்ப்பாட்டங்களையும் எதிர்த்தனர். குஸ்மாவோ தனது கெரில்லா போராளிகள் இந்தோனேசிய இராணுவ வன்முறைக்கு எதிராக தாக்குதலில் ஈடுபடமாட்டார்கள் என கூறியதன் மூலம் கொலைகள் தொடர்வதை அனுமதித்தார். சர்வஜன வாக்கெடுப்பின் ஐந்து நாட்களின் பின்னர், 1999 செப்டம்பர் 4ம் திகதி CNRT இன் அறிக்கை ஒன்றில் ''தம்மால் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும், ஏனெனில் அது ஒரு உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு காரணமாக கூறப்படும்'' என அறிவித்தது. அவர்களுடைய முக்கிய கவனம் என்னவெனில், ஒன்றும் செய்யக்கூடாது, அது மேற்கின் ஆதரவிற்கு உடன்பாடானதாக இருக்கும் என்பதாகும்.

அவர்களது இந்நிலைப்பாடானது ஐக்கிய நாடுகள் சபை கிழக்கு தீமோருக்கான இடைக்கால நிர்வாகத்தை அமைக்கும் வரை தொடர்ந்தது. ஆரம்பத்தில் இருந்தே தீமோரின் தலைமையானது எவ்விதமான உண்மையான ஜனநாயகரீதியான பங்கெடுத்தலை தடுக்க தீர்மானித்திருந்தது.

எவ்விதமான வாக்கெடுப்போ அல்லது மக்கள் கலந்துகொள்ளலோ இல்லாது கிழக்கு தீமோருக்கான இடைக்கால நிர்வாகம் ஒரு காலனித்துவ ஆட்சிக்கான அதிகாரங்களை கொண்டிருந்தது. கோர்தாவினதும் குஸ்மாவோவினதும் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகியாகிய Sergio Vieira de Mello பரந்து அதிகாரங்களை கொண்டிருந்ததுடன், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளையும் உள்ளூர் அரசியல்வாதிகளையும் கொண்ட அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரத்தையும் கொண்டிருந்தார். குஸ்மாவோ, Sergio Vieira de Mello உடன் நெருக்கமாக கூடி இயங்கி எதிர்வரும் ஜனாதிபதியை போல் நடாந்துகொண்டார். இதேவேளை முன்னாள் கெரில்லா இயக்கமாகிய Fretilin ஒரு உண்மையான அரச கட்சியாகியது.

எதிரான இராணுவ நடவடிக்கையை தடுப்பதை நோக்கமாக கொண்டு கிழக்கு தீமோர் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையை நீடிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதனூடாக ஆயிரக்கணக்கான ஐக்கிய நாடுகள் சபையின் படையினரும், பொலிஸாரும் கட்டுப்பாட்டை தொடர்ந்து வைத்திருக்க விரும்பினர்.

பிரிவினைக்காக வாக்களிக்கப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர், கடந்த ஆகஸ்டு மாதமே மக்கள் மன்றத்திற்கான தேர்தல் நடாத்தப்பட்டது. இதுவும் கடுமையான அரசியல் கட்டுப்பாட்டின் கீழேயே நடந்தது. குஸ்மாவோவின் வலியுறுத்தலின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் நாட்டின் ஒருமைக்கான உடன்பாட்டிலும், ஒருவர் மீது ஒருவர் விமர்சனம் செய்வதை தடுப்பதற்கும், தேசிய ஒற்றுமை நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காகவும், ஆரம்பத்தில் இருந்தே தன்னை ஜனாதிபதியாக ஆதரவளிப்பதற்காகவும் கையெழுத்திடவேண்டியிருந்தது. செய்தித்துறையையும், ஐக்கிய நாடுகள் சபையையும் பொறுத்தவரையில் Fretilin இன் வெற்றி முற்கூட்டிய முடிவாக இருந்தது.

பாரிய அழுத்தங்களுக்கு மத்தியிலும் சாதாரண மக்கள் கிழக்கு தீமோர் மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் அரசு தொடர்பாகவும், அதன் கூட்டாளிகள் தொடர்பாகவும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவதில் அந்நியப்படலும், பற்றுதலின்மையும் காணப்பட்டது. எதிர்பார்த்த பெரும்பான்மைக்கு மாறாக, Fretilin இற்கு 57% வாக்குகளே கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து Fretilin இன் தலைமையானது ஆகக்குறைந்தது எதிர்வரும் 5வருடங்களுக்கு எவ்விதமான தேர்தல் நடப்பதையும் தடுத்துள்ளது. ஏனைய குழுக்களுடன் ஒரு கூட்டினை உருவாக்குவதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்தை எழுதுவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை Fretilin இன் மக்கள் மன்றத்தில் பெற்றுக்கொண்டார். அதன் தலைவர்கள் இவ் அரசியலமைப் சட்டம் மீதான சர்வஜனவாக்கெடுப்பு நடக்காது என அறிவித்ததன் மூலம், அதற்கு எதிராக மக்கள் வாக்களிக்கும் உரிமையை இல்லாதொழித்தனர். இதனைத்தொடர்ந்து, இம்மக்கள் மன்றம் நாட்டின் முதலாவது பாராளுமன்றத்தை அமைக்கும் என Fretilin இன் அறிவித்ததுடன், 2007 வரையிலான எவ்விதமான தேர்தலுக்கான தேவையையும் அகற்றினார்.

ஜனாதிபதி பதவிக்கான ஒரேயொரு தேர்தல் மே மாதம் 20 அளவில் இடம்பெறவுள்ளது. இது ஒரு முழு ஏமாற்றாகும். ஐக்கிய நாடுகள் சபை மட்டுமல்ல, உலக செய்தி நிறுவனங்கள் அனைத்துமே குஸ்மாவோ வெற்றியாளர் என ஏற்கனவே அறிவித்துள்ளன. அத்தேர்தலுக்கு ஒரு ஜனநாயக மூடி இடுவதற்காக முன்னாள் ஜனாதிபதியான Xavier do Amaral ஒரு போலிவேட்பாளராக கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பில் பலவிதமான அரசியல் சுதந்திரங்களையும், தனியார் உரிமைகளையும் வழங்குவதாக பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாக கட்டுப்பாடு, தடைவாக்கினை (Veto) பாவிக்கும் ஜனாதிபதிக்கான அதிகாரம், அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றல், பாராளுமன்றத்தை கலைத்தல், அவசரகால நிலைமையை அறிவித்தல், ஆயுதப்படைகளுக்கு கட்டளையிடுதல் போன்றவற்றை இது அடக்கியுள்ளது. பாராளுமன்ற, ஜனாதிபதி தேர்தல் ஒவ்வொரு 5 வருடத்திற்குமே நடக்கும். அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கு சர்வஜனவாக்கெடுப்பு தேவையில்லை. அது பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் எந்தநேரத்திலும் மாற்றப்படலாம். இப்பத்திரம் வளர்ந்துவரும் உள்ளூர் முதலாளித்துவத் தட்டினதும், வெளிநாட்டு மூலதனத்தினதும் நலன்களை பாதுகாப்பதற்கான உறுதியை வழங்குகின்றது. இது உற்பத்தியில் தனிச்சொத்துடமையை பாதுகாப்பதுடன், ''சுதந்திரமான முயற்சியையும் வர்த்தக மேற்பார்வையும்'' முன்வைப்பதுடன், அரசாங்கம் ''வெளிநாட்டு மூலதனத்தை கவருவதற்கான நிலைமைகளை ஸ்தாபிக்கும்'' எனவும் குறிப்பிட்டுள்ளது.

மே 20ம் திகதி கையளிக்கப்பட்ட பின்னரும் ஒரு திருத்தியமைக்கப்பட வடிவத்தில் ஐக்கிய நாடுகள் சபையினது அதிகாரம் தொடர்ந்தும் இருக்கும். 6500 இற்கு மேற்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் படையினரும், பொலிஸாரும், நீதித்துறை அதிகாரிகளும், நிர்வாகிகளும் 2004 மே மாதம் வரை அங்கு தொடர்ந்தும் இருப்பர். இது எல்லையற்று நீடிப்பதற்காக சாத்தியம் உள்ளது. கிழக்கு தீமோரிற்கு ஆதரவான ஐக்கியநாடுகள் சபையின் குழுவின் அங்கத்தவர்கள் முக்கிய பதவிகளில் தொடர்ந்தும் இருப்பதுடன், புதிதாக உருவாக்கப்படும் இராணுவத்தையும் பொலிஸாரையும் மேற்பார்வை செய்வதுடன், பயிற்சியுமளிப்பர். சகலவிதமான தேவைகளையும், நோக்கங்களையும் பொறுத்தவரையில் கிழக்கு தீமோரானது ஒரு அரைக்காலனித்துவ அரசாகவே இருக்கும்.

ஏழ்மையும் சமத்துவமின்னையும் அமைதியின்மையும்

ஐக்கிய நாடுகள் சபையும், கிழக்கு தீமோர் ஆட்சியாளர்களும் பரந்த எதிர்ப்பு தொடர்பாக பயப்படுவதற்கு முக்கிய காரணங்கள் உண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் மனித அபிவிருத்தி திட்ட அறிக்கை ஒன்று மே மாதம் 13ம் திகதி வெளியிடப்பட்டது. அதில் கிழக்கு தீமோரின் வருடாந்த தனிமனித வருமானம் 478 டொலர் எனவும், அது ருவண்டா மற்றும் அங்கோலாவிற்கு அடுத்ததாக உலகத்தில் உள்ள 20 ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ளது. அங்கு 40% இற்கு மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டின் கீழும், நாளாந்தம் 55 சென்ற் உடன் வாழ்வதுடன், அரைவாசிக்கும் அதிகமானவர்கள் கல்வியறிவற்றவர்களாகவும், பிறக்கும் குழந்தைகள் நிறைகுறைவாக இருக்கின்றனர்.

ஏனைய அறிக்கைகள், சராசரி வாழ்க்கை வயது 56 ஆக எதிர்பார்க்கப்படுவதாகவும், போசாக்கின்மை என்பது ஒரு நோயாகியுள்ளதாகவும், மலேரியா, டெங்கு காய்ச்சல், கசநோய் என்பன சாதாரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றன. தென்கிழக்கு ஆசியாவிலும் அல்லது மேற்கு பசுபிக் பகுதியிலும் இல்லாதளவில் கிழக்கு தீமோரில் பிரசவத்தின்போது இறக்கும் தாய்மாரின் தொகை இரண்டு மடங்காக உள்ளது. கிழக்கு தீமோரின் காற்பகுதிக்கும் குறைவான பெண்களுக்குதான் சுகாதார வசதி அல்லது பயிற்றுவிக்கப்பட்ட மகப்பேற்று மருத்துவ தாதியின் உதவி உடனடியாக கிடைக்கின்றது. இந்நாட்டில் தொழிற்துறை இருப்பது குறித்து பேசவே தேவையில்லை. 90% ஆன மக்கள் நிலத்தில் தங்கியுள்ளனர். கூடுதலானோர் விவசாயத்தை உயிர்வாழ்க்கைக்கானதாக கொண்டுள்ளனர். கிராமப்புறங்களில் வீடின்மையும் வேலையின்மையும் அதிகம் மட்டுமல்லாது, ஐக்கிய நாடுகள் சபையின் பிரசன்னத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதாரம் இல்லாதுபோவதால் செயற்கையாக உருவாகவுள்ள பணவீக்கத்தால் இது இன்னமும் அதிகரிக்கும்.

போர்த்துக்கலின் செய்திநிறுவனமான Lusa வின் அண்மைய செய்தி ஒன்று பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: ''தலைநகரமானது ஏழ்மையும் செல்வந்தமும் இணைந்த முரண்பாடுகள் உள்ள ஒரு நகரமாக உள்ளது. கிழக்கு தீமோர் சுதந்திரத்தின் பின்னர் ஆசியாவின் மிகவும் ஏழ்மையான நாடாகும். டிலி உணவகங்களில் ஒரு நேர சாதாரண உணவு 13 டொலருக்கு அதிகமாகவும், ஒரு கோப்பை காப்பி 1 டொலருக்கு அதிகமாகவும் உள்ளது. பெரும்பாலான மக்கள் ஒரு நாள் 50 சென்ற் இற்கு சற்று அதிகமானதையே தங்கியுள்ளனர். நகரத்தில் இன்னும் சாக்கடைகள் திறந்த நிலையில் காணப்படுவதுடன், தெரு விளக்குகள் இல்லாததுடன், கூடுதலாக இடிந்த வீடுகளே காணப்படுகின்றது''. டிலிக்கு வெளியில் நிலைமை இன்னும் மோசமாகவுள்ளது. Australian Financial Review '''இவ்வார இறுதியில் உள்வரவுள்ள அதிதிகள் ஆபிரிக்காவின் மோசமான இடங்களை விட கிழக்கு தீமோரின் கிராமப்பகுதிகளின் வாழ்க்கை மோசமான ஏழ்மையினுள் இருப்பதை காண்பது தவிக்கமுடியாது '' என குறிப்பிட்டது.

தீமோரிய மக்களின் எதிர்பார்ப்பு தொடர்பாக ''அமைதியாக'' இருக்குமாறு குஸ்மாவோ அழைப்புவிட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 வருடங்களில் வாழ்க்கைத்தரம் அதிகரிக்குமானால் அது ஒரு பாரிய வெற்றி என அறிவித்தார். ஆனால் அங்கு குறிப்பாக இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் ஆழமான அதிருப்திக்கும், அரசியல் அமைதியின்மைக்குமான சமிக்கைகள் காணப்படுகின்றன. கடந்த இரண்டரை வருடத்தில் வேலையற்ற தொழிலாளர்களின் ஆத்திரமிக்க ஊர்வலங்களையும், குறைந்த சம்பளம் தொடர்பான வேலைநிறுத்தங்களையும், ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிரான எதிர்ப்பு ஊர்வலங்களையும், வெளிநாட்டு படைகளுக்கு எதிரான கல்வீச்சுக்களையும் காணக்கூடியதாகவிருந்தது. இந்தோனேசிய இராணுவ அதிகாரிகளுடனும், ஆயுதக்குழுக்களுடனுமான குஸ்மாவோவின் பின்தொடரும் ''சமரசம்'' தொடர்பாக மக்களின் ஆத்திரம் தீவிரமடைவதுடன், Fretilin இன் அதிகாரத்துவமானதும் ஜனநாயகத் தன்மையற்றதுமான முறைகளுடன் குமுறும் அதிருப்தியின்மையும் காணப்படுகின்றது. எதிர்கட்சிகள், அரசியலமைப்பு சட்டம் மீதானதும், பாராளுமன்ற தேர்தல் தொடர்பான வாக்களிப்பு பறிக்கப்பட்டது தொடர்பாகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மே 20ம் திகதியின் விழாக்கள் கடுமையான பாதுகாப்பின் கீழ் நடைபெறுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையினதும், கிழக்கு தீமோரின் அதிகாரிகளும் அனுமதிபெறாத ஆர்ப்பாட்ங்களுக்கும், ஆயுதக் குழுக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Bacau என்னுமிடத்தில் International Herald Tribune இனால் பேட்டிகாணப்பட்ட உள்ளூர் அதிகாரியான Marito Reis பரந்த அமைதியின்மை குறித்து பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார். இவர் இந்தோனேசிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடியதற்காக 15வருடம் சிறையிலிருந்தவர். அவர் ''24வருட போராட்டத்திற்கு பின்னர் இது தான் எங்ஙளுக்கான பரிசாக இருக்கின்றது. ஆனால், இந்த சுதந்திரத்தின் உள்ளடக்கம் என்னவாக இருக்கப்போகின்றது என்பதை நான் என்னிடமும் எனது தலைவர்களிடமும் கேட்கின்றேன்?'' என தெரிவித்தார்.

கிழக்கு தீமோரின் தலைவர்களிடமிருந்து வருடக்கணக்கில் பறிக்கப்பட்டிருந்த பின்னர், தீமோர் கடலின் எண்ணெய் வளங்களுடனும், நிலவாயுவுடனும், கோப்பி ஏற்றுமதியும் உல்லாசப் பிரயாணத்துறையும் இணைந்து உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்கான அடித்தளத்தை வழங்கலாம் என்ற முன்னோக்கை கொண்டிருக்கின்றனர். வெளிநாட்டு மூலதனத்தை கவருவதற்காக உள்ளூர் தொழிலாளர்களினது சம்பளம் நாள் ஒன்றிற்று 3 டொலர் இற்கு கீழ் வைத்திருக்கப்படுகின்றது. ஆனால் பாரிய முதலீடுகள் இன்னும் வராததுடன், கோப்பி விலையானது உலகச் சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வருடம் கிழக்கு தீமோரின் மொத்த உள்ளூர் உற்பத்தியானது 0.5% ஆல் சுருக்கமடையும் எனவும், ஐக்கிய நாடுகள் சபையின் வேலைகள் இல்லாதுபோவதால் பொருளாதார அதிர்ச்சிகளையும் சந்திக்கும் என சர்வதேச நாணய நிதியம் முற்கூட்டி கூறியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் எண்ணெய், நிலவாயு வளங்களும் ஒரு அதிசயம் என நிரூபிக்கும். ஹவாட்டின் அரசாங்கம் Greater Sunrise வயல்களிலுள்ள சகல இருப்பையும், பாரிய Bayu-Undan திட்டத்தின் ஊடான வட அவுஸ்திரேலிய நகரமான Darwin இற்கான நிலவாயு குழாயையும் தான் பெற்றுக்கொள்ள முனைகின்றது. எவ்வாறிருந்தபோதிலும், தீமோர் கடலிலிருந்து வெளிவரும் இலாபங்கள் தவிக்கமுடியாதபடி பாரிய சர்வதேச எண்ணைய் நிறுவனங்களுக்கும், ஒரு சிறிய பகுதி டிலியின் நிர்வாகத்திற்குமே செல்லப்போகின்றது.

வெளிநாட்டு உதவியாளர்கள் இப்பிரதேசத்திற்கு கடந்த வருடம் 300 மில்யன் டொலர்களை வழங்கியுள்ளனர். ஆனால் இதில் பாரியளவு அவர்களது பொருளாதார, மூலோபாய நலன்களை பாதுகாப்பதற்கே சென்றுள்ளது. 1999 செப்டம்பரிற்கும் 2004 யூன் வரைக்கும் இடையில் ஹவாட் அரசாங்கமானது கிழக்கு தீமோரிருக்கு 3.9 பில்லியன் டொலரை செலவிடவுள்ளது அல்லது செலவிட்டுள்ளது. இதில் 90% இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிழக்கு தீமோரானது தேசிவாதத்தினதும், ''தேசிய விடுதலையினதும்'' இன்னுமொரு துயரம்தோய்ந்த உதாரணத்தை வழங்குகின்றது. இந்த புதிய நாட்டின் கீழ், கிழக்கு தீமோர் மக்கள் ஏழ்மையையும், அதிகரிக்கும் சுரண்டலையும் தவிர வேறொன்றையும் எதிர்நோக்கப்போவதில்லை. ''சுதந்திரம்'' என்பது, எல்லைகடந்த முதலீட்டை கவருவதற்கானதும், சுதந்திர வர்த்தக வலையங்களை உருவாக்குவதற்கும், சர்வதேச நாணய நிதியத்தினதும், உலக வங்கியினதும் கட்டளைகளை எதிர்கொள்வதாகவும் அர்த்தப்படுவதாகியுள்ளது.

நப்பாசைகள் இல்லாதுதொழிகையிலும், கிழக்கு தீமோரின் இக்கட்டான நிலை வெளிப்படுகையிலும் சமூக நெருக்கடிகளும் வர்க்க முரண்பாடுகளும் விரைவில் ஆழமடையும். இம்மோசமான இடர்பாடுகளிலிருந்து மிகமுக்கிய தட்டினர் உருவாகுவதுடன், பொருளாதார மற்றும் அரசியல் ஒடுக்குமுறையிலிருந்தும் உண்மையான விடுதலையானது உலக முதலாளித்துவத்திற்கு எதிராக தீமோரினதும், இந்தோனேசிய மற்றும் அப்பிரதேசத்தில் உள்ள தொழிலாளர்களும் ஏழைமக்களும் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் அபிவிருத்தியாலேயே அடைய முடியும் என்பதை விளங்கி, தம்மை அதில் அடித்தளமாக கொள்வர்.