காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேல் கூட்டு மரண தண்டனைகளை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம். 

இந்த வாரம் வடக்கு காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையின் போது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐ.டி.எஃப்) பொதுமக்களை கூட்டாக படுகொலை செய்வதில் ஈடுபட்டதாக யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு புதன்கிழமை தெரிவித்துள்ளது

காஸாவில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மக்களைக் கைது செய்து சித்திரவதை செய்கின்றனர். 

இந்த சோதனையில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர், “அவர்களில் பலர் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிக்குப் புறம்பான மரணதண்டனைகளுக்கு ஆளானவர்கள்” என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. மேலும் டசின் கணக்கானவர்கள் காவலில் வைக்கப்பட்டு, தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். 

மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட உயிர்தப்பியவர்களுடனான நேர்காணல்களின் அடிப்படையில், யூரோ-மெட் மானிட்டர், இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து மூன்று நாட்கள் மரணதண்டனைகளை நிறைவேற்றியதாக கூறியது. 

எம்.கே என அடையாளம் காணப்பட்ட ஒரு கைதி, யூரோ-மெட் இடம் கூறினார், “சிப்பாய்கள் என்னை தடுத்து வைத்து மருத்துவமனை முற்றத்தில் கைவிலங்கிட்டனர். ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக நான் ஆடைகளின்றி விடப்பட்டேன். சிப்பாய்கள் பலமுறை கைதிகளை பிணவறைக்குள் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும், கைதிகள் இல்லாமல் சிப்பாய்கள் திரும்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். 

“அந்த காலகட்டத்தில் சுமார் நான்கு முறை, சிப்பாய்கள் கைதிகளின் குழுக்களை -[எப்போதும்] குறைந்தபட்சம் மூன்று பேர் மற்றும் [ஒருபோதும்] 10 பேருக்கு மேல்- மருத்துவமனை கட்டிடங்களுக்குள், குறிப்பாக முன்னர் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த பிணவறை கட்டிடத்திற்குள் அழைத்துச் செல்வதை நான் கண்டேன்,” என்று அவர் கூறினார். “துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது, பின்னர் படையினர் மற்றொரு குழுவை அங்கு அழைத்து வருவதற்காக அப்பகுதியை விட்டு வெளியேறினர்” என்று அவர் குறிப்பிட்டார்.

பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு சாட்சி, யூரோ-மெட்டுக்கு வழங்கிய தகவல்படி, “இஸ்ரேலிய படைகள் ஒரே நேரத்தில் எட்டு அல்லது 10 பாலஸ்தீனிய குடிமக்களை சவக்கிடங்கு பகுதியை நோக்கி அழைத்துச் சென்றதை தான் பார்த்தேன். பின்னர் அவர் கடுமையான துப்பாக்கிச் சூட்டு சத்தத்தை கேட்டார், பின்னர் இஸ்ரேலிய படைகள் அழைத்து வந்த மக்கள் இல்லாமல் வெளியேறின” என்று குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவரின் கணக்கு குறித்து கருத்து தெரிவித்த யூரோ-மெட், “இந்த பொதுமக்கள் சட்டவிரோத கொலைகள் மற்றும் மரணதண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளது.. 

காஸா பகுதியின் மிகப்பெரிய மருத்துவ வசதியான அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான தாக்குதலின் போது இஸ்ரேலிய இராணுவம் 90 “பயங்கரவாதிகளை” “அழித்ததாக” கூறியது. “கடந்த நாட்களில், துருப்புக்கள் பயங்கரவாதிகளை அழித்தனர் மற்றும் மருத்துவமனை பகுதியில் ஆயுதங்களைக் கண்டுபிடித்தனர்” என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டவர்களில் மருத்துவமனையில் இருந்த மருத்துவ ஊழியர்களும் அடங்குவர். 

முன்னதாக காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் பணியாற்றிய அவசர அறுவை சிகிச்சை நிபுணர் மேட்ஸ் கில்பர்ட், இஸ்ரேலியப் படைகளால் அளிக்கப்பட்ட சித்திரவதைகளை அவரது சக ஊழியர்கள் விவரித்ததாகக் கூறினார்.

“மருத்துவ ஊழியர்கள் கைது செய்யப்பட்டு குளிரில் மணிக்கணக்கில் விடப்பட்டுள்ளனர், சிலர் மருத்துவமனையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு தெரியாத இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மற்றவர்கள் அரை நிர்வாணமாக தெற்கே நகர்த்தப்பட்டனர்” என்று கில்பர்ட் கூறினார்.

“மருத்துவமனையை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவைப் பின்பற்றியபோது ஒரு மருத்துவர் மார்பில் சுடப்பட்டார், பின்னர் அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது” என்று அவர் கூறினார். இஸ்ரேலிய இராணுவம் “போராளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் அகதிகளுக்கு இடையில்” வேறுபடுத்திப் பார்ப்பதில்லை என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். 

இந்த சோதனையின் விளைவாக, அல்-ஷிபா மருத்துவமனை மீண்டும் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டது. இது இஸ்ரேலால் தடுக்கப்பட்ட உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் தொற்றுநோய்கள் பரவி வருகிற நிலையில், வடக்கு காஸா மக்களின் இது உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 

பத்திரிகையாளர்களும் மருத்துவமனையில் சித்திரவதை செய்யப்பட்டனர். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அல் ஜசீராவிலிருந்து பத்திரிகையாளர்களை கைது செய்து, கண்களைக் கட்டி, நிர்வாணப்படுத்தி, குளிரில் மருத்துவமனை வளாகத்தில் விட்டுச் சென்றதாக CNN தகவல் கொடுத்தது.

அல் ஜசீரா அரபு நிருபர் இஸ்மாயில் அல்- கௌல் மற்றும் அவரது குழுவினர் 12 மணி நேரம் கைது செய்யப்பட்டு இஸ்ரேலிய படைகளால் “கடுமையாக தாக்கப்பட்டனர்”. 

அல்-கௌல் “இஸ்ரேலிய இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு, தாக்கப்பட்டு அவரது குழு உறுப்பினருடன் தரையில் தடுத்து வைக்கப்பட்டார்” என்று அல்-ஜசீரா பத்திரிகையாளர் ஹனி மஹ்மூத் கூறினார். 

அக்டோபர் 7 முதல், காஸாவில் சுகாதார வசதிகள் மீது 410 தாக்குதல்கள் நடந்துள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. “தாக்குதல்களின் விளைவாக 685 பேர் உயிரிழந்துள்ளனர், 902 பேர் காயமடைந்துள்ளனர், 99 வசதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது மற்றும் 104 ஆம்புலன்ஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளன” என்று உலக சுகாதார அமைப்பு ட்விட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், காஸா பகுதி முழுவதும் பஞ்சம் தொடர்ந்து பரவி வருகிறது. புதனன்று பிரசுரிக்கப்பட்ட உலக வங்கியின் ஒரு அறிக்கை, காஸாவில் 1.1 மில்லியன் மக்கள் ஒரு “பேரழிவாக” வகைப்படுத்தப்பட்ட பஞ்சத்தின் அதிகபட்ச அபாயத்தில் இருப்பதாகவும், மற்றொரு 854,000 பேர் “அவசரகால நெருக்கடி” நிலைக்கு முகங்கொடுத்து வருவதாகவும் கண்டறிந்தது. 

உலக வங்கியின் அறிக்கையின்படி, “காஸா பகுதியில் நிலைமை பேரழிவு மட்டத்தை எட்டியுள்ளது. 

காசா மக்கள்தொகையில் எந்த உறுப்பினரும் உணவுப் பாதுகாப்பின்மையின் கீழ் இரண்டு பிரிவுகளுக்குள் வருவதில்லை.

“வீட்டு கணக்கெடுப்புகள் ஆபத்தான போக்குகளை வெளிப்படுத்துகின்றன, கிட்டத்தட்ட அனைத்து குடும்பங்களும் தினசரி உணவைத் தவிர்க்கின்றன மற்றும் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கணிசமான பகுதியினர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அறிக்கை நிறைவு செய்தது. 

புதன்கிழமை ஒரு அறிக்கையில், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா முகமையான யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ.வின் ஆணையர் ஜெனரல் பிலிப் லசாரினி, “முற்றுகை, பசி மற்றும் நோய்கள் விரைவில் காஸாவில் முக்கிய கொலையாளியாக மாறும்” என்று கூறினார். 

மார்ச் 19க்கும் மார்ச் 20க்கும் இடையில், காஸாவில் 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், இது உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையை 31,923 க்கு கொண்டு வந்தது. காணாமல் போனவர்களையும் சேர்த்துக் கொண்டால், அக்டோபரில் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஐ தாண்டும். 

காஸா மக்களை வேண்டுமென்றே பாரிய பட்டினி போட்டு வைத்திருப்பதில் ஒரு முக்கிய கூறுபாடு வேண்டுமென்றே உதவிப் பணியாளர்களை இலக்கு வைப்பதாகும். காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட தகவலின்படி, கடந்த வாரம் எட்டு தனித்தனி தாக்குதல்களில் 100 க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். காஸாவின் அரசாங்க ஊடக அலுவலக தகவல்படி, இந்த தாக்குதல்களின் நோக்கம், “பட்டினி கொள்கையை கடைப்பிடிப்பதும் மற்றும் பரந்த அளவில் பஞ்சத்தை ஆழப்படுத்துவதும்” ஆகும். 

இதற்கிடையில், இஸ்ரேலிய அரசாங்கம் காஸா இனச்சுத்திகரிப்புக்கு பகிரங்கமாக தொடர்ந்து வக்காலத்து வாங்கி வருகிறது. இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழுவிற்கு கொடுத்த அறிக்கை ஒன்றில், பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகு, பெயரளவிற்கு உணவு உதவி அளிப்பதற்காக, காஸாவில் அமெரிக்காவால் கட்டப்பட்டு வரும் துறைமுகம், பாலஸ்தீனியர்களை நாடுகடத்த பயன்படுத்தப்படலாம் என்று ஊகம் தெரிவித்தார்.

“காஸா மக்கள் வெளியேறுவதற்கு எந்த தடையும் இல்லை, ஒருவேளை அவர்கள் கட்டும் துறைமுகம் கூட இதற்காக பயன்படுத்தப்படலாம், ஆனால் அவர்களை வரவேற்க உலகில் எந்த நாடும் தயாராக இல்லை” என்று நெதன்யாகு கூறினார். 

நெதன்யாகு மீதான ஜனாதிபதி ஜோ பைடெனின் வாய்மொழி விமர்சனம் இருந்தபோதிலும், இஸ்ரேல் செய்ய அனுமதிக்கப்பட்ட போர் குற்றங்களின் வகைகளுக்கு அங்கே “சிவப்புக் கோடுகள் எதுவும் இல்லை” என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், ஈரானை குறிவைக்கும் அதன் பரந்த பிராந்திய அளவிலான இராணுவ தாக்குதலின் ஒரு பகுதியாக நடந்து வரும் இனப்படுகொலைக்கு நிதி மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. 

Loading