முன்னோக்கு

தீவிரமாகப் பாதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளை வேலைக்கும் பள்ளிக்கும் திரும்புமாறு சி.டி.சி வலியுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வெள்ளிக்கிழமை, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) ஆனது கோவிட்-19 ஆல் தீவிரமாக தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை பள்ளிகள் மற்றும் வேலையிடங்களுக்குத் திரும்புமாறு வலியுறுத்தி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது, இதனால் அவர்களின் சக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இந்த வழிகாட்டுதல்களின் கீழ், தொழிலாளர்கள் அவர்களின் கடைசிக் காய்ச்சலுக்குப் பின்னர், 24 மணி நேரத்திற்குப் பிறகு வேலைக்குத் திரும்ப ஊக்குவிக்கப்படுகிறார்கள், இந்த காலகட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளில் பெரும்பான்மையானவர்கள் தீவிரமான தொற்றுநோயாளியாக இருப்பார்கள்.

இந்த வழிகாட்டுதலுக்கு பொது சுகாதாரத்தில் எந்த அடிப்படையும் இல்லை. இதற்கு இரண்டு அடிப்படை நோக்கங்கள் உள்ளன. முதலாவதாக, பெருநிறுவனங்களுக்கு இலாபங்களை உருவாக்குவதற்காக, தொழிலாளர்கள் அவர்களின் சக தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை முன்வைக்கின்ற போதிலும் கூட, இது தொழிலாளர்கள் வேலைக்கு வரவேண்டும் என்பதை உறுதிப்படுத்த அது முனைகிறது.

இரண்டாவதாக, கோவிட்-19 தடையின்றி பரவ அனுமதிப்பதன் மூலமாக, நிதியச் செல்வந்த தட்டுக்களின் சார்பாக பேசும் அமெரிக்க அரசாங்கம், ஆயுட்காலத்தைக் குறைக்கவும், வயதான அமெரிக்கர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களை முன்கூட்டிய மரணங்களுக்கான நிலைமைகளை உருவாக்கவும் முனைந்து வருகிறது.

முந்தைய எந்த ஆண்டையும் விட இந்த பெருந்தொற்று நோய் உயர்ந்த மட்டத்தில் பரவி வருகின்ற நிலைமைகளின் கீழும், மற்றும் இந்த வைரஸ் பரவுவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் கைவிடப்பட்டுள்ள நிலைமைகளின் கீழும் சி.டி.சி இன் கோவிட்-19 கொள்கை மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் கோவிட்-19 பொது சுகாதார அவசரநிலை அறிவிப்பை பைடென் நிர்வாகம் இரத்து செய்த பின்னர் அனைத்து பெருந்தொற்று நோய் கண்காணிப்புகளும் முடிவுக்கு வந்ததால், இதை இப்போது கழிவுநீர் தரவு மூலம் மட்டுமே பார்க்க முடியும்.

பயோபோட் அனலிட்டிக்ஸின் கழிவுநீர் தரவு, ஆண்டின் இந்த நேரத்தில் பெருந்தொற்று நோயின் முந்தைய ஆண்டுகளை விட தற்போதைய கழிவுநீர் அளவுகள் அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது. [Photo: Biobot Analytics’ data fra avløpsvann]

சி.டி.சியின் புதிய கொள்கையானது கோவிட்-19 ஐ பருவகால இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாச ஒத்திசைவு வைரஸ் (ஆர்.எஸ்.வி) உள்ளிட்ட பிற சுவாச வைரஸ்களுடன் இணைக்கிறது, இந்த நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்ட அனைவரையும் வேலைக்கு வரவும் சாதாரண நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவும் ஊக்குவிக்கிறது.

உழைக்கும் அமெரிக்கர்களில் குறைந்தபட்சம் கால் பகுதியினருக்கு எந்த மருத்துவ விடுப்பும் இல்லை, இது பெரும்பாலும் அவர்களின் ஊதியத்துடன் கூடிய விடுப்பில் (PTO) இருந்து எடுக்கப்படுகிறது. தனியார் துறை தொழிலாளர்கள் மத்தியில், மிகக் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களில் 40 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவ விடுப்பு வழங்கப்படுகிறது. இப்போது, முதலாளிகளும் மேலாளர்களும் சி.டி.சி.யின் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி தங்கள் ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டு வேலைக்கு வர வேண்டும் அல்லது பணிநீக்கம் செய்யப்படும் அபாயம் உள்ளது என்று கோரலாம்.

புதிய வழிகாட்டுதல்களின் ஒவ்வொரு அம்சமும் கோவிட்-19 பற்றிய நன்கு அறியப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிராக செல்கின்றன: அதாவது பரிசோதனை இல்லாமல், நோயாளிகள் தாங்கள் தொற்றுநோயாளியா இல்லையா என்பதை தாங்களாகவே தீர்மானிக்க முடியாது. கோவிட்-19 பரவலின் பெரும்பகுதி அறிகுறியற்ற நோயாளிகள் மூலம் ஏற்படுகிறது; காய்ச்சல் என்பது ஒரு டசின் கோவிட்-19 அறிகுறிகளில் ஒன்றாகும். கோவிட்-19 நோயாளிகளில் 20-40 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஐந்து நாட்களுக்குப் பிறகும் தொற்றுநோயாளியாக உள்ளனர். சிலர் ஒரு வாரத்திற்கும் மேலாக உள்ளனர்.

அனைத்து நோய்க்கிருமிகளின் பரவலையும் கட்டுப்படுத்துவதையும், சமூகம் அனுபவிக்கும் நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு சுமையை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட பொது சுகாதாரத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இந்த வழிகாட்டுதல்கள் நேர்மாறாக உள்ளன. அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, பாரிய பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், மற்றும் கோவிட்-19, சளிக்காய்ச்சல் மற்றும் ஆர்எஸ்வி ஆகியவற்றிற்கான பிற அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்துவதற்கு பதிலாக, சி.டி.சி ஆனது அனைத்து சுவாச வைரஸ்களுக்கும் தனிமைப்படுத்தும் பரிந்துரையை குறைந்தபட்சமாக குறைத்துள்ளது. அதேவேளையில் கோவிட்-19 க்கான பரிசோதனையை இனியும் அது ஊக்குவிக்கப் போவதில்லை.

சி.டி.சி இன் தொடர்ச்சியான விஞ்ஞானமற்ற கொள்கை மாற்றங்களில் இது சமீபத்தியது மட்டுமே, இது பெருந்தொற்று நோயின் போது அனைத்து தீவிர விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் கோவிட் எதிர்ப்பு உள்ளவர்களின் பார்வையில் தன்னை மதிப்பிழக்கச் செய்துள்ளது.

சி.டி.சி வழிகாட்டுதல்கள் மாற்றத்தைக் கண்டித்து, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொடர்பாளர் டாக்டர் லக்கி டிரான் ஃபோர்ப்ஸிடம், “சி.டி.சி வழிகாட்டுதல்களில் மாற்றங்களானது, உண்மையில் அரசியல் மற்றும் பெருநிறுவன அழுத்தத்தின் விளைவாக உள்ளது. இது விஞ்ஞானத்திற்கு எதிரான, நோய் பரவுவதை ஊக்குவிக்கும், மற்றும் பெருநிறுவன நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும், தொழிலாளர்களை சுரண்டுவதை எளிதாக்கும் ஒரு அபாயகரமான மாற்றமாகும்” என்று குறிப்பிட்டார்.

பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகதாரப் பள்ளியின் தொற்றுநோயியல் உதவி பேராசிரியர் டாக்டர் எல்லி முர்ரே CNN இடம் கூறுகையில், “இது நல்ல அறிவியல் அல்ல. இது நல்ல பொது சுகாதாரம் அல்ல. இது மக்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்காது என்றார்.

ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி உருமாற்ற இன்ஸ்டிடியூட்டின் நிறுவனரும் இயக்குநருமான டாக்டர் எரிக் டோபோல் CNN இடம், “கடந்த 4 ஆண்டுகளில் இந்த வைரஸ் தொடர்பான ஏராளமான சான்றுகள் காய்ச்சலை விட மிகவும் ஆபத்தான நோய்க்கிருமி என்று நமக்குக் கூறுகின்றன. இது பருவகாலம் இல்லாதது, இன்னும் உருவாகி வருகிறது, உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களில் நெடுங் கோவிட் (Long COVID) நோயைத் தூண்டியுள்ளது” என்று கூறினார்.

உண்மையில், சி.டி.சி இன் சமீபத்திய கொள்கை மாற்றத்தை நியாயப்படுத்தும் பின்னணிஆவணம் உட்பட அதன் சொந்தத் தரவு, காய்ச்சல், ஆர்.எஸ்.வி அல்லது வேறு எந்த பருவகால வைரஸையும் விட கோவிட்-19 மிகவும் ஆபத்தானது என்பதை தெளிவுபடுத்துகிறது.

2024 பிப்ரவரி முதல் வாரத்தில், 1,600 பேர் கோவிட்-19 நோயால் இறந்தனர். ஆகஸ்ட் 26, 2023 முதல், அதாவது, தொடர்ச்சியாக 24 வாரங்கள் அல்லது ஆண்டில் கிட்டத்தட்ட பாதியளவு, வாராந்திர இறப்பு எண்ணிக்கை 1,000 க்கும் அதிகமாக உள்ளது. 2023 ஆம் ஆண்டில் 5,748 பேர்கள் காய்ச்சலால் இறந்த நிலையில், 77,000 க்கும் அதிகமானோர் கோவிட்-19 நோயால் இறந்தனர்.

அமெரிக்காவில் ஒரேயொரு கோவிட்-19 பெருந்தொற்று நோய் அதிகப்படியான இறப்பு கண்காணிப்பை பராமரிக்கும் தரவு பகுப்பாய்வாளர் கிரெக் டிராவிஸின் கூற்றுப்படி, 18-44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் பெருந்தொற்று நோய்க்கு முந்தைய அடிப்படைகளை விட 20 சதவீதம் அதிகமாக இறப்பு விகிதங்களை தொடர்ந்து காண்கின்றனர். 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கோவிட்-19 இலிருந்து அதிக இறப்பு விகிதங்களை எதிர்கொண்டுள்ளனர், இது காய்ச்சலை விட ஐந்து மடங்கு அதிகமாகும். வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் மட்டுமல்ல, தங்கள் வாழ்வின் முதன்மையான நிலையில் இருப்பவர்களும், இப்பொழுதுதான் வாழ்க்கையைத் தொடங்கியவர்களும் கூட கொல்லப்படுகின்றனர்.

அமெரிக்காவில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட பெரியவர்களிடையே அதிகப்படியான இறப்புகள் [Photo by Gregory Travis @greg_travis]

சி.டி.சி இன் உத்தியோகபூர்வ கோவிட்-19 மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் கண்காணிப்பாளரின்படி, பிப்ரவரி 24, 2024 உடன் முடிவடைந்த வாரத்தில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் மொத்தம் 17,310 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது, வேறு எந்த சுவாச வைரஸையும் விட மிக அதிகமாகும். அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 30, 2023 வரை, 100,000 நபர்களுக்கு 250 என்றளவில் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்கள் முந்தைய இரண்டு ஆண்டுகளில் இதே காலகட்டத்தின் விகிதங்களில் பாதி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் RSV க்கான சேர்க்கைகளைத் தொடர்ந்து முக்கியமற்றதாக்கியது என்பதைக் குறிப்பிடும் விளக்கப்படத்தை “பின்னணி” ஆவணம் கொண்டுள்ளது.

COVID-19, காய்ச்சல் மற்றும் RSV ஆகியவற்றிற்காக 100,000 மக்கள்தொகைக்கு மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்கள். காட்டப்படும் அனைத்து பருவங்களுக்கும், தேதிகள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 முதல் செப்டம்பர் 30 வரை இருக்கும். [Photo: CDC]

மேலும், கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2, வைரஸ் வேறு எந்த சுவாச நோய்க்கிருமிகளையும் விட வேகமான விகிதத்தில் உருவாகி வருகிறது, இந்த குளிர்காலத்தில் உலகை விரைவாக அடித்துச் சென்ற JN.1 “பைரோலா” மாறுபாடு போன்ற புதிய, நோயெதிர்ப்பு-தவிர்க்கும் வகைகளை தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.

கோவிட்-19 காய்ச்சல் அல்லது பிற சுவாச நோய் வைரஸ்களை விட மிக அதிக விகிதத்தில், இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் மூளை உட்பட உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் சேதப்படுத்தும் திறன் கொண்டது என்பதை ஆயிரக்கணக்கான விஞ்ஞான ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன்களைத் தவிர, அனைத்து வயதினரையும் சேர்ந்த 20 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் இப்போது நெடுங் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன் கொள்கை மாற்றத்தை நியாயப்படுத்துவதில், சி.டி.சி நெடுங் கோவிட் தொடர்பான விஞ்ஞான அறிவை பொய்யாக்குகிறது மற்றும் இதைப் பெரும்பாலும் பயங்கரமான துயரத்தின் தற்போதைய அபாயத்தைக் குறைப்பதுடன், அதன் “பின்னணி” ஆவணத்தில் “நெடுங் கோவிட் பாதிப்பும் குறைந்து வருவதாகத் தெரிகிறது” என்று கூறுகிறது.

எவ்வாறாயினும், அமெரிக்க குடும்பங்களின் வழக்கமான உடனடியான கணக்கெடுப்பை நடத்தும் சி.டி.சியின் சொந்த தேசிய சுகாதார புள்ளிவிவர மையத்தின் சமீபத்திய தரவு, JN.1 திரிபு வகையின் தற்போதைய குளிர்கால அலையின் போது நெடுங் கோவிட் விகிதங்கள் சாதனை அளவை எட்டியுள்ளன என்பதைக் குறிக்கிறது. இது சமீபத்திய மாதங்களில் அமெரிக்க மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

ஜனவரி 2024 இல், அமெரிக்க பெரியவர்களில் 17.6 சதவீதம் பேர் பெருந்தொற்று நோய்களின் போது ஒரு கட்டத்தில் நெடுங் கோவிட் இருந்ததாக தெரிவித்தனர். இது கிட்டத்தட்ட 60 மில்லியன் அமெரிக்கர்களுக்கு சமம் ஆகும்.

சி.டி.சியின் தேசிய சுகாதார புள்ளிவிவர மையத்தின் தரவுகளின்படி, நெடுங் கோவிட்டை அனுபவித்த அமெரிக்க பெரியவர்களின் சதவீதம் [புகைப்படம்: தேசிய சுகாதார புள்ளிவிவர மையம். அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம், குடும்பங்களின் உடனடிக் கணக்கெடுப்பு, 2022–2024. நெடுங் கோவிட். உள்நுழையும் வகையில் உருவாக்கப்பட்டது: [Photo: National Center for Health Statistics. U.S. Census Bureau, Household Pulse Survey, 2022–2024. Long Covid. Generert interaktivt: fra https://www.cdc.gov/nchs/Covid19/pulse/long-Covid.htm]

இந்த வாரம் தி கான்வர்சேஷனில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் முன்னணி நெடுங் கோவிட் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜியாத் அல்-அலி எழுதினார்,

கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸான SARS-CoV-2 ஆல் பாதிக்கப்படுவது மூளையின் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கும் என்பதற்கு இப்போது ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலதிகமாக மூளை தெளிவு இல்லாமை, தலைவலி, வலிப்புத்தாக்கக் கோளாறுகள், மாரடைப்பு, தூக்கப் பிரச்சினைகள் மற்றும் நரம்புகளின் கூச்ச உணர்வு மற்றும் நரம்புகளின் செயலிழைப்பு மற்றும் பல மனநலக் கோளாறுகள் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு COVID-19 வழிவகுக்கிறது.

ஒவ்வொரு SARS-CoV-2 திரிபு வகையின் கீழும் இந்த அபாயங்கள் நீடிப்பதைக் குறிப்பிட்ட டாக்டர் அல்-அலி, நினைவாற்றல் பிரச்சினைகள் பொதுவானவை என்பதைக் காட்டும் ஆய்வுகள், கோவிட்-19 நோய்த்தொற்றுக்குப் பிறகு மூளைச் சுருக்கத்தை நிரூபிக்கும் இமேஜிங் ஆய்வுகள், இலேசான மற்றும் மிதமான நோய்த்தொற்றுகள் குறைந்தது ஏழு ஆண்டுகள் மூளை வயதாவதை உருவாக்கின என்பதைக் காட்டும் ஒரு ஆய்வு மற்றும் மூளை திசுக்களில் SARS-CoV-2 இருப்பதை நிரூபிக்கும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஆகியவற்றை எடுத்துரைத்தார். கோவிட்-19 நோயாளிகள் தங்கள் நுண்ணறிவு மதிப்பெண்களில் (IQ) குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை சந்தித்துள்ளனர் என்பதைக் காட்டும் சமீபத்திய ஆய்வின் ஆபத்தான கண்டுபிடிப்புகளுடன் அவர் முடித்தார்.

அரசாங்கத்தின் செயலற்ற தன்மை மற்றும் வெளிப்படையான குற்றவியல் தன்மையை எதிர்கொண்டு, நெடுங் கோவிட் நோயாளிகள் மார்ச் 15 அன்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள லிங்கன் நினைவிடத்தில் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்து வருகின்றனர். செப்டம்பர் 2022 க்குப் பிறகு அமெரிக்காவில் இதுபோன்ற முதல் போராட்டம் இதுவாகும், அப்போது நெடுங் கோவிட் நோயாளிகள் மற்றும் அதற்காக குரல்கொடுப்பவர்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே அணிவகுத்து “பெருந்தொற்று நோய் முடிந்துவிட்டது” என்ற பைடெனின் பொய்யைக் கண்டித்தனர்.

உலக சோசலிச வலைத் தளம் வரவிருக்கும் பேரணியை வழிமொழிகிறது, இது பெருந்தொற்று நோயின் தற்போதைய அபாயங்களை புறக்கணித்து மூடிமறைத்து வருகின்ற நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது. சி.டி.சி இன் சமீபத்திய கொள்கை மாற்றத்தை பகிரங்கமாக எதிர்க்கும் 2024 அமெரிக்க தேர்தல்களில் போட்டியிடும் ஒரே ஜனாதிபதி வேட்பாளர் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜோசப் கிஷோர் ஆவார். அவர் சி.டி.சியின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களுக்குள் ட்விட்டர்/எக்ஸ் இல் ஒரு அறிக்கையை வெளியிட்டார். கிஷோர் இவ்வாறு அதில் எழுதினார்:

எங்களது பிரச்சாரம் முழுவதிலும், பாரிய தொற்று, பலவீனப்படுத்தல் மற்றும் மரணம் குறித்த ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு சோசலிசப் பொது சுகாதார திட்டத்திற்காக @jerrywhiteSEP உம் மற்றும் நானும் போராடுவோம். #LongCovid ஆராய்ச்சிக்கான நிதியுதவியில் ஒரு பரந்த விரிவாக்கத்திற்காகவும், அனைத்து பொது இடங்களுக்கும் சுத்தமான உட்புற காற்று இருப்பதை உறுதிப்படுத்த புதுப்பித்தல், #CovidIsAirborne அனைவருக்கும் புரிந்துகொள்ளத்தக்க வகையில் பொதுமக்களுக்கு விஞ்ஞானக் கல்வி, மற்றும் #SARSCoV2 திரிபு வகைகளுக்கு உண்மையிலேயே கிருமி நீக்கம் செய்யும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் நாசியூடாக மற்றும் பிற தடுப்பூசிகளை உருவாக்க ஒரு புதிய ஆபரேஷன் வார்ப் ஸ்பீட் (Operation Warp Speed) திட்டத்திற்காக நாங்கள் போராடுவோம்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

சி.டி.சியின் சமீபத்திய கொள்கை மாற்றம் அமெரிக்கா மற்றும் உலக மக்கள் மீதான கோவிட்-19 இன் தாக்கத்தை மேலும் அதிகரிக்க மட்டுமே செய்யும். சர்வதேச தொழிலாள வர்க்கமானது சேதத்தின் சுமையால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவானது உலக முதலாளித்துவத்தின் மையமாக இருப்பதால், எங்கெல்லாம் மட்டுப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் வழிகாட்டுதல்கள் நடைமுறையில் உள்ளனவோ, அங்கெல்லாம் சி.டி.சி ஆல் நிர்ணயிக்கப்பட்ட கொள்கைகள் உலகம் முழுவதும் பிரதிபலிக்கப்படும். பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலுக்கான அவர்களின் உரிமை மீதான இந்தத் தாக்குதலை சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்ப்பதும், கோவிட்-19 மற்றும் உலகெங்கிலும் அனைத்து தொற்று நோய்கள் பரவுவதையும் தடுக்க ஒரு சோசலிச பொது சுகாதார வேலைத்திட்டத்திற்காக போராடுவதும் மிக முக்கியமானதாகும்.

Loading