பிரிட்டன் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கி நாற்பது ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

1984-85 சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் பிரிட்டன் தொழிலாள வர்க்கத்தால் அதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக வீரியமான போராட்டமாக இருந்தது. அப்போது கற்பனை செய்ய முடியாத கஷ்டங்களுக்கு ஆளாகி, சுமார் 150,000 சுரங்கத் தொழிலாளர்கள் அரசின் வலிமையை ஒரு வருட காலமாக சவால் செய்தனர். 1926 பொது வேலைநிறுத்தத்திற்குப் பிறகு நடந்த இந்த மிகப்பெரிய நடவடிக்கையில் 26 மில்லியனுக்கும் அதிகமான நாட்கள் இழக்கப்பட்டது.  

அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, வேலைநிறுத்தம் மற்றும் அதன் தோல்வியிலிருந்து தொழிலாள வர்க்கம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகளை மூடிமறைக்கும் நோக்கில் ஆளும் வர்க்கத்தால் ஒரு பிரச்சார தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. வேலைநிறுத்தம் செய்யும் சுரங்கத் தொழிலாளர்களை தேசிய சுரங்கத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர்தர் ஸ்கார்கிலின் அரசியல் பகடைக்காய்களாக சித்தரிக்கின்ற, அதாவது, தவிர்க்க முடியாத சுரங்க மூடல்களுக்கு எதிரான ஒரு தோல்வியை தழுவும் போராட்டத்தின் மத்தியில் “வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு” எதிராக செயற்படுபவர்களாக வேலைநிறுத்தக்காரர்களை சித்தரிக்கும் ஏராளமான ஆவணப்படங்கள், நாடகங்கள் மற்றும் காட்சிப்படுத்தல்களும் ஒளிபரப்பப்பட்டன.

பல தசாப்தங்களாக, பிரிட்டன் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் 1980 களில் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டங்களின் தோல்விகளை, முதலாளித்துவத்தின் வெற்றியையும் சோசலிசத்தின் மரணத்தையும் பறைசாற்றுவதாக காட்டுவற்கு பற்றிக்கொள்ளப்பட்டன. இந்த பிரச்சாரம்  1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் இழிந்த நிலையை எட்டியது.

பின்வரும் கட்டுரை, வேலைநிறுத்தத்தின் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், உலக சோசலிச வலைத் தளத்தில் சோசலிச சமத்துவக் கட்சியால் செய்யப்பட்ட மதிப்பீடு ஆகும். இது சுரங்கத் தொழிலாளர்களின் துணிச்சலான போராட்டத்தில் இருந்து பெறப்பட வேண்டிய உண்மையான படிப்பினைகளை விளக்குகிறது.

1984-85 வேலைநிறுத்தத்தின் மற்றும் மார்க்ரெட் தாட்சரின் அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட வர்க்கப் போர் கொள்கைகளதும் தோற்றத்தை 1972 மற்றும் 1974 இல் எட்வர்ட் ஹீத்தின் பழமைவாத அரசாங்கத்தை வீழ்த்த சுரங்கத் தொழிலாளர்களால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்த இயக்கத்திலேயே கண்டுகொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 1968 மற்றும் 1975 க்கு இடையில் உலக முதலாளித்துவத்தை உலுக்கிய வெடிக்கும் நிலையிலான நெருக்கடியின் போது நிகழ்ந்த இந்தப் போராட்டம், பல நாடுகளில் புரட்சிகர தன்மை கொண்ட வர்க்கப் போராட்டங்கள்  வெடித்ததை கண்டது.

சீர்திருத்தவாத மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் அரசியல் காட்டிக்கொடுப்புகளால் இந்தப் போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்டமை,  தாட்சரின் பழமைவாத அரசாங்கம் மற்றும் அமெரிக்காவில் ரொனால்ட் ரீகனின் குடியரசுக் கட்சி நிர்வாகம் போன்ற வலதுசாரி ஆட்சிகளை நிறுவ ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. அவர்களின் வருகை பூகோள ரீதியான முதலீடு மற்றும் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியை நோக்கி பெரிய நிறுவனங்கள் ஆக்கிரோஷமாக திரும்பியதுடன், பொருளாதார அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தையும் முன்னோக்கிய நகர்வையும் பிரதிபலித்தது. மறுபக்கம் பூகோளமயமாக்கலானது, முன்னேறிய தொழில்துறை நாடுகளின் பொருளாதாரங்களில் நிலவிய கட்டுப்பாடுகளை நீக்குதல், வரி விகிதங்களைக் குறைத்தல், நலத்திட்டங்களை அழித்தல் மற்றும் சர்வதேச அளவில் போட்டித்திறனை அதிகரிக்கவும் உலகச் சந்தைகளில் ஒரு பங்கைப் பெறுவதற்குமான உந்துதலில் தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை பிரமாண்டமானளவு அதிகரிப்பதையும் கோரியது.

தாட்சர் இந்த நோக்கங்களை, “நொண்டி வாத்துகள் ஒரு மூலையில் இருக்கட்டும்”, “சோசலிசத்தின் எல்லைகளை பின்னால் சுருட்டிக்கொள்!” என்ற கோரிக்கையாக மாற்றினார்.

சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த பிரிவினரால் இந்த முதலாளித்துவ தாக்குதலை தோற்கடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட உறுதியான முயற்சியாகும். ஆனால் அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த, அமெரிக்காவில் PATCO விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் பெரிய போராட்டங்களைப் போலவே, அது இறுதியில் தோல்வியடைந்தது.

இந்தக் கட்டுரை அது ஏன் என்பதை விளக்குகிறது.

ஸ்கார்கில் ஒரு தேசிய சீர்திருத்தவாத திட்டத்தின் அடிப்படையில் இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தார். போர்க்குணமிக்க தொழிற்சங்க நடவடிக்கையால் மட்டுமே தாட்சர் அரசாங்கத்தை தோல்வியடையச் செய்ய முயன்ற அவர், பின்னர் ஒரு தேசிய “நிலக்கரிக்கான திட்டத்தை” நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தொழிற் கட்சியையும் தொழிற்சங்க காங்கிரஸையும் (TUC) ஏற்றுக்கொள்ள வைக்க முயன்றார்.

பதிலாக, சுரங்கத் தொழிலாளர்கள் அரசுக்கு எதிரான அரசியல் போராட்டத்தை எதிர்கொண்டதுடன் “உள்ளே இருக்கும் எதிரியை” எந்த விலை கொடுத்தாவது நசுக்கத் தீர்மானித்த அரசாங்கம் தன் வசம் இருந்த ஒவ்வொரு கருவியும் வழிநடத்தியதோடு அவர்களின் போராட்டம் தொழிற்சங்கங்களாலும் தொழிற் கட்சியாலும் வேண்டுமென்றே திட்டமிட்டு தனிமைப்படுத்தப்பட்டு நாசப்படுத்தப்பட்டது.

தொழிற்சங்கங்கள் பெருநிறுவனங்களதும் அரசினதும் பங்காளிகளாக மாற்றம்பெறுவதற்கும், தொழிற் கட்சியானது டோனி பிளேயரின் கீழ் சுதந்திர சந்தை முதலாளித்துவத்தின் உறுதியான பாதுகாவலராக முழுமையாக மாற்றமடைவதற்குமான அஸ்திவாரங்கள், சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் பொதிந்துள்ள தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்கியதுடன் அமைக்கப்பட்டன. இந்தத் தோல்வி பல தசாப்தங்கள் நீடித்த, வரலாற்று ரீதியாக முன்கண்டிராத வகையில் தொழில்துறை போராட்டங்களில் வீழ்ச்சியையும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தில் சரிவையும் ஏற்படுத்தியது.

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர், சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமானது வர்க்கப் போராட்டத்தின் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவதன் மூலமும், தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய சோசலிச மற்றும் சர்வதேசிய தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதன் மூலமும் உலகளாவிய மூலோபாயத்தின் அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதன் அவசியத்தை நிரூபித்தது.

எனவே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அன்றைய பிரிட்டன் பிரிவான தொழிலாளர் புரட்சிக் கட்சியானது ஸ்கார்கிலின் தலைமைக்கும் தேசிய சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் தேசியவாத முன்னோக்கிற்கும் அடிபணிந்து போய் ஆற்றிய பாத்திரமானது இந்த கட்டுரையில் பேசப்படும் விஷயங்களில் மகத்தான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  டோரிகள், தொழில் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் உள்ள அவர்களது கூட்டாளிகளுக்கு எதிராக, மிகவும் அரசியல் ரீதியாக முன்னேறிய சுரங்கத் தொழிலாளர்களதும் ஏனைய தொழிலாளர்களதும் ஒரு சுயாதீனமான போராட்டத்தை முன்னெடுப்பதை தடுத்தது தொழிலாளர் புரட்சிக் கட்சியே ஆகும்.

இன்று, பிரிட்டன் தொழிலாளர்கள், தனது முன்னோடிகள் எவரையும் விட தீவிரமாக வலதுபுறத்தில் நகரும் சேர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சியையும் கடந்த ஆண்டு வேலைநிறுத்த அலையை நாசப்படுத்திய மற்றும் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அதையே செய்யும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும் எதிர்கொள்கின்றனர்.

அபாயங்கள் அதிகமாகாமல் இருக்க முடியாது.

சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர், பிரிட்டனிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம், காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கும், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் அதிகரித்து வரும் பினாமி போருக்கும் மற்றும் வாழ்க்கைத் தரங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதை துரிதப்படுத்துவதையும் ஆதரிக்கும் ஆளும் வர்க்கங்கள், அரசாங்கங்கள் மற்றும் கட்சிகளுடன் வெளிப்படையான மோதலுக்கு வந்திருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், தொழிலாள வர்க்கம், குறிப்பாக அதன் இளைய தலைமுறை, 1984-85 சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் படிப்பினைகளைக் கற்று ஆயுதபாணியாவது இன்றியமையாததாகும். இது அவர்களுக்கு இன்றியமையாத புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் வாழ்வா சாவா மோதல்களுக்கு அளவிட முடியாத பலத்தை சேர்க்கும்.

கிறிஸ் மார்ஸ்டன்

5 மார்ச் 2024

***

பிரிட்டன்: சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் 20 ஆண்டுகளின் பின்னர்

By Chris Marsden and Julie Hyland

இந்த மதிப்பீடு முதன்முதலில் மார்ச் 2004 இல் வேலைநிறுத்தத்தின் 20 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டது.

1984-85ன் ஓராண்டுகால சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், பிரிட்டனின் அரசியல் வாழ்வில் ஒரு முக்கிய காலகட்ட பிரிவை குறிக்கிறது. போருக்குப்பின் தொழிலாள வர்க்கத்திற்கு நேர்ந்த இந்த தோல்வியானது மிக மோசமானது என்பது மட்டுமின்றி, அதனுடைய விளைவுகள் இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த 20ம் நிறைவு ஆண்டை பற்றிய ஆவணங்களுக்கோ அல்லது கட்டுரைகளுக்கோ எவ்வித குறைவும் இல்லை. ஆனால் இவற்றில் பெரும்பாலனவை, இந்நிகழ்ச்சியிலிருந்து பெறவேண்டிய மத்திய படிப்பனைகளை பற்றி ஆராயும் தீவிர முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. பொதுவாக அவை பின்வரும் இரண்டு முகாம்களில் ஏதேனும் ஒன்றினை பிரதிநிதித்துவ படுத்துகின்றது.

முதலாவதாக, இந்த சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், கடந்தகாலத்திற்குரிய மனிதர்களால் ஓர் இழக்கப்பட்டுவிட்ட காரணத்திற்காக போராடியதால் தவிர்க்கமுடியாத தோல்வியைத்தான் சந்திக்கும் என்று கூறியவர்கள் ஒருபுறம் இருந்தனர். இந்த வாதத்தின்படி, மார்கரட் தாட்சரின் அரசாங்கம் சிலநேரம் சர்வாதிகாரப் போக்கு, ஆணவம் இவற்றைக் கொண்டிருந்தாலும் எதிர்காலத்தின் நிலைப்பாட்டைத்தான் பிரதிபலித்தது. “நாட்டைத் தன் பிடிக்குள் கொண்டிருந்த”, காலங்கடந்துவிட்ட நடைமுறை வழக்கங்களின் கோட்டையாக நடமாடிவந்த தொழிற்சங்கங்களின் அதிகாரத்தை குறைப்பதன் மூலம் பிரிட்டனுடைய பொருளாதாரத்தை நவீனப்படுத்துவதில் அது தீவிரத்தை கொண்டிருந்தது. ஒருவருக்கு தனிப்பட்ட சுரங்கத் தொழிலாளிகளின் தலைவிதியை பற்றி பரிவு உணர்வு இருந்தபோதிலும், இது சரியான முன்னோக்கில் காட்டப்படவேண்டும். இதன்பின்னர் அரசாங்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், தனியார் மூலதனம் ஊக்குவிக்கப்பட்டதையும் அடுத்து எழுந்த நுகர்வோரின் உயர்நிலையையும், புதிய பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் பின்னர் பதவிக்கு வந்த தொழிற்கட்சி அரசாங்கமே ஏற்றுக்கொண்டது எனவும் இவர்கள் வாதம் தொடர்கிறது. இதுதான் பழைமைவாத சார்பு மற்றும் தொழிற்கட்சி சார்பான செய்தி ஊடகத்தின் பார்வையாகும்.

இரண்டாவதாக, தொழிற் கட்சியினது இடதுசாரியினரும் அல்லது பல சிறிய இடது குழுக்கள் 1984 நிகழ்ச்சிகளை ஏக்கத்துடன் நினைத்து, செய்யப்பட்ட சில தவறுகளை சுட்டிக்காட்டி, இதை அடிப்படையில் “ஒரு அரிய பெருமை வாய்ந்த” நிகழ்ச்சி என கருதி, வருங்காலத்தில் வர இருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கு இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

வலுவாக இருப்பதாக தோன்றும் முதல் வாதத்தின் வலிமை, பின்னர் நடந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் உறுதிசெய்யப்பட்டதுபோல் தோன்றும். மார்கரட் தாட்சருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள வலைத் தளம் ஒன்று “1984ம் ஆண்டு முழுவதும் நடைபெற்ற வேலைநிறுத்தும் பழைய தொழிற்சங்க அமைப்பின் கடைசி மூச்சு எனக் கருதப்படுகிறது; ஏனென்றால் அந்த ஆண்டிற்கு பின்னர் பெரிய அளவிலான தொழிற்துறை மோதல்கள் ஏதும் பிரிட்டனில் தோன்றவில்லை’' என குறிப்பிடுகின்றது.

வலதுசாரி அரசியல் மற்றும் பொருளாதார குழுக்களின் ஏற்றத்தை இருபது ஆண்டுகள் அனுமதித்து, அதற்காக உழைக்கும் மக்கள் மிகக் கசப்பான விளவுகளை சந்திக்கவேண்டி இருந்த நிலைக்கான காரணத்தை தீவிரமாக ஆராயதவர்களால் இதற்கு விடை காணமுடியாது.

சுரங்கத்தொழிலாளர்களுக்கே இந்த வேலைநிறுத்ததின் தாக்கம் பெரும் அழிவைக் கொடுத்துள்ளது.

இங்கிலாந்தில் வேலைநிறுத்தம் ஆரம்பித்தபோது 170 சுரங்கங்களில் 181,000 பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்ததுடன், 90 மில்லியன் தொன்கள் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. இன்று 6,500 பேருக்கு மட்டும் வேலைகொடுக்கும் 15 சுரங்கங்கள்தான் இருக்கின்றன. இன்னும் கிட்டத்தட்ட 3,000 பேர் மேற்பகுதி சுரங்கத்தில்தான் ஈடுபட்டுள்ளனர். ஒருகாலத்தில் சுரங்க தொழிலினால் பிரசித்தி பெற்ற டர்ஹம், லங்கஷைர் போன்ற பகுதிகள் இன்று சுரங்க தொழில்கள் இன்றி உள்ளன. தேசிய சுரங்க தொழிலாளர் ஒன்றியம் (National Union of Mineworkers -NUM) வேலையில் இருக்கும் ஒரு சில ஆயிரம் உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஒரு பின்பிரிவாகத்தான் உள்ளது.

வேலைநிறுத்தத்தின்போது, தொழிலாளர்கள் பட்ட கஷ்டங்கள் கிட்டத்தட்ட முன்கண்டிராத தன்மையை கொண்டிருந்தன. 20,000 சுரங்க தொழிலாளிகள் காயமுற்றிருந்தனர் அல்லது மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர், 13,000 பேர் கைது செய்யப்பட்டனர், 200 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர், இரண்டு பேர் மறியலின் போது கொல்லப்பட்டனர், குளிர்காலத்திற்காக நிலக்கரி தோண்டியவர்களில் மூன்று பேர் இறந்து போயினர், இறுதியாக 966 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.

பிரிட்டனிலேயே இதுவரை காணப்பட்டிராத அடக்குமுறை உத்திகள் கையாளப்பட்டு, சுரங்க தொழிலாளர்கள் போலீசாரால் மிருகத்தனமாக தாக்கப்பட்டனர். குதிரைப்படை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டோர்மீதும், சுரங்கப் பகுதி மக்கள் வாழும் பகுதிகள் வழியேயும் பாய்ந்து தாக்கினர். கவசங்களுடனும், ஆயுதங்களுடனும் இருந்த கலகப்படை போலீசார் ஒரு தேசிய பணிக்குழுவைத் தோற்றுவித்து, இராணுவ முறையிலான தாக்குதல்களை நடத்தினர். சுரங்க தொழிலாளர்கள் நாடு முழுவதும் தடையின்றிச் செல்வது தடுக்கப்பட்டது; சிறப்பு நீதிமன்றங்கள் பெரிய அளவிலான கைது செய்யப்பட்டவர்கள்மீது விசாரணை நடத்த தோற்றுவிக்கப்பட்டன.

தேசிய சுரங்க தொழிலாளர் ஒன்றியத்திற்கு எதிராக சட்டமுறையிலான தாக்குதல் நடத்தப்பட்டது; அதன் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கைகள் அடிக்கடி எடுக்கப்பட்டன. சக்திவாய்ந்த வர்த்தக நலன்களும், அரசாங்கத்தின் பிரிவினர் சிலவும் இணைந்து மிகப்பெரிய முறையில் வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஜனநாயக சுரங்க தொழிலாளர் தொழிற்சங்கம் என்ற மாற்று தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியதில் முடிவுற்றது.

வேலைநிறுத்தத்தின் தோல்விக்கு பின்னர் நடந்தது இதைவிட மோசமானது. சுரங்கங்கள் மூடப்பட்ட பின்னர், முழு சமூகங்களும் மிகவறிய ஏழ்மையில் தள்ளப்பட்டனர். பல இளைஞர்கள் இருக்கும் இடங்களைவிட்டு வேலைதேட நீங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். மதிப்பீடுகளின்படி, அப்பகுதிகளிலேயே இருந்தவர்களில் மூன்று வீடுகளுக்கு ஒருவர் என்ற வீதத்தில் மோசமான போதைப் பொருளுக்கு அடிமையாகும் பிரச்சனையினால் தாக்குண்டனர்.

முன்னைய சுரங்க தொழில் நடந்த இடங்களில் புதிதான முயற்சிகளை கையாண்டு வாழ்வை புதுப்பிக்க கொள்ளப்பட்ட முயற்சிகள் இன்றைய பொருளாதாரத்தின் தன்மையான, சர்வதேச நிறுவனங்கள் எளிதான உழைப்பையும், அதிகமான வரிச்சலுகைகளையும் கொண்ட விதத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலைமையை உருவாக்கின. இதன் விளைவாக, நிலச்சுரங்க சமூக அமைப்பு கூறியுள்ளபடி: “நிறுவனங்கள் கடுமையாகவும், தேர்ந்தெடுக்கும் முறையிலும், குறைந்த ஊதியத்திற்கு வளைந்து கொடுக்கும் முறையில் வேலை செய்யும் தொழிலாளரை, அதிலும் அடிக்கடி தொழிற்சங்க செல்வாக்கு இல்லாத வேலையிடப்பகுதிகளிலிருந்து வேலைக்கு அமர்த்தினர். ஆலைகள் திறந்த பின்னர் விரைவில் மூடப்பட்டுவிட்டதால், வேலைகள் பெரும்பாலும் பகுதி நேர அல்லது சில நேரங்களில் தற்காலிகமாகவும்தான் இருந்தன.

இன்னும் பொதுவாக சுரங்க தொழிலாளர்களின் தோல்வியானது, தொழிற்சங்கங்களும் தொழிற்கட்சியும் தொழிலாள வர்க்கத்தின் சமூகநலன்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல், இறுதியாக கைவிடப்படுவதற்கான சமிக்கையானது. வேறு வேலை நிறுத்தங்கள் நடந்தபோதிலும் அவையெல்லாம் இதற்கு ஒப்பான அளவைக் கொண்டிருக்கவில்லை. 1979ன் “குளிர்கால அதிருப்தி” என்று கூறப்பட்ட, 1970களில் மிக அதிகபட்சம் தொழிற்துறை வேலை நிறுத்தங்களினால் இழக்கப்பட்ட நாட்கள் 29.4 மில்லியனாக இருந்தது. அந்த பத்தாண்டு காலத்தில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் இழக்கப்பட்ட எண்ணிக்கை இன்னும் 12.9 மில்லியனாக இருந்தது. 1980 களில் இந்தச் சராசரி 7.2 மில்லியனாயிற்று; இது ஒருவேளை சுரங்கத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தையே கணக்கில் எடுத்துக்கொண்டு கொடுக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்படாத எண்ணிக்கையாக இருக்கலாம்; ஏனெனில் அந்த ஆண்டு மட்டும் அதில் 27 மில்லியன் உழைப்பு நாட்கள் இழக்கப்பட்டிருந்தன.

இதற்கு அடுத்த பத்தாண்டு காலத்தில், ஒவ்வொரு ஆண்டும் இழக்கப்பட்ட சராசரி உழைக்கும் நாட்கள் 660,000 மட்டுமே; இவற்றில், 1998ம் ஆண்டின் ஆகக்குறைந்த எண்ணிக்கையான 235,000, 205 வேலைநிறுத்தங்களில் மட்டுமே, 1984ல் இது 1,221 வேலைநிறுத்தங்களால் இழக்கப்பட்டது.

தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை இப்பொழுது, 1984ல் இருந்த 11 மில்லியனுடன் ஒப்பிடும்பொழுது ஏழு மில்லியனைவிடக் குறைவாக உள்ளது. தனியார் துறையில் 19 சதவிகிதத்திற்கும் குறைவான அளவுதான் தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருக்கின்றனர்; 18-29 வயதுப்பிரிவில் ஐந்தில் ஒருவர்தான் தொழிற்சங்க உறுப்பினர். இது தனியார் துறையில் 10 சதவிகிதத்திற்கும் குறைவு ஆகும்.

இதுவும் கூட, முதலாளிகளுடன் வெற்றிகரமாக போராடுவற்கு தொழிலாள வர்க்கத்திற்கு இருக்கவேண்டிய தகமை மீதான தாக்கத்தைப்பற்றி ஆராயத் தொடங்கவில்லை. ஏனென்றால் இன்றைய தொழிற்சங்கங்கள், தங்களுடைய உறுப்பினர்களுடைய நலன்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய அமைப்புக்கள் என்பதற்குப் பதிலாக, நிர்வாகத்தின் காவற்படை போலத்தான் செயல்படுகின்றன.

தாட்சரின் பதவிக்காலம் முழுவதும், அதன் பின்னர் அந்த அம்மையாருக்குப் பின் பதவிக்கு வந்த ஜோன் மேஜர் காலத்திலும், தொழிற்சங்கங்கள் செல்வம் ஏழைகளிடமிருந்து பணக்காரர்களுக்கு செல்வதை எதிர்ப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. 1997ல் டொனி பிளேயர் தலைமையில் தொழிற் கட்சி ஆட்சிக்கு வந்தபின், அது தாட்சரின் பெருவர்த்தக சார்புடைய கொள்கைகளை தொழிற்சங்க கூட்டுகளுடைய ஒத்துழைப்புடன் தொடர்ந்து செயல்படுத்தியது.

தொழிற் கட்சி, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதல் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே, மக்கட்தொகையின் உயர்மட்ட 10 சதவிகித செல்வந்தர்கள், தாட்சரின் உச்சக்கட்டமான 1988ல் பதிவுசெய்யப்பட்டதைவிட அதிகமாக தேசிய வருமானத்தில் தங்களுடைய மிக உயர்ந்த பங்கை பதிவு செய்தனர். இன்று வருமான சமத்துவமின்மை தாட்சர் ஆட்சியில் இருந்ததை விட மிக அதிக அளவில் உள்ளது.

உழைக்கும் நிலைமைகளின் மீதான தாக்கத்தை பொறுத்தவரை, இது 2002ம் ஆண்டு வேலை தொடர்புடைய அழுத்தத்தை ஒட்டி விளையும் உடல்நலக்குறைவு 33 மில்லியனாகவும், 1995ல் 18 மில்லியனாகவும் இருந்தது. மேலும் தொழிற்துறை நடவடிக்கைகளினால் இழக்கப்பட்ட நாட்கள் முற்றிலும் 60 மடங்கு அதிகரித்துவிட்டது (550,000).

எனவே, சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தம் பற்றிய ஆய்வு வெறும் வரலாற்று நலன்களுக்காக அல்லாது, இக்காலகட்டத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும்.

பூகோளமயமாக்கலின் தாக்கம்

1984ல் தாட்சர் பெற்ற வெற்றியின் அளவை, அதற்கு முந்தைய ஆண்டுகளின் தன்மையை ஆராயாமல் உணரப்படமுடியாது. உண்மையில், ஓராண்டு வேலைநிறுத்தும், தாட்சர், தேசிய சுரங்க தொழிலாளர் ஒன்றிய (NUM) தலைவர் ஆர்தர் ஸ்கார்கிள் என்ற இரண்டு அரக்க உள்ளங்களின் பலப்பரீட்சையின் விளைவாக எழுந்த பூசல் என்றுகூட பொதுவாக சித்திரித்துக் காட்டப்படுகிறது. இருவருக்கும் இடையே முதலில் 1972ல் தொடங்கிய ஒரு முரண்பாட்டின் இறுதிக்கணக்கை தீர்க்க வேண்டும் என்று இருவரும் விரும்பினர். ஸ்கார்கிள், 1972ல் Saltley Gate Coke Depot என்ற இடத்தில் 1974ல் சுரங்க தொழிலாளர்கள் 27 சதவிகிதம் அதிக ஊதியத்தை பெறுவதற்காக ஒரு மறியலை நடத்தினார். அந்த ஆண்டு, ஸ்கார்கிள் தேசிய சுரங்க தொழிலாளர் ஒன்றியத்தின் யோர்க்ஷைர் தலைவராக இருந்தபோது, சுரங்க தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, பழமைவாத அரசாங்கத்தின் எட்வார்ட் ஹீத்தை, “நாட்டை ஆள்வது யார், அரசாங்கமா, தொழிற்சங்கங்களா?” என்று கேட்க வைத்தது அதன் முடிவில் எட்வர்ட் ஹீத் அரசாங்கம் பதவியைவிட்டு விலக நேர்ந்து சிறுபான்மை தொழிற்கட்சி அரசிற்கு ஆட்சியை கொடுத்தது.

எட்வார்ட் ஹீத் [Photo by Open Government Licence v3.0,]

பின்னர் தாட்சர் கூறியிருந்த “உள்விரோதிகள்” அதாவது, சுரங்க தொழிலாளர்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் பயந்து ஹீத் பின்வாங்கியிருக்கக் கூடாது என்று கூறிய பழமைவாத வலதுசாரிக் குழு கொடுத்த ஊக்கத்தால், தாட்சர் தலைமைப்பதவிக்கு வரத்தொடங்கினார். ஆனால் இந்த டோரி கட்சிக்குள் ஏற்பட்ட மாற்றம் இன்னும் கூடுதலான அடிப்படை பொருளாதார, அரசியல் போக்குகளோடு பிணைந்து இருந்தது.

ஹீத் அரசாங்கத்தை பதவியிலிருந்து கீழிறக்குதல் உலகம் முழுவதும் முதலாளித்துவ வர்க்கத்தின் அமைப்பு முறையின் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் நடந்தது. 1968-75 இற்கு இடையிலான ஆண்டுகள், பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு (Bretton Woods syste) முறையிலான டொலர்-தங்க மாற்றுமுறை பொறிந்ததால் உருவாகிய சர்வதேச பொருளாதார நெருக்கடியின் விளைவாக, கூடியளவு புரட்சிகரமான வடிவமெடுத்த வரிசைக்கிரமமான வர்க்கப் போராட்டங்களை கண்டன.

ஆளுவர்க்கம் இந்தப் பரபரப்பான காலகட்டத்தில் தப்பித்தாலும், இலாப விகிதங்கள் தொடர்ந்து சரிந்தவண்ணம் இருந்தன. இதன் விளைவாக ஒரு பாரியளவிலான தொழிலாள வர்க்கம் மீதானதும் மற்றும் சிக்கலான முறையிலான சலுகைகளை கொண்ட சமூகநல அரசின் மீதான தாக்குதலாலுமே முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கலாம் என ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ பிரிவுகள் முடிவிற்கு வந்தன. தாட்சரும், அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகனும் இந்த வர்க்க சமரச அரசியிலில் இருந்து நேரடி வர்க்க மோதலுக்கு தங்கள் கொள்கைகளை மாற்ற தலைப்பட்டனர்.

புதிதாக எழுச்சியுற்ற ஆதிக்கம் செலுத்தும் சக்திகளின் பிரதிநிதியாக தாட்சர் இருந்தார். இலாபவிகித சரிவை எதிர்த்து நிற்கும் பெரு நிறுவனங்கள், பூகோள முதலீட்டிலும், உற்பத்தி சர்வதேச முறையில் செய்யப்படுதலையும் மேற்கொண்டனர். இந்த மூலோபாயத்திற்காக, அவர்கள் தொழிற்துறையில் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகள் அகற்றப்படவேண்டும், வரிவிகிதங்கள் குறைக்கப்படவேண்டும், நலன்புரி வழங்கப்படுதலை அழிக்கப்படவேண்டும் என்று வாதிட்டனர். “அரசாங்கத்தின் எல்லைகளை பின்னே கொண்டு செல்லுதல்” என்ற கோஷத்தின் அடிப்படையில், பிரிட்டன் பூகோளரீதியாக போட்டியிடும் வண்ணம் தாட்சர் பிரிட்டனில் பொருளாதார, சமூக மறுசீரமைப்புக்களை மாற்றத்தொடங்கினார். இதில், “அறிவுபூர்வமான செயல்பாடு” என்ற முறையில் முன்னர் தேசியமயமாக்கப்பட்டிருந்த தொழில்களை கைவிடுதல் அல்லது தனியார்மயமாக்கல், வரிகளை பெரிதும் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகள் பெருநிறுவன முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டன.

1974ம் ஆண்டிற்குப் பின்னர், பழமைவாத கட்சியினர் எதிர்க்கட்சியில் 5 ஆண்டுகள் மட்டுமே இருந்து, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகப் பெரும் தாக்குதலுக்குத் தயார் செய்தனர். 1979ல் தாட்சர் அதிகாரத்திற்கு வருவதற்கு சற்று முன்பு, நிக்கோலஸ் ரிட்லி என்பவர், ஒரு திட்டத்தை விரிவாக தயாரித்து சுரங்க தொழிலாளர்கள் மீண்டும் தொழிற்துறை மோதலில் ஈடுபட்டால் அதை எப்படி தோற்கடிப்பது என்றும், “மறியலில் ஈடுபடுவதற்கு எதிரான சட்டத்தை செயல்படுத்த நவீன கருவிகள் கொடுக்கப்பட்ட பாரியளவிலான சுற்றிவரும் போலீஸ் வேண்டும் என்பது உட்பட” விவரங்களை விளக்கியிருந்தார்.

ஸ்கார்கிளும் 1970களில் ஆரம்ப காலகட்டத்தை 1984-85ன் வேலைநிறுத்திற்கான அடிப்படை வடிவமைப்பாக கண்டதுடன், தாட்சர் போலன்றி, தான் கருதியிருந்த மிகப்பெரிய வெற்றியை மீண்டும் காண்போம் என்று நினைத்திருந்தார்.

ஒரு புரட்சிகரமானவர் என்று வலதுசாரியினர் கிளப்பிய கட்டுக்கதைக்கு அப்பால், ஸ்கார்கிள் வாழ்நாள் முழுவதும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளரும், ஒரு தேசிய சீர்திருத்தவாத திட்டத்தின் பாதுகாவலருமாவார். சோசலிசத்தைப்பற்றி அவர் ஏதாவது பேசுகிறார் என்றால், அது பின்னால் மிகத்தொலைவிற்குரிய முன்னோக்காகும். இதற்கிடையில் தேசிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஒரு பொருளாதாரம், இறக்குமதி கட்டுப்பாடுகள், உதவித்தொகைகள் வழங்கப்படுதல், பிரிட்டனுடைய தேசியமயமாக்கப்பட்ட சுரங்க தொழில் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டிருத்தல் போன்றதே அவருக்கு தேவையானது. இதுதான் “நிலக்கரிக்கான திட்டம்” என்ற முறையில் தொழிற்கட்சியாலும் தொழிற்சங்க கூட்டமைப்பாலும் (TUC) பழமைவாத கட்சிக்கு எதிராக அவர் போராட்டத்தில் ஈடுபடச்செய்த திட்டமாகும். ஆனால் 1984ல், ஆளும் வர்க்கம் இனி அத்தகைய கொள்கையை பொறுத்துக்கொள்ளாது என்பதும், அத்தகைய திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க ஆதரவுத்தளம் இல்லை என்பதும், அவரே ஒரு பகுதியாக இருந்திருந்த தொழிலாளர் அதிகாரத்துவத்திலும் அதே கருத்துத்தான் உள்ளது என்பதும்தான் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

தாட்சரிசத்திற்கு எந்த வழிவகை ஏற்றம் கொடுத்ததோ, அது ஏற்கனவே தொழிற்கட்சியின் தேசிய சீர்திருத்த திட்டத்தையும் மதிப்புக்குறைவிற்கு உட்படுத்திவிட்டது. வரலாற்று ரீதியாக தொழிற் கட்சியும், தொழிற்சங்கங்களும் நிர்வாகங்களிடமிருந்து சிற்சில சலுகைகளையும், பாராளுமன்ற வழிமுறைகளால் சமூக சீர்த்திருத்தங்களை சமாதானமான முறையில் பெறவேண்டும் என்றே போராடி வந்தன. அதிகாரத்துவம் சோசலிசம் இறுதியாக வருவதற்கு இது நல்ல பாதை என்ற உண்மையான நம்பிக்கையில் இவற்றில் சிலவற்றை செய்யாமல், தொழிலாள வர்க்கம் புரட்சிகரமான அறைகூவலில் இருந்து சலுகைகள் மிகுந்த இலாப முறையில் தங்கியுள்ள கூட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு செய்ததாகும். அவர்களுடைய அடிப்படை விசுவாசம் எப்பொழுதுமே முதலாளித்துவ அமைப்புத்தான்; ஆனால் இதில் அதிக ஊதியங்களுக்கும், சிறந்த வேலைநிலைமைக்கும் வாய்ப்புக்கள் இருப்பதுடன் இலவச சுகாதார பாதுகாப்பு, கல்வி முதலியவற்றுக்கான சாத்தியங்களும் உள்ளன என்றும் அவர்களால் வெற்றிகரமாக வாதிட முடிந்தது.

எழுபதுகளின் நடுப்பகுதியில் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி 1980களில் வேகமடைந்ததுடன், இது தேசிய சீர்திருத்த கொள்கையை திவாலாக்கிவிட்டது. பொருளாதார வாழ்வின் ஒவ்வொரு கூறுபாடுகளான உற்பத்திமுறை, பங்கீட்டுமுறை மற்றும் பரிமாற்றுதல் ஆகியவை சர்வதேச அளவில் தொழிற் கட்சியின் மரபு வழியான வர்க்கங்களுக்கிடையே சமூக, அரசியல் சலுகைகள் வழங்குதலுடன் பொருந்தாமல் போய்விட்டது. மாறாக, சுரங்க தொழிலாளர்களின் உதவியால், 1974ம் ஆண்டு பதவிக்கு வந்த தொழிற் கட்சி அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிடும் கடுஞ்சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தி ஊதிய உயர்வுகளையும் தடுத்துவிட்டது. இவ்விதத்தில் தொழிற் கட்சிதான் முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு முக்கியமான நேரத்தில் மூச்சு வாங்குவதற்கான கால அவகாசத்தை கொடுத்து, பின்பு 18 ஆண்டுகள் பழமைவாத ஆட்சி நடத்தப்படுவதற்கு வழிவகுத்தது.

எந்தக் காலகட்டத்திலும் தொழிற்சங்க கூட்டமைப்பு, ஹரால்ட் வில்சனுக்கும் பின்னர் ஜேம்ஸ் கல்லகன் தலைமையிலான தொழிற்கட்சி அரசாங்கங்களுக்கும் எவ்வித மாற்றையும் முன்வைக்கவில்லை. அது வெறுமனே அதன் பாதையில் சிறிய மாறுதல்களைத்தான் கொண்டுவந்தது. இதன் விளைவாக, 1979ல் குளிர்கால அதிருப்தி எனப்பட்ட தொழிற்துறை மோதல்களில் மிக ஆழ்ந்த காலத்தில், பிரிட்டனில் அதுவரை காணாத அதிதீவிர வலதுசாரி அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதில் உண்மையில் வெற்றியை கண்டது.

மார்கரெட் தாட்சர் 1982 இல் சால்போர்டுக்கு விஜயம் செய்தார் (பல்கலைக்கழக ஆவணக்காப்பகம் மற்றும் சிறப்புத் தொகுப்புகளிலிருந்து) [Photo by University of Salford Press Office / CC BY 4.0]

ஸ்கார்கிளுடைய முன்னோக்கு, தாட்சர் பதவிக்கு வருவதற்கு தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவை வகித்த பங்கை மூடிமறைத்ததுடன், தொடர்ந்து அதிகாரத்துவம் வலதுபுறம் இடம் நகர்ந்ததற்கு எதிர்நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. 1983ல் இரண்டாம் முறையாக தாட்சர் பதவிக்கு வந்த பிறகு, தொழிற்கட்சியின் வலதுசாரித் தலைமை முதலாளித்துவ கட்டளையிடும் பொருளாதார, அரசியல் மரபு வழிவகைகளை முற்றிலுமாக மாற்றத்துடன் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டது. தன்னுடைய பங்கிற்கு தேசிய நிலக்கரி தொழிற்சங்கம் அரசாங்கத்திற்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்திலிருந்தும் ஒதுங்கி நின்றும், காட்டிக்கொடுத்தும் இருந்ததால், தொழிற்சங்க விரோத சட்டங்களைக்கூட பெயரளவிற்கு எதிர்க்கும் கருத்தையும் கூட கைவிட்டது.

ஸ்கார்கிள், தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் (TUC) தொழிற்கட்சிக்கும் எதிராக சவால்விட மறுக்கிறார்

இவ்வாறு தொழிலாளர் அதிகாரத்துவம் அனைத்தும், அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை எந்தவகையிலும் திரட்டும் முயற்சிக்கு முற்றிலும் எதிர்ப்பையே காட்டின. ஆயினும்கூட, ஸ்கார்கிளின் முன்னோக்கு தொழிற்கட்சியின் இடதுசாரி குழுக்களினதும், பிரிட்டனின் பல தீவிரவாதக்குழுக்கள் ஆகியவற்றின் முன்னோக்கான தொழிற்சங்கங்களுள் ஒரு போர்க்குணமிக்க இயக்கம், தொழிற்கட்சிக்கும் மற்றும் தொழிற்சங்க காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் மட்டுப்படுத்திக் கொள்ளவேணடும் என்பதாகும். இவர்கள் அனைவரும் ஆழ்ந்து பார்க்க விரும்பாதது என்னவெனில், அத்தகைய ஒரு இயக்கத்தின் வளர்ச்சி அதிகாரத்துவத்திலிருந்து அரசியல் முறிவு ஏற்படும் அச்சுறுத்தலை கொடுக்கும் என்பதுதான்.

ஆர்தர் ஸ்கார்கில், செஸ்டர் சாலையில் உள்ள சுந்தர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் எடின்பர்க் கட்டிடத்திற்கு வெளியே சுரங்க மூடல்களுக்கு எதிரான எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார். [Photo by Les Golding/Flickr API]

இதுதான் சுரங்க தொழிலாளர்கள் தோல்வியின் முக்கியமான காரணமாக இருந்தது. தொழிற்சங்க காங்கிரசுடைய அதிகாரபூர்வ வரலாறு ஆணித்தரமாக விளக்குகிறது; “1980இன் முற்பகுதியில், தொழிற்சங்க எதிர்ப்பு சட்டங்களுக்கு தீவிர எதிர்ப்புக் கொள்கை என்பது தொழிற்சங்க காங்கிரசுக்கு உடன்பாடாக இருந்தது, இதைச் செயல்படுத்துபவர்கள் (அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும்) 1971 தொழிற்துறை உறவுச் சட்டத்திற்கு எதிரான இயக்கத்தில் மீண்டும் வெற்றி பெறலாம் என்று நினைத்திருந்தனர்... நெருக்கடியான நேரங்களில், சில தொழிற்சங்கங்கள் வலுவற்ற நிலையில் இருந்ததால் தொழிற்சங்க காங்கிரஸ் பொதுக்குழு ஆதரவான நடவடிக்கையில் ஈடுபடும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இது நடைபெறப்போவதில்லை. தொழிற்சங்க கூட்டமைப்பின் (TUC) பொதுச் செயலாளர்களான (1973-84 வரை லென் முர்ரேயும், 1984-93 வரை நோர்மன் வில்லிஸும்) நேரடியாக சட்டத்தை உடைத்தல் (சட்டம் எவ்வளவு விரும்பத்தகாததாக இருந்தாலும்கூட) என்ற ஆபத்தான செயலுக்கு உடன்படப்போவதில்லை.”

1984ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி வேலைநிறுத்தம் ஆரம்பித்து ஓராண்டு கழித்து அதே நாளில் முடிவடைந்தது. கென்ட், மற்றும் யோர்க்ஷைரில் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்னும் சில தினங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். வேலைநிறுத்தம் தோன்றுவதற்கு உடனடிக்காரணம், கார்டன் வுட் நிலக்கரிச் சுரங்கம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதுதான். ஆனால் அரசாங்கம் இலாபத்தில் இயங்காத சுரங்கங்களை மூடுவதில் தீவிரம் காட்டியதும், இலாபம் காட்டுவதை தனியார்மயமாக ஆக்கிவிடலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்ததின் ஆரம்பகட்டம்தான் இந்த அறிவிப்பு. இதற்கு எதிர்ப்பாக, ஸ்கார்கிள் சுரங்கங்கள் நிலக்கரி முற்றிலும் எடுத்தபின்னர்தான் மூடவேண்டும் என்றும் அதுவரை அவை தேசியமயமாக்கப்பட்ட, மானிய உதவிகள் பெறும் அமைப்புக்களாக இருக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஆண்டு முழுவதுமான கசப்பான போராட்டத்தில், சுரங்கத்தொழிலாளர்களை தனிமைப்படுத்தவும் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ளே நிலவிய கணிசமான ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரட்டாது இருப்பதை உறுதிப்படுத்தவும், தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தலைவர்களின் நடவடிக்கைகள் அர்ப்பணிக்கப்பட்டு இருந்தன.

ஒற்றுமையாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பது வேலைநிறுத்தம் நீண்டு கொண்டே போனபோது பெரும்பாலும் பணம், உணவு இவற்றைத் திரட்டிக் கொடுத்ததோடு நின்றுவிட்டது. (கிட்டத்தட்ட 60மில்லியன் பவுன்கள் திரட்டப்பட்டது; இது சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு இருந்த ஆதரவின் வலிமைக்கு சான்று ஆகும்.) ஓரளவும் அதிகாரபூர்வமில்லாமலும் நிலக்கரி அனுப்பப்படுதலை இரயில்வே தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், பார ஊர்தி செலுத்துனர்களால் ஆகியோர் நிறுத்தினர். ஆனால் போராட்டத்திற்கு ஆதரவாக உத்தியோகபூர்வ இரண்டாம் கட்ட வேலைநிறுத்த நடவடிக்கைக்கு தொழிற்சங்க கூட்டமைப்பு (TUC) தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துவிட்டன. துறைமுக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நிலக்கரி அனுப்புதலுக்கான தடையை ஒட்டி, இருமுறை தோன்றியபோதிலும், விரைவில் தொழிற்சங்கத் தலைவர்களால் இரத்துச்செய்யப்பட்டன. சுரங்கத் துணை அதிகாரிகள் என அழைக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள் கொண்ட வேலைநிறுத்தமும் ஓர் சீரழிந்த முறையிலான சமரசத்தை ஒட்டி வாபஸ் பெறப்பட்டது. மேற்பார்வையாளர்கள் இல்லாமல் சுரங்க வேலை நடத்தப்பட முடியாது என்ற டோரிக்களினதும் போலீசாரினதும் போலித்தனமான ஊக்குவிப்பு பயனற்றுப் போயிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்கார்கிளும் அவருடைய ஆதரவளார்களும் தொழிற்சங்க கூட்டமைப்பு (TUC), தொழிற்கட்சி இவற்றின் போக்கிற்கு இரட்டைத்தனமான நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் இவர்கள் அவை இரண்டையும் சற்றே ஒதுக்கிவைக்க முயன்றனர்; அவர்கள் வேலைநிறுத்தத்தை விற்று விடும் நிலையிலிருந்து தடுத்துவிடும் என்ற வாதத்தைத்தான் முன்வைத்தனர். ஆனால் மார்ச் 16ம் தேதி, தேசிய சுரங்க தொழிலாளர் ஒன்றியம் (NUM) ஒரு இரகசிய கடிதத்தை தொழிற்சங்க கூட்டமைப்புக்கு (TUC) “இந்த தொழிற்சங்கத்தால் தொழிற்சங்க கூட்டமைப்பின் உதவியையோ, குறுக்கீட்டையோ கோரி எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை என்றே வெளிப்படையாக எழுதியது.

ஆனால் ஸ்கார்கிளுடைய, தொழிலாளர் இயக்கத்தின் ‘’செயல்பாடுகளுக்கு ஊட்டம் கொடுப்பதற்காக’' மே, ஜூன் மாதங்களில் ஷெப்பீல்டிற்கு அருகில் ஒர்கிரேவ் நிலக்கரி சுரங்கங்களில் பரந்த மறியலை நடத்தியது பெரும் அழிவை ஏற்படுத்தியது. சாதாரண உடைகளுடன் இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் போலீசாரின் கலகப்படைப்பிரிவினர் தடையின்றி புகுந்து, நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்யவும், ஸ்கார்கிள் உட்பட பலரை படுகாயத்திற்குட்படுத்தவும் முடிந்தது.

வேலைநிறுத்தத்தின் பிந்தைய மாதங்களில், ஸ்கார்கிளும், தேசிய சுரங்க தொழிலாளர் ஒன்றியமும், தொழிற்சங்க கூட்டமைப்பால் நிறுவப்பட்டிருந்த தேசிய நிலக்கரிக் குழுவிடம் பேச்சுவார்த்தைகளுக்காக பலமுறை பங்கு ஏற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எவரும் சவால்விட முடியாத நிலையிலிருந்த தேசிய சுரங்கத் தொழிலாளர் ஒன்றியத் தலைவர், தொழிற்சங்க கூட்டமைப்பின் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை சவால்விடக்கூடிய தன்மையைக் கொண்டிருந்தார். இதை அவர் செய்திருக்கவேண்டும். சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தங்கள் தலைவர்களை மீறி தொழிலாள வர்க்கம் ஆதரவு கொடுக்கவேண்டும் என்று வெளிப்படையான அழைப்பை அவர் கொடுத்திருந்தால், மிக ஆற்றல் மிகுந்த ஆதரவு கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாறாக, அரசாங்கத்திடமிருந்தும், தேசிய நிலக்கரிக்குழுவிடம் இருந்தும் ஒரு சலுகைகூடப் பெறாத நிலையில் பெருகிவிட்ட, தொடர்ந்த முயற்சியில் தோல்வியை தழுவுவதைவிட வேறு கதி இல்லை என்ற நிலைக்கு தன்னுடைய உறுப்பினர்களை தள்ளிவிட்டிருந்தார்.

தொழிலாளர் புரட்சி கட்சியின் பங்கு

தொழிலாள வர்க்கத்தின் கூடுதலான போராட்டப் பிரிவினரிடையே, ஸ்கார்கிள் உயர்ந்த மதிப்பு உடைய இடத்தைக் கொண்டு தொழிற் கட்சி தலைவர் நீல் கின்னோக் போன்றோருக்கு மாறுதலாக கொள்கையுடைய தலைவர் என்று கருதப்பட்டாலும்கூட, தொழிலாளர் புரட்சி கட்சியுடைய (WRP) முக்கியமான ஆதரவு கொடுக்கப்படாமல் இருந்திருந்தால், இவருடைய தலைமை பெரும் கஷ்டங்களுக்கு இடைய நீண்ட மாதங்கள் சவாலுக்குட்படாமல் இருந்திராது.

அந்த நேரத்தில் தொழிலாளர் புரட்சி கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவாக இருந்தது; ஆனால் புரட்சிகர முன்னோக்கைக் கைவிட்டு, நீண்ட நாட்களாக, தொழிலாள இயக்கத்தின் அதிகாரத்துவ தலைமைக்கு நிபந்தனையற்ற சரணாகதியை அடைந்திருந்தது.

தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எப்படிக் காட்டிக் கொடுத்தது

ஸ்கார்கிளுக்கு அதனுடைய அடிபணிவானது அதன் நீண்ட அரசியல் சீரழிவின் மிகக் கேவலமான வெளிப்பாடாயிற்று. தொழிலாளர் புரட்சி கட்சியின் பங்கு, “1973-85ல் தொழிலாளர் புரட்சி கட்சி எப்படி ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக்கொடுத்தது” என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது:

ஓராண்டு காலம் நீடித்திருந்த போராட்டத்தில், தொழிலாளர் புரட்சி கட்சி ஒரு முறை கூட தொழிலாள மக்களுடைய அரசியல் அமைப்பு பரந்த மக்கள் கட்சியான தொழிற் கட்சியிடம் கோரிக்கையை முன்வைக்கவில்லை. டோரி அரசாங்கத்தை ராஜிநாமா செய்ய வற்புறுத்தும் வகையிலோ, புதிய தேர்தல் தேவை என்றோ சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் தொழிற்கட்சி அதிகாரத்திற்கு மீண்டும் வரவேண்டும் என்றோ, ஒருமுறை கூட தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி அழைப்பு விடவில்லை.

மிக அதிகமான வாய்வீச்சு காட்டியபோதிலும், சுரங்க தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் போது, [தொழிலாளர் புரட்சி கட்சி தலைவர் ஜெர்ரி] ஹீலியின் உட்குழு எடுத்த நிலைப்பாடு, மிகவும் வசதியுடன் தொழிலாளர் கட்சியில் இருந்த சந்தர்ப்பவாத நண்பர்களுடனும், ஸ்கார்கிளின் தலைமையில் இருந்த தேசிய சுரங்க தொழிலாளர் ஒன்றியத்துடனும் மோதலை தவிர்த்தது. புரட்சி நிலைமை உள்ளது என்று பேசப்பட்ட போதிலும், தொழிலாளர் புரட்சி கட்சி தலைவர்கள் ஸ்கார்கிளைப் பற்றி உணர்வுடன் குறை கூறுவதை தவிர்த்தனர் இவ்விதத்தில் அவர்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு விடுத்த அழைப்பு முற்றிலும் வெற்றுத்தன்மையையே கொண்டிருந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தியது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை தொடர்கிறது:

1984ம் ஆண்டு காணப்பட்ட நிலைமையில், டோரிக்களை ஆட்சியிலிருந்து அகற்றி, தொழிற் கட்சியினரை சோசலிச வேலைதிட்ட கொள்கைகளை செயல்படுத்த மீண்டும் அதிகாரத்தில் இருத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தால் அது மக்கள் இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, தொழிற் கட்சியினரையும் அம்பலப்படுத்தியிருக்கும். ஏனென்றால் தொழிற்கட்சியினர் இந்த நேரத்தில், இடதுசாரிகள் உட்பட அனைவரும், இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தரமறுத்ததுடன், அதற்காகப் போராடவும் மறுத்திருப்பர். இது அவர்கள் தொழிலாள வர்க்கம் அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை முற்றிலும் தகர்த்திருக்கும். மாறாக, சமூக ஜனநாயகவாதிகள் நாசவேலை செய்திருந்த போதிலும், டோரிக்கள் ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டிருந்தால், (அல்லது மக்களுடைய பெரும் எதிர்ப்பிற்கிடையே அதிகாரத்தில் தொடர்ந்திருந்தாலும்), ஒரு புரட்சிக்கு பிரிட்டனில் முன்னோடி சூழ்நிலை உருவாகியிருக்கும்.

பொதுவேலை நிறுத்தத்திற்கான பிரச்சார முயற்சிகள், பொதுப்படையான பிற்போக்கு தன்மைக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அரசியல் போராட்டாமாக மாற்றினால்தான் வளர்ச்சியுறும். ஸ்கார்கிளுடைய மத்தியவாத அரசியலுக்கு எதிராக சமரசத்திற்கு இடமில்லாத அன்றாடப் போராட்டம், தொழிற்சங்க வாதத்தை பற்றிய தெளிவான ஆய்வு, ஸ்கார்கிளின் ஸ்ராலினிச தொடர்புகள் அம்பலப்படுத்தப்படுதல் மற்றும் அவர் டோரிகளை உடனடியாக பதவியில் இருந்து இறக்கப் போராட மறுத்தலை ஐயத்திற்கிடமின்றி கண்டனத்திற்குட்படுத்துதல் ஆகியவற்றை கொண்டுவந்திருக்கும். இத்தகைய வழிமுறைகளில்தான் தொழிலாளர் புரட்சி கட்சி சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தினரிடையே பொது வேலைநிறுத்தத்திற்கு தேவையான முழு அரசியல் நனவை வளர்த்திருக்கமுடியும்.”

இறுதிஆய்வில், தொழிலாளர் புரட்சி கட்சி, ஸ்கார்கிளுக்கு எதிராக கொள்கைப்பிடிப்பான ஒரு போராட்டம் நடத்த மறுத்ததுதான், ஒரு தலைமையை எதிர்நோக்கியிருந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களை நிராயுதபாணியாக்கியதுடன், வேலைநிறுத்தம் தோல்வி அடைவதற்கும் வழிகோலியது.

இன்று இந்த வேலைநிறுத்தத்தின் படிப்பினைகள்

சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய அடிப்படை படிப்பினை, அதவாது உண்மையான சோசலிச நனவுபூர்வமாக வளர்ப்பதற்கான ஒரு முழு அரசியல் நனவு தேவையாகும்.

இந்த வேலைநிறுத்தம், ஒரு தலைமுறை தொழிலாளர்களுக்கு மாபெரும் அனுபவம் என்றாலும், இதிலிருந்து பெறக்கூடிய கருத்துக்கள் இன்னும் நன்கு ஜீரணிக்கப்பட்டு, புரிந்து கொள்ளப்படவேண்டும்.

இந்த வேலைநிறுத்தத்தின் ஒரு கூறுபாடு, இது பெரும் துன்பங்களை கொடுத்திருந்த போதிலும், பொதுவாக நட்பு, குடும்பம் என்ற பிணைப்புக்களை வலிமைப்படுத்தியது. இதை குறைகாண்பவர்கள்கூட, வேலைநிறுத்தத்தில் பெண்கள் ஆற்றிய முக்கியமான பங்கை ஏற்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது இதுவரை ஐயத்திற்கிடமின்றி ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய குழுக்களில் இருந்த முன்கருத்துக்களுக்கு சவாலாக அமைந்தது. வேலைநிறுத்தத்தை தொடர்ந்து சமூக குழுக்கள் சிதைந்தன என்பதையும் குடும்பங்கள் பிளவுபட்டன என்பதும் உண்மையே. எவ்வளவு கொடூரமாக இருந்தபோதிலும், இது தோல்வியின் விளைவு என்று மட்டும் ஏற்க இயலாது. வேலைநிறுத்ததில் பங்குபெற்றவர்களில் பலருக்கும் தங்கள் வீரம், தியாகம் ஆகியவை இருந்தபோதிலும் எவ்வாறு தோற்றுப்போனோம் என்பது தெரியாமல் திகைக்கவேண்டியிருந்ததுடன், தனிப்பட்ட அழுத்தங்களையும் இது தோற்றுவித்தது என்பது புலனாவதுடன், ஒரு புதிய முன்னேற்ற வழியையும் காணாமல் அதில் பங்கு பெற்றவர்கள் உள்ளனர்.

வேலைநிறுத்தத்தை முறியடித்ததில் தாட்சர் வென்றது அவர் பக்கம் இயல்பாகவே வலிமை இருந்து என்பதினால் அல்ல; அவருடைய அரசியல் எதிரிகள் சீரழிந்த கருத்துக்களை உடையவர்களாக இருந்ததினால் என்பதுதான் பொருந்தும். அந்த நேரத்தில் தொழிற் துறையில் போர்க்குணப்போக்கு மிகுந்து இருந்தது என்று சித்தரிக்கப்பட்டு இருந்த போதிலும், அது அப்போக்கின் கடைசி ஒலியாகத்தான் இருந்தது. 1984-க்குள் தொழிலாள வர்க்கத்தின் பழைய அமைப்புக்கள் அனைத்துமே முற்றிய சிதைந்த தன்மையில்தான் இருந்தன. அவர்கள் கொண்டுந்த தேசிய சீர்திருத்த முன்னோக்கு, புதிய நலன்களை பெறுவது ஒருபுறம் இருக்க, தொழிலாள வர்க்கம் தான் முன்பு பெற்றிருந்த நலன்களை பாதுகாப்பதற்குக்கூட வழிவகை செய்யமுடியாமல் போயிற்று.

அந்தவிதத்தில் டோனி பிளேயரும், புதிய தொழிலாளர் கட்சியினரும் தொழிலாள வர்க்க இயக்கத்தின் வரலாற்றிலிருந்து முறிந்து சென்றவர்கள் அல்லர்; மாறாக, அவர்கள் அதன் தீவிரமான எதிர்மாறான விளைவாகும். அதாவது முதலாளித்துவத்திற்கும் இலாபமுறைக்கும் தத்துவார்த்த அடிபணியலாகும்.

தொழிற்கட்சி வளர்த்துள்ள, கையாளும் முறைகளுக்கு எதிராக, அமைப்பு அளவிலும், அரசியல் அளவிலும் பழைய சமூக சீர்திருத்த வேலைதிட்டங்களிலிருந்து முறிந்து, நகர்ந்து புதிய அணைப்புக்ளையும் போராட்ட வகைகளையும், மார்க்சிச முன்னோக்கில் சர்வதேச புரட்சி முறையை அடிப்படையாகக் கொண்டு வளர்க்க வேண்டும் என்பதே சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் எதிர்வைக்கும் இன்றியமையாத கருத்து ஆகும்.

ஆனால் அந்த நேரத்தில் மிகவும் உறுதியாகவும் கொள்கைப்பிடிப்புடனும் இருந்த சுரங்க தொழிலாளர்கள்கூட பொதுவாக போர்க்குணமிக்க நடவடிக்கைகள்தான் தங்களுடைய தலைவர்களின் முடிவை வலுப்படுத்தி வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நினைத்திருந்தனர். அவர்கள் அத்தகைய பொய்மை கருத்துக்களுக்காக மிக அதிகமான விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது.

உடனடியான முதற் பார்வைக்கு சுரங்க தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து முன்னேற்றமான நலன் எதுவும் வெளிப்படவில்லை என்றுதான் தோன்றும். ஒரு ஊழல் மிகுந்த கூட்டம் தொழிலாளர் இயக்கத்தின்பால் தங்களுடைய இரும்புப்பிடியை இறுக்கும் விளைவை கொண்டிருந்தது என்பது உண்மைதான்; அதுவும், தங்கள் சொந்த வலதுசாரி கொள்கைகளை வர்க்கப் போராட்ட இலக்குகளுக்கு எதிராக, இத்தோல்வி பயன்படுத்தப்பட்டது.

எவ்வாறிருந்தபோதும், அத்தகைய வெற்றி மிக மிகக் குறுகிய தன்மையைத்தான் பெற்றிருக்கும்.

கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களின் மகத்தான தன்மை பழைய கருத்து அடிப்படைகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டன. இந்தவழிவகையில், சமூக சீர்திருத்தம் என்ற பழைய நோக்கம் மட்டும் மதிப்புக்குறைவிற்கு உட்படுத்தப்படவில்லை. வலதுசாரியினர் மாற்றாக கொடுத்திருந்த கருத்துக்கள் முன்னதைவிடக் குறைவான நேரத்தில் இழிவாகி விட்டன. தாட்சருடைய “மக்கள் முதலாளித்துவம்” என்ற கருத்து சமுதாய பின்னடைவு, சரிவு இவற்றிற்கு வழி வகுத்தது. பிளேயர் வேறு விதத்தில் முன்வைக்கும் அக்கருத்தான “மூன்றாம் வழி” எனக் கூறப்படுவதும் இதே போன்ற அழிவைத்தான் கொடுத்துள்ளது.

உழைக்கும் மக்களுக்கு அரசியலில் மாற்றுப் பிரதிநிதித்துவத்தை தொழிற்கட்சி கொடுக்கிறது என்ற எண்ணம், இப்பொழுதுள்ள அரசியல் கருத்துக்கள் அனைத்திலும் கூடுதலான மதிப்பு குறைவு பெற்றுள்ளது. இலாபமுறைக்கு வெளிப்படையாக வாதிடுவோர், பழைய தொழிலாள இயக்கத்தை கருத்தளவில் கைப்பற்ற, தொழிற்கட்சியும், தொழிற்சங்கங்களும் பெருவர்த்தகத்தின் ஆதரவான பகுதிகளாக மாற்றியுள்ள நிலைமை முழுமை அடைந்துவிட்டதால், அவை பரந்த மக்கள் தொழிலாள வர்க்கத்துடைய நம்பிக்கையைக் கொண்டுள்ளன என்று கூறவே முடியாது.

சமூக, ஜனநாயக உரிமைகள் தொடர்புடைய ஒவ்வொரு பிரச்சினையிலும், தொழிலாள வர்க்கம் இன்று பழைய அமைப்புக்களுடன் நேரடி மோதலைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது ஈராக்கிய போருக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்ட அணிதிரட்டில் முழுமையான வெளிப்பாட்டை கண்டது; அதில் பிளேயரின் வர்த்தகம் சார்ந்த செயற் பட்டியலுக்கு எதிராக மக்களுடைய விரோதமும் எதிர்ப்பும் வெளிவந்ததுமட்டுமின்றி, ஒரு பாதுகாப்பற்ற நாட்டின் மீது காரணமின்றி குற்றஞ்சார்ந்த தாக்குதலை நடத்தியதற்கும் கடுமையான எதிர்ப்பு வெளிப்பட்டது.

வர்க்கப் போராட்டம் முடிந்தவிட்டது எனக்கூறுவதற்கே இல்லை. மாறாக, போர் எதிர்ப்பு இயக்கம், அடுத்த கட்டத்தில் பழைய கட்டமைப்பினுள் நின்றுவிடாது என்பதைக் குறிப்பதுடன், அது தொழிற்சங்கங்களுக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் எதிரான அரசியல் கிளர்ச்சி வடிவத்தை எடுக்கும் என்பதை புலப்படுத்துகிறது. அத்தகைய வளர்ச்சிக்கு தளம் அமைக்கும் வகையில் சுரங்கத்தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் படிப்பினைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

Loading