அவரது இறுதி செய்தி: "நான் இனி இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன்"

காஸாவில் இனப்படுகொலையை எதிர்த்து, இஸ்ரேலிய தூதரகம் முன்பு அமெரிக்க விமானப்படை சிப்பாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்ட ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மரணகரமான போராட்டத்தில், 25 வயதான விமானப்படையை சேர்ந்தவரான ஆரோன் புஷ்னெல், காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய இனப்படுகொலையில் பங்கெடுப்பதற்கு தனது எதிர்ப்பை அறிவித்தார். பின்னர் அவர் ஒரு பற்றியெரிய வைக்கும் திரவத்தால் தன்னைத் தானே எரித்துக் கொண்டு தீக்குளித்தார். அவரது கடைசி வார்த்தைகள் “சுதந்திர பாலஸ்தீனம்” என்பதாகும்.

தீப்பிழம்புகள் அவரைச் சூழ்ந்து கொள்ள, புஷ்னெல் “பாலஸ்தீனத்தை விடுதலை செய்!” என்று கத்துகிறார்.

புஷ்னெல்லின் கொடிய மரணப் போராட்டத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக பரவியது. வெறும் மூன்று நிமிட காணொளியில், புஷ்னெல், அவரது போர் உடைகளை அணிந்துகொண்டு, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, “நான் அமெரிக்க விமானப்படையின் ஒரு செயலூக்கமான கடமை செய்யும் உறுப்பினர், இனப்படுகொலைக்கு நான் இனியும் உடந்தையாக இருக்க மாட்டேன்” என்று அறிவிக்கிறார். அவர் தனது சீருடையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில், அவர் அமைதியாக விளக்குகையில், “நான் ஒரு தீவிர எதிர்ப்புச் செயலில் ஈடுபடப் போகிறேன், ஆனால் பாலஸ்தீனத்தில் மக்கள் தங்கள் காலனித்துவவாதிகளின் கைகளில் அனுபவித்து வருவதுடன் ஒப்பிடும்போது, இது தீவிரமானது அல்ல. இதுதான் இயல்பானதாக இருக்கும் என்று நமது ஆளும் வர்க்கம் முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

புஷ்னெல், தனது இடது கையில் ஒரு திரவக் கொள்கலனுடன், இஸ்ரேலிய தூதரகத்தின் முன்பகுதியை அடையும் வரை சுமார் 30 வினாடிகள் தொடர்ந்து நடந்தார். தனது கேமராவை கீழே வைத்த பின்னர் – அது தூதரகத்தின் முன்பகுதியை நோக்கி இருந்தது – புஷ்னெல் வாயிலை நோக்கி நடந்து சென்று ஒரு திரவத்தால் தன்னை நனைத்துக்கொண்டு, “பாலஸ்தீனத்தை விடுதலை செய்யுங்கள்!” என்று அறிவித்தார். பின்னர் அவர் ஒரு லைட்டரை எடுத்து தன்னைத்தானே தீயை பற்றவைத்து கொண்டார்.

கேமராவுக்கு வெளியே, “நான் உங்களுக்கு உதவலாமா சார்?” என்று ஒரு மனிதனின் குரல் கேட்கிறது. ஏறக்குறைய 15 வினாடிகளுக்கு, புஷ்னெல்லால் நெருப்பை பற்றச் செய்ய முடியவில்லை, இருப்பினும் கேமராவுக்கு வெளியே குரல் புஷ்னெல்லிடமிருந்து லைட்டரைப் பெற எந்த முயற்சியும் செய்யவில்லை. தீ பிடித்தவுடன், புஷ்னெல் விரைவாக தீப்பிழம்புகளில் எரியத் தொடங்கினார். நெருப்பு புஷ்னெல்லை விழுங்கியபோது, “பாலஸ்தீனத்தை விடுதலை செய்யுங்கள்!” அவர் மீண்டும் மீண்டும் கத்தினார்.

புஷ்னெல் எரிந்து கொண்டிருந்தபோது, கேமராவுக்கு வெளியே பல குரல்கள் கேட்டன. ஒருவர் “நெருப்பில் மனிதர் எரிகிறார்!” என்று கத்தினார், மற்றொருவர் “தரையில் படுங்கள்!” என்று மீண்டும் மீண்டும் கத்துவதைக் கேட்க முடிந்தது. சைரன்கள் ஒலிக்க, டயர்கள் கிறீச்சிட்டபோது, புஷ்னெல் இறுதியில் தரையில் சரிந்தார். பற்றவைக்கப்பட்ட கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்குப் பிறகு, ஒரு போலீஸ் அதிகாரி புஷ்னெல்லின் இப்போது எரிந்த மற்றும் அசைவற்ற உடலில் தீயணைப்பு கருவியைப் பயன்படுத்துவதைக் காண முடிந்தது.

புஷ்னெல் வெளிப்படையாக அவரைத் தவிர வேறு யாருக்கும் அச்சுறுத்தலை முன்வைக்கவில்லை என்ற உண்மை இருந்தபோதிலும், ஒரு ஆயுதமேந்திய அதிகாரி புஷ்னெல்லை நோக்கி துப்பாக்கியை நீட்டுவதை வீடியோவில் காண முடிகிறது, அவர் வீடியோ முழுவதும் தொடர்ந்து தரையில் எரிந்து கொண்டிருந்தார். “எனக்கு துப்பாக்கிகள் தேவையில்லை, எனக்கு தீயணைப்புக் கருவிகள் தேவை” என்று ஒரு பொலிஸ் அதிகாரி கூச்சலிட்ட போதும் கூட மற்ற போலிஸ் அதிகாரி (இதை எழுதும் வரையில் அவர் இஸ்ரேலிய தூதரகத்தில் இருக்கிறாரா அல்லது அமெரிக்க இரகசிய சேவையில் இருக்கிறாரா என்பது தெளிவாக இல்லை) புஷ்னெல்லை நோக்கி தொடர்ந்து தனது ஆயுதத்தை நீட்டிக் கொண்டிருந்தார்.

தனது கடைசி சமூக ஊடக இடுகையில், புஷ்னெல் எழுதினார், “நம்மில் பலர் நம்மை நாமே கேட்டுக்கொள்ள விரும்புகிறோம், ‘அடிமைத்தனத்தின் போது நான் உயிருடன் இருந்தால் என்ன செய்வேன்? அல்லது ஜிம் க்ரோ சௌத்? அல்லது இனவெறியா? என் நாடு இனப்படுகொலை செய்தால் நான் என்ன செய்வேன்? பதில், நீங்கள் அதை செய்கிறீர்கள். இப்போதே.”

ஆரோன் புஷ்னெல்

தனது LinkedIn கணக்கில், புஷ்னெல் மே 2020 முதல் அமெரிக்க விமானப்படையில் முழுநேரமாக கடமையில் இருந்ததாக பட்டியலிட்டிருந்தார், அவரது கடைசிப் பணி டெக்சாஸின் சான் அன்டோனியோவில் “DevOps பொறியாளர்” ஆகும். புஷ்னெல் “அமெரிக்க விமானப்படையில் இருந்து மென்பொருள் பொறியியளாளராக மாற” விரும்புவதாக எழுதினார்.

2023 நவம்பரில் இருந்து, அமெரிக்க விமானப்படை இஸ்ரேலுக்கு வான்வழித் தாக்குதல்கள் மற்றும் நீண்ட தூர பீரங்கி ஆயுதங்களுக்காக குறிப்பாக “உளவுத்துறையை குறிவைப்பதில்” நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை நிறுத்தியதாக ஜனவரியில் இன்டர்செப்ட் அறிவித்தது. இக்கட்டுரை எழுதப்படும் வரையில் புஷ்னெல் படைகளை அனுப்புவதற்கான உத்தரவுகளைப் பெற்றாரா என்பது தெளிவாக இல்லை என்றாலும், நடந்து கொண்டிருக்கும் படுகொலைகளில் அமெரிக்க இராணுவத்தின் பாத்திரம் குறித்து அவர் ஆழ்ந்த கவலை கொண்டிருந்தார் என்பதில் கேள்விக்கு இடமில்லை.

புஷ்னெல் அராஜகவாத அரசியலால் ஈர்க்கப்பட்டார். அவர் தீக்குளித்த அன்று, அந்த இளைஞர் “பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிரான ஒரு தீவிர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட” திட்டமிட்டிருப்பதாக கூறி, கிரிமினென்க் (crimethinc) போன்ற அராஜகவாத வெளியீடுகளுக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அவர் நேரடி ஒளிபரப்பிற்கான இணைப்புகளை வழங்கினார் மற்றும் “நிகழ்வின்” காட்சிகளைப் பதிவு செய்தார், மேலும் “காட்சிகள் பாதுகாக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஓஹியோவின் அக்ரோனை தளமாகக் கொண்ட மக்களுக்கு சேவை செய்யுங்கள் அக்ரோன் (Serve The People Akron) என்ற அமைப்பு, ஆரோன் “எங்கள் அமைப்பு மற்றும் சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினராக இருந்தார், அவர் உடனடியாக வீடற்றவர்களுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் உதவ முன்வந்தார். அவர் நம்பகமானவர் மற்றும் விடாமுயற்சி மற்றும் அவருக்கு இன்னும் புதியதாக இருந்த ஒரு நகரத்தில் அவர் செய்த பரஸ்பர உதவி வேலை ஆகும். அக்ரோனை ஒரு சிறந்த இடமாக மாற்ற அவர் மேற்கொண்ட முயற்சிக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று குறிப்பிட்டது.

புஷ்னெல்லை கௌரவிக்கும் வகையில் பல நினைவுச் சின்னங்களும் விழிப்புணர்ச்சிகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளன. திங்களன்று இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே, அந்த இளைஞர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட அதே இடத்தில், டசின் கணக்கான எதிர்ப்பாளர்கள் ஒரு நினைவுப் பிரார்த்தனையை நடத்தினர். ஒரு பெரிய கேன்வாஸில், பங்கேற்பாளர்கள் புஷ்னெல்லுக்கு ஆதரவாக ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் சொற்றொடர்களை எழுதினர். ஒரு செய்தியில், “அன்புள்ள ஆரோன், காஸா மக்களை தோல்வியடையச் செய்ததைப் போலவே, உலகம் உங்களை ஏமாற்றியதற்காக நாங்கள் வருந்துகிறோம். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளனர்.

புஷ்னெல்லின் மரணம் ஒரு துன்பியல் நிகழ்வு மற்றும் படுகொலைக்கு பொறுப்பான அனைத்து அரசாங்கங்கள் மற்றும் அரசியல் போக்குகள் மீதான ஒரு குற்றச்சாட்டாகும். அவற்றில் முக்கியமானது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள், அதைத் தொடர்ந்து அவற்றின் நேட்டோ நட்பு நாடுகள் ஆகும். எனினும், இனப்படுகொலையைச் செய்தவர்கள் மற்றும் அதற்கு அனுசரணை வழங்கியவர்கள் மீது தொடர்ந்து மாயைகளை முன்வைப்பவர்களுக்கு ஒரு சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், இதில் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள், மற்றும் அதன் பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ், பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு தொடர்ந்து முட்டுக் கொடுத்து வரும் “பொறுப்பேற்காத” போலித்தனத்திற்குப் பின்னால் உள்ள சக்திகளும் உள்ளடங்குவர்.

நியூயோர்க் டைம்ஸ்,  NPR, ராய்ட்டர்ஸ், CNN மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை பல மணி நேரங்களுக்கு இந்த எதிர்ப்பு பற்றி செய்தி வெளியிடவில்லை, அவர்கள் அவ்வாறு செய்தபோது, புஷ்னெல்லின் பேரழிவு ஆர்ப்பாட்டத்தின் அரசியல் உள்ளடக்கத்தை மறைப்பதற்காக தலைப்புச் செய்திகள் வேண்டுமென்றே தெளிவற்றதாக இருந்தன.

“வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட விமானப்படை சிப்பாய் இறந்தார்” என்பது நியூயோர்க் டைம்ஸின் தலைப்புச் செய்தி ஆகும். “இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட அமெரிக்க விமானப்படை சிப்பாய் இறந்தார்” என்று NPR தலைப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்ட் இதேபோல் அறிவித்தது, “டி.சி.யில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட பின்னர் விமானப்படை சிப்பாய் இறந்தார்.” CNN மற்றும் ராய்ட்டர்ஸ் இரண்டும் சமமாக பயனற்றவையாக, “அமெரிக்க விமானப்படை சிப்பாய் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தனக்குத்தானே தீ வைத்துக் கொள்கிறார்” என்று எழுதியது.

முதலாளித்துவ ஊடகங்களின் இந்த சுய-தணிக்கையானது, காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலியப் படுகொலை தொடங்கியதில் இருந்தே அவற்றின் நடத்தையின் ஒரு பகுதியாகும். அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து, அமெரிக்க செய்தி ஊடகங்கள் இஸ்ரேலிய பிரச்சாரத்தை வெடிக்கச் செய்தன. அத்தோடு, போரில் அமெரிக்க ஈடுபாட்டிற்கு எதிரான அன்றாட எதிர்ப்புக்களை இருட்டடிப்பு செய்தன. அதேநேரத்தில், பைடென் நிர்வாகமும் ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும் இனப்படுகொலையை எதிர்ப்பதற்கான அவர்களின் முதல் அரசியலமைப்பு திருத்த உரிமைகளைப் பயன்படுத்தியதற்காக பத்தாயிரக் கணக்கான மாணவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை “யூத-எதிர்ப்புவாதிகள்” என்று அவதூறு செய்கின்றன.

தங்களது இழிவான பாத்திரத்தை தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி செய்தி வெளியிடத் தொடங்கியுள்ள பிரதான செய்தி ஊடகப் பிரிவுகள், புஷ்னெல்லின் தீவிர கண்டனத்தின் அரசியல் உள்ளடக்கத்தை மூடிமறைப்பதற்கும், அமெரிக்க சமுதாயத்தின் நோய் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கையால் உருவாக்கப்பட்ட வெகுஜன வெறுப்புணர்வின் விளைபொருள் அல்ல, அவரது மனதில் உள்ள குறைபாடுகளின் விளைபொருள் என்று சித்தரிப்பதற்கும் “மனநோய்” என்ற கவர்ச்சிகரமான வார்த்தையைப் பயன்படுத்துகின்றன.

ஆனால் அனைத்து தகவல்களின்படியும், புஷ்னெல் எந்த மனநோயாலும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை, காஸாவில் நடந்து வரும் படுகொலைகளுக்கு விடையிறுப்பாக தன்னைத்தானே தீக்குளித்துக் கொண்ட முதல் அமெரிக்கர் கூட அவர் அல்ல. டிசம்பர் 1, 2023 அன்று, அட்லாண்டா காவல்துறையினர் அடையாளம் காண மறுத்த ஒரு பெண் எதிர்ப்பாளர், ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே பெட்ரோலில் நனைந்து தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார். அப்போது அந்தப் பெண் பாலஸ்தீன கொடியை ஏந்தி வந்திருந்தார்.

இந்த தீவிர போராட்டங்கள் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது அமெரிக்க சமூகம் திணிக்கும் காட்டுமிராண்டித்தனமான வன்முறைக்கான ஒரு எதிர்வினையாகும். பல தசாப்த கால முடிவில்லா போர் அமெரிக்க சமூகத்தை காட்டுமிராண்டித்தனமாக சித்தரித்துள்ளது. பெருவணிகக் கட்சிகள், ஊடகங்களுடன் சேர்ந்து, சோசலிச மற்றும் இடதுசாரி கண்ணோட்டங்களைத் தடை செய்ய அவற்றின் சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்கின்றன என்பதால், வாக்குப் பெட்டி மூலம் மாற்றத்தை கொண்டுவருவதற்கான மக்களின் முயற்சிகள் மறுக்கப்படுகின்றன. பல தசாப்தங்களாக இவ்விரு கட்சிகளும் கடந்த ஆண்டு 1 ட்ரில்லியன் டாலர்ளுக்கும் அதிகமான தொகை உட்பட, சமூகத்தின் ஆதாரவளங்களை சமூக திட்டங்களில் இருந்தும் போருக்குள்ளும் பாய்ச்சி வந்துள்ளன.

மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் தசாப்த கால ஏகாதிபத்திய போர் 40 மில்லியனுக்கும் அதிகமான அகதிகளுக்கும், கிட்டத்தட்ட 10 மில்லியன் உயிரிழப்புகளுக்கும் இட்டுச் சென்றுள்ளது. அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் எத்தனை கான்செர்டினா கம்பி சுருள்கள் போடப்பட்டாலும், அமெரிக்க ஏகாதிபத்திய வன்முறை அதன் எல்லைகளுக்கு வெளியே தங்குவதில்லை. இது அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு கூறுபாட்டிலும் படர்ந்துள்ளது. பிந்தைய மன அழுத்தக் கோளாறு (PTSD) நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிப்பாய் மேய்னில் (Maine) ஒரு பந்துவீச்சு விளையாட்டுத் திடலில் வயது வந்தவர்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்வதில் இருந்து, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்காவில் ஆண்டுக்கு 1,000 க்கும் அதிகமாக இருக்கும் தினசரி பொலிஸ் கொலைகள் வரை இது படர்ந்துள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உயிர்களும் சடலங்களும், அவர்கள் பாலஸ்தீனியர்களாக இருந்தாலும் சரி அல்லது அமெரிக்கர்களாக இருந்தாலும் சரி, ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் சிப்பாய்களாக அல்லது இலாபங்களாக மாற்றப்படாவிட்டால் ஒன்றும் மதிப்புடையவை அல்ல. அமெரிக்கா, இஸ்ரேல் இன்னும் பிற ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல் ஸ்தாபகங்களால் ஆதரிக்கப்பட்டுள்ள காஸாவில் இனப்படுகொலையை இருகட்சிகளும் தழுவியிருப்பது, அமெரிக்காவில் முதலாளித்துவ அரசியலுக்கான பாதையின் முடிவாகும்.

Loading